கடந்த 19-03-2007 அன்று பிரான்சிலிருந்து வெளிவரும்
கடந்த 19-03-2007 அன்று பிரான்சிலிருந்து வெளிவரும் ‘’உயிர்நிழல்’’ சஞ்சிகையின் ஆசிரியர்களான லக்சுமி, கலைச்செல்வன் ( மறைந்த) வீட்டில் அவர்களது இலக்கிய களஞ்சியங்கள் களவாடப்பட்டுள்ளது. இச் செய்தி 23-03-2007 வெளிவந்த ஏசியன் திரிபுன் எனும் ஆங்கில செய்திப்பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. இவர்களது வீட்டில் பணம் உட்பட விலை மதிப்புள்ள பல பொருட்கள் இருந்தும் அவைகள் மீது கவனம் கொள்ளாது. புத்திரிகை ஆசிரியர்கள் வீட்டிலுள்ள இலக்கிய களஞ்சியப் பொருட்களான கலந்துரையாடல் பதிவுகளும் பல இலக்கியச் சந்திப்பு ஆவணங்களும் களவாடப்பட்டதற்கான பின்னணி என்ன...?
இலங்கையிலும், புகலிடத்திலும் நிலவும் மனித உரிமை மீறல்களை புகலிடத்தில் தொடர்ச்சியாக கண்டித்து வரும் இலக்கிய சந்திப்பின் ஜனநாயகப் பண்புக்கு எதிரான மிரட்டலா இது…?
‘’உயிர்நிழல்’’ சஞ்சிகை தொடர்ந்து வெளிவரக் கூடாதென்பதற்கான எச்சரிக்கையா இது…?
ஏவப்படும் அனைத்து வன்முறைகளையும் சகித்துச் சுமந்தபடி வாழப்பழகிக்கொண்ட சமூகமானோம்..!!. ஊர்ந்து செல்லும் பிராணிகள் கூட தமது எதிர்ப்பை எக்கணத்திலும் பிரயோகிக்க காத்திருக்கும். அது எமக்கு ஏன் இல்லாமல் போனது…?
நாம் எதை நோக்கி நகருகிறோம்?
நீங்கள் களவாடுதும், கொலைகள் செய்வதும், மிரட்டுவதும், உங்கள் சண்டித்தனங்களும் விடுதலைக்கானதா…? யாருக்கு விடுதலை? எது விடுதலை?
எவரின் விடுதலையைக் கோருகிறோம்?
விடுதலை என்பது உணர்ச்சி வசப்பட்ட கோசங்களை எழுப்புவதல்ல...
மதவுணர்வுகளால் வெறியூட்ப்பட்ட குறுகிய மனப்பான்மையுடைய மட்டுமீறிய நாட்டுப் பற்றும் அல்ல….
தவறான எண்ணங்களினாலும் கற்பனைக் கோசங்களாலும் உருவாகும் தேசியமும் அல்ல...
‘’மனிதனுடைய பகுத்தறிவு, அறவுணர்வு, படைப்பாக்கத் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்த முடியாதவாறு தடையாக நிற்கும் புறவயமான சக்திகள், சமூகக் கட்டமைப்பு, உளவில் சார்ந்த அகவுணர்வு போன்ற காரணிகளைப் படிப்படியாக நீக்குவதற்கு வழி வகுப்பதே விடுதலையாகும்.’’
ஆம் அதுதான் மனித விடுதலை.
‘’உயிர்நிழல்’’ சஞ்சிகையின் ஆசிரியர்கள் வீட்டில் நடந்த சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு மனித-ஜனநாயகப் பண்புடையோரின் ஆதரவையும் கோருகிறோம். ;