பெரியார்
நமது நாட்டிலுள்ள எல்லாக் கெடட்காரியங்களுக்கும் நமது நாட்டுக் கடவுள்களே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் அதாவது சூது வாது வஞ்சகம் பொய் புரட்டு விபச்சாரம் குடி கூத்தி கொலை ஜீவ இம்சை முதலிய எந்தக் கெட்டதொழிலை எழுத்துக் கொண்டாலும் நமது கடவுள்களிடத்தில் மொத்தமாகவும் சில்லறையாகவும் தனித்தனியாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். (பெரியார்- குடியரசு1927இல் சென்னது இது.)
இதைக் காட்டினாலும் பரவாயில்லை இதைக் கூடக் காட்டமாட்டாங்கடாப்பா
இதையும் தாண்டிப் புனிதமான பெரியார் ஒன்றுக்காய் காத்திருக்கும் ரசிகர்கள்.
மிகவிரைவில் வெளிவர இருக்கும் பெரியார் திரைப்படம் குறித்து சினிமா இதழ்கள் தொடக்கம் இலக்கிய இதழ்கள் வரை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசோ படத்திற்கு வரிவிலக்குத் தொடக்கம் பணப்பரிசு பவரை வழங்கப்பட்டுவிட்டது. அதில் பணமில்லாது நடிக்கும் சத்தியராஜிற்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டு விட்டது. இதற்கிடையில் ஆன்மீகவாதியான நான் கடவுள் மறுப்பு கருத்தைச் சொல்லும் படத்திற்கு இசை அமைக்க மாட்டேன் என்று இளையராஜா மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இவை எல்லாவற்றிற்கும் அப்பால் பெரியாரைப்பற்றி இப்போது படித்துக்கொண்டிருக்கிறார் பெரியார் பட இயக்குனர் ஞானராஜசேகரன். தி.ஜ வின் மோகமுள்ளில் கைவைத்து பாரதியைச் சொதப்பியபோதே நமக்குத் தெரியும் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதையாய் பெரியாரைக் கடிக்கும் இந்தாள் என்று. அதுவும் நடந்து முடிந்து விட்டது.
எல்லாவற்றையும் ஆமா ஆமா என்று பார்த்து விட்டுப் போறதுக்கு நாம் என்ன வீரபாண்டியகட்டப்பொம்மன் படம் எடுத்தகாலத்திலையா வாழுகிறோம். பாரதி பற்றிப் படம் எடுத்த ஞானராஜசேகரன் அவர்கள் கவிஞனுக்குள்ள மனிசனுக்குள்ள சராசரிக் குணங்கள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு பாரதியை புனித மகானாகக் காட்டிய வித்தை நாம் பார்த்துக் கொண்டதுதானே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் ஞானராஜசேகரனுக்கும் வேறுவிதமான பார்வை என்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். பாரதி பற்றிய உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும் என்பதுதான். பார்வை வேறு உண்மைகளை மறைத்து திரிப்பது வேறு. பின் அதை நியாயப்படுத்துவதும் வேறு. தனக்கான ஒரு பார்வை என்றால் பின் பாரதியார் பற்றிப் படிக்கிறேன் பெரியார் பற்றித் தேடுகிறேன் என்று நமக்கு கதை சொல்லத் தேவையில்லை.
ஞானராஜசேகரன் பற்றி தெரிந்து கொள்ள இன்னொரு சின்னக் குறிப்பு, மௌனிகா நடித்து அவர் இயக்கிய ஒரு குறும்படம் -ஒருகண் ஒருபார்வை-.ஒரு சிறு கிராமத்துள் இருக்கும் பாடசாலையில் தலித்துக்களுக்கு தனிக்குவளை வைத்திருக்கிறார்கள் ஒருநாள் மௌனிகாவின் மகள் உயர்சாதிப் பிள்ளைகளின் வரிசையில் நின்று தண்ணி கேட்டபோது அந்தப் பாடசாலை வாத்தியார் தடியால் அடிக்க தடி கண்ணில் பட்டு அந்தக் குழந்தைக்கு பார்வையில்லாமல் போகிறது. அது அரசியலாகி மாவட்ட கலக்டர் வரையும் போகிறது. ஒருநாள் கலக்டர் பாடசாலைக்கு வருகிறார். பாடசாலைச் சுவரெங்கும் சாதிஇல்லையடிபாப்பா என்ற வாசகங்கள் ஒட்டியிருக்கிறது. வாத்தியாரை விசாரிக்கிறார். கலக்டருக்கு புரியவில்லை. பாடசாலையில் அப்படி ஒரு பிரிவினையும் இல்லை என்பதாக அவருக்குச் சொல்லப்படுகிறது. அவரும் நம்புகிறார். பாடசாலை இடைவேளை மணி அடித்ததும் இரண்டு வரிசையில் பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வரிசையில் நிற்க காண்கிறார். அப்போதுதான் அந்தக் கலக்டருக்குப் புரிகிறது தலித் பிரச்சனை. என்ன அறிவுக் கொழுந்து பாருங்கள். திரும்பத்திரும்பச் சொல்கிறேன் என்று குறை நினைக்கப்படாது. இது அ.முத்துலிங்கம் புலம்பெயர் சிறுகதை என்று கார் பார்க்கிங்குக்குள்ள நின்று ஒருவன் விழுகிற காசைப் பொறுக்கி பிசாப்பிசாவில பிசாவாங்கித் தின்றான் என்று கதை எழுதுறமாதிரி இருக்குதோ இல்லையோ? அல்லது அ.முத்துலிங்கம் ரெஸ்டோரண்டில் கோப்பை கழுவிற கதை எழுதினா எப்படி இருக்கும். அது மாதிரித்தானே இருக்குது இதுவும். துலித்துக்கள் படுகொலை, தலித்துகள் போராட்டம் என்று தினசரிப் பத்திரிகைகள் தொடக்கம் தொலைக்காட்சி வரை தினமும் செய்திகள் வரும் தமிழ் நாட்டில் வாழ்ந்து வருபவர்தான் ஞானராஜசேகரன். நுமக்கு என்ன கொடுமை என்றால் தப்புக்கட்டை குறும்படத்தையும் மேலவளவுப் படுகொலை பற்றிய குறும்படத்தையும் ஞானராஜசேகரனது குறும்படத்தையும் நாம் ஒன்றாகப் பார்த்ததுதான்.
இப்ப பெரியார் பற்றிப் படம் எடுக்கும் ஞானராஜசேகரன் அவர்கள் நமக்கு பெரியார் படத்தை எந்தளவில் காட்டப் போகிறார் என்பது முக்கியமான விடையம். பெரியாருடைய வாழ்வு நிலை- அறிவுப்புலம் -எதிர்போராட்டங்கள் மதம், சாதி, மொழி,தேசியம்,கலாசாரம் என்பவற்றின் அழிவை விரும்பியவனாக ஒரு கலகக்காரனாக ஒழுங்கை மறுத்தவனாக இருந்த காலங்கள் மிக முக்கியமானவை. பெரியாரின் ஒவ்வொரு சின்னச் செயற்பாடுகளுக்கும் மிகப்பெரிய அரசியல் புலம் இருந்துகொண்டிருந்தது. பெரியாரை நாம் எதற்குள்ளும் கட்டிப்போட்டுவிடமுடியாது. பெரியாருடைய மொழி மிகப்பலம் வாய்ந்தது. அதை விளங்கிக் கொள்ள ஞானராஜசேகரனால் இயலும் என்பதை நம்பமுடியாமல் உள்ளது. பாரதி தன்னுடைய வாழ்நாளில் கஞ்சா புகைத்தவர் என்பதையோ அவர் சிறையில் வாழ்ந்த காலங்களில் தன்னுடைய வாழ்க்கை முறைபற்றி கவலைப்பட்டுக் கொண்டவர் என்பதையோ இலகவாகச் சொல்ல முடியாத ஒப்புக் கொள்ள முடியாத ஒழுங்குக்குள்ளும் புனிதம் பேணலுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருப்பவர்; ஞானராஜசேகரன். பெரியார் ஜெர்மனியில் உள்ள நிர்வாணசங்கத்தில் சேர்ந்ததும் அல்லது அங்கு படமெடுத்து தமிழகத்தில் உள்ள சுவர்களில் ஒட்டியதற்கும் பின்னால் உள்ள அரசியலை இவர் எப்படி சொல்வார் என்று எதிர் பார்ப்பது?
பெரியாரின் கடவுள் மறுப்பும் மணியம்மையின் கலியாணம் பண்ணியதும் சாலை மறியலும் என்று மக்களுக்குத் தெரிந்ததைச் சொல்லி காசு சம்பாதிக்க ஞானராஜசேகரனால் மட்டுமே முடியும். அதை அவர் செவ்வனவே செய்வார். பார்பனப் பல்லக்குத் தூக்கிகளும் அவர்தம் பத்திரிகைகளும் நல்லதொரு திரைப்படம் என்று விருது வழங்கும் கோமாவில் வாழ்ந்து வரும் மக்கள் அதனை வாசித்து ஆத்மதிருப்தியடைவார்கள்.