பாலசிங்கம் வரவும், செலவும்…..
திரு பாலசிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் தமிழீழத்தின் தத்துவ ஆசிரியராகவும், பொதுவுடைமை வாதியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், சேகுவேராவின் கொள்கையுடன் மிக அருகில் இருந்தவராகவும், பௌத்த கொள்கையுடன் (கொல்லாமை) பற்றுடையவராகவும்…., அவர் ஒரு லெனின், அவர் ஒரு மாசேதுங் எனும் லெவலுக்குள் காவிக் கொண்டுபோய்…. இறுதியில்…. மானுட வர்க்கத்திற்கே கிட்டாத, ஏன்!!! மூவுலகமான தேவலோகம்;, பூலோகம், பாதாளலோகம் எனும் மூவுலகத் தோருக்குமே வாய்க்கப்பெறாத புனிதமானதும், எவ்வித விமர்சனத்திற்கும் உட்படாத புகழ் பூத்த பட்டமாம் ‘தேசத்தின் குரல்’ திரு. பாலசிங்கத்திற்கு கிடைத்திருக்கிறது. இவ்வாறு புலிகள் மட்டுமல்ல, தமிழ்; ‘ஊது குழல’; ஊடகங்கள் யாவும் ஊதித் தள்ளிய வண்ணமாயுள்ள சூழலில்….
திரு பாலசிங்கத்தின் மறைவு விரைவில் நிகழ்ந்திடுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருப்பினும், அவர் இப்போது மரணித்துப் போயிருக்க வேண்டியவர் அல்ல. 1983 இல் இருந்து 2006 ஆம் ஆண்டு மார்கழிமாதம் அவர் மறையும்வரை தமிழ் மக்களின் விடுதலைக்காக ‘தமிழ்த் தேசியத்தின் குரலாக’ அவர் வகுத்த அரசியல் முன்னெடுப்புகளானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அரசியல் அனாதைகளாக நிர்க்கதியற்ற நிலைக்குள் தள்ளியுள்ளது. ‘தேசத்தின் குரலின்’ அரசியல் தத்துவத்தின் விழைவால் மனிதக் குருதியை ஆறாக ஓட விட்டு மண்டை ஓடுகள் மட்டுமே புதைந்த பூமியாக மாறிக்கிடக்கிறது எமது தேசம்.
மதியுரைஞரின் வழி நடத்தல் பற்றிய எமது கேள்விகளுக்கும், அவரது கோட்பாடுகள் பற்றிய எமது கேள்விகளுக்கும் பதிலுரைக்க வேண்டிய பாரிய பொறுப்பு அவருக்குண்டு. அவரது வழிநடத்தலில் தமிழ் மக்களின் விடுதலை என்பதும், அவர் வகுத்த தேசியம் என்பதும் தோற்றுப் போவதை பார்த்துக் கொண்டிருந்தவர். ஆனாலும் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் நியாயத்திற்காக கணக்கற்ற பொய் வாதங்களைக் கொட்டி மனித நாகரீகமற்ற வகையில் கிண்டல்களை அரங்கேற்றி வந்தவர். ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் வெறும் முட்டாள்களாக கருதி தனது இறுதிக் காலம்வரை புலிகளின் பொருளாதார வளத்திலேயே வாழ்ந்து வந்தவர்.
இழப்பதற்கு எதுவுமற்றவர்களே போராடுவார்கள் என்கின்ற தத்துவத்தை நன்குணர்ந்தவர் எமது ‘தேசத்தின் குரல்’ . பணம் படைத்தவர்களும், உயர் மேட்டுக்குடியினரும் தப்பினோம் பிழைத்தோம் என நாட்டை விட்டு ஓடிவிட்ட சூழலில் தேசியம் பற்றியோ, தமிழீழத்தின் அவசியம் பற்றியோ எந்த அக்கறையும் அற்ற தலித்துக்களும், ஏழைகளும் தமது தழிழீழ கனவிற்கு பலியாவார்கள் எனும் ‘தேசியத்தின் குரலின்’ பாட்டாளிவர்க்க கொள்கைகள் பொய்த்துப் போனதை யாரோடு பேசுவது….! ஈழ விடுதலை போராட்டமானது கூனிக் குறுகித் தேசியமாகி இறுதியில் தனிநபருக்கான சொத்தாகிப் போனதை யாருடன் பேசுவது….! சகல மாற்றுக் கருத்துடையோரை துரோகிகளாக்கித் தொலைத்துக் கட்டிவிட்டு நாங்கள் மட்டுமே நாட்டையாளும் தகுதிகொண்டோர் எனும் வக்கிரத்தை யாரோடு பேசுவது…! இந்தியாவாக இருந்தாலென்ன, எந்தக் கொம்பனாக இருந்தாலும் அடித்துத் துரத்தி விட்டு நாம் மட்டுமே ஆளும் தகுதிகோண்டோர் எனும் பேர்(ய்)ஆசையை யரோடு பேசுவது…! உலக நாடுகளே ஒன்றாய்த் திரண்டு தம்மை (புலிகளை) தடைசெய்த போதும் தனியரசு அமைப்போம் என்னும் பொய்ச் சவுடாலைப்பற்றி யாரோடு பேசுவது….! உணவுப் பற்றாக்குறையை உருவாக்கி மக்களின் பட்டிணிச் சாவை பார்த்தவண்ணம் எ9 யை திறக்கும்படி இவர்களின் சீடர்கள் கொடி பிடிப்பதை யாரோடு பேசுவது….!!!
மேற்படி நிகழ்வுகளுக்கெலாம் பதில் தெரிந்தவரும், பதில் சொல்லக்கூடியவருமான ’தேசத்தின் குரல்’ மறைந்து விட்டது (எமக்கு) மிகவும் வேதனையான விடயம்தான். அவரது உயிர் நீங்குவதற்கு முன் அவருடன் உரையாடிய ஒரே ஒரு நபர் அவரது துணைவியார் அடல் பாலசிங்கமாகத்தான் இருக்கும். மனச்சாட்சி உறுத்த தனது இறுதி உரையிலாவது தான் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்திற்காய் தனது துணைவியாரிடமாவது மன்னிப்புக் கோரியிருப்பாரோ...!!! அடல் பாலசிங்கத்திற்குத்தான் வெளிச்சம்….