‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.
‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம். பௌசர் உடனான சந்திப்பு 18-02-2007 ஞாயிறு பி.பகல் பாரிசின் ‘புவசொனியேர்’ எனும் இடத்தில் அமைந்துள்ள சிறு மண்டபத்தில் நிகழ்ந்தது.
பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினால் இச்சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டது. இச்சந்திப்பில் மூதூரிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களின் துயரக்காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பை அனைவரின் பார்வைக்குட்படுத்தியதோடு, ‘மூதூர் வேளியேற்றம்’ எனும் தலைப்பைக் கொண்ட சிறு நூலும் உதயகுமாரின் அறிமுகத்தோடு வெளியிடப்பட்டது.
இதன் பிற்பாடு அனைவருடனான கலந்துரையாடல் நிகழ்ந்தது. இதில் புகலிடத்தில் ஜனநாய செயல்பாடுகளின் முக்கியத்துவமும், ஜனநாயக மறுப்பையும், படுகொலைகளையும் எத்தரப்பினராயினும் மேற்கொள்ளும் பட்சத்தில் அதை அம்பலப்படுத்துவதும் அதற்கெதிரான கண்டனங்களைத் தெரிவக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனும் கருத்தை தோழர் அசோக் முன்வைத்ததோடு புகலிடத்தில் எமது அரசியல் நடவடிக்கைகள் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்கிறீர்கள் எனும் கேள்வியையும் பௌசரிடம் முன்வைத்தார்.
சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டையும், புலிகளின் நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்துவதில் நாம் ஒருங்கிணைந்த ஒரு செயல் பாட்டை சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பதோடு எமக்குள் நாம் பலவகையான கருத்து வேறுபாடுகளுடனும், பன்மைத்துவங்களை பேணி வாழ்கின்றபோதும் மேற்படி எமது அரசில் சூழலை மனதில் கொண்டு எமக்குள் ஓர் ஒருங்கிணைவின் அவசியம் உணரப்பட வேண்டும் இதுவே புகலிடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணியாக இருக்கும் என தான் நம்புவதாக பௌசர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து புகலிடத்தில் ஜனநாயகச் சூழலை உருவாக்குவதற்கு ரி.பி.சி வானொலியும், தேனீ இணையத் தளமும் ஆற்றிய பங்கு பற்றியும் பேசப்பட்டது.... அவைகள் கூட ஜனநாயக மறுப்பைக் கொண்டவைகளாக பல தருணங்களில் செயல் படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.மேலும் மக்களின் நலன்களிலிருந்தே (!!!) எதுவும் நிகழ வேண்டுமெனவும் கருத்துக் கூறப்பட்டது.மேற்படி கலந்துரையாடல்களில் தேவதாசன், மனோ (அம்மா) இரயாகரன் (சமர்) அசுரா, விஜி, மோகன் லக்சுமி, யோகரட்ணம் போன்றவர்களுடன் மற்றும் சிலரும் (பெயர் தெரியாத) கலந்து கொண்டனர்.
மூதூரிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் துயரங்களில் பங்குகொண்ட மூஸ்லிம் பிரஜை ஒருவரின் வாக்குமூலமும். தான் நேரில் அனுபவித்த துயரங்களையும், தன்னுடன் மூதூர் முஸ்லிம் சமூகமும் பட்ட மரணத்தின் எல்லைகளையும் விபரிக்கின்ற நூல்தான் ‘’ மூதூர் வெளியேற்றம்.’’ இந் நூலை ‘துயரங்களை ஆவணமாக்கும் செயலரங்கம்’ எனும் புகலிட ஒன்றியத்தினால் வெளிடப்பட்டுள்ளது.
அதன் உள்ளடக்கத்தின் சில துளிகள்
….சீ என்ன வாழ்க்கையிது…
மூதூரில், திருகோணமலையில் தமிழ் முஸ்லிம் மக்கள்…
எவ்வளவு சந்தோசமாக இணைந்து வாழ்ந்தவர்கள்…
அந்தக் காலத்தை நினைச்சுப் பார்த்தால்..எனது நண்பர்கள்…
அவர்களின் குடும்பங்களுடனான எமது உறவுகள்...கொடுக்கல்
வாங்கல்கள்…
வ.அ இராசரத்தினம் மாஸ்டர், அவரின் கதைகள்…
பாலகிருஸ்னண் அண்ணன், முத்துத்தம்பி...ஒன்றாய்ப் படிச்ச
பெடியன் பெட்டைகள்..இப்போ நினைச்சாலும் மனசு
பசுமையாக் கிடக்குது..
…
…
…
வெளிவாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டது..உதவிக்கு
வந்து எம்மை காப்பார் எவருமில்லை..
தூ! தூ!
மூஸ்லிம்களை பாதுகாப்போம் என மேடைக்கு மேடை
முழங்கிய அந்த அரசியல் வாதிகள் எங்கே? இவனுகளுடைய
ஏமாற்றுத்தனங்கள்...பொய் வாக்குறுதிகள்...பதவி ஆசை…
பெண்ணாசை. இவற்றுடன் வீரா வசனம்?
தூ! தூ!
…
…
…
தண்ணீர் தாகத்தினால் வாய் வரண்டு நின்ற மக்கள் முன்
ஒரு புலி உறுப்பினர் பிளாஸ்டிக் வாளி ஒன்றில் தண்ணீரைக்
கொண்டுவந்து வைத்தார்.
மனிதாபிமானமுள்ள புலி?
தாகத்தினால் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் கொண்டு
வருகிறார் என மக்கள் அவர் பக்கம் செல்லத் தொடங்கினர்…
ஆனால் அங்கு நின்ற புலிகள், மக்களை அந்த தண்ணீர்
வாளியை நெருங்க விடவில்லை..
துப்பாக்கிகள் ‘லோட்’ செய்யப்படும் சத்தம் எழத்
தொடங்கியது.
‘’ஏய் சோனிகளே தள்ளிப் போங்கள்’’ என விரட்டினர்..
…..
…..
ஒரு பெண் புலி, மிகப் பிரயத்தனப்பட்டு முகத்தில்
கருணையையும் தாய்மையையும் வரவழைத்துக கொண்டு
புன்னகை சிந்த, அம் மூவருக்கும் தண்ணீரை பருகக்
கொடுத்துக் கொண்டிருந்தார்…
இவற்றை புலிகள் வீடியோ படம் எடுத்துக் கொண்டிருந்தனர்
புலிகளின் மனிதாபிமானத்தை வெளியுலகுக்கு காட்ட…
வீடியோ படம் எடுத்து முடிந்ததும், அப் பெண் புலி தண்ணீர்
வாளியை தூக்கிக்கொண்டு முன் சென்றார்…
ஒரு முதியவர், ‘’புள்ள...புள்ள.. அந்தத் தண்ணியைத்
தாம்மா… ஒனக்கு புண்ணியம் கிடைக்கும்’’ என அழுது
கேட்டுக்கொண்டு அப்பெண் புலிக்குப் பின்னால் போனார்…
உடனே அப்பெண் புலி...தண்ணீரை தரையில் கொட்டியது.
அந்த முதியவரை புலிகள் சூழ்ந்து தாக்கத் தொடங்கினர்.
….
மேற்படி மூதூர் முஸ்லிம் மக்களின் அவலச் சூழலை பதிவாக்கிய சாட்சியமாக ‘’மூதூர் வெளியேற்றம்’’ எனும் சிறு நூல் அமைந்துள்ளது.