26 avril 2008
'தூ' வின் மின் சஞ்சிகை முகவரி மாற்றப்பட்டுள்ளது
22 avril 2008
10 avril 2008
கரி நாள் ஏப்ரல் 10.
வெருகல் படுகொலை - 4 வது ஆண்டு நினைவு தினம்
அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு மண்ணின் மீது வன்னிப்புலிகள் தமது காட்டுமிராண்டித்தனங்களை அரங்கேற்றியநாள். ஆயுதம் தாங்கிய பிரபாகரனின் ஏவலாளிகள் கிழக்கு மாகாணத்துக்குள் புகுந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய 175 போராளிகளை கொன்று வீசிய நாள். பெண்போராளிகளை மானபங்கம் செய்து குற்றுயிராக்கி கொலைவெறியாடிய நாள். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 நாள் இந்தபடுகொலையை நிறைவேற்றியதன் ஊடாக எந்தவரலாற்றின் தொடக்கத்தைக் கட்டிப்போட வன்னிப்புலிகள் முயன்றனரோ அந்த வரலாறு இன்று நிமிர்ந்து நிற்கிறது. அன்று கொன்று வீசப்பட்ட கிழக்கு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அந்த கொடிய நாளை கரிநாளாக அனுஸ்டிக்கும் கிழக்குமாகாண மக்களுடன் எமது முன்னணியும் கரம்கோர்த்துக் கொள்கிறது.
ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி
10-04-2008
kilakku@hotmail.com
08 avril 2008
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவர் திஸ விதாரண விடம் தலித் அறிக்கை கையளிப்பு
6-4-2008 ஞாயிறு லண்டனில் இலங்கை ஜனநாய ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இலங்கை அரசியல் தீர்வுக்கான சர்வகட்சிப் பிரதிநிதகள் குழுவைச்சேர்ந்த 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன் தலைவர் திஸ விதாரணவும் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பின் ஏற்பாட்டாளர்களான இலங்கை ஜனநாயக ஒன்றியமானது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரையும் அழைத்திருந்தனர். இக்கலந்துரையாடலில் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் சார்பாக தலைவர் தேவதாசன் அவர்கள் உரையாற்றியதோடு தலித் அரசியல் அறிக்கை ஒன்றையும் கையளித்தார்.
'தலித் அறிக்கை' கையளிக்க முன் ஆற்றப்பட்ட உரை வருமாறு.
மதிப்புக்குரிய திஸ்ஸ விதாரண அவர்களுக்கும், சர்வகட்சி பிரதிநிதிகளுக்கும் மற்றும் சபையினருக்கும் வணக்கம்.
நான் உங்களிடம் கேள்விகள் கேட்பதற்கு இங்கு வரவில்லை. மாறாக ஓர் அறிக்கையினை உங்களிடம் சமர்ப்பிப்பதற்காகவே வந்துள்ளேன். உங்களுக்கு பல அரசியல் கட்சிகளும், மக்கள் மன்றங்களும் பலதரபட்ட அரசியல் தீர்வுத்திட்டங்களையும் அலோசனைகளையும் வழங்கியிருப்பார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டும் தீண்டாமைக் கொடுமைக்கும் உள்ளான ஒரு மக்கள் சமூகம், கடந்த கால் நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் கொடூரமான யுத்தத்தால் மிகவும் துன்புற்று வாழுகிறார்கள். இம்மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதை வலியுறுத்தும் அரசியல் தீர்வுத்திட்ட ஆலோசனைகள் எதுவும் உங்களுக்கு கிடைத்திருந்ததாக நாம் அறியவில்லை.
1977ம் ஆண்டு வரை சாதியின் பெயராலொடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க பலவித போராட்டங்களையும் உயிர்த்தியாகங்களையும் செய்துள்ளனர். அப்போராட்டத்திற்கு உறுதுணையாக தமிழ் இடதுசாரிகளும், சிங்கள இடதுசாரிகளும் முஸ்லிம் முற்போக்கு சக்திகளும் உதவியுள்ளனர். 1977ம் ஆண்டு தமிழீழ பிரகடனம் செய்யப்பட்டு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியதன் காரணமாக கடந்த முப்பது வருடங்களாக சாதிய விடுதலை பற்றிய பேச்சு பேசாப் பொருளாகி கிடப்பில் போடப்பட்டது. இந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களாக தலித் சமூக மக்களே உள்ளனர். உண்பதற்கு உணவும், இருப்பதற்கு வீடும், உழைப்பதற்கு தொழிலும் அற்றவர்களாக பெரும் துன்பத்தில் வாழும் தலித் மக்களுக்கு வெளிவரப்போகும் அரசியல் தீர்வுத்திட்டத்தில் அவர்களது சமூக அரசியல் பொருளாதரத்தை மேம்படுத்தும் முகமாக விசேட தீர்வுகள் முன்வைக்கப்பட்டு அது அரசியல் சட்டமாக்கப்பட வேண்டுமென இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
2006ம் ஆண்டு நவம்பர் ஜேர்மனியில் உள்ள சுட்காட் நகரில் சகல ஐரோப்பிய ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கி நடாத்தப்பட்ட இரு நாள் மாநாட்டில் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ஓர் 'தலித் அறிக்கையை' வாசித்து வெளியிட்டோம். இவ்வறிக்கையானது 2007 ஒக்டோபர் மாதம் 20,21ம் திகதிகளில் பாரிசில் நடாத்தப்பட்ட 1வது தலித்மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்களின் ஒப்புதலையும் பெற்றுக் கொண்டது.அதனைத் தொடர்ந்து 2008 பெப்ரவரி 16,17ம் திகதிகளில் லண்டனில் நடாத்தப்பட்ட 2வது தலித் மாநாடும் இவ்வறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டது. நேற்றைய தினம் (05ஃ04ஃ2008) இம்மண்டபத்தில் நிகழ்ந்த இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் ( SLDF) கூட்டத்திலும் 'தலித் அறிக்கையை' முன் வைத்தோம்.
இன்று ஒரே மேடையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினரான உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எமது 'தலித் அறிக்கையை' உங்கள் முன்வைக்க கிடைத்த சந்தர்பமும் மிகவும் மகிழ்ச்சிக்குரியதே.
மதிப்புக்குரிய திச விதாரன அவர்களுடைய அரசியல் தீர்வுத்திட்டத்தை தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சமாதானத்தினதும் ஜனநாயகத்தினதும் வருகைக்காக காத்துக் கிடக்கிறார்கள். எனவே நீங்கள் முன்மொழியும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் தலித் மக்களின் மன உணர்வுகளையும் புரிந்துகொண்டு 'தலித் அறிக்கை'யில் எம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளையும் இடம்பெறச் செய்து சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வேண்டுமென்று கேட்டு, இந்தச் சந்தர்ப்பத்தை எமக்கு வழக்கிய இலங்கை ஜனநாயக ஒன்றியத்துக்கு நன்றியையும் தெரிவித்து, விடைபெற்று, தீர்வுக்காகக் காத்திருக்கிறோம்.
