23-03-2008 ஞாயிறு பிற்பகல் பிரான்சில் தோழர்
23-03-2008 ஞாயிறு பிற்பகல் பிரான்சில் தோழர் புஸ்பராஜாவின் இரண்டாவது நினைவு தினமும் அவரது படைப்பிலக்கியத் தொகுப்பின் அறிமுகமும் நடைபெற்றது.
‘சி. புஸ்பராஜாவின் படைப்புகள்’ எனும் தலைப்பில் தோழர் புஸ்பராஜா அவர்கள் எழுதிய சிறுகதைகள் உட்பட கவிதைகளும் அடங்கியதாக அத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பை புஸ்பராஜா அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வெளியிட விரும்பியபோதும் 'மரணம்' அவரைத் துரத்தியதால் அது அவரால் இயலாது போனது.. தோழர் புஸ்பராஜா அவர்கள் உயிருடன் இருக்கும்போதே இத்தொகுப்பை வெளியிடுவதற்கான எந்த ஆயத்தமும் அவரால் மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவரது துணைவியாரான திருமதி மீரா அவர்களே இத் தொகுப்பு வெளிவருவதற்கான அனைத்து சுமைகளையும் தாங்கி அவரது இரண்டாவது வருட நினைவு நாளில் அவரது படைப்புக்களையும் வெளியிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
தோழர் புஸ்பராஜாவின் இரண்டாவது வருட நினைவு பகிர்தலையும் அவரது இலக்கியத் தொகுப்பின் அறிமுக நிகழ்வையும் இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் உப தலைவரான தோழர் யோகரட்ணம் அவர்கள் நெறிப்படுத்தினார். புஸ்பராஜாவின் நினைவுகளையும் அவரது இலக்கிய ஆளுமைகளையும் நெருக்கமாக அருகிலிருந்து சுமந்தவரான சுசீந்திரன் அவர்கள் ஜேர்மனியிலிருந்து வருகைதந்து புஸ்பராஜாவின் இலக்கிய ஆளுமைகள் பற்றி உரையாற்றினார். பிரான்சில் நிண்டகாலமாகவே அரசியல் வேலைகளிலும் கலை இலக்கியப்பணிகளிலும் புஸ்பராஜவுடன் இணைந்து பணிபுரிந்த தோழர் அருந்ததி அவர்கள் புஸ்பராஜாவின் தொகுப்பை அறிமுகம் செய்தார். புஸ்பராஜாவின் சகோதரியான புஸ்பராணி அவர்களும் உரையாற்றினார்கள். புஸ்பராஜாவின் முதலாவது வெளியீடான ‘தோற்றுத்தான் போவோமா’ உட்பட அவரது ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ எனும் நூல் வெளிவருதற்கான பணிகளில் மறைந்த கலைச்செல்வனுடன் சேர்ந்து பணியாற்றிய லக்சுமி அவர்களும் இந்நிகழ்வில் உரையாற்றினார்கள். லக்சுமி அவர்கள் திருமதி மீரா அவர்களால் தொகுக்கப்பட்ட ‘சி. புஸ்பராஜாவின் படைப்புகள்’ எனும் நூல் வெளிவருவதற்கான முயற்சிகளிலும் தனது காத்திரமான பங்களிப்பை செலுத்தியவர்.
இந்நிகழ்வில் புஸ்பராஜாவின் உறவினர்கள் உட்பட நண்பர்கள் தோழர்களெனெ நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
தலைமை உரையாற்றிய தோழர் யோகரட்ணம் அவர்கள் பேசுகின்றபோது, புஸபராஜாவின் படைப்புகளில் தலித் சமூகம் சார்ந்த கேள்விகள் எழுப்படுவதை தாம் உணர்வதாக குறிப்பிட்டார். அத்துடன் நாம் பல காலங்களாக நட்புடன் பழகுபவர்களுடன் சில கணங்களில் அரசில் காரணமாக முரண்படுகின்றபோது நீண்டகாலமாகப் பேணிய நட்புகளும் முரண்பட்டுச் சிதைந்து போய்விடுகின்றது. ஆனால் புஸ்பராஜாவிடம் அரசியல் முரண்பாடுகளுக்கும் அப்பால் நடபைத் தொடர்ந்தும் பேணுகின்ற பாங்கு அது அவரின் தனித்துவச் சிறப்பு எனக் குறிப்பிட்டார்.
முதலாவதாக புஸ்பராஜாவின் நூலை அறிமுகம் செய்த தோழர் அருந்ததி அவர்கள் பேசுகின்றபோது. புஸ்பராஜாவின் முதலாவது படைப்பான ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ எனும் நூலை பலர் பொய்ச் சாட்சியம் என விமர்சித்தார்கள் ஆனால் அது உண்மையாகவே துணிவுடன் படைக்கப்பட்ட வரலாற்றுச் சாட்சியம் தான் எனக் குறிப்பிட்டதோடு. திருமதி மீரா அவர்களால் தொகுக்கப்பட்ட ‘சி. பு;ஸ்பராஜாவின் படைப்புகள்’ எனும் நூலில் உள்ள இரண்டு கதைகள் பற்றிய தனது அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தினார்.
சுசீந்திரன் அவர்கள் பேசுகின்றபோது புஸ்பராஜாவை ஓர் ஆக்க இலக்கியவாதியாக இத் தொகுப்பினூடாக தான் காண்பதாக் குறிப்பிட்டார். இதில் வரும் ஏழு சிறுகதைகள் இலங்கை அரசியலை பின்னணியாகக் கொண்டிருக்கின்றது எனக் கூறினார். மேலும் இதில் உள்ள ‘பூச்சியும் நானும் கொலையும்’ எனும் கதை நகர்த்தலானது அவரது இலக்கிய ஆளுமைக்குச் சான்றாக உயர்வதைத் தான் காண்பதாகக் கூறினார். கரப்பான் பூச்சி மனிதனாக மாற்றம் கொள்வதான படைப்பாற்றல் தகைமையானது ஆக்க இலக்கியத்திற்கான தகுதியை பெறுகிறதென்பதாகவும் குறிப்பிட்டார்.
லக்சுமி அவர்கள் பேசுகின்றபோது, மீராவின் பணி குறித்து இங்கு பேசுகின்றபோது ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஓரு பெண் இருப்பதென்பது உண்மைதான் என்றெல்லாம் புகழப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார். இது போன்ற சொல்லாடல்களானது ஆண்களால் பெண்கள் மேல் ஏற்றப்படும் இரடடைச் சுமைகள்தானே தவிர பெண்கள் மீதான நியாயமான கருசனையல்ல என்றார். அத்துடன் புஸ்பரஜா இருக்கும்போது மீராவைப் பற்றி எந்த ஆண்களும் பேசியதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
புஸ்பராணி அவர்கள் பேசுகின்றபோது 73-74 ஆம் ஆண்டுக் காலங்களில் பெண்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாத காலகட்டம். அந்தக் காலகட்டங்களில் எனது வீட்டிலுள்ள பலருடைய எதிர்ப்புகளுக்கும் மத்தியில் புஸ்பராஜாவின் முயற்சியின் காரணமாகவே நான் அரசியல் போராட்டங்களில் கலந்து கொண்டேன் என்பதாகக் கூறினார். புஸ்பராஜா அண்மைக்காலங்களில்தான் இலக்கியத்தில் ஆர்வம் உடையவராக இருந்தார் என்பதை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார். தாம் சிறுவர்களாக இருக்கும்போதே இலக்கிய வாசிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்ததாகவும் வீட்டில் ஒன்றாக இலக்கியம், சினிமா போன்ற விடயங்களில் ஆர்வமுமடையவர்களாகவும், அது பற்றிய விமர்சனங்களை தானும் புஸ்பராஜாவும் பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட
ஜென்னி
அந்தோனிப்பிள்ளை
காராளபிள்ளை
விஜி
அலெக்ஸ் (ஜேர்மன்)
உதயன்
வி.ரி. இளங்கோ
தேவதாசன்
போன்றோரும் புஸ்பராஜா அவர்களுடன் தாம் பேணிய உறவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.