அறிமுகம்
இன்றைய தமிழ்ச் சமூக கொதிநிலையாய் துலங்குவது 'தமிழ்த் தேசியமும்' அதன் வழிபாட்டு அடிமைச் சேவகமுமே.
பேசப்படும் தமிழ்த் தேசியக் கருத்தியல் தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாக தலித்துக்கள், முஸ்லிம்கள், கிழக்கு வாழ் தமிழர்கள், மலையக மக்கள் உள்ளனர். மக்களை மந்தைகளாக குவியவைத்து நாற்திசையும் துப்பாக்கிக் குழல்களால் அணைத்து மண்டியிடவைத்து தமிழ்த் தேசியப் பஜனைபாட நிற்பந்திக்கிறது.
சர்சசையின் உச்சக்கட்டத்தில் மனித சமூகத்திற்கான குணங்குறிகளற்ற ஒரு விசித்திரப் போக்கில் வாழ்ந்து வரும் மனித கூட்டத்தில் வாழத் தலைப்பட்டவர்கள் நாங்கள். எங்களிடம் எஞ்சியிருப்பது அற்பத்தனமான நம்பிக்கைகள். பாசிசத்தின் ஆணிவேர் ஆழ ஓடி எல்லோர் மனங்களையும் மெல்லச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. துப்பாக்கி என்பது பாசிசத்திற்கான இறுதித் தேவை. அதை எமது குழந்தைகளிடம் எப்போதோ கொடுத்து விட்டது குறித்து நமது சமூகம் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. எல்லோரும் தம்மைப் பாதுகாத்துக்கொண்டு தற்கொலைக்கு தூண்டும் தளத்திலிருந்து சுதந்திரம் பற்றியும் வாழ்க்கை பற்றியும் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம.;...தூ.
கை நழுவிப் போகும் தருணங்கள் நமக்குத் தெரிவதில்லை. எப்போதோ யாரோ சொல்லிவிட்ட சபதம் நிறைவேற்றப்படும் என்று சொல்லிக் கொண்டு யாருடையதோ குரல்வளையைக் காலால் நசுக்கி நரபலியிடுகிறோம். துப்பறியும் நாய்களாக மாறிவிட்டிருக்கும் நமது சமூகத்தின் எழுத்தாளர்களோடும் அவர்கள்தம் மர்மக்கதைப் பத்திரிகைகள் மீதும் நாம் அன்றாடம் காறித்துப்பிய வண்ணமேயுள்ளோம். பாசிசத்துள் ஊறிப்போன தமிழ்த் தேசியத்தையும் தமிழத்தேசியத்தையே தனதாய் வரித்துக் கொண்ட யாழ்ப்பாணிய மேட்டுக்குடி மனநிலைக்கு நாம்! தூ...எண்டு துப்பவேண்டாம்?
எஞ்சியிருக்கின்ற மாற்றுக்கருத்தாளர்களும் கறுப்பு வெள்ளை விமர்சனங்களை இன்னுந்தான் விட்டொழிப்பதாயில்லை. இரண்டு கட்டுரைகள் இரண்டு சிறுகதைகள் எழுதியபின் அதற்கு மேல் ஒழிந்து கொள்ளும் இறுதிப் புகலிடம் யாழ்ப்பாணிய மேட்டுக்குடித் தேசியமாகவே இருக்கிறது. கொலைகளையும் தற்கொலைகளையும் தூண்டிக்கொண்டு தெருத்தெருவாய் பிணங்களையே கடந்து திரியும் மனிதக் கூட்டம் மரணதண்டனைச் சட்டத்தைத் தவறு என்கிறது. தமிழீழத்தின் பெயரில் பலியாக்கப்படும் தலித்துக்களோ வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் குறித்தோ கவலையில்லை. தமிழகத்துத் தலித்துக்களுக்கு யாழ்ப்பாணியத்தைக் கைமாற்றிவிட்டு கொம்பு சீவுகிறார்கள். அதற்காக சிவத்தம்பியத்திடம் மார்க்சிய ஞானஸ்தானம் பெற்ற சீடர்கள் அங்கு நிறையவே இருக்கிறார்கள். நெடுமாறனுக்கும் வைக்கோபாலசுவாமிக்கும் திருமாவளவனுக்கும் மேலால் ஈழப்பிரச்சனை குறித்துப் பேச இவர்களால் முடியவில்லை. நாம் இருக்கின்ற அதிகாரங்கள் மீதுமட்டுமல்ல கள்ளத்தனங்கள் களவாணித்தனங்கள் குழிபறிப்புக்கள் ஏமாற்றுக்கள் எகத்தாளங்கள் எல்லாவற்றின் மீதும் காறித் தூ... என்கிறோம். அது எம்மிடம் இருந்தால் எம்மீதும் துப்புவோம்.
பெண்களிடமிருந்து அகப்பைகளைப் பறித்து விட்டு அந்தத் கரங்களில் துப்பாக்கிகளை கொடுப்பதுவே பெண்விடுதலையின் உச்சம் என்று தமிழ்வேதம் ஓதுகிறார் தமிழினி. போரின் பகைப்புலத்துள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட விதவைகளுக்கு “விபச்சாரி” பட்டம் சூட்டி கொலைகள் தொடர்கின்றன. அதை நியாயப்படுத்த போட்டிபோட்டுக்கொண்டு கலாசாரக் காவலர்களாக கடைவிரிக்கின்றன தமிழ் பத்திரிகைகள். கலாசாரம், குடும்பம் என்பவற்றை உடைத்து கலகம் புரிவதாக கவிதை, கதை, கட்டுரை, ஏன் தொகுப்புத் தொகுப்பாய் நூல்களையும் புகலிடத்திலிருந்து வெளியிடும் இந்த புத்திஜீவிகளின்(!!!) ஆழ்மன நிலைபற்றி; தோழியை, துணைவியரை கேட்டால் தூ...தூ...தூ.
யாழ்பாணிய மேலாதிக்கத்தின் போக்கிரித் தனங்களுக்கு எதிராக தனது முஸ்டியை உயர்த்தியதற்காக ஒவ்வொரு கிழக்கு பிரசையும் இன்று துரோகியாக்கப்பட்டு கொலை குற்றவாளியாக நோக்கப்படும் அவலம். இந்த யாழ்ப்பாணிய நோக்கு தமிழ் சமூகத்தின் பொதுமன உளவியலை...தூ...தூ...
உங்கட தலைவருக்கு தூ..
உங்கட துப்பாக்கிகளுக்கு தூ...
எமது ஏவுகணையே தூ... தான்.