சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...இது எமது தலித்
சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...
இது எமது தலித் சமூகங்களுக்கு வரலாற்று ரீதியாக தொடரும் மரபாகவே நீடிக்கின்றது.
சாதியத்தின் கொடுமையும் அதன் தீண்டாமை உணர்வும் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பரிமாணங்களில் தனது கோரமுகத்தைக் காட்டவே செய்கின்றது. அதன் வரலாற்றுத் தொடர்ச்சியின் மற்றோர் வடிவம்தான் அண்மையில் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கு எதிராக புகலிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்களாகும்.
ஆம்… பார்க்காமலும்... கேட்காமலும்...பேசாமலும் குந்தியிருக்கும் குரங்கு நிலைச் சமூகமென எம்மை நிரூபிக்க எத்தனிக்கும் செயல்தான் புகலிடத்தில் நிகழ்ந்து வருகிறது.
1970 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தொடர்ச்சியான தலித் சமூக விடுதலைப் போராட்டமானது தமிழ்த் தேசிய விடுதலை எனும் பெயரால் திசைமாற்றப்பட்டது. ஆனால் தலித் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையானது தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலிலிருந்து உரித்தெடுக்க முடியாது ஊனிலும், உணர்விலும் உறைந்து நிற்கிறதே.. ஏன்..!
எமது சமூகம், எம் மத்தியில் நிலவும் சாதியம், எமது அரசியல், எமது ஆயுதப்போராட்டம், அதை முன்னெடுத்த இயக்கங்கள், சர்வதேசியக் கோட்பாடுகள் என அனைத்திலும் எமக்குள்ள அதிகபட்ச அனுபவமும் தேர்ச்சியுமே எமது தற்போதைய இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி எனும் வளர்ச்சி நிலை. தொடரும் யாழ்ப்பாணிய மேலாதிக்கத்தின் தொடர்ச்சிதான் எம்மை பரந்துபட்ட சிந்தனைக்கான களம் நோக்கியும் நகர்த்தியது.
எமது முன்னெடுப்புக்களில் பல்வேறு தரப்பினர் மத்தியில் மாறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். இப்பினும். அதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் ஏற்பாடு செய்த தலித் மாநாட்டிற்கு பல்வேறு தரப்பினருடைய ஒத்துழைப்பும, உதவிகளும, ஆலோசனைகளும் கிடைத்ததானது எம்மை உச்சாகப்படுத்தியதென்னவோ உண்மைதான்!
மாற்றுக் கருத்தியலாளர்கள், ஜனநாயக முற்போக்கு சக்திகள், பல்வேறுபட்ட தமிழ் அரசியல் கட்சிகள், பல்வேறு ஊடகங்களான, இணையத் தளங்கள், வானொலிகள், பத்திரிகைகள், என நீங்கள் அனைவரும் எமக்கு பக்கபலமாக இருப்பதாகவே நாம் கருதுகிறோம். ஆனால் உங்கள் ஆதரவும், எங்களது நியாயமான கோரிக்கைகளையும் பொறுக்காத ஒரு சிலரின் நயவஞ்சக, அயோக்கியத்தனமான நடவடிக்கைகளானது எமக்கும் உங்களுக்குமிடையிலான உறவுகளையும்; எமது தலித் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளையும் சிதைக்கும் பாசிசப் போக்காக முகம் காட்டுகிறதே... ஏன்..!
தலித் மாநாடு ஆரம்பமாவதற்கு சில நாட்கள் முன்பாகவே எமது முன்னணியில் வன்முறையையும் கொலைகளையும் ஆதரிக்கும் அங்கத்தவர்கள் இருப்பதாக கேள்வி பரப்பப்பட்டது. பிற்பாடு அசோக் யோகன் கண்ணமுத்து அவர்கள் தலித் மாநாட்டிலும் இக்குற்றச்சாட்டை எம்மீது சுமத்தினார்.
கொல்லப்படுவதற்கும்... கொல்லக் கொடுப்பதற்கும் உகந்த ஒரு சமூகமாகவே எமது தலித் சமூகம் கருதப்பட்டு வருவதை எமது சமூகம் சார்ந்து சிந்திப்பவர்கள் அறிவீர்கள். இது வரலாற்று உண்மையல்லவா? ஆனால் எம்மத்தியில் கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆதரவுளிப்பவர்கள் இருப்பதாகப் புனையப்படுகிறதே ஏன்?
எம்மிடம் கொலையைத் தூண்டுபவர்களும், வன்முறை ஆதரவாளர்களும் இருப்பதாக மறைமுகமாகக் கூறி ஒற்றைக்கால் தவம் புரிகிறார்கள் இந்தத் ‘தவசிகள’. இவர்கள் வேறு யாரும் அல்ல ‘அனைத்து அராஜகங்களுக்கும’ எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகவும். மிகப் பென்னாம்பெரிய ஜனநாயகவாதிகளாகவும் தம்மை இனம் காட்டிக் கொள்கின்ற நிழல் மனிதனான ‘கருணைதாசன்’ எனும் ‘நபரும்.’ தீப்பொறி எனும் இணையத்தளமுமே ஆகும். இவர்களையே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியை ஒழித்துக்கட்ட முனையும் நயவஞ்சகத்தனம் கொண்ட அயோக்கியத்தனமான சக்திகளாக நாம் இனம் காண்கின்றோம்.
மாநாடு முடிந்து அதனது சுமைகளை நாம் இறக்கும் முன்பாகவே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அங்கத்தவரான எம்.ஆர். ஸ்டாலின் (ஞானம்) மீதான அவுதூறுகளை மேற்படி இரு அயோக்கிய நயவஞ்சக சக்திகள் மொட்டைக் கடிதங்களாகவும், ஆதரமற்ற செய்திகளாகவும் பரப்பிவருகிறார்கள். இதற்கான பிரதம சூத்திரதாரியாக இருப்பது நிழல் மனிதனான ‘கருணைதாசன’ என்பது எம்மைப்போலவே அம் மர்ம ‘நபரை’ நீங்களும் இனம் காண்பதொன்றும் கடினமானதல்லவே!!
இவர்களின் திட்டமும்...நயவஞ்சக நோக்கமும்.
கடந்த காலத்தில் தலித் சமூக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இடது சாரிச் சிந்தனையாளர்கள் இடையில் மௌவனமாகி அடங்கிப்போனது எதனால்? அதை நாம் அதிகம் விளக்கத்தேவையில்லை. தமிழ்த் தேசிய விடுதலை என்பதற்குள் எமது தலித் சமூகத்தையும் உள் இழுத்து.. ஆயுதம் முகம் காட்டிப் பல்லிளித்துச் சன்னதமாட...; அடங்கிப்போனது தலித் சமூகத்திற்கான கேள்விகள்.
அன்று நேராக ஆயுதம் எம்முன் நீண்டது... நாம் மௌனமானோம். அது அன்றைய வைதீக பாசிசம். இன்று எம்மீது ஆயுதம் நீட்டத் தூண்டுகிற செயலானது நவீன பாசிசம்.
எமது அங்கத்தவர் ஞானம் கருணாவுடன் தொடர்பு கொண்டவர். கருணாவிடம் பணம்வாங்கி வீடுகள் சொத்துகள் வாங்கிக் குவிப்பவர். அவரின் சொந்தப் பெயர் இது. அவர் இன்ன விலாசத்தில் இருக்கிறார். இப்படி அனைத்துத் தகவல்களும் கொடுத்து... புலிகளே உங்கட எதிரிகளை நாம் காட்டியுள்ளோம் உங்களுக்கு தில் இருந்தால் போய் சுடுங்கள்....!!! இதுதான் நவீன பாசிசம்.
இவர்கள் அனைத்து அராஜகங்களுக்கும் எதிரானவர்களாம், மிகப்பென்னாம் பெரிய ஜனநாயகவாதிகளாம். இவர்கள் தாம் ஜனநாயகத்தை நேசிப்பதாகவும், அனைத்து அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் புரட்டுகள் புனைந்து கொண்டு தமது பாசத்திற்கும் நேசத்திற்குமான புலிகளுக்கு ஆதரவான நிதர்சனம் எனும் இணையத்திலும் எமக்கான அவதூறுகளையும் பிரசுரித்து மகிழ்கின்றார்களே . இதன் மர்மம்தான் என்ன…!!!
நிதர்சனத்தின் புனைவுகளுக்கும், தீப்பொறி, கருணைதாசன் போன்றவர்களின் புரட்டுகளுக்கும் புனைவுகளுக்கும் என்ன வேறுபாடு…! என்ன உறவு…!!!
மேலும் இந்தக் கருணைதாசன் எனும் ‘நிழல் மனிதன்’ பல மறுப்புக் கருத்துக்களெனும் தனது நிலைப்பாடுகளை புலிகளின் ஈழமுரசு பத்திரிகையின் ஊடாக பிரசுரித்தும் வருகிறார் எனும் செய்தியும் உலாவுகிறதே!! இதனதும் மர்மம்தான் என்ன…!!!
இவர்களது சதித்திட்டமானது தலித் சமூக மேம்மாட்டு முன்னணிக்கும் சேர்த்தே நிகழ்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஞானத்துடன் இருந்த தனிப்பட்ட பிரச்சனையும் தீரும். தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகளும் முடங்கிவிடும். கருணாவின் ஆள், கருணாவின் செல்வாக்கு, கருணாவின் பணம் இதெல்லாம் தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கும் சொரிகிறது. என யாழ்ப்பாணிய பொதுப் புத்தி இலகுவாகவே சாட்சியம் சொல்லும் எனும் நம்பிக்கையிலல்லவா இவர்கள் செயல்படுகிறார்கள். பாசிசத்திலே பால்குடித்து (!!!) வளர்ந்த ‘நபர்களாக’ அல்லவா இனம் காட்டிக் கொள்கிறார்கள் கருணைதாசனும், தீப்பொறி இணையத்தளமும்.
எமது வேலைத்திட்டத்தின் முன் நிபந்தனையாக இருப்பது கலாச்சாரப் பண்பண்பாட்டுத் தளத்திலான சமூக விடுதலை என்பது. அதை நாம் தலித் மாநாட்டிலும் வலியுறு த்தியுள்ளோம். எமது முன்னணியின் செயற்கபட்டாளர்களில் ஒருவரான ஸ்ராலின் ஒரு தலித்தாகவும், பிராந்திய ரீதியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகவும் உள்ளார். ஒடுக்கப்படும் இப்பிரிவினர்மீது சமூக அரசியல் தளங்களில் மேலாதிகம் செலுத்துவது ‘யாழ்மையவாத’ கருத்தியலே என்பதை அடையாளம் கண்டு அவற்றை கணக்கில் எடுத்துச் செயல்படுபவர். அந்தவகையில் தான் யாழ்மேலாதிக்க அரசியல் செயல்பாடுகளுக்கு எதிராகவும், இராணுவ சக்திகளால் நிர்மூலமாக்கப்பட்ட முஸ்லிம்களுக்காகவும் அவரது குரல் கடந்த காலங்களில் பலமாக ஒலித்து வந்தது. இலக்கிய சந்திப்புகளிலும், மாற்று சஞ்சிகைகள், மற்றும் வெளியீடுகள் போன்றவற்றிலும் இருந்துவரும் அவரது பங்களிப்புகள் இவற்றை உறுதிப்படுத்தியே வந்திருக்கின்றன. புகலிட இலக்கியம் கொண்டிருக்கும் பாசிச எதிர்ப்புக் கூறுகளுக்கு எம்.ஆர்.ஸ்ராலினது பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடக்கூடியன அல்ல. அவர் புலியிலிருந்து கருணா பிரிந்ததன் பிற்பாடுதான் இதைப் பேசத் தொடங்கியவரல்ல என்பதையும் பலர் அறிவர். ஆகவே சமூகம் சார்ந்த சாதியப் பிரச்சனைகளையும், பிராந்தியம் சார்ந்த அரசியலிலும் ஞானம் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர்.
தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் சாதியம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டுமாகவே அவரது பங்களிப்பும் நிகழ்ந்து வருகிறது. அவரது நேர்மையிலும் அவரது செயல் பாடுகளிலும்; தலித் சமூக மேம்பாட்டு முன்னணியாகிய நாம் மிகுந்த நம்பிக்கையுடனேயே செயல்பட்டு வருகின்றோம். அவர் தொடர்பாக ‘குறைந்த பட்ச நேர்மையும் அற்று’ நிழல் ’நபரான’ கருணைதாசன் எழுதும் முட்டாள்தனமான மொட்டைக்கடிதத்தையும், தீப்பொறியின் ஆதாரம் அற்ற செய்திகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு ஈ.பி.டி இயக்கத்தின் பொருளாதார உதவியுடனேயே எமது தலித் சமூக மேம்பாட்டு முன்னணி செயல்படுகிறது எனும் குற்றச்சாட்டும் தலித் மாநாடு தொடங்கவதற்கு முன்பாகவே பரப்பப்பட்டது. இவையாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்படி நயவஞ்சக அயோக்கியத்தன முடையோரின் செயல் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எமது த.ச.மே. முன்னணிக்கு ஆதரவு வழங்குபவர்களான ஜனநாயக முற்போக்கு சக்திகளே நீங்கள்தான் இதை பரிசீலிக்கவேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கிறீர்கள் என நாம் கருது-கின்றோம். தலித் சமூகத்தின் கடந்த காலப் போராட்டங்கள் திசைதிருப்பப்பட்டதன் ஓர் தொடர்ச்சியாகவே நாம் இதையும் அடையாளம் காண்கின்றோம்.
அப்படி நாம் கருதுவதில் தவறுகள் இருப்பின் அதைக்களைந்து எமது சமூகத்தின் நம்பிக்கைக்கு உதவுமாறும் உங்ளைக் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது தலித் சமூகத்தின் துன்பங்களும், துயரங்களும் செவிகளில் நுழையாது வெறுமனே காற்றில் மட்டுமே கரைந்து கொண்டிருப்பதா?
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)
