தலித்முரசின் மறுபக்கம்
(தலித்முரசு நிர்வாகத்திற்கும தமிழக தலித்முரசு வாசகர்களுக்குமான பிரதான கவனத்திற்கு. )
(தலித்முரசு சஞ்சிகைக்கென அனுப்பப்பட்ட கட்டுரை)
நாம் தலித்முரசு சஞ்சிகையை தொடர்ச்சியாக வாசிப்பதனூடாக அதன் அரசியல் சார்பற்ற தனித்துவத்தை அடையாளம் கண்டு வருவதோடு, விருப்பு வெறுப்புகளுக்கப்பால் கட்சி பேதங்களற்ற அரசியல் விமர்சனங்களையும் தலித்முரசு பதிவு செய்து வருவதையும் அதன் ஓர் சிறப்பம்சமாகவே கருதுகிறோம். இந்திய மாநிலங்களில் நிகழ்ந்து வரும் இந்துத்துவ மேலாதிக்க சாதிக் கொடுமைகளின் பன்முக விளைவுகளை அம்பலப் படுத்துவதில் தமிழக பத்திரிகைச் சூழலில் முன்னோடியாக தலித்முரசையே நாம் அடையாளம் கண்டும் வருகிறோம். குறிப்பாக இந்துத்துவ பண்பாட்டுக் கலாச்சாரம் எனும் ஒற்றை அடையாளத்துள் சிக்குண்டு நசிவுறும் தலித் மக்களின் வாழ்வியல் அவலங்களையும், இந்திய மாநிலங்களனைத்திலும் தலித் மக்கள் மீது உயர்சாதி மேலாதிக்கமானது மேற்கொண்டு வரும் கொடுமைகளையும் அம்பலப் படுத்துவதற்குமான ஓர் போர்கருவியே தலித்முரசு என்பதையும் அதன் வாசகர் மத்தியில் உணர்த்தியுள்ளதை எவரும் மறுத்துவிட முடியாது.
புகலிடத்தில் இந்துத்துவ சாதிய சமூகமாகவே இலங்கைத் தமிழர்களும் பிளவுண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவரவர் தமது சாதிய மேலாதிக்கத்தை மிக எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் ஓர் புனிதப் பொருளாக பாதுகாத்து தமது ஜரோப்பிய சந்ததிகளின் கைகளிலும் ஒப்படைக்கும் எத்தனமே அவர்களின் புகிலட வாழ்வின் நீறு பூத்த இலட்சியமாகும். இதன் அடிப்படையில் இந்தியாவிற்கும்; இலங்கைத் தமிழர்களுக்குமிடையிலான சாதிய மேலாதிக்க உணர்வு நிலைகளில் பாரிய வேறுபாடுகளை எவரும் கண்டுவிட முடியாது. எனவே இவர்களுக்கு மத்தியில் எமது தலித் சமூக விடுதலை பற்றிப் பேசுவதற்கான ஓர் உந்து சக்தியாக விளங்குவதில் பெரும்பங்கை தலித்முரசு எமக்கு தந்துதவுகிறதென்பதில் பெருமை கொள்கின்றோம்.
தமிழகத்தில் தலித் சமூக விடுதலைக்கென தம்மை அரசியல் மட்டத்தில் முன்னெடுத்து சென்றவர்களான தொல் திருமாவளவன், டாக்டர் கிருஸ்ணசாமி போன்றவர்கள் தனி நபர் வழிபாட்டு விரும்பிகளாக தம்மை சுருக்கிக் கொண்டதையும் நாம் காண்கிறோம். அதிலும் தொல் திருமாவளவனின் தற்போதைய பாதையானது தமிழ்த் தேசியம், திராவிட எதிர்ப்பு, தமிழ் மொழிப் பாதுகாப்பு என்பதற்குமப்பால் சென்று உலகத் தமிழர்களின் தானைத் தலைவனும், ஏகப்பிரதிநிதியும் தலைவர் பிரபாகரனே என புகலிடங்களில் ஓங்கிக் குரல் கொடுத்தும் வருகிறார். திருமாவளவன், நெடுமாறன், கோபால்சாமி போன்றவர்கள் ஈழமக்கள் விடுதலையில் அக்கறையுள்ளவர்களாகவும், அவ்விடுதலையை மேற்கொள்ளும் தலமையும் ஆற்றலும் பாசிச பிரபாகரனுக்கே உரித்ததும், உடைமையுமாகுமென பரப்புரையாற்றும் அவர்களது அடிமைச் சேவகத்தை அம்பலப் படுத்துவதொன்றும் எமக்கு கடினமானதல்ல. எமது இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. கடந்த கால இதழ் ஒன்றில் நெடுமாறனின் பேட்டியைப் பிரசுரித்த போதே நாம் தலித் முரசில் அதுகுறித்து எழுத வேண்டும் என்று இருந்தோம்.
யூலை 2006 ஆம் ஆண்டின் தலித்முரசில் வெளியான '' இந்தியா தலையிட வேண்டாம் '' எனும் தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் கருத்துரையே இக்கட்டுரை எழுதும் அவசியத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில காலனிய ஆட்சிக்காலத்தில் உதித்த இந்திய தேசியவிடுதலை உணர்வானது காலனித்துவ காலத்திற்கு முன்பும், அதன் பிற்பாடும் பிற்படுத்தப்பட்ட தலித் சமூகங்கள்மீது இந்துத்துவ சமூக மனப்போக்கையே பேணிப் பாதுகாத்தும் வருகிறது. இந்திய தேசியக் கோரிக்கையானது தலித் சமூகத்தின் அடிப்படை வாழ்வுரிமையை அங்கீகரிக்காதபோது எமக்கு இந்திய தேசிய விடுதலை அவசியமற்றதென்றும் ஆங்கிலேயர் ஆட்சியே தொடரவேண்டுமென்பதுவே தந்தை பெரியாரின் கோரிக்கையாகவும் இருந்தது. இன்றும் அத்தேவையின் அவசியத்தை உணரும் வகையிலேயே தலித்முரசு தாங்கிவரும் சாதிய மேலாதிக்க கொடுமைகளின் சாட்சியங்களை நாம் அறியக் கூடியதாகவும் உள்ளது. இந்த வகையில் இந்தியாவின் தேசிய 'வெற்றியும்' (!!!) அதன் பிற்பாடான அரசியல் சட்ட அமுலாக்கங்களும் (இட ஒதுக்கீடாக இருப்பினும்) இந்துத்துவ சதுர்வர்ண சாதிய மேலாதிக்க உணர்வு நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. தலித் சமூகங்களை சுட்டெரிக்கும் கொடுமைகள் வௌ;வேறு தளங்களில் பிரயோகிக்கப்படும் அவல நிலை தொடர்கின்றது. இவ்வாறான அவலச் சூழலில் தலித்துக்களுக்கான அரசியல் விடுதலையை முன்னெடுக்கும் முக்கியத்துவத்திற்கு மேலாக சமூக பண்பாட்டுக் கலாச்சார விடுதலையின் அவசியமும் அதன் வெற்றியுமே தலித்துகளுக்கான நிரந்தர விடுதலையை பெற்றுத்தரும் என்பதில் நாம் உறிதியாயுள்ளோம். இதையே அம்பேத்கரும் பல இடங்களில் வலியுறுத்தியும் வந்ததை நாம் காண்கிறோம்.
பண்பாட்டுக் கலாச்சார விடுதலையின் முக்கியத்துவம் கருதியே தலித்முரசும் அரசியல் சார்பற்று இயங்கிவருவாதாக நாம் கருதினோம்!! இந்தியாவில் பார்ப்பனிய மேலாதிக்கத்துள் நசிவுறும் தலித் மக்களைப்போலவே இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களான முஸ்லிம், மலையக மக்கள், தலித் மக்கள், கிழக்கு மாகாண மக்கள் யாழ்ப்பாணிய மேலாதிக்கத்திற்குட்பட்டு அடைந்த துன்பங்களின் வரலாறுகள் எல்லை அற்று இன்றும் தொடர்கிறது. ஈழவிடுதலைப் போராட்டமானது யாழ்மேலாதிக்க நலன்களுக்காகவும் அவர்கள் வம்சத்தினரின் சமூக பொருளாதார மேம்பாட்டையும் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்ட அனர்த்தமென நாம் பகிரங்கமாக் கூறிக் கொள்ள தயங்கப் போவதில்லை. இலங்கை அரசினால் அமுல்படுத்தப்பட்ட கல்விக்கான தரப்படுத்தல் சட்டத்தை இலங்கைத் தமிழர்களுக்கான ஒடுக்குமுறைச்சடடமென யாழ்மேலாதிகக் சாதியினரால் புனையப்பட்ட வரலாறாகும். ஆங்கிலேயரின் காலனிய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் கல்வியிலும், அரச உயர் பதவிகளிலும் ஆதிக்கம் செலுத்திய சமூகம் யாராக இருந்ததென்பதையும், ஈழ விடுதலைப் போராட்டம் என்பது புலிகளின் ஏகபோக உரிமையாகிப் போனதெப்படி என்பதையும் தலித்முரசு ஓர் மீழ் ஆய்விற்குட்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம்.
யாழ்மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணிய மேலாதிக்கத்தினால் வசப்படுத்தப்பட்ட கல்வியானது பிற மாவட்டத்திற்கும் பகிரப்பட வெண்டுமென்ற அடிப்படைக்காரணியாக இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டமானது கல்விக்கான ஓர் இடஒதுக்கீட்டு திட்டமாக நாம் கண்டுகொள்ள வேண்டும். ( இதனால் யாழ்மாவட்டத்துள் வாழ்ந்த தலித்துக்கள் பாதிக்கப்பட்டதற்கான பொறுப்பை யாழ் மேட்டுக்குடி சமூகமே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்) உயர்குடி நலன்களுக்காக கற்பிதப்படுத்ப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ இனவாத சுழியுள் சிக்குண்டு இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகங்கள் அனைவரும் பங்குகொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது. அப்போராட்டத்தையும் தமது ஆதிக்கத்துpற்கு மட்டுமே உரித்ததாக உரிமை கோரி கருத்து வேறுபாடுகளுடன் இயங்கிய பிற தமிழ் இயக்கங்களை உயர் மேலாதிக்க பின் புலத்தில் தடைசெய்தும் கொலை செய்தும் தமது பாசிச எல்லையை சர்வதேசமெங்கும் விரிவுபடுத்தி வருகிறது பாசிசப் புலிகள் இயக்கம். எமது மண்ணில் மேற்கொள்ளப்படுவது தமிழ் பேசும் அனைத்து மக்களுக்குமான விடுதலைப் போராட்டமல்ல இரண்டு அதிகாரங்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருப்பது யுத்தம். போராட்டமல்ல!!. பேச்சுரிமை, ஜனநாயகச் சூழல், மனிதநேயம் போன்ற மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் தொலைந்துபோய் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாகவும், அச்சுறுத்தல் நிறைந்த கொலை (புலி) வேட்டைக்காரர்களின் பரந்த வெளியாகிப்போனது எமது தேசம் என்பதை தலித்முரசின் நிர்வாகத்திற்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
உங்கள் ஆசிரிய உரையில் ""...கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும்போது அதற்கு இரட்டை அளவுகோல்கள் இருக்கமுடியாது. நம் அருகில் நடைபெறும் கொடுமைகள் கண்டு அநீதி காப்பதும் அருகாமையில் நடைபெறும் கொடுமை கண்டு அலறுவதும் செயற்கையான உணர்வின்பாற் பட்டதாகவே கொள்ளப்படும்...'' என பிறருக்கான உங்கள் உபதேசத்திலிருந்து தலித்முரசு நிர்வாகம் எவ்வகையில் தனித்துவமாக இருக்கிறது என்பதை நாம் உங்கள் தலைப்புக் கட்டுரையில் இனம்காண முடியாதிருப்பதை வேதனையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது.
உங்கள் ஆசிரிய தலைப்புச் செய்தியான ''இந்தியா தலையிடவேண்டாம்'' எனும் கட்டுரையானது முதல் இரு பந்தியிலும் அரசியலை கேள்விக்குட்படுத்தி நியாய பூர்வமான சமூக பண்பாட்டுக கலாச்சார மாற்றத்துக்கான பன்மூக தேவைகளையும் அவசியத்தையும் விலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ச்pயான் பிற நான்கு பந்திகளிலும் செய்தி ஊடகங்களினால் பெறப்பட்ட வெறும் அரசியல் அதிகாரச் செய்திகளை உள்வாங்கிய அனுபவத்தை தலித்முரசின் தேவைக்கு பயன் படுத்தியுள்ளீர்கள். குறிப்பாக ""..;ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுரங்களுக்கான எதிர்வினையே ராஜீவ்காந்தியின் கொலை என்பது அனைவரும் அறிந்ததே"" என நீங்களும் அக்கொலையை மறைமுகமாக ஆதரிக்க உந்துவதை உணரமுடிகிறது. புலிகளின் ராஜீவ்காந்தியின் கொலை உட்பட அவர்கள் செய்த, செய்யப் போகின்ற அனைத்துக் கொலைகளுக்கும் அவர்களது பாசிச மொழியானது "தேசத்துரோகிகள்" என்பதே. அவர்களின் பாசிசத் தொடர்ச்சிக்கு தலித்முரசும் கடைவிரித்துள்ளதை எம்மால் சுட்டிக்காட்டாமல் நகர முடியவில்லை.
''... இந்தியாவும் இந்திய மக்களும் இந்த சம்பவத்தை (ராஜீவ்காந்தியை கொலை செய்ததை) பின் தள்ளிவிட்டு இலங்கை இனப் பிரச்சனையை புதியதொரு கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்."" என என் டி. டிவிக்கு புலிகளின் மதியுரைஞர் வழங்கிய பொன் மொழிக்கு ஆதரவாக தலித்முரசு தோள் கொடுக்குமானால்!!! அதுதான் நியாயமானது என தலித்முரசு நிர்வாகம் கருதுமானால்!! நாம் ஒன்று கேட்கிறோம் தெடர்ந்தும் சாதிமேலாதிக்க ஒடுக்குமுறைகளும், சாதிக் கொலைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் தலித்துக்களின் கடந்தகால அவலங்களான. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேல்வளவு, வெண்மணி போன்ற அனர்த்தங்களுக்கு காரணமான ஆதிக்கசாதி சமூக மனநிலையானது, கடந்த அவலங்கள் யாவற்றையும் பின் தள்ளிவிட்டு பெருந்தன்மையாக மறந்து விட்டு, ஒதிக்கிவிட்டு நடந்த "துன்பவியல் சம்பவத்தை" புதியதொரு கண்ணோட்டத்தில் அணுகுவோம் என தலித்முரசிடம் கோரிக்கை வைத்தால் தலித்முரசு 24 மணி நேரத்துக்குள் மன்னித்து மறந்துவிடத் தாயாரா எனக் கேட்கிறோம். (புலியின் மதியுரைஞரின் கோரிக்கையை இந்திய மத்திய அரசு 24 மணி நேரத்துள் மறுத்து விட்டதற்காக தலித்முரசு வருந்துவதுபோல்.)
ஈழ விடுதiலைப் போராட்டம் என தோற்றம் கொண்டதானது யாழ்ப்பாணிய மேலாதிக்க மனோநிலையிலிருந்து பிறந்தது. புலிகளின் யுத்தமானது மக்களின் நலன்களின் அடிப்படையில் நிகழ்வதல்ல. ஈழத்தமிழர்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட கொலைகளுக்கு காரணமானவர்கள் புலிகள். நான்கு வருட சமாதான அமைதி நிலையை சீரழித்து தற்போதைய யுத்தத்திற்கு காரணமானவர்களும் புலிகளே. புலிகளின் பாசிச செயல் பாடானது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் நிலைகொண்டுள்ளதை ஐரோப்பிய, அமரிக்க கனடா அரசுகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதோடு, மேற்படி நாடுகள் தமது நாடுகளில் புலிகளை தடையும் செய்துள்ளது. அவர்கள் புலிகளை தடைசெய்துள்ளதையும், அவர்களது கொலைப்பட்டியலையும், பாசிச மாவியா நெற்வேக் திட்டங்கள் அனைத்தையும் 54 பக்கத்தில் அம்னஸ்டி இன்ரநேசினல் ஓர் அறிக்கையாகவும் அம்பலப்படுத்தியுள்து. அவைகள் தவறானது, புலிகளின் போராட்டத்திற்கு எதிரானது என தலித்முரசு கண்டனம் தெரிவிக்க முடியுமா எனக் கேட்கிறோம். (WWW.HRW.ORG ) எனும் இணைய வலைப்பிரிவில் அவ்வறிக்கையை காணலாம்)
தலித்முரசு நிர்வாகத்திடம் கீழ்வரும் கேள்விகளுக்கான பதில்களை எமக்கு தலித்முரசினூடாகவே வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். புலிகளின் யுத்தத்தையும் அவர்களின் அரசியலையும் ஈழமக்களுக்கான விடுதலை என பதிவு செய்துள்ள தலித்முரசு, எமது கேள்விகளுக்கு பதிலளிப்பதும் பத்திரிகை தர்மத்துக்குள் அடங்குமெனவும் கருதியே இதைக்குறிப்பிட்டுள்ளோம்.
விடுதலைப் புலிகள் ஒருபோதும் நேசக்கரங்களை நீட்டி கருத்து வேற்றுமை, மாற்றுக் கருத்துருமை பற்றி விவாதித்தவர்கள் கிடையாது. தமது அதீத வன்முறையின் மூலம் மாற்றுக் கருத்தாளர்களை, மற்றைய விடுதலைப் போராட்டக் குழுக்களை அழித்தொழித்தவர்கள். இந்த அழித்தொழிப்புக் குறித்து வெறும் வரலாற்று பதிவாக மட்டும் எண்ணிக் கொள்பவர்கள் யாருமே அதன் உள்ளார்ந்த பாசிச வன்மம் குறித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்கள். அல்லது தமது நலன்கள் நிமித்தம் அவர்களுடன் சொருகி நிற்பவர்கள.; புலிப்பாசிச நகர்வின் ஒவ்வொரு அலகையும் பட்டுணர்ந்தவர்கள,; பார்த்துணர்ந்தவர்கள் நாம்.
ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்கள் யார்? அவர்களின் விடதலை என்பது எது? (பல இன பண்பாட்டு சாதிய படிநிலயில் துல்லியமான அக்கறையுடன் வாழ்ந்து கொண்டு) எப்படி புலிகள் மட்டுமே மக்களின் கடைசிக் குரலானார்கள்? (ஏகப்பிரதிநிதி, முறுக்கு மீசை திருமாவளவனின் உலகத் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என்பதற்குள்) புலிகளின் எதிரிகள் அல்லது புல்லுருவிகள் என்பவர்கள் யார் யார்? புலிகள் தமிழர்களின் அபிலாசைகள் என்று சொல்லிக் கொள்பவைகள் குறித்து அக்கறைப் படுபவர்களா? மக்களது விருப்பு வெறுப்புகளை அங்கீகரிக்கக் கூடியவர்களா? இன்றுவரை அவர்கள் சொல்லுகின்ற மக்கள் குறித்த நலன்களில் எந்த ஒரு இடத்திலாவது மக்களிடம் இருந்து வருகின்ற எதிர் விமர்சனங்களை உளசுத்தியுடன் ஏற்று இருக்கிறார்களா? அல்லது எதிர் விமர்சனங்களை முன்வைத்தவர்களை உயிருடன் விட்டிருக்கிறார்களா? புலம் பெயர்ந்த வெளிநாடுகளில் அவர்களின் வன்முறைகள், கொலைகள் இல்லாமல் இருந்தனவா? புலம் பெயர்ந்த நாட்டிலிருந்து விமர்சிப்பவர்கள் கருத்துச் சொல்பவர்கள் யாராவது அவர்கள் சொல்லுகின்ற தமிழீழத்திற்கு சென்று உயிருடன் திரும்பி வந்துவிடலாமா?. யாழ்ப்பாணியத் தமிழ்ப்பாசிசம் யாழ்ப்பாணத் தலித்துக்களைத் தின்று... ஈழத்துப் புத்திஜீவிகளைத் தின்று... கிழக்கு மக்களைத் தின்று...!!! இப்போது வன்னிச் சிறுவர்களைத் தின்றுகொண்டிருப்பதை எத்தனையோ இடங்களில் உங்களால் வாசிக்க முடியும். இதன் அடுத்த கட்டம் தமிழகம். அதற்கு விளக்குக் கொழுத்துகிறார் திருமாவளவன். தலித் முரசு நண்பர்களுக்கு விளங்கிக்கொள்ள ஆகக் குறைந்தளவு தேடலுக்காக சின்ன ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறோம். ஈழத்தின் துரோகிகள் என்ற பட்டியலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களது அல்லது துரத்தியடிக்கப்பட்டவர்களது விபரத்தைத் தேடுங்கள். தேவையெனில் நாங்கள் அனுப்பி வைக்கிறோம் அதன்பின் ஈழ அரசியல் பற்றி கட்டுரைகள் எழுதுங்கள். அதை விடுத்து குமுதம் ஆனந்த விகடன் பாணியில் ஈழ அரசியல் பேசாதீர்கள். உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். யாழ்ப்பாணியப் பாசிசம் தமிழீழத்தின் பெயரில் அனைத்துக் கல்விமான்களையும..,; புத்திஜீவிகளையும்..., ஜனநாயக விரும்பிகளையும்..., மனிதவுரிமைவாதிகளையும் கொன்று வந்திருக்கிறது. நீங்கள் கனதூரம் போகத் தேவையில்லை நேற்று கொழும்பில்வைத்துப் புலிகளால் கொல்லப்பட்ட கேதீஸ் லோகநாதன் என்பவர் யார் என்று மட்டும் தேடுங்கள் போதும். தயவுசெய்து புலிகளது பினாமி அடிமைச் சேவகர்களையும், பினாமி மீடியாக்களையும் தேடவேண்டாம். எந்தத் தகவலும் கிடைக்காது. உங்களது மேலதிக வாசிப்பிற்கு ஈழ அரசியல் கட்டுரைகள் அனுப்பிவைக்கிறோம். அதை வாசியுங்கள். நிறைய விளங்கும். அதன்பிறகு புலிகளை நீங்கள் எதிர்க்க வேண்டியதில்லை. தமிழகமக்களுக்கு தலித் முரசு கொம்பு சீவாது இருக்கும் என்ற நம்பிக்கையாவது இருக்கும.; தலித்முரசு நிர்வகம் மேற்கூறியவைகளுக்கு பதிலைத்தேடுவதுடன். எமது சமூகத்தையும் அரசியல் விடுதலைக்கான சிந்தனைப் பாங்கில் அறியாமல் இந்திய சாதிய பண்பாட்டுபக் கலாச்சாரப் பின்புலதில் ஆய்விற்குட்படுத்துமாறு கேட்டுக்கொளகின்றோம். நாம் ஒரு புலிக்குப் பால் கொடுத்து வளர்த்துவிட அது எம்மையே பின்பு குதறுகிறது. இந்திய தமிழக தலித் மக்களே நீங்களும் ஒரு முறுக்கு மீசை புலியை (சிறுத்தை) வளர்க்கின்றீர்கள் எமது புலித் தலைவரின் சித்தாந்தத்தில் தான் வளர்கின்றது அச்சிறுத்தையும். அண்மையில் எமது நண்பர் நீலகண்;டன் (கருப்பு பிரதி வெளியீட்டாளர்) தொல் திருமாவளவனது அரசியலை விமர்சித்ததற்காக அவருது குண்டர்களால் தாக்கப்பட்டதானது எதிர்காலத்தில் தமிழக தலித் மக்களுக்கு ஒர் பாசிசத் தலைமை வேர் கொண்டுவிடுமோ என எம்மை அச்சுறுத்துகின்றது.
அசுரா பிரான்ஸ்,
'மற்றது' சஞ்சிதை ஆசிரியகுழு கற்சுறா, ஜெபா கனடா,
தேவதாசன் 'அநிச்சை' பிரான்ஸ்,
'எக்ஸில்' எம் ஆர் ஸ்டாலின், விஜி பிரான்ஸ்,
சுந்தரலிங்கம் பிரான்ஸ் (நீண்டகால தலித்முரசு வாசகர்)
'நாட்டாமை' சஞசிகை ஆசிரியர் சக்கரவத்தி கனடா.
ஜீவாகரன் கனடா,
அருந்ததி பிரான்ஸ்