ஈ.பி.ஆர்.எல்.எப். (ப.நாபா) இன் கட்சி உறுப்பினர்களும் இலங்கைத் தலித் சமூக மேப்பாட்டு முன்னணியினரும் கலந்து கொண்ட... செய்தி
தமிழ் பேசும் மக்கள் பிரிவினரிடையே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளான சாதிய, பிரதேச சமூக முரண்பாடுகளையும் அவைகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக-மேலாதிக்க ஒடுக்குமுறைகள் யாவும் மறைக்கப்பட்டு, சிங்கள அரசே எமக்கு முதலும், கடைசியுமான எதிரியென கட்டமைக்கப்பட்டது. இவ்வாறான கட்டமைக்கப்பட்ட வரலாறு தந்த அனுபவங்கள் எம்மை தமிழ் சமூக அரசியலையும், அதைமேற்கொண்ட தமிழ்த் தலைமைகளையும் ஆழப் பரிசீலிக்கத் தூண்டியது.
தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள், தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம் எனும் கோசங்கள் முன்வைக்கப்பட்டே சாத்துவிகப் போராட்டங்களும், அதன் பிற்பாடான ஆயுதப் போராட்டமும் நிகழ்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையே நிலவிவந்த சாதிய சமூக பிரதேச ஒடுக்கு முறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் திசைதிருப்பப்பட்டது. இன்று அதுவே தமிழ்பேசும் அனைத்துப் பிரிவினரையும் தமிழ்த்தேசியம் எனும் தீச் சுவாலையினால் சுட்டுப்பொசுக்குகிறது.
இவ்வாறான அனுபவத்தின் நிமித்தமாகவே, எம்மை விட்ட இடத்திலிருந்து தொடங்க நிர்பந்தித்துள்ளது. ஆம் 1969 ஆம் ஆண்டின் பிற்பகுதிவரை சாதிய எதிர்ப்புப் போராட்ட முன்னோடிகளின் விட்ட இடம் நிரப்ப வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் உணர்கிறோம். சாதிய எதிர்ப்புப் போராட்ட முன்னோடிகளின் விட்ட இடம் எனும் சொல்லாடல் கூட அம் முன்னோடிகளை கொச்சப்படுத்துவதாகும். அவர்களிடமிருந்த போராட்ட உணர்வுகள் பலவந்தமாக பிடுங்கப்பட்டு சிங்கள அரசே எமக்கு (முஸ்லிம் மக்கள், மலையகமக்கள், தலித்துக்கள், கிழக்கு மாகாணமக்கள்) பிரதான எதிரியென நம்பவைக்கப்பட்டது.
கடந்தகால தமிழ் அரசியல் வரலாற்று அனுபவங்களும், அதை மேற்கொண்ட தலைமைகள் குறித்த அனுபவங்களும்; அவைகள் மீதான விமர்சனங்களினூடான பரிமாணமுமே ‘’இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’’யின் தோற்றமும், அவசியமுமாகும். கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்த கலந்துரையாடல் மகாநாடு இலங்கையர் ஜனநாயக முன்னணி அங்கத்தினரால் ஜேர்மனியில் நடத்தப்பட்டதை நாம் அறிவோம். தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து பேசப்படும் போது இலங்கைத் தலித் சமூகங்களின் எதிர்கால அரசியல் சமூக உத்தரவாதங்களும் பிரத்தியேகமான கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு, தலித் சமூகத்திற்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றையும் மேற்படி ஜேர்மனில் நடைபெற்ற மகாநாட்டில் ’’இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’’ யிரனல் சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வறிக்கையை நாம் பல பத்திரிகைகளுக்கும், பிற ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தபோதும் அவற்றை எவருமே கவனத்திற் கொள்ளவில்லை. இருப்பினும் எமது அவ்வறிக்கை பற்றியும் தலித் சமூகத்தின் அரசியலையும் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியும் தாம் எம்முடன் கலந்துரையாட விரும்புவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநபா அணி) யினர் எம்மைக் கேட்டுக் கொண்டனர். அதற்கமைய லண்டனிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். இன் மத்திய குழு உறுப்பினர்களும், அக்கட்சியின் பிரான்ஸ் உறுப்பினர்களும் கடந்த 12-05-2007 அன்று பிரான்சின் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய நாமும் ஓர் சந்திப்பை ஏற்பாடு செய்தோம். அச் சந்திப்பில் தலித் சமூகத்திற்கு யாழ் மேட்டுக்குடி சமூகத்தால் நிகழ்த்தப்பட்ட சமூக ஒடுக்கு முறைகள் பற்றியும் இன்று பேசப்படும் தமிழ்த் தேசியத்துடன் நாம் எப்படி இணங்க முடியும் என்றும் அத் தேசியத்தின் வரலாற்றுப் போக்குகளும் அதன் சூழ்ச்சிகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது. நாம் பேசப்படும் தமிழ்த் தேசியத்துடன் இணங்க முடியாதிருப்பதற்கான பின்னணியையும் தமிழ் பேசும் மக்கள் மத்திலிலே இருக்கக் கூடிய பல பிரிவனர்களின் தனித்துவங்களும், அவர்களின் பண்பாட்டுக் கலாச்சார தனித்துவங்களும் பேணப்படுவதற்கான உத்தரவாதங்கள் 'பெறப்போகும்' தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினோம். ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்வதாகவும் அதன் முதல் கட்டமாக தமது கட்சிப் பத்திரிகையில் தலித் மக்கள் பற்றிய கட்டுரைகள் செய்திகளுக்கென ஒரு பகுதியை ஒதுக்குவதாகவும் கூறினார்கள். எம்முடன் இச்சந்திப்பை ஏற்படுத்தி எமது ஆலோசனையை கோரியதற்காக ஈ.பி.ஆர்.எல்.எப். (ப.நா) கட்சிக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேற்படி கலந்துரையாடலில் பிரான்சின் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி யினரின் சார்பாக
யோகரட்ணம்
தேவதாசன்
அருந்ததி
அசுரா
பகீர்
சுந்தரலிங்கம்
எம்.ஆர்.ஸ்டாலின்
போன்றோர் கலந்து கொண்டனர்.