விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான்
விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது.
பார்த்துக் கொண்டிருக்க... எமது உரோமங்களை வழித்து
மெல்லத்தோல்களை உரித்து உரித்து
ஒரு பூந்தளிரின் மேல் படர விட்டு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் ஒருவன்.
இன்னொருவனை அழைந்து வந்து
ஒரு இருண்ட அறையினுள் விட்டு
அவனுடை ஆண்குறியை அறுத்து
அவனது வாயிலேயே திணித்து விட்டு
சிரித்துக் கொண்டிருப்பான் ஒருவன்.
ஊரே வீட்டிற்குள் ஒழிந்து கிடக்கிறது.
சாப்பாட்டுச்சாமான் வாங்க கடைக்குச் சென்றவர்கள்,
சுகயீனம் என்று வைத்தியசாலைக்குச் சென்றவர்கள்
யாரும் திரும்பி வரவில்லை.
திரும்பி வராதவர்களைத் தேடி யாரும் செல்லவில்லை.
இருள் மெல்லக் கவிகிறது.
வெளியில் வராதவர்களைத் தேடிப் போகிறது
கருங்குழல் துப்பாக்கிகள்.
இருளையும் மேவித் தெரிகிறது துப்பாக்கி முனை.
வாழ்வைத் தேடி ஒடும் பெண் ஒன்று
துப்பாக்கியைத் தவிர்த்திவிட்டு நஞ்சருந்திச் சாகிறது.
சாவைக் கடந்து
சகோதரியை இழுத்துக் கொண்டு போகிறது துப்பாக்கி.
பாருங்கள்...
விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது.
பார்த்துக் கொண்டிருக்க...
தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது மனித எலும்புகள்.
பாசிசத்தின் சாட்சியமாய்
ஈழத்தின் அஸ்விச்சாய்
எழுந்துகொண்டிருக்கிறது துணுக்காய்.
நூற்றுக்கணக்கில்
ஈழத்துக் கல்விமான்களையும்
அறிவாளிகளையும்
துரோகிகள் என்று சிறைவைத்துக் கொன்றொழித்ததின் சாட்சியம் துணுக்காய்.
குரங்குகளும் காட்டு விலங்குகளும்
நடமாட
மனித எலும்புகள் பரவிக்கிடக்கும்
தெருக்களைப் படம் பிடித்து
வரலாறாய் எமது பிள்ளைகளுக்கு
கல்வி புகட்டும் காலம் தொலைவில் இல்லை.
பாருங்கள்...
விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது.