பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித்
பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாட்டைத்தொடர்ந்து,இரண்டாவது தலித் மாநாடு லண்டனிலும் சிறப்புடனும், பல விவாதங்களுடனும் நடந்து முடிந்தது. கடந்த 16ஆம்17ஆம் திகதிகளில் லண்டனிலுள்ள LEYTONSTON எனும் சுரங்கப்பாதை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள QUACKERS HOUSE எனும் மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது. ஏற்கனவே தயாரித்த நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட புதியஜனநாயக் கட்சி உறுப்பினரான தோழர் ந.ரவீந்திரனும் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட அ.மார்க்ஸ் அவர்களும் நேரடியாகக் கலந்து கொள்ளமுடியாது போனது. இருப்பினும் தோழர் ரவீந்திரனும், அ. மார்க்சும் காத்திரமான கட்டுரைகளை மாநாட்டுக்கு அனுப்பிவைத்தனர். குறிப்பாக அ.மார்க்ஸ் அவர்கள் கட்டுரையாகவும் ஒலி வடிவத்திலும் தனது கட்டுரையை அனுப்பிவைத்தார்.
முதல் நாள் கலந்து கொண்டவர்களின் சுய அறிமுகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரான்சில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் கலந்து கொண்ட தோழர் பரா மாஸ்டர் அவர்கள் இரண்டாவது மாநாடு நடைபெறும்போது எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரை நினைவுகொண்டும் கடந்த காலத்தில் தலித் சமூக விடுதலைப்போராட்டத்தில் களப்பலியானவர்களையும் மனதில் இருத்தி சில நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இலங்கைத் தலித் சமூக விடுதலை முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பிற்பாடு அவரின் தலைமையிலேயே தோழர் ந.ரவீந்திரனின் கட்டுரையை ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.பௌசர் அவர்கள் வாசித்தார். அதைத்தொடர்ந்து புஸ்பராணி அவர்கள் சாதியமும் பெண்களும் எனும் தலைப்பில் பேசினார்.
தோழர் ரவிந்திரன் அவர்கள் இலங்கையில் சாதியம் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதை பல ஆதாரங்களுடன் தனது கட்டுரையில் வெளிப்படுத்தியிருந்தார். யுத்த சூழலில் மறைந்து உறைந்து நீறுபூத்துக் கிடந்த சாதியமானது சில கால சமாதானச் சூழலில் சாதிய ஒடுக்கமுறையாக கொழுந்துவிட்டெரிந்த சம்பங்களை விபரித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர முதல்வராயிருந்த செல்லையன் கந்தையாவிற்கு நிகழ்ந்த சம்பவமும், அண்மையில் கொலைசெய்யப்பட்ட புலிகளின் சுப. தமிழ்ச்செல்வனின் மரணத்திலும் கூட சாதியம் பின்னணியாக இருந்திருக்கும் என ’தேசிய எழுச்சியின் இன்றைய போக்கில் தலித் பிரச்சனை’ என்ற தலைப்பிட்ட தனது கட்டுரையில் விபரிக்கிறார்.
சாதியமும் பெண்களும் எனும் தலைப்பில் உரையாற்றிய புஸ்பராணி அவர்கள் புகலிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சாதியப்பிரச்சனைகள் பற்றிய தனது அனுபங்களை எடுத்துக் கூறினார்.
இரண்டாவது நிகழ்ச்சியாக தோழர் வேலுவின் தலைமையில் இந்தியாவிலிருந்து வருகைதந்த ‘புதியவிசை’ சஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் தலித்தியமும் இலக்கியமும் எனும் தலைப்பில் உரையாற்றினார். ‘’இங்கிலாந்துக்கு வந்திருக்கும் இந்தக்கணத்தில் நான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாய் சொல்லுவது எனது பூர்வீகத்தை உணர்த்திடப் போதுமானதாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவிற்குள் என்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்கான அவசியம் எதுவும் நேர்ந்ததாக நினைவில் இல்லை. இதேகதிதான் தமிழன் என்பதற்கும் ஒரு பொது அடையாளம் போல் தோற்றமளிக்கும் இந்த வார்த்தைகள் தலித்துக்களைப் பொறுத்தவரை அன்னியமானவை.‘’ என அவரது கட்டுரை தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து அ.மார்க்சின் கட்டுரையின் ஒலிப்பதிவு கேட்கப்பட்டது. அவரின் கட்டுரையின் தலைப்பு ‘தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்.’
இதைத்தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ந்தது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அசுராவின் தலைமையில் ‘இலங்கைத் தலித் சமூக அரசியலும், அதன் அவசியமும்’ எனும் தலைப்பில் தேவதாசன் அவர்கள் உரையாற்றினார். கடந்தகால தலித் சமூக விடுதலைப் போராட்டத்திற்கு இடது சாரிகளின் பின்புலமும் அவர்களின் பங்களிப்பும் காத்திரமானதாகவே இருந்ததையும் சுட்டிக்காட்டினார். அன்றைய காலகட்டத்தில் இடது சாரிகள் தமது கட்சியின் நிலைப்பாட்டிற்கே முதன்மை இடமளித்தமையாலேயே தலித் மக்களின் பிரச்சனைகளை அவர்கள் தனித்துவமாக பார்க்கத் தவறிவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டுப்பேசினார்.
இதைத்தொடர்ந்தும் கலந்துரையாடல் நிகழ்ந்தது.
கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் தலித்மக்களின் பிரச்சனைகளுக்கு தனித்துவமான அரசியல் உத்தரவாதங்கள் பேணப்படவேண்டும் என்பது பற்றிய தமது அபிப்பிராயங்களை எடுத்துக் கூறினார்கள். இருப்பினும் இலங்கைத் தலித் சமூக முன்னணியானது மார்க்சிய விரோதச் செயல்பாட்டுத் தளத்தில் இயங்குகிறதா எனும் சந்தேகமும் சிலரிடம் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
இடதுசாரிகளின் வர்க்கப்பார்வையினாலான அணுகுமுறையே தலித் மக்களின் தனித்துவமான பிரச்சனைகளை அணுகத் தடையானது. எனவே மார்க்சியத்தின் போதாமைகளை இடதுசாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டுமேயல்லாது. இடது சாரிகள் மீது நாம் என்றுமே விரோதிகள் அல்ல விமர்சகர்ள் மட்டுமே என்பதை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சுட்டிக்காட்டினார்கள்.
இறுதி நிகழ்ச்சியாக ஓர் நாடகமும் கிழக்கமாகாணப் பாராம்பரியக் கூத்துப்பாடல்களும் நடைபெற்றது.நாடகத்தில்கே கிருஸ்ணராஜா, நிர்மலா, நவரட்ணராணி, சாந்தன் போன்றோர் பங்கு பற்றினர்.