1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்
1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மட்டும் அல்ல கிழக்கு மாகாணத்தின் நீண்ட நெடுங்கால வரலாற்றிலும் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். ஆயிரம் ஆண்டுகால தமிழ் முஸ்லிம் மக்களின் பரஸ்பர வாழ்வும் அதையொட்டிய பாரம்பரியங்களும் பறிக்கப்பட்டது. இந்த 1990 இல்தான். இனஉறவுகளின் சங்கமமான கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் மையத்துக்கள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்களும் மனிதம் குறித்து அக்கறைகொண்ட மக்களும் சுகதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
* 12-071990 மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த யாத்திரீயகர்கள் 68 பேர் குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு பின்னர் அவர்களாலேயே புதைக்கப்பட்டனர்.
* 03-08-1990காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும் ஹசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளிளால் சராமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர்.
* ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பினிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவங்களின் தொடர்ச்சியாகத்தான் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே அவநம்பிக்கைகளும் இனக்குரோதங்களும் ஆழமாக்கப்பட்டது. ஆனாலும் காலத்தின் கட்டாயம் இந்தவடுக்களை மறந்து மீண்டும் பரஸ்பர வாழ்வுக்குள் சங்கமிக்க வேண்டியது வரலாற்று அவசியமாகும். மறத்தல் என்பதும் மன்னித்தல் என்பதும் கிழக்கு மாகாணத்தில் வாழும் இனங்களிடையேயான பரஸ்பர வாழ்வியல் அங்கீகரிப்புடன் மட்டுமே ஏற்பட முடியும். அதற்கு முன்னோடியாக தம்மிடையே இந்தப்பிரிவினையை விதைத்து யார்? இனக்குரோதங்களுக்கு தூபமிட்டது யார் என்பதை தமிழ் -முஸ்லிம் மக்கள்அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதனூடாகத்தான்; யாழ்ப்பாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் தேசியம் எனும் அவசியம் அற்ற அரசியல் குறித்து கிழக்கு மாகாண மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அந்தவகையில் யாழ்ப்பாணத் தலைமைகளின் வழிநடத்தலே தமக்குள் தமிழ் முஸ்லிம் என்ற பிளவுகளுக்கு வித்திட்டது என்பது கிழக்கில் அம்பலமாகி வருகிறது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. தங்கள் வரலாற்றில் இதுபோன்றதொரு கறைபடிந்த காலங்கள் மீண்டும் வராதிருக்க இன ஐக்கியத்துக்கான குரல்கள் கிழக்கில் வலுப்பட வேண்டும். கிழக்கு மாகாண மக்களின் எதிர்கால அரசியலை வடக்குத் தலைமைகள் அல்ல கிழக்கில் இருந்து உருவாகும் தமிழ் முஸ்லிம் மக்களின் கூட்டுத்தலைமைகள் கையில் எடுக்கவேண்டும்;. யாழ் சைவேளாள மேட்டுக்குடிகளின் எதிரான கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு “தூ” வினது தார்மீக ஆதரவு அளிப்பதோடு, 1990 படுகொலைகளில் மரணித்துப்போன அத்தனை சுகதாக்களையும் மனதில் இருத்துகிறோம்.