தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர்
தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர் பண்பாடு-கலாச்சாரம் போன்ற இவைகள் யாவும் தமிழ் மொழி பேசும் அனைத்துப் பிரிவினரிடமும் செலுத்தும்; வெறும் சமூக-அரசில் அதிகாரச் சொல்லாடல்கள்தான். இதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்கான தேவையும் அவசியமும் கருதியே தமிழ் மொழி பேசும் தரப்பினரிடையே எம்மை நாம் தனித்துவமாக பிரகடனப்படுத்திவருகிறோம். இதற்கான காரணியாக யாழ்மேலாதிக்க சாதிய-சமூக அரசியலின் விளைவுகள் மட்டுமன்றி, புகிலிட தமிழ் இலக்கிய வாதிகள் மத்தியிலும் நாம் அந்நியர்கள் எனும் உணர்வை வெளிப்படுத்தும் சம்பவங்கள் தொடரவே செய்கிறது. அண்மையில் வெளிந்த ‘உயிர்நிழல்’ ( october december 2006) சஞ்சிகையில் பொ.கருணாகரமூர்த்தியின் நூல் வெளியீடு பற்றிய விமர்சனக் கட்டுரையும் அதற்கான காரணியாயுள்ளது. இந்நிகழ்வானது ஜேர்மனியில் நடந்துள்ளது. இதில் பிரபல புகலிட இலக்கிய வாதிகள் பலர் கருணாகரமூர்த்தியின் நூல்பற்றிய விமர்சனத்தில் பங்குபற்றிய செய்திகளும் அறியக்கூடியதாக உள்ளது. இதில் எமது கவனத்திற்குள்ளான பரமு சிவா அவர்கள் தெரிவித்த விமர்சனம் உள்ளது. அவர் குறிப்பிட்ட செய்தியானது அந்நிகழ்வில் கலந்து கொண்டோரால் அலட்சியப்படுத்தப் பட்டதாக நாம் கருதுகிறோம். அந்நிகழ்வுக் குறிப்பை எழுதிய இரா.ரஜீன்குமார் அவர்கள் பரமு சிவா அவர்கள் குறிப்பிட்ட செய்தியை பரமு சிவாவின் ‘ஆதங்கமாக’ வெளிப்படுத்தியுள்ளார். பரமு சிவா அவர்கள் குறிப்பிட்ட செய்தியானது பரமு சிவாவின் குறையுணர்வு, கவலை, அல்லது அவரின் அச்சம் (ஆதங்கத்தின் உட்பொருள்) சம்மந்தப்பட்டது மட்டுமே ஆனது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட பிற தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பரமு சிவா குறிப்பிட்ட சம்பவம் குறையுணர்வாகவோ, கவலையாகவோ அல்லது அச்சமாகவோ இருந்துவிடாது.
பரமு சிவா அவர்களின் விமுர்சனம் பற்றி இரா. றஜீன்குமார் எழுதிய குறிப்பு. நன்றி ‘உயிர்நிழல்’
‘’வளர்ந்து வரும் விமர்சகரான சிவா கருணாகரமூர்த்தியன் எழுத்துக்கள் இலங்கை இந்தியப் பேச்சு மொழியில் கட்டமைக்கப்பட்டதாகக்கூறி கருணாகரமூர்த்தியின் எழுத்தில் கல்வியை வைத்து மக்களைப் பேதம் பிரித்திருப்பதைச் சுட்டிக் காட்டி சமூகச் சிக்கல்களினால் தான் உயர் கல்வியை கற்க முடியவில்லை என்றும் அதனால் இந்த நூலை விமர்சிக்கும் தகுதி தனக்கு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். 2001 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றக் குழுவாக யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்கு ஒரு வீட்டில் தங்களுக்குச் சிரட்டையில் தண்ணீர் கொடுத்ததை நினைவு கூர்ந்த சிவா, சமத்துவம் அற்ற சமூகத்தில் கோசிக்கப்படும் ‘தேசிய ஐக்கியம் பற்றி ஆதங்கப்பட்டார். விசாவுக்காக வெளிநாடுகளில் தம்மிலும் வயது கூடிய பெண்களை இளைஞர்கள் திருமணம் செய்வது ஒருவகைச் சோரம் தான் என்னும் கருணாகரமூர்த்தியின் கதை மாந்தரின் மொழியைச் சர்ச்சித்த சிவா சீதனத்திற்காக, விசாவுக்காகத் தம்மிலும் வயது குறைந்த பெண்களைத் திருமணம் செய்தால் அது சோரமில்லையா என்றும் எழுத்தாளரிடமும் கூடியிருந்த சபையோரிடமும் கேட்டுவிட்டு நன்றி கூறி அமர்ந்தார்.’’
அதுதான் கூறுகிறோம் நாங்க ‘மற்றாக்கள்’