30 octobre 2007
சுவிசிலிருந்து தோழர் யோகராஜா அவர்கள் தலித் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டும் இறுதியில் அவரால் வரமுடியாது போய்விட்டது. இருந்தும் மாநாடு சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார். அவர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்விற்கு தனது பங்களிப்பாக ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். அக்கட்டுரை மாநாட்டின் இரண்டாம் நாள் கிடைத்திருந்தும் அவரது கட்டுரையை மண்டபத்தில் வாசிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதற்காக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மிகவும் வருந்துவதோடு அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றனர்.
அவரது அக்கட்டுரையை கீழே பதிவு செய்துள்ளோம்
மாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், என்னைப்போல் வரமுடியாத சூழ்நிலையில் தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்து மனதளவிலும், வெளியாகவும் வாழ்த்துரை வழங்கிய நண்பர்களுக்கும் எனது அன்பு கனிந்த வணக்கங்கள்.
இன்று அக்டோபர் 21.
இன்றைய இந் நாளுக்கும் இம் மாநாட்டுக்கும் உள்ள பொருத்தப்பாட்டை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதுவரை அறியாதிருந்தால் கீழ் வரும் பந்திகள் அதனை உங்களுக்குத் தெரியப்படுத்தும்! புலம்பெயர் தேசத்தில் முதல் முறையாக இடம்பெறும் இத் தலித் மாநாடு பயனுறும் தீர்மானங்களை நிறைவேற்றி, சிறப்புடன் நிகழவேண்டும் என்று கூறி எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து, எனது இச் சிறு எழுத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுடன் ஏ. ஜி. யோகராஜா சுவிசில் இருந்து…
ஈழத்தில் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள்!!!
சில குறிப்புகளும் அவசியமான படிப்பினைகளும்
ஆண்டாண்டு காலமாக தொழில் ரீதியான சமூகப் பிரிப்புகள் இருந்துவந்த போதும் தமிழ்நாட்டில் பிராமணியத்தின் வருகiயுடன், 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையான விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் தமிழச் சமூகத்தில் சாதியக் கட்டுமானம் இறுக்கம் பெற்றதாகவே சமூக ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.
ஈழத்தைப் பொறுத்தவரை காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக சாதிய அடக்குமுறையை தேச வழமையாக்கிப் பேணிப் பாதுகாத்து வந்ததில், யாழ் குடாநாட்டை விஞ்சும் அளவுக்கு வேறெந்தப் பிரதேசமும் இருந்ததில்லை.
ஈழத்திலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி வரலாற்றுக் காலம் தொட்டு சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் காலத்துக்குக் காலம் வெடித்துச் சிதறியிருக்கின்றன என்பதும் உண்மையே!
ஈழத்தைப் பொறுத்தவரை ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் சாதியத்தின் வேர்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு, படிநிலை வடிவில் அமைந்த சாதிய அமைப்பு முறமையையும், அடக்கு முறைக்குட்பட்ட மக்கள் தொகை, தலைகீழ் பிரமிட் முறையில் அமைந்திருப்பதையும் முக்கிய காரணங்களாகக் கொள்ளலாம். உலகில் தொழிற் சங்கங்கள், தொழிலாளர் போரட்டங்களைப் பொறுத்தவரை சிறு பகுதியினராக இருக்கும் முதலாளிகள் அல்லது அதிகார சக்திகளுக்கு எதிராக பெரும்பான்மைப் பலம் கொண்ட தொழிலாளர்களின் போராட்டங்களே வரலாற்றில் நடைமுறையாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இங்கு இம் முறமை தலைகீழ் விதிமுறையில் அமைந்திருப்பதும், ஒரு சாதிக்கு இன்னொரு சாதி குடிமையாக இருப்பதும் நுனித்து நோக்கற் பாலதே! ஈழத்துப் பிராமணர்களும் கூட வெள்ளாளரின் குடிமைகளில் ஒரு பகுதியினரே!
ஆதிக்க சக்திகளுக்கெதிரான அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் உணர்வுகள் அடிக்கடி விழிப்புப் பெற்றிருந்த போதிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்பு வடிவம் பெறுவதற்குரிய காலமும், அதற்கான உரிமையும் கைகூடிய காலம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பமே! அதுவும் ஆங்கிலேயர் ஆட்சி இருந்ததனால்தான் என்பதையும் (கவலையுடன்) தெரிவித்துத்தான் ஆகவேண்டும். 1910ம் ஆண்டு உருவான வட இலங்கைத் தொழிலாளர் சங்கம் பல் வேறுபடட் தொழிலாளர்களுடன், தாழ்த்தப்பட்ட மக்களையும் அதன் அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டது. இதனாலேயே துர்அதிஸ்ட வசமாக இத் தொழிற்சங்கத்தின் ஆயட்காலமும் குறுகிவிட்டது.
சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான கருத்தியலை உருவாக்கியதில் யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரசுக்கு அழியாப் புகழ் உண்டு. 1920ல் தோற்றம் பெற்ற இவ் அமைப்பின் தலைவர். ஹன்டி பேரின்பநாயகம் அவர்களும், அவரது நண்பர்களும், ஒறேற்ரர் சி. சுப்பிரமணியம் போன்றவர்களும் என்றும் பேர் மதிப்புக்குரியவர்களே! 1924ம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31ம் திகதிகளில் யாழ் றிச்சேவ் மண்டபத்தில் இதன் முலாவது மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் மூன்றாவது தீர்மானம் தீண்டாமைக்கு எதிரான கண்டனக் குரலை வலியுறுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற ஒவ்வொரு மாநாட்டிலும் தீண்டாமைக்கும், தீண்டாமைக்கு எதிரான கருத்துருவாக்கத்திற்கும் ஏற்ற வகையல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் இதன் தலைவர்கள் பல்வகை எதிர்ப்புகளுக்கு மத்தியில் செயற்படவேண்டியவர்கள் ஆயினர்.
1927 கார்த்திகையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த மகாத்மா காந்தியை, வாலிபர் காங்கிரஸ் யாழ்ப்hணம் அழைத்திருந்தது. காந்தியின் கூட்டங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில்லை என்ற வகையில் சர்ச்சைகளும் கிளர்ச்சிகளும் உருவாகின. இதன் தலைவர்கள் விடாப்பிடியாக நின்று சாதி வெறியர்களின் கருத்துக்களுக்குச் சாவுமணியடித்தனர்.
1929ம் ஆண்டு சித்திரையில் வாலிபர் காங்கிரசின் 5வது மாநாடு தாழ்த்தப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இம் மாநாட்டில் யோவேல் போல் அவர்கள் நிர்வாகக் குழுவில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
யாழ் வாலிபர் காங்கிரசின் முனைப்பு மிக்க தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மத்தியில் 1927 யூiலை 6ம் நாள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதலாவது ஸ்தாபனம் „ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்“ என்ற பெயருடன் தோற்றம் பெற்றது. ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நெவின் செல்லத்துரை அவர்களின் தலைமையில் உருவான இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பை யோவேல் போல், டி. ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து ஏற்றுக்கொண்டனர்.
1928ல் உடுவில் பெண்கள் பாடசாலையில் சம ஆசனத்துடன் சம போசனத்துக்குமான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. „ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்“ சார்பில் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தை ஹன்டி பேரின்பநாயகம் உட்பட நெவின் செல்லத்துரை, பிக்னல் பாதிரியார் என்று பலர் முன்னின்று நடாத்தினர்.
சேர் பொன் இராமநாதன் போன்றவர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் யோவேல் போல் அவர்களின் கடுமையான உழைப்பில் „ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்“ மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களும், டொனமூர்க் கமிசன் முன் மொழியப்பட்ட பரிந்துரைகளும் 1930ல் சம ஆசன - சம போசன முறையைச் சட்டமாக்கியது. தொடர்ந்து 1931 சர்வசன வாக்குரிமையை ஒடுக்கப்பட்ட மக்களும் பெற்றுக்கொள்வதற்கான சட்டமூலமும் இயற்றப்பட்டது.
தொடர்ந்து வந்த இத்தகைய சூழ்நிலைகள் தாழ்த்தப்பட்ட மக்களை தன்னார்வம் கொண்டு எழுச்சி பெற வைத்தது. கிராமங்கள் தோறும் சங்கங்களை உருவாக்குவதற்கான துணிச்சலை ஏற்படுத்தியது. சிறு சிறு போராட்டங்களையும் மேற்கொள்ளத் தலைப்பட்டனர் தாழ்த்தப்பட்ட மக்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உடலங்களை எரிப்பதற்கும், தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்குமான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த சங்கானைச் சுடலையில் 1931 ஆவணி 31ம் நாள் பிரேதத்தை எரிப்பதற்கு முற்பட்ட வேளையில் ஏற்பட்ட சர்ச்சையில் சாதிவெறியன் ஒருவன் ஆங்கிலேயப் பொலீஸின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தமது மையங்களை எரிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டது.
1933ல் வட இலங்கை கள் இறக்கும் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஏ. வி. தம்பையா அவர்களும் வேறு சிலரும் இணைந்து இதனை உருவாக்கினர். இதனால் முக்கியமாக குத்தகைக்கு கள் முறையை இல்லாது ஒழிபப்பதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டன. 1936ம் ஆண்டு சட்ட சபை உறுப்பினராக இருந்த திரு. எஸ். நடேசன் அவர்கள் வடபகுதிக்கு மரவரி முறை வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியதன் மூலம் குத்தகை முறை முடிவுக்கு வந்தது.
1936 – 1937 களில் சமசமாசக் கட்சியின் வருகையைத் தொடர்ந்து வடக்கில் இடதுசாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. யாழ் வாலிபர் காங்கிரசையும் இதன் தாக்கங்கள் ஆட் கொண்டிருந்தன என்றால் பொய்யாகாது. சமசமாசக் கட்சியின் வடபகுதிக்கான தலைவராக துன்னாலை சி. தர்மகுலசிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டார். சாதியப் பிரச்சனையில் மிகவும் தூய்மையான மனநிலையைக் கொண்டிருந்த இவர், வடமராட்சி தாழ்த்தப்பட்ட மக்களினால் தோழர் ஜெயம் என்று நேசிக்கப்பட்டார். ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த இவர் அச் சாதியின் சூழ்ச்சி வலையில் சிக்கி மரணத்தைத் தழுவிக்கொண்ட போது „எங்கள் அருந்தலைவர் தர்மகுல சிங்கம் மறைந் தாரே“ என்ற பாடல் வடமராட்சி முழுவதும் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலித்ததை, பரம்பரை பரம்ரையாக இன்றும் கேட்கக் கூடியதாகவே இருக்கிறது.
தொழிலாளர் அணிசேர்ப்பு! தீண்டாமைக்கு எதிரான குரல்கள்! என்று எல்லாமே ஒன்றிணைந்து மக்களின் விழிப்புணர்வில் ஆங்காங்கே அக்கினிக் குஞ்சுகள் குடிகொண்டன!
முட்களையும் புதர்களையும் தாண்டி, பல அடிகளையும், உதைகளையும் வாங்கிய போதும்…
- சம ஆசனம் - சம போசனம் சட்டமாக்கப்பட்டமை
- சர்வஜன வாக்குரிமை பெற்றுக்கொண்டமை
- மரவரி முறை அமுலுக்கு வந்தமை
- இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்டமை
- கல்வி அறிவு பெற்றோர் புதிய ஸ்தாபனங்களை உருவாக்குவதில் ஈடுபட்டமை
போன்ற நிகழ்வுகளினூடே பயணித்திருந்தது 1930களின் வரலாறு!
31. 10. 1942ல் இடம்பெற்ற யாழ்ப்பாணம் சன்மார்க்க வாலிபர் சங்கத்தின் மாதாந்தக் கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களைப் பரந்தளவில் ஒன்றிணைக்கக் கூடிய ஓர் ஸ்தாபனத்தின் அவசியத்தை முன்னிறுத்தி, முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானத்தின் மீதான தொடர்ச்சியான முயற்சியின் பிரகாரம் 24. 04. 1943ல் பரந்தளவில் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய சிறுபான்மைத் தமிழர் மகாசபை தோற்றம் பெற்றது. இதன் முதற் தலைவராக யோவேல் போல் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இதன் 2வது மாநாடு ஏ. பி. இராஜேந்திரா அவர்களின் தலைமையில் 24. 09. 1944ல் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றிருந்த அதே வேளை, யாழ் வில்லூன்றிச் சுடலையில் தாழ்த்தப்பட்டவர் சடலம் ஒன்றும் எரிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் தகனம் செய்யும் உரிமையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான இம் முயற்சியில் முதலி சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.
1920ல் தோன்றிய யாழ் வாலிபர் காங்கிரசின் தீண்டாமைக்கும் சாதியத்துக்கும் எதிரான கருத்து நிலைகளும், அதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களிடையே தோற்றம் பெற்ற அமைப்புக்களின் மூலமும், ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்குட்பட்டிருந்த இத் தலித்திய சமூகம், கல்வியிலும், பொருளாதார முறமையிலும் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டது.
இதற்கிடையில் சி. தர்மகுலசிங்கம் அவர்களும், வடமராட்சி சமூக சேவாசங்கமும் துணை நிற்க, 1944ம் ஆண்டு வடமராட்சி கட்iவேலி கிராமசபைத் தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில்; போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடுகிறார் அல்வாய் கந்த முருகேசனார் அவர்கள். இத்தகைய தேர்தல் ஒன்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் வெற்றி பெற்ற முதலாவது நபரும் இவரே! 1953ம் ஆண்டு அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழாவையொட்டி வெளி வீதியைச் சுற்றி;, தீச் சட்டியைச் சுமந்தவண்ணம் வலம் வருவதற்கான முயற்சியில் தாழ்த்தப்பட்ட பெண்கள் ஈடுபட்டபோது, அதற்கான அனுமதி பலத்த எதிர்ப்புடன் மறுக்கப்பட்டது. இது ஆலயப் பிரவேசப் போராட்டம் அல்ல. ஆன்மீக அமைதிக்கான ஒரு வேண்டுதல் மட்டுமே! இதற்குக் கூட தடை விதிக்கப்படுகிறதே என்று ஆத்திரமுற்ற திரு கந்த முருகேசனார் அவர்கள் சாதிய எதிர்ப்புப் போராட்ட வழியில் இன்னொரு பரிமாணத்தை எட்டும் வகையில், டாக்டர் அம்பேத்கார் வழியில் பௌத்த மதத்தில் சேர்வதற்கான போராட்ட வழியை மேற்கொண்டிருந்தார்.
சிறுபான்மைத் தமிழர் மகாசபை தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்தை நோக்காகக்கொண்டு கிராமங்கள் தோறும் பாடசாலைகளை உருவாக்கி அரச அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டது. படித்தவர்க்கு உத்தியோகம் பெற்றுக் கொடுப்பதிலும் தீவிர அக்கறை காட்டியது. அத்துடன் சில உத்தியோகப் பற்றற்ற பதவிகளுக்கும் பரிந்துரை செய்தது. சத்தியப்பிரமாண ஆணையாளர், சமாதான நீதவான் போன்ற பதவிகள் இதில் அடக்கம்.
மேலும் பொருளாதார முன்னேற்றத்தை நாடி, குடியேற்றத் திட்டங்களின் மூலம் காணி நிலங்களைப் பகிர்ந்தளித்தது. வன்னியில் ஏற்படுத்தப்பட்ட இக் குடியேற்றத் திட்டங்களிலும் சாதி நெடில்களைப் கட்டிப் பாதுகாக்கும் நோக்கில் சாதிவாரியாக காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதிலும் பள்ள நிலங்களும், தண்ணீர் வசதி குறைந்ததுமான பகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அவலங்களும் இந் நிகழ்வில் அடங்கும். இதன் அடையாளங்களை முறுகண்டியில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள புத்துவெட்டுவான் என்னும் இடத்தில் இன்றும் காணலாம்.
1956ம் ஆண்டு எம். சி. சுப்பிரமணியம் அவர்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவர் ஆனார். கே. டானியல், கே. பசுபதி போன்றவர்கள் துணை நிற்க, தீவிர இடதுசாரிக் கருத்துக்களின் வழி நின்ற இவரது செயற்பாடு மிகுந்த ஆளுமையுடன் தொடர்ந்தது.
இச் சந்தர்ப்பத்தில் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தைத் தலைவராக்கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவினைத் தொடர்ந்து 1950களின் ஆரம்பத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் தலைமையில் தமிழ் அரசுக் கட்சி தோற்றம் பெற்றது. முழுக்க முழுக்க மத்தியதரச் சிந்தனையை ஆளுமைப் படுத்தி, அன்றைய தி. மு. க. பாணி தமிழ்க் கவர்ச்சியுடன், தமிழ்த் தேசிய உணர்ச்சியையும் குழைத்து கொஞ்சம் முற்போக்கு முலாம் பேசிய பிரச்சாரத்தில் தமிழ் இளைய தலைமுறை மயங்கிப்போனது. அன்று ஓரளவு கல்வி கற்றநிலையில் உத்தியோகத் தொழிலிலும், அரச கூலி வேலைகளிலும் ஈடுபடத் தொடங்கிய தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சார்ந்த இளைய பரம்பரையின் ஒரு பகுதியும் இக் கவர்ச்சிப் பிரச்சாரத்துக்கு அடி பணிந்தது.
இத்தகையவர்களின் கருத்தியல் மோதல்களினாலும், வேறு சில காரணங்களினாலும் ஏற்கனவே இடதுசாரிக் கருத்துக்களின் ஆளுமைக்குட்பட்டிருந்த சிறுபான்மைத் தமிழர் மகா சபையிலும் பிரிவினைக்கான சூழல் உருவானது. 1957ம் ஆண்டு இடம் பெற்ற 14வது மாநாட்டில் இது முழு வடிவம் பெற்றது.
தீண்டாமைக்கும், சாதியத்துக்கும் எதிரான நடவடிக்கையில் யாழ்நகர் சார்ந்த நல்லுர் கந்தசாமி கோவிலுடன் சில ஆலயங்களும், தேனீர்க் கடைகளும் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் (1959ல்) திறந்து விடப்பட்டன. ஆனால் சுய மரியாதையைப் பேணும்வகையிலான இம் முயற்சியில் இன்னும் பல படிகளைத் தாண்டவேண்டிய நிலையில்தான் இருந்தது இச் சமூகம்.! தாழ்த்தப்பட்ட மக்களின் பேரமைப்பாகத் திகழ்ந்த சிறுபான்மைத் தமிழர் மகாசபை கூட, இப் போராட்டங்களை முன்னெடுக்கும் முயற்சியில் ஆமை வேகத்தில்தான் நகர்ந்துகொண்டிருந்தது. ஏற்கனவே கூறிய தலைகீழ் பிரமிட்டின் அடிநிலைச் சமூக நிலையிலான அதன் இருப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தொகையளவில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ஆதிக்க சக்தியின் முன்னே, அடக்கப்படும் சிறுபான்மைச் சக்தி அழிக்கப்பட்டுவிடுமோ என்ற ஒருவித பயம் ஒருபுறமிருக்க, துணை சக்திகளாக நின்ற அரசியல் சக்திகளின் பாராளுமன்ற ஆசனங்களை நிரப்பும் கருத்து நிலைகளும் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களைத் துரிதப்படுத்துவதற்குத் தடையாக இருந்த பிரதான காரணங்கள் என்பதும் உண்மையே!
1960களின் முற்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிiயே ஏற்பட்ட கருத்து மோதல்கள், இலங்கையிலும் இடதுசாரிக் கட்சிகளிடையே மாஸ்கோ சார்பு, சீனச் சார்பு என்ற பிரிவினைக்குத் தூபமிட்டது. இப் பிளவு சிறுபான்மைத் தமிழர் மகா சபையிலும் தாக்கம் செலுத்தியதை அடுத்து கே. டானியல், என். கே. ரகுநாதன், கே. தங்கவடிவேல், கே. பசுபதி போன்றோரின் வெளியேற்றத்துடன் மேலும் ஓர் பிளவுக்கு உட்பட்டது மகா சபை!
இத்தகைய சூழ்நிலையில் 1960களின் மத்தி மிக முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாக அமைகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் முக்கிய திருப்பு முனையைத் தோற்றுவித்த காலப் பகுதிகளில் இது முதன்மையானதும் கூட. „மனித நீதி என்ற வகையில் போராடுவுதற்குப் பின் நிற்காதே!“ என்று உரத்து முழங்கிய காலம் இது. „சுயமரியாதையுடன் வாழ்வதற்கு போராட்டம் ஒன்றே வழி!“ என்று துணிச்சலுடன் விழித்துக்கொண்ட நேரமும் இதுவே!
சாதி அமைப்புத் தகரட்டும்!
சமத்துவ நீதி ஓங்கட்டும்!
என்று உரத்து முழங்கிய 1966 அக்டோபர் 21 எழுச்சி ஊர்வலத்தின் சொந்தக்காரன் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி. அவ் எழுச்சி மிகு கூட்டத்தில் அதன் தலைவர் சண்முகதாhசன் அமெரிக்க நீக்ரோப் பாடகர் போல் போப்சனுக்கு அவரது தமையனார் கூறிய பாணியில் உரத்து முழக்கமிட்டார்…
„ஒருபோதும் அடிபணியாதே!
எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி!
அவர்கள் படிப்பினைகளைப் பெற்றதும்
விசயம் வித்தியாசமாக இருக்கும்!“ என்று.
இவ் எழுச்சியின் இன்னொரு பிறப்புத்தான் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம். அதன் உறுதி மிக்க தலைவராக விளங்கியவர் எஸ். ரி. என். நாகரத்தினம் அவர்கள். இப் போராட்டங்களில் ஏற்பட்ட தாக்கங்கள்தான் அவரது ஆயுள் குறைந்த வாழ்வுக்கும் கால்கோள் என்பதில் சந்தேகமில்லை.
கார்ல் மார்க்ஸ் கூறினார் „ இதுவரை தத்துவஞானிகள் உலகை விமர்சித்தது மட்டுமே! எமது பணி உலகை மாற்றியமைப்பதே!“ என்று. இதுவே தீ. ஓ. வெ. இயக்கத்தின் பணியாகவும் இருந்தது.
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் சங்கானை, கொடிகாமம், நெல்லியடி என்று பல இடங்களில் தேனீர்க்கடைகளில் சம உரிமைக்கான போராட்டங்களையும், பன்றித்தலைச்சி அம்மன் கோயில், மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் என்று ஆலயப் பிரவேசப் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தது. 1966 அக்டோபர் 21 எழுச்சியுடன் ஆரம்பித்த இப் போராட்டம் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காத வகையில் விடாப் பிடியாகத் தொடர்ந்தது. பல்வகைத் துன்ப துயரங்களுக்கும், உயிர் இழப்புகளுக்கும் மத்தியில் ஆண்டு 1969 வரை நீடித்தது.
யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சமூகத்திடம் பல்வகை மாற்றங்களை ஏற்படுத்திய இப் போராட்டத்தில் தொகுத்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகளோ ஏராளம்! எமது போராட்டங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்ற வகையில் இனிவரும் பந்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பினைகளை நோக்குவோம்.
1920ல் தோன்றிய யாழ் வாலிபர் காங்கிசில் சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டவர்களில் ஹன்டி பேரின்பநாயகம் அவர்களும் அவரது நண்பர்களும் ஒறேற்ரர் சி. சுப்பிரமரணியம் அவர்களும் முக்கியமானவர்கள் ஆவர்.
ஒடுக்கப்பட்ட தமிழ் ஊழியர் சங்கம் நெவின் செல்லத்துரை அவர்களைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வளர்ச்சியிலும் அதன் போக்கிலும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் மு. கார்த்திகேசன் உட்படப் பல முக்கியஸ்த்தர்கள் துணை நின்றிருக்கிறார்கள்.
இதேபோன்று தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தோற்றத்திலும் அதன் செயற்பாட்டிலும் துணை நின்றவர்களாக நா. சண்முகதாசன், கே. ஏ. சுப்பிரமணியம், மு. கார்த்திகேசன், வி. ஏ. கந்தசாமி என்று ஓர் நிண்ட பட்டியலைச் சமர்ப்பிக்க முடியும்.
இவ்விதம் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக் காலங்கள் ஒவ்வொன்றிலும் ஆதிக்க சாதியில் தோன்றிய மனித நேயங்கள் பல துணை சக்திகளாக இருந்து வந்திருக்கின்றன.
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தீண்டாமைக்கும், சாதியத்துக்கும் எதிரான போராட்டத்தில், தனது பிரதான சக்தியாக தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் உள்ளடக்கிய ஓர் அமைப்பாக இருந்த போதும், ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மனித நேயர்களையும், முஸ்லிம் இளைஞர்களையும் கூட அதன் துணை சக்தியாகக் கொண்டிருந்தமை இப்போராட்டத்தின் அடிப்படைத் தந்திரோபாயம் ஆகும்.
இதைத்தான் கவிஞர் சுபத்திரன்..
சாதித் திமிருடன் வாழும் தமிழனோர்
பாதித் தமிழனடா – அவர்
நீதி தனக்கொரு நீதி பிறர்க்கொரு
நீதி யென்றாடுதடா
பாளையைச் சீவிடும் கையைப் புதுப்பணி
பாத்துக் கிடக்குதடா – அரி
வாளைச் சுமந்திடும் தோழர் உனதணி
வந்து நெருங்குகிறார்
என்று பர்டியிருந்தார்.
என். கே. ரகுநாதன் அவர்களின் உரைநடை வடிவில் அமைந்திருந்த கந்தன் கருணை நாடகத்தைப் பாடலாக்கி, காத்தான் கூத்து மெட்டிலான இசை வடிவத்தைக் கொடுத்து, வெகுஜன எழுச்சியை உண்டுபண்ணக் கூடிய வகையில் ஒரு புதிய பரிமாணத்தில் அதை வார்த்தெடுத்தவர் இளைய பத்மநாதன் அவர்கள். தமிழ்த் தேசிய எழுச்சியில் „மண் சுமந்த மேனியர்“ தோன்றியது என்றால், சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முந்தைய தீண்டாமைக்கு எதிரான எழுச்சியில் தோற்றம் பெற்ற ஓர் உன்னத படைப்புத்தான் கந்தன் கருணை! நாடு முழுவதுமாக சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரங்கங்களைக் காண வைத்த இதன் தயாரிப்பாளர்கள் அம்பலத்தாடிகள். முக்கிய பாத்திரமேற்றவர்கள் க. சிவராஜா, கு. சிவராஜா ஆகியோர். இவர்கள் எல்லோருமே ஆதிக்க சாதியின் வழிவந்தவர்களே!
விடுதலைப் போராட்ட காலங்கள் ஒவ்வொன்றிலும் இவ்விதமான துணை சக்திகள் முக்கியத்துவம் பெற்றிருந்ததை உலக வரலாறுகளை அறிந்தவர்கள் இலகுவில் புரிந்துகொள்வர்.
இப்படிப் பட்டவர்கள் எமது போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கின்ற நிலையில் தமது சமூகத்தில் எவ்வளவு தொல்லைகளுக்குட்பட்டிருப்பார்கள் என்பதையும் யதார்த்த நிலைமைகளுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும். பல்வித தொல்லைகளுக்கு மத்தியில் கிடைக்கக் கூடிய குறைந்த பட்ச தார்மீக ஆதரவைக் கூட இழந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாகவே இருந்தது தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்.
தீ. ஓ. வெ. இயக்கம் தன்னகத்தே கொண்டிருந்த இன்னோர் முக்கிய கோட்பாடு, தீண்டாமைக்கும் சாதியத்துக்கும் எதிரான ஒரு இயக்கமாக தன்னை உருவாக்கிக் கொண்டமை. ஒருபோதும் அது தன்னை ஒரு சாதிய இயக்கமாக வழிப்படுத்திக்கொண்டதில்லை. இதன் நிமிர்த்தம் இப் போராட்டத்தில் குறிப்பான சாதிய வெறியர்கள் மட்டுமே இனம்கண்டு அழிக்கப்பட்டனர்.
இந் நிலைமைகளில் கைலாசபதி, கா. சிவத்தம்பி, சிவசேகரம் போன்றவர்கள் மீது „பீ தோச்சு அடிக்க வேண்டும்“ என்று வெளிவரும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, சமூக விடுதலைப் போராட்டங்களைக் குட்டிச் சுவர் ஆக்குகின்ற முயற்சியும் ஆகும்.
„சாதி அமைப்புத் தகரட்டும்! சமத்துவ நீதி ஓங்கட்டும்!“ என்ற கோசம் நீண்டகாலத்துக்கான கொள்கையாக முன்வைக்கப்பட்ட போதும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை மட்டுமே முன்னிறுத்தியமை அக் கால கட்டத்துக்குரிய முக்கிய தந்திரோபாயம் ஆகும்.
ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்திய அதே வேளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அகிம்சா வழியையும் பின் பற்றத் தவறவில்லை. எதிரியைப் பலவீனப் படுத்தவேண்டிய முக்கிய கட்டத்தில் தவிர்க்க முடியாத சில குறிப்பான வேலைகளிலும் ஈடுபட்டிருந்தது தீ. ஓ. வெ. இயக்கம். இவ்வகையில் பொலிஸ் அதிகாரியும், நீதிபதியும் ஆதிக்க சாதியைச் சேர்ந்திருந்ததனால் நீதியின் முன்னிலையில் தப்பிததுக்கொண்ட உண்மையான குற்றவாளி – சாதிவெறிச் சண்டியர் -- விடுவிக்கப்பட்ட ஒருசில நாளிலேயே (மிகவும் இரகசியமான முறையில்) உரிய தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு.
அனைத்துக்கும் மேலாக தீ. ஓ. வெ. இயக்கத்தின் தலைவர் எஸ். ரி. என். நாகரத்தினம் அவாகள், வௌ;வேறு பகுதிகளில் இடம்பெறும் வௌ;வேறு போராட்டச் சம்பவங்களுக்கு எல்லாம் தாமே பொறுப்பேற்று பொலிசில் அடைபட்ட நிகழ்கள் பல உண்டு.! இதனால் போராட்டத்தைப் புரிந்தவர்கள் பொலிசின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பித்துக்கொண்டு அடுத்த –போராட்ட-- நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிய ஓர் உன்னத தலைவர் எஸ். ரி. என். நாகரத்தினம் அவர்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்த இப் போரட்டத்தில் தீண்டாமை விவாதப் பொருளாகியது.! தீண்டாமைக்கும், சாதியத்துக்கும் எதிரான கருத்தியல் விழிப்புப் பெற்றது! ஆதிக்கத் திமிரும், சாதிய வெறியும் தவிர்ந்த சாமான்யர்களிடம் குறிப்பாக மாணவர், இளைஞர்களிடம் சாதியக் கட்டுமானம் குறித்த இறுகிய மனநிலை ஓரளவுக்குத் தளர்ந்துபோனது. தமிழ்த் தேசிய உணர்விர் நிமித்தம் சிவகுமாரனும் புஸ்பராஜாவும் ஒன்றிணைவதற்கான மனோநிலை உருவாக்கத்தில் கூட இப்போராட்டத்துக்கும் பாரிய பங்குண்டு என்றால் மிகையாகாது. தமிழ்த் தேசிய எழுச்சியில் சகல தரப்பினரும் ஒன்றிணைவதற்கான சூழலை உருவாக்குவதற்குக் கூட இப் போராட்டம் மூலவேர் ஆயிற்று!
இவ்விதம் பல வழிகளில் யாழ்ப்பாணச் சமூகத்திடமும், முழு இலங்கையிலும் பல்வித தாக்கத்தை உண்டுபண்ணிய இப் போராட்டம் 1971 ஏப்பிரல் மாத ஜே வி பி கிளர்ச்சியை அடுத்து மெல்ல மெல்லத் தளர்ந்து போனது. தோழர் என் சண்முகதாசன் தொடர்ச்சியாகச் சிறையில் அடைக்கப்பட்டதனாலோ அல்லது சீனச் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவின் நிமித்தமோ தீ. ஓ. வெ. இயக்கம் தேய்நிலையைத் தழுவியது.
இதுவரை இவ்வியக்கத்தின் சாதகநிலையிலான (பொசிட்டிவ்) படிப்பினைகளை நோக்கியிருந்தேன். இனிவரும் பந்திகளில் இவ் அமைப்பு வடிவத்தின் பாதக நிலையிலான (நெக்கடிவ்) படிப்பினைகளை நோக்குவோம். தோன்றப் போகும் தலித்திய அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் இயக்கங்களை வழிநடத்திச் செல்ல உதவும் என்ற வகையில் இது கட்டாயமாகிறது!
ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மேற்படி அமைப்புகளின் அல்லது இயகக்கங்களின் வரலாற்றை நோக்கின், அவை உவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் சார்புநிலைக்குட்பட்டே செயற்பட்டு வந்திருக்கின்ற உண்மை கண்கூடு!
யோவேல் போல் அவர்களின் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் கிறிஸ்தவ அமைப்புகளைப் பின்னணியாகவும், யாழ்பாணம் வாலிபர் காங்கிரசைப் பக்கபலமாகவும் கெண்டிருந்தது போக, ஏனையவை ஏதோ ஒரு வகையில் இடதுசாரிக் கட்சிகளைப் பின்னணியாகக்கொண்டு இயங்கி வந்திருக்கின்றன. இவை போக தமிழரசுக் கட்சியைப் பின்புலமாகக்கொண்டியங்கிய தனித் தனிச் சாதிய அமைப்புகளும் இருந்திருக்கின்றன. இவ் அமைப்புக்கள் தோன்றிய காலத்தில், அத்தகைய சூழ்நிலையில் இத்தகைய பின்னணிகளின் பக்கபலமே இவ் அமைப்புகளின் செயற்பாட்டுக்கும், போராட்டங்களுக்கும் உந்து சக்தியாக இருந்திருக்கின்றன என்ற உண்மையையும் மறுதலித்துவிட முடியாது. ஆனால் தவறு என்னவெனில் தமது தனித்துவத்தைப் பேணும் விடயத்தில் கோட்டை விட்டதுதான். இதுவே தீ. ஓ. வெ. இயக்கத்தின் பிற்காலத் தேய்நிலைக்கும் காரணமாகிறது. இத்தகைய நிலைமைகள் மீண்டும் ஒரு முறை எமது அமைப்புகளுக்குள் தலை காட்டுவதற்கு இடமளிக்கக் கூடாது என்ற வகையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே வேளை துணை சக்திகளின் உதவிக் கரமும், தார்மீக ஆதரவும் எம்மை உந்தித் தள்ளும் வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும்.
இத்தகைய தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்புக்களை சார்பு நிலைக்குட்படுத்தும் சுமை ஒன்று, பரிஸ் தலித் மக்கள் மேம்பாட்டுக் கழகத்தின் மீதும் வந்து வீழ்வதைக் காணமுடிகிறது. இன்ரநெற்றிலும், வேறு சில மீடியாக்களின் தோரணையிலும் இத்தகைய தாக்கங்களை உணர முடிகின்றது. இந்நிலையில் பேட்டிகள், பேப்பர் செய்திகள் போன்ற விடயங்களில் மிக அவதானமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொற் பிரயோகமும் கூட எதிர் கால வளர்ச்சிக்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைய வேண்டும்.
ஏதோ ஒரு வகையில் கல்வி வளர்ச்சியிலும், பொருள் நிலையிலும் ஓரளவு தன்னிறைவைப் பெற்றிருக்கும் இன்றைய சூழலில் எமது போராட்ட வழியின் புதிய முறமைகள் பற்றி புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்ப காலத்தில் பொருள் நிலையிலும், சாதிவழியாகவும் எமது சமூகம் அடக்குமுறைக்குட்டு இருந்ததனாலும், சாதியம் என்பது நிலப்பிரபுத்துவத்தின் மிச்ச சொச்சம் என்ற கருத்தின் அடிப்படையிலும் இதை ஒரு வர்க்கப் பிரச்சனையாக நோக்கியது மாக்சிய அல்லது இடதுசாரி மையங்கள். அனால் கீழைத் தேய சாதியம் என்பது பிரத்துவத்தின் மிச்சம் மட்டும்தானா? உளம் சார்ந்து, ஆன்மீகப் பண்பாட்டில் ஊறிப்போன அதன் ஆழ்மனத் தத்துவத்தை எப்படி நோக்குவது?
மேலும் ஈழத்தின் நிலைமையில் தாழ்த்தபப்பட்ட மக்கள் பண்ணைகளிலோ, ஜமீந்தாரிடமோ வேலை செய்யும் கூலிகளாகவும் இல்லை. இந்நிலையில் தமிழ்நாட்டு வன்னியர்க்கு ஒத்தவகையான பிற்படுத்தப்பட்ட சமூகமாக நாம் இருக்கிறோமா? அல்லது சகல வகையான வளர்ச்சியிலும் பின்னிற்கின்ற தலித் சமூகத்துக்கு ஒப்பானவர்களாக எம்மை நோக்க வேண்டுமா?
ஈழத்தைப் பொறுத்தவரை இன்றைய சூழலில், பெரியார் வலியுறுத்திய சுயமரியாதையைப் பேணுவதற்கான இயக்கத்தை நடத்துவதே சாதிய அமைப்புக்களின் கடமையாக இருக்கிறது. சாதிரீதியிலும், பரம்பரைத் தொழில் முறையிலும் பழிக்கப் படுதல், ஒதுக்கப்படுதல் அல்லது தனிமைப் படுத்தப்படுதல், சாதியப் பாகுபாட்டை மையப்படுத்தி மண மக்களைத் தேடுதல், சாதியை வெளிப்படுத்தப் பின் நிற்றல், சாதியை மறைத்தல் என்று பல அம்சங்களைச் சுற்றி நிற்கிறது இப் போராட்டம்.
போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது?
அரசு முதற்கொண்டு புலிகள் உட்பட அனைத்து அதிகார சக்திகளிடத்தும், தமிழ் அமைப்புக்களிடமும் இதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்திடம் தமிழச் சமூகக் கட்டுமானம் பற்றிய உண்மையை அம்பலப்படுத்த வேண்டும்.
சாதிய ரீதியான சிறிய பிரச்சனைகளைக் கூட ( கண்டனங்களைத் தெரிவித்தோ, மாநாடுகளைக் கூட்டியோ, ஊர்வலங்களை நடத்தியோ) எமது அரசிலாக மாற்றிக்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சிகளில் எம்மைப் பலப்படுத்தும் வகையில் அரசியல் தந்திரோபாயங்களைக் கையாள்வது மிக முக்கியம்.
இவை பற்றி ஆய்வதற்கான சிறு குழு ஒன்றையும் இம் மாநாடு தெரிவு செய்யவேண்டும்!
நாடுகள் தோறும் வருடத்திற்கு ஒரு சந்திப்பு அல்லது மாநாடு என்று இடம்பெற வேண்டும்.
20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாட்டிற்கு சுவிசிலிருந்து வருகைதந்த நண்பர் ரவி அவர்களின் தலித் மாநாட்டு நிகழ்வுகள் பற்றிய பார்வை
இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்... கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு... அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம், எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்... முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள் நாற்திசையும் வரைந்த கோடுகளில் ஆர்வலர்கள் புள்ளிகளானார்கள். வழமையாகவே நேரத்தைக் கடைப்பிடிப்பதில் பேர்போன எமது பாரம்பரியத்திற்கு பிரான்ஸ் போக்குவரத்தின் வேலைநிறுத்தம் வேறு. நேரத்துக்கு வரத்துடித்தோரையும் அங்கங்கு ரயில் நிலையங்களிலும், வாகனநெரிசலிடை துண்டுகளாய்த் தெரிந்த வீதிகளிலும் காக்கவைத்து அரிப்புக்கொடுத்துக் கொண்டிருந்தது வேலைநிறுத்தம்.
நேரம் 11.50. தேவதாஸ் தலைமைதாங்குகிறார். இலங்கையின் சாதிய ஒடுக்குமுறைத் தடங்கள்... அதற்கெதிரான போராட்டம்... ஏன் இந்த மாநாடு? இந்தக் குரல்களின் கூடுகைக்குள் நுழையமுன்னர் சாதியப் போராட்டங்களில் மரணித்துப்போனவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது. சாதிய ஒடுக்குமுறையின் 700, 1000 ஆயிரம் வருட வரலாறு, அதன் தொடர்வு, அதற்கெதிரான சிறுபான்மைத் தமிழர் மகாசபையின், இடதுசாரிகளின் போராட்டங்கள்... பற்றிய அறிமுக உரையுடன் 70 களுக்குள் புகுந்தார் தேவதாஸ். தேசியவிடுதலைப் போராட்டத்தின் முன்னெடுப்புகள் சாதியப் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளின. பின் கண்டுகொள்ளாமல் விட்டன. இயக்கங்கள் தோன்றின. தேசியக்காயால் சாதியக்கறையை உரைஞ்சி அழித்துவிடலாம் என்ற மாயைப் பொழிந்தன. சாதியப் போராட்டங்கள் ஓய்ந்தன.
யுத்தசூழல் வேளாளத் தேசியத்தின் கேடுகளுக்குக் கிடைத்த ஆடை. இது அவிழ்ந்து அம்மணமாகும்போது அல்லது அமைதியான சூழலில் சாதிப்பாகுபாடு தன் கதவுகளைத் திறந்து வெளியே வரும்;, அதன் கருத்தியல் அப்படியே பேணப்பட்டு வருவதால். இதுபற்றிய அச்சம்தான் இப்போதிலிருந்தே இதுபற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தோற்றத்துக்கு இதுவே காரணம். வடு சஞ்சிகையின் தேவையும் இவ்வழியிலேயே உணரப்பட்டது. இதை இயக்க எதிர்ப்புக்காக என்று வியாக்கியானப்படுத்துவதும் அதற்கேற்ப பிரச்சாரத் தகவல்களை அவிழ்த்துவிடுவதற்கும் மறுப்புத் தெரிவித்துத் தொலைக்கவேண்டிய நிலை இந்த தலித் முன்னணிக்கு வருவது ஒன்றும் விசேசமானதல்ல. அப்பிடியொரு ஆய்வுத்தன்மையும் தேடல் உழைப்பும் பன்முகத்தன்மையும் கொண்ட ஒரு சமூகத்தவனா நீங்கள்?. அப்படியானால் கவலைப்பட்டுக்கொள்ளுங்கள்.
கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நசுகல் கோட்பாடுகள் இப்போ குடியில்லாத ஊரிலும் கோயில் இருக்கவேண்டும் என்று வர்ணம் பூசப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு மட்டும் -விமானயாத்திரை செய்து- கோயிலைத் தூசுதட்டி பக்திச் சான்றிதழோடு திரும்பும் புகலிடத் தமிழர்களையும் ஞாபகப்படுத்தியது தேவதாஸின் உரை.
இதையடுத்து தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும் என்ற தலைப்பில் பரா அவர்களும் யோகரட்ணம் அவர்களும் உரையாற்றினர்.
~~யாழ்மேட்டுக்குடியினர் எனக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்ததில் எனக்கு வியப்பில்லை. ஆனாலும் இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ள அழைத்ததை கௌரவமாகக் கருதுகிறேன்|| என ஒருமுறை இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ள இங்கு வந்த டொமினிக் ஜீவா அவர்கள் கூறிய கூற்றோடு தனது உரையைத் தொடங்கினார் பரா. சாதியத்தின் தோற்றத்தை இவர் 2500 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச்சென்று தொடங்கினார். புத்தர் இதை ஒழிக்கப் பாடுபட்டார் என்ற தகவல்களிலிருந்து இதை ஊகிக்கலாம். ஆரியர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இந்த சாதியமைப்புமுறையை உருவாக்கியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையைக் கட்டிக் காக்கவும் இந்தச் சாதியமைப்புமுறை தேவைப்பட்டது. அடிமைகளை வைத்து வேலைவாங்கவும் இது பயன்பட்டது.
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கு சமயம், கலாச்சாரம் என்பவற்றைப் பாவிக்கிறது. சாதியமைப்புமுறையும் இதே வகைப்பட்டதே. எமது யாழ்மையவாதத்துக்கு அடிப்படையாக இருப்பதே சாதியமைப்புமுறைதான். யாழ்மையவாத அரசியல்தான் இலங்கை முழுவதும் வியாபித்து இருக்கிறது என்று சொன்னதன்மூலம் யாழ்மையவாதத்தை ஒரு இலங்கைச் சுனாமியாகக் காட்டினார் பரா அவர்கள். தலையைப் பிய்த்துக்கொண்டது அது. 19ம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர் மீளக் கட்டியமைத்த இந்த யாழ்மையவாத சிந்தனை முறை ஆதிக்க சிந்தனைமுறையாக இருந்தது. ஐரோப்பியர்கள் எங்கள் நாட்டுக்குள் வரும்போது ஆட்சிசெய்வதற்கு இந்த ஆதிக்க சிந்தனை முறை பயன்பட்டது என்றும் சொன்னார். நல்ல பதவிகளை வேளாளர் பெற்றுக்கொண்டனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது கல்விதான். இதனால் கல்விவாய்ப்பு மற்றைய சமூகங்களுக்குப் போகக்கூடாது என்பதில் மேட்டுக்குடியினர் கவனமாக இருந்தனர் என்றார். ஆறுமுக நாவலரின் சைவமறுமலர்ச்சியின் சூழ்ச்சியைச் சாடிய பரா அவரின் பைபிள் தமிழ்மொழிபெயர்ப்புக்கான நோக்கத்திலும் அதைக் கண்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இலங்கையில் வாலிபர் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. இதன் உந்துசக்தி யோவே போல் அவர்கள் இருந்தார். இவர்தான் ஆரம்பப் போராட்டங்களைத் தொடங்கினார். இதற்கு மேட்டுக்குடியினரின் எதிர்ப்பு வந்தது. முக்கியமாக சேர்.பொன்.இராமநாதன் இதைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். யாழ்ப்பாணத்துக்கு முதன்முதல் புகையிரதம் விடப்பட்டபோது தலித்துகளுக்கு தனியான பெட்டிகள் போடப்படவேண்டும் என வெள்ளாளர்கள் சொன்னார்கள். டொனமூர் கமிசனின் அரசியல் சீர்திருத்தத்துக்கு அபிப்பிராயம் கேட்கப்பட்டபோது, இந்த மக்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என சொன்னவரும் அவர்தான். யோவே போல் இந்த மக்களின் வாக்குரிமைக்காகக் குரல்கொடுத்தார். மிசனரிகளில் சமஆசனம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சைவப் பள்ளிகளில் இந்த சமஆசனம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்னமும் மோசமாக தரையில் உட்காரவைக்கும் நிலையும்கூட இருந்தது. இதனால் சில பெற்றோர்கள் இருக்கைகள் (வாங்குகள்) செய்துகொடுத்தார்கள். அவைகளும் பின்னுக்குக் கொண்டுபோய்ப் போடப்பட்டு உட்காரவைக்கப்பட்டார்கள். வேளாளர்கள் சலுகைகளுக்காக கிறிஸ்தவத்தக்கு மாறி அதற்குள்ளும் சாதிமுறைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். தலித்துகளுக்கான தனிப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. அங்கு ஆசிரியர்கள் நீட்டிநிமிர்ந்து படுத்திருக்க மாணவர்கள் கால் அமுக்கிக்கொண்டு இருக்கும் நிலைதான் தொடர்ந்தன. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் தலித்துகள் சேர்க்கப்படவேண்டும் என்று யோவே போல் கோரி வந்தார். 1930 இல் இக் கோரிக்கையை அரசு ஏற்றது.
இப்படியே நன்கு தயாரிக்கப்பட்ட அவரது உரை பல தகவல்களையும் தந்தது. நாவலர் ஆகமக் கோவில்களை உருவாக்கி உள்வீதி வெளிவீதி பிரிப்புமுறையை உருவாக்கி தீண்டாமைக்கு சேவகம் செய்ததையும், முற்போக்கு எண்ணங்கொண்டவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட வாலிபர் காங்கிரஸ் பற்றியும், தீண்டாமை ஒழிப்பினை 60 களில் இடதுசாரிகள் முன்னெடுத்தமை பற்றியும் தொட்டுச் சென்ற பரா அவர்கள் யாழ் முஸ்லிம்களை விரட்டியடித்தது தலித்துகள்தான் என்ற மெகா புனைகதைவரை சாதியத்தின் வேர்களை சுட்டிக்காட்டி தனது உரையை முடித்துக் கொண்டார்.
அடுத்து சிறுவயதிலிருந்தே இந்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடுவதில் தன்னை ஈடுபடுத்தியிருந்த யோகரட்ணம் அவர்கள் பேசினார்.
அறியாப் பருவத்தில் சாதியத்தின் முதல்பொறி தன்னைத் தாக்கியதிலிருந்து தனது அனுபவங்களைச் சொன்னார். அவரது சொல் ஆளுமையும் தொடர்ந்தேச்சியான கோர்வைப்படுத்தலும் ஒரு நாவலை ஓசிப்பதுபோல் இருந்தது. 50 களுக்கு முற்பட்ட காலங்களையும் 50க்கும் 70 க்கும் இடைப்பட்ட காலங்களையும் 70க்குப் பின்னரான காலப் பகுதிகளையும் வகைப்படுத்தி இந்த உரையை தகவல்களோடு எடுத்துச்சென்றார்.
1926 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஒறேற்றர், யோவே போல் ஆகியோர் இலங்கையில் சுதந்திரத்திற்கும் தீண்டாமை ஒழிப்பிற்கும் போராடினார்கள். காந்தி இலங்கைக்கு வந்தபோது அவர் குதிரை வண்டியை மறுத்து கிராமம் கிராமமாக நடந்து சென்றார். தலித்துகளைச் சந்தித்து உரையாடினார். தெல்லிப்பளையில் வாலிபர் காங்கிரசால் காந்திக்குக் கொடுக்கப்பட இருந்த வரவேற்பு ஏற்பாடுகளெல்லாம் வேளாளர்களால் பிய்த்து எறியப்பட்டன. இருந்தும் அந்த இழிபாடுகளுக்குள் நின்று காந்தி பேசினார். எம்சி, ஜேக்கப் போன்றோர் காந்தியின்பால் ஈர்க்கப்பட்டனர். ஜேக்கப் பின்னர் ஜேக்கப் காந்தி என அழைக்கப்பட்டார். ஜேக்கப் இன் ஆங்கிலப் புலமை அபாராமானது. வில்லூன்றி மயானத்தில் முதலி சின்னத்தம்பியைச் சுட்டுக்கொன்றபோது ஜேக்கப் அவர்கள் மகாராணிக்கு தந்தி கொடுத்தார். விளைவு அவரைநோக்கி வந்தது. பொலிசாரால் அவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவரது நியாயப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு பாராட்டவும்பட்டார்.
பண்டாரநாயக்காவின் ஆட்சியின்போது தலித்துகளுக்கு கல்வி தேவை, நிலம் தேவை என்பதை ஏற்றுக்கொண்டார். 19 பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் தலித்துகள் சேர வாய்ப்புக் கிடைத்தது. போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டது. பாடசாலை தேசிய மயமாக்கப்பட்டது. கட்டணமின்றி பாடசாலையில் கற்கலாம் என்ற நிலை வரும்போது அது வறுமைக்கோட்டில் இருந்தவர்களுக்கு வரப்பிரசாதமானது. தலித்துகளுக்கும் சாதகமானது. கல்வியில் மட்டுமல்ல வாகனங்களில் வக்குகளில் இருந்து மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையும் மாறியது. அத்தோடு திருத்துனர், சாரதி என வேலைகளும் படிப்படியாக தலித்துகளையும் வந்தடைந்தன.
லங்கா சமசமாஜக் கட்சி தலித்துகளுக்கான போராட்டத்தை எடுத்தது. தர்மகுலசிங்கம் (ஜெயம்) இதை முன்னெடுத்தார். இவர்தான் வில்லூன்றி மயானத்தில் கொல்லப்பட்ட முதலி சின்னத்தம்பியின் வழக்கில் ஆஜராகியவர். அதற்காகவே இவர் வேளாளர்களால் உணவில் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டவர். 1945 இல் கார்த்திகேசன் தலைமையில் கம்ய+னிஸ்ட் கட்சி முளைவிடுகிறது. அவர் மலேசியாவிலிருந்து வந்திருந்தார். அவர் ஒரு மார்க்சியவாதி. எம்.சி, நடேசையர், டானியல், ஜீவா போன்றோரும் இணைகின்றனர். யாழ் மாநகர சபையின் முதல்வராக காதர் என்பவரை கார்த்திகேசன் நியமித்தார். சிறுபான்மைத் தழிழர் மகாசபை கம்ய+னிஸ்ட் கட்சியின் பின்னணியிலே தீண்டாமைக்கு எதிராகப் போராடியது. 1956 இல் சமபோசனப் போராட்டங்கள் பயனளிக்கத் தொடங்கின. 1960 காலப்பகுதியில் இந்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் பிளவு ஏற்படுகிறது. இதேநேரம் கம்ய+னிஸ்ட் கட்சியிலும் கோட்பாட்டுப் பிளவு (சீனசார்பு, மொஸ்கோசார்பு) ஏற்படுகிறது. சீனசார்புக் கட்சியில் சண், செந்திவேல், கே.ஏ.சுப்பிரமணியம், டானியல்... போன்றோர் இணைகின்றனர்.
1961 ஒக்ரோபர் 21ம் நாள். தலித்துகளின் வாழ்வில் மறக்கமுடியாத நாள். ~சாதியமைப்புத் தகரட்டும் சமத்துவம் ஓங்கட்டும்| என்ற கோசத்தோடு 2000 போராளிகள் சங்கானையில் ஒன்றுகூடினார்கள். பொலிசாரின் அனுமதி மறுப்பையும் மீறி ஊர்வலம் தொடங்கியது. உரிமை கேட்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை என்ற ஆதிக்கசக்திகளின் கோலுடன் பொலிசார் அடிதடிகளை நடத்தினர். இரத்தம் தோய்ந்த நிலையிலும் அந்த ஊர்வலம் திட்டமிட்டபடி யாழ் முற்றவெளியை வந்தடைந்தது. டானியல் போன்றொர் உரைநிகழ்த்தினர். இதுதான் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் விழுந்த முதல் பொலிஸடி.
பின்னர் 1966 இல் தேநீர்க்கடைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம் என்பவற்றுக்கான போராட்டங்கள் நடந்தன. சின்னக் கார்த்திகேசு என்பவர் தேநீர்க்கடைப் பிரவேசத்தின்போது முதன்முதலில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இப் போராட்டங்களின் போது செல்லக்கிளி என்ற பெண் குண்டுவீசிய துணிச்சலான பெண்ணாவாள். அதேபோல் பொலிசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியபோது பொலிஸ் ஒருவனை சுடவிடாதபடி கட்டிப்பிடித்து மல்லுக்கட்டிய மகேஸ்வரியை மறக்கமுடியுமா. கிராமம் கிராமமாகப் போராட்டங்கள் தொடர்ந்தபோது பல ஆலயங்கள் விடாப்பிடியான போராட்டத்தினூடு திறக்கப்பட்டன. சில அதிhச்சியில் திறந்துகொண்டன.
பின்னர் பாராளுமன்றத்தில் இது சம்பந்தமான விவாதங்கள் நடந்தபோது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுக்காது வேளாளித்து நின்றனர். சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிக்குகள் சம்பவ இடத்துக்கு வந்து இந்த மக்களுடன் உரையாடினர். நூறு வாலிபர்கள் பௌத்தர்களாக மாறினார்கள். 5 பௌத்த பாடசாலைகள் உருவாகின. இங்கு சிங்களமும் தமிழும் கற்பிக்கப்பட்டன. தலித்துகள் ஆசிரியர்களானார்கள்.
செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோர் சங்கானையை எட்டிப் பார்க்கவேயில்லை. அது ஒரு சின்ன வியட்நாம் யுத்தம் என்றும், சங்கானை ஷங்காயாக மாறியது என்றெல்லாம் கிண்டலடித்தனர். செல்வா அந்த மக்களைப் போய்ப் பார்க்காததற்கு தான் ஒரு கிறிஸ்தவன் என்று குழந்தைச் சாட்டுச் சொன்னார். தமிழ் மிதவாத சக்திகள் சுதந்திரக் கட்சியை நிராகரித்து ஐக்கிய தேசியக் கட்சியோடு உறவாடினார்கள்.
70 களிலே ஒரு புதிய புரட்சி ஏற்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. விவசாயிகள் சீவல் தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம் வாழ்நிலை மேம்படுகிறது என்று விளக்கிய யோகரட்னத்தின் பேச்சு இந்த இடத்தில் ஒரு ஆய்வுத்தன்மையை எடுத்தது. வெளிநாட்டுப் பொருட்களை நிறுத்தியதால் விவசாயிகள் உற்பத்தியில் ஊக்கம் செலுத்தினர். மதிக்கப்படாமலிருந்த இத் தொழில் மதிக்கப்படும் நிலைக்கு வந்தது. படித்தவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். கொண்டுவரப்பட்ட தவறணை முறையால் சீவல் தொழிலாளர்களுக்கு விவசாயம் செய்ய நேரம் கிடைத்தது. காலை 6இலிருந்து 9 மணிக்குள்ளும் மாலை 5இலிருந்து 6 மணிக்குள்ளும் தமது கள்ளை தவறணையில் சேர்ப்பித்துவிட்டு மிகுதி நேரங்களில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டார்கள். இது அவர்களின் வாழ்நிலையை உயர்த்த சாதகமாக இருந்தது. அதேபோல் சீவல்தொழிலாளிகளின் வீடுகளுக்கு கள் குடிக்கச் செல்லும் வேளாளர்களின் அட்டகாசங்கள் அல்லது தொல்லைகளிலிருந்து அவர்கள் ஓரளவு விடுபடக் கூடியதாகவும் இருந்தது என்றவாறெல்லாம் யோகரட்ணத்தின் பேச்சு கதைகளாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பிணைந்து நின்றது. ஆதிக்கசாதிகளில் இருந்த பல நல்லெண்ணம் கொண்டவர்களின் தீண்டாமைக்கு எதிரான ஆதரவுகளையும் நினைவுகூர்ந்த அவர் இன்று யாழ் மாநகர சபையின் முதல்வராக செல்லன் கந்தையா அவர்கள் வருவதை தடுத்து நிறுத்திய சாதிய மனோபாவத்தினை அதன் வாழும் கருத்தியலினை சாதியப் போராட்டத்தின் தேவைக்குள் நிறுத்திக் காட்டி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
வெள்ளையர்களின் செல்லப்பிள்ளையாக தமிழர்கள் கையாளப்பட்டதும் அதன்மூலம் வளர்ந்த சிங்கள தமிழ் இன வெறுப்புகளும் பெற்றெடுத்த குழந்தையான தனிச் சிங்களச் சட்டம் தேசியஇன ஒடுக்குமுறையின் வடிவம்தான். பின்னர் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையானது பிரதேசவாரியாக நடைமுறைப் படுத்தப்பட்டதால் யாழ் மாவட்டத்துள் இருந்த தலித்துகளும்தான் பாதிக்கப்பட்டார்கள். கல்விகற்பதில் அவர்கள் சாதியத் தடைகளைத் தாண்டிக் கொண்டிருந்த காலம் அது என்பதுதான் முக்கியம். இதை வேளாளர்களோடு புள்ளிவிபர அடிப்படையில் ஒப்பிடுவது சமூக ஆய்வாக இருக்க முடியாது. ஒருபுறம் அன்றைய அரசு தலித்துகளுக்கு பள்ளிக்கூடம் கட்டினார்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இடம்தந்தார்கள் என்பதெல்லாம் தலித்துகளின் கல்வி மேம்பாட்டுத் திட்டமாக அவர்களிடம் இருந்திருந்தால் இந்தத் தரப்படுத்தலில் -கல்விவசதி மறுக்கப்பட்ட- தலித்துகள் ஏன் கண்டுகொள்ளப்படாமல் விட்டார்கள் என்ற கேள்வி முக்கியமானது. அதனால்தான் தலித்தியப் பார்வையில் தரப்படுத்தலை ஒரு இட ஒதுக்கீடு போன்று எடுத்துக்கொள்ள முடியாது.
தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கு தரப்படுத்தலை ஆயுதமாக்கியது வேறு கதை. அதற்கு தமிழ்த்தேசியவாதிகள் இங்கு நியாயம் தேட முடியாது. தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டே தனக்குள் இந்த சாதிய சமூக அமைப்புமுறையை பேணி கல்விரீதியிலும்கூட ஒடுக்கினார்கள் என்ற வகையில் தரப்படுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுக்க எந்தத் தார்மீக நியாயமும் அவர்களுக்குக் கிடையாது.
இந்த விடயங்கள் யோகரட்ணத்தின் பார்வைக்குள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தலித்துகளை உள்ளடக்கியிருக்காத தமிழ்த் தேசியத்தின்மீது தலித்தியம் வெறுப்புக் கொள்வது புரிந்துகொள்ளப்பட வேண்டியதுதான். இந்த விருப்புவெறுப்புகள் ஒரு முழுமையான அரசியல் பார்வையை நிராகரித்துவிடக்கூடாது என்பதுதான் முக்கியம்.
தமிழ்த் தேசியமும் தலித்தியமும் என்ற தலைப்புக்குள் விடப்பட்டிருந்த அருந்ததி ~தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா| என்று சொல்ல வெட்கப்படுகிறேன் என்ற உரைமுகப்புடன் தொடங்கிளார். தமிழ்த் தேசியத்தின் மிகப்பெரிய பொய் என்னவென்றால் சாதி ஒழிந்துவிட்டது என்பதுதான். உலகவரலாறு சமூக கலாச்சார ரீதியல் பாய்ச்சல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழினம் அதே சாதியமைப்பு முறையையும் பெண்ணடிமைத்தனத்தையும் தொடர்ந்து பேணுகிற இனமாக இருக்கிறது. அணுகுமுறையில்தான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சாதியம் வேறுபடுகிறதேயொழிய மற்றபடி ஒரேமாதிரியானதுதான். புகலிடத்தில் சாதி பிள்ளைகள் வளர்ந்து திருமண வயதை அடையும்போது மேல்வருகிறது.
தலித் என்ற சொற் பாவனை பற்றிய விவாதம் பழசாகிப் போய்விட்டது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதுபோல் தலித் என்ற சொல்லும் அடையாளச் சொல்லாக பொதுச்சொல்லாக இருக்கிறது.
பாசிசத்தின் கூறுகளைக்கொண்ட தேசியவிடுதலைப் போராட்டத்தை நடத்துபவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்தான். யாழ் மத்தியகல்லூரி அதிபரை தமது பிள்ளைகள் சேர் என்று சொல்வதுதூன் பிரச்சினை. கோரமுகம் கொண்ட தமிழ்த் தேசியம் முஸ்லிம்களை வெளியேற்றியது. தலித்துகள் சுடப்பட்டார்கள். ஒரே நேரத்தில் 15 தலித் இளைஞர்கள் எனது ஊரில் கூட்டாக சுடப்பட்டார்கள்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னார் ~புத்தூரில் ஒரு பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவரின் புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான் என்றார் என்ற கூற்றை ஒப்புவித்தார் அருந்ததி.
இது ஒரு எதிர்மறுப்பு மட்டுமே. ஒரு ஆதிக்க சக்தி ஒடுக்கப்படும் சக்திகளின் கலாச்சார அடையாளங்களை கீழ்நிலைப் படுத்துகிறது அல்லது அந்தக் கலாச்சார அடையாளம் மேல்நிலைக்கு வர உந்துசக்தியாக இருந்துவிடும் என்று கண்டறிந்தால் அந்த அடையாளங்களை அழிக்க முற்படுகிறது. ஒவ்வொரு யுத்தங்களின்போதும்கூட இவ்வாறான கலாச்சார அடையாள அழிப்பு முதன்மை பெற்றே இருக்கிறது. டானியலின் கூற்று இந்த மனோபாவம் இரண்டு சம்பவத்துக்கும் ஒன்றேதான் என்பதை உணர்த்துகிறது. இந்த நூல்நிலையமும் எல்லா சமூகத்தவருக்குமான பொதுப்பயன்பாடு பொதுக் கலாச்சார அடையாளமாக மாற்றப்பட வேண்டும் என்பதே போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது என்பதை செல்லன் கந்தையாவின் நூலகத் திறப்பிற்கான மறுப்பு காட்டிநிற்கிறது. மற்றபடி நூலகத்தின் அழிவைக் கோருவதல்ல இது. அதனால்தான் ஒரு தலித் இந்த நூலகத்தைத் திறக்க மறுத்ததை நாம் வரலாற்றுக் கறையாகப் பதிகிறோம். அதற்காகப் போராட வேண்டியவர்களாகிறோம்... என்ற விடயங்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான் என்ற எதிர்மறுப்பின் பின்னால் அருந்ததியால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இங்கும் தலித்துகளை உள்வாங்காத குறைபாடுடைய தமிழ்த் தேசியத்தின் மீதான வெறுப்பு தமிழ்த்தேசியத்தின் மீதான வெறுப்பாகப் போய்விடுவதோடு மட்டுமல்லாமல் பெருந்தேசிய இனத்தின் இனஅழிப்புக்கொள்கையை பார்க்கவும் மறுக்கிறது.
தொடர்ந்து அருந்ததி கூறும்போது தலித் மக்கள் கொல்லப்படுவதும் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதும் நீங்காத கறைகள். இதைத் தவிர்ப்பதற்கு தலித் எழுச்சி முஸ்லிம் எழுச்சி தவிர்க்கப்பட முடியாது என்றார். தமிழ்ப் பேரினவாதம் யாழ் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றளவில் அதன் மனோபாவம் தலித்துகளையும் முஸ்லிம்களையும் வெறுத்தொதுக்கும் கருத்தியலினூடாகச் செயற்படுகிறது. இந்தப் புள்ளியில் ஒடுக்கப்படும் சக்தி என்ற வகையில் தலித்துகளும் முஸ்லிம்களும் இணைகிறார்கள். இந்த இரு சமூகங்களுக்கும் மேல் வௌ;வேறு விதமான அணுகுமுறைகளால் யாழ் லோதிக்க மனோபாவம் செயற்படுகிறது. தமிழ்க் கலாச்சாரம் என்றால் இந்துக் கலாச்சாரமா?
புகலிடத்தில் கோவில் கட்டுதல் பரதநாட்டியம் என்பவையே தமிழ்க் கலாச்சாரமாக வெளிப்படுகிறது என்று சொன்ன அருந்ததி கோவில் கட்டி தெருத்தெருவாக இழுத்துவந்துகொண்டு சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். கூத்து நாடகம் எல்லாம் அழிக்கப்பட்டு யார்யாரோ எல்லாம் தேசியக் கலைஞர்களாக சிறப்பிக்கப்படுகிறார்கள். உண்மையில் எமது தேசியக் கலைஞன் வி.வி.வைரமுத்துத்தான் என்று கூறி முடித்தார் அருந்ததி.
தமிழ்த் தேசியமும் தலித்தியமும் என்ற தலைப்புக்குள் பேச்சுக்கள் போய் வந்தாலும்கூட சமகால நடைமுறைகள் உதாரணங்கள் அதன் அணுகுமுறைகள் என்பவற்றினூடு போய்வர முடியாத ஆய்வுத்தன்மை காணப்பட்டது. அதேபோல் புலிகளின் அழித்தொழிப்பு அரசியலை தலித் அடையாளத்துடன் மட்டும் வைத்துப் புரிந்துகொள்வதும் ஒரு முழுமையான அரசியல் ஆய்வாக இருக்க முடியாது. செல்லன் கந்தையாவின் நூலகத் திறப்பு விழா விவகாரத்தில் ஆனந்தசங்கரியின் சாதிய அணுகுமுறை அவர் புலியெதிர்ப்பாளன் என்ற வகையில் அந்த மனோபாவத்தில் மறக்கப்பட்டது அல்லது தவிர்க்கப்பட்டது. அவருடன் கூடிக்குலவியோர் பின் தலித்தியப் புள்ளியில் வைத்து அடையாளம் கண்டோர் எல்லாம் இதுபற்றி பேசமறந்தனர்.
அடுத்து பல்வேறு சாதிப் பிரிவுகளைக் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என அழைக்கத் தகுதியற்றவர்கள் என்ற அம்பேத்காரின் கூற்றுடன் ராகவன் தனது உரையைத் தொடர்ந்தார். இது எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டதால் அது எனது குறிப்புள் அடங்கவில்லை. இதை தூ, சத்தியக்கடதாசி இணையத்தளங்களுக்குள் பார்க்கலாம்.
இந்தவித தேடலும் உழைப்புமுறையும் தயாரித்து சமர்ப்பிக்கும் முறையும் அவசியமான ஒன்று. சொல்விரயங்களைத் தவிர்த்தல், விடயங்கள் விடுபடாதிருத்தல், பதிவாக இருத்தல் என்ற அம்சங்கள்; இந்த முறையில் கிடைத்துவிடுகிறது. மேடைப்பேச்சுப் போன்ற வடிவங்கள் அல்லது தயாரிப்பில்லாமலே அங்கு குந்தியிருந்து அறிந்ததையெல்லாம் தலைப்பை மறந்து போய்வந்து தொல்லைப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம். கூட்டத்துக்கு வருபவர்களின் நேரங்களையும் பணங்களையும் சிரமங்களையும் மதித்ததாகவும்கூட அது இருக்கும்.
உழைப்பைச் செலுத்தி நன்கு தயாரிக்கப்பட்ட அவரது உரையிலும் நான் மேற்சொன்ன குறைபாடுகள் இருந்ததோடு அவர் தனது ஆய்வு முடிவுகளுக்கேற்ப தகவல்களை மின்கம்பத்திலிருந்து பரவும் வெளிச்ச எல்லைக்குள் மட்டும் கண்டுகொண்டாரா என எண்ணத் தோன்றிற்று. தான் அறிய ஆரம்ப காலங்களில் இயக்கங்களுக்குள் தலித் போராளிகள் முக்கிய இடங்களில் இருந்ததில்லை என்ற சொல்லவரும்போது பாரிசில் வசித்து அண்மையில் மரணித்துப்போன புஸ்பராசாவைக்கூட நினைவுக்குக் கொண்டுவர முடியாதவராகினார். இதை மறுதலித்து மேலும் சில உதாரணங்களை கோவை நந்தன் போன்றோர் எடுத்துக்காட்டினார். புஸ்பராசாவின் ~ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்| என்ற நூலை அவர்கள்தான் பொய்ச் சாட்சியம் என அலட்சியப்படுத்துகிறார்களே என்ற அவரது பதில் இந்த மறுப்புக்கு சரியான பதிலல்ல என்பதை ராகவன் உணராதிருந்தார். மாறாக ராகவனின்; இந்த தகவல் பற்றாக்குறை அல்லது தவிர்ப்பு பொய்ச்சாட்சியம் என எழுதியோருக்கு துணைபோகக்கூடியது என்றும்கூடச் சொல்லலாம். மற்றபடி அவரது உரை முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
இன்று எந்த ஊடகங்களைப் பார்த்தாலும் தமது முடிவுகளுக்கேற்ப தகவல்களைத் திரட்டுவதிலும் அதை ஒப்புவிப்பதிலும் பலரின்; ஆய்வுமுறை முடங்கிக் கிடக்கிறதேயொழிய முழுத் தகவல்களைத் திரட்டி அதிலிருந்து முடிவுகளுக்கு வரமுடியாதவர்களாக அவதிப்படுவதை நாம் கேட்கிறோம் காண்கிறோம்.
அடுத்து சர்வதேசப் பார்வையில் சாதியம் என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து வந்திருந்த புதியமாதவி பேசினார். நம்முடைய சரித்திரங்கள் என்றோ யாராலோ மாற்றப்பட்டிருக்கின்றன. அந்த வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊடகங்கள் தருகின்ற தகவல் இலங்கையில் சாதி ஒழிந்துவிட்டது என்பதுதான். ஆனால் உண்மைச் செய்தி வேறாக இருக்கிறதை இங்கு நாம் பார்க்கிறோம். தலித்முரசில் ஜெயசங்கர் அவர்களின் செவ்வியை நான் பார்த்தேன். ''ஈழத்தில் சாதி ஒழியவில்லை. அது ஒளிந்துகொண்டிருக்கிறது. அகதிகளாக ஓடிஒளியும் இடம் கோவில்களாக இருக்கும்போது வேளாளர் கர்ப்பக்கிரகத்துள்ளும் அடுத்த ஆதிக்கசாதியினர் கோவிலுக்குள்ளும் இருக்க தலித்துகள் கொட்டடியில்தான் இருப்பார்கள்'' என்று சொன்னார்.
1907 இல் பகவத்சிங் பிறந்தார். 2007 இல் அவரது நூற்றாண்டுவிழா. இதுபற்றிய 3 படங்கள் வெளிவந்தன. அவர் கடைசியில் தூக்குக் கயிற்றின்முன் நின்று சொன்ன கடைசி ஆசையை எந்தத் திரைப்படமும் சொல்லவில்லை. கொண்டாடியவர்களும் சொல்லவில்லை. பத்திரிகைகளும் சொல்லவில்லை. ''நான் மேரியின் கையால் உணவருந்த விரும்புகிறேன்''. என்கிறார். மேரி மறுக்கிறாள். ''மலம் அள்ளியள்ளி சீழ்படிந்த எனது கைகளால் நான் உணவூட்ட மாட்டேன்'' என்கிறாள். ''உன்போன்றவர்கள் சமூகவிடுதலை அடைய வேண்டும்'' என்று சொன்ன அவரது கடைசி வார்த்தைகள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. வாஞ்சிநாதன் வெள்ளைக்காரத் துரையைச் சுட்டுக்கொன்றான் என்று சொல்கிறார்கள். ஜாதி இந்துக்களின் வீதியால் ஒரு தலித் கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்துக்காக அழைத்துச்செல்ல அனுமதி கொடுத்ததால்தான் துரை சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி மறைக்கப்படுகிறது. இப்படியே வரலாற்றை நாம் புரட்டிக்கொண்டே போகலாம்.
இந்துமதம் சாதியைக் காப்பாற்றும் மதம் என்பதைக் குறிப்பிட்ட அவர் மற்றைய மதத்தைச் சேர்ந்த மக்களுக்குள் நிலவும் சாதியமைப்புப் பற்றியும் குறிப்பிட்டார். சீக்கிய மத்தில் சாதி இல்லை என்கிறார்கள். அங்கும் இருக்கிறது. அங்கு எல்லாப் பிரிவினருக்கும் மதத்தலைவர் பதவி கொடுக்கப்படுவதில்லை. புத்தமதத்தில் சாதி இருக்கிறது. முஸ்லிம் மதத்தில் சாதி இருக்கிறது. கிறிஸ்தவ மதத்திலும் சாதி இருக்கிறது. மதம்மாறி கல்யாணம் செய்தாலும் செய்வார்களேயோழிய சாதி மாறி கல்யாணம் செய்யும் நிலை அங்கும் இல்லை. முஸ்லிம் மக்களுக்குள் சாதி அமைப்புமுறை பற்றி வெளிவந்துள்ள ஆய்வொன்றை உதாரணம் காட்டிப் பேசினார் புதியமாதவி. சாதியம் ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகம்வரை எப்படி செயற்படுகிறது என்பதற்கான சில உதாரணங்களையும் அவர் காட்டினார்.
சுவாரசியமான அவரின் பேச்சு எல்லோரையும் இழுத்துவைத்திருந்தது. தலித்துகளுக்குள்ளும் சாதிப்பிரிவுகள் இருக்கும்வரை தலித் விடுதலை முழுமையாகச் சாத்தியப்படாது என்ற புதியமாதவியின் கருத்துக்குள் தலித் மாநாட்டின் இருநாள் நகர்வுகளும் உட்புகவேயில்லை என்றே நினைக்கிறேன்.
அடுத்து அசுரா இதே தலைப்புக்குள் அழைக்கப்பட்டார். அவரது கடினமான மொழியாளுகை பற்றிய தலைவரின் அறிமுகத்துடன் உட்புகுந்த அசுரா அதை மெய்ப்பித்துக்கொண்டிருந்தார். சிந்தனைமுறையிலேயே மாற்றத்தைக் கோரி நின்றது அவரது பேச்சு. மக்கட்பிரிவை 3 பிரிவுகளாக அவர் வகுத்தார். முதலாவது வெகுஜன மக்கள். படித்தவர்கள் பாமரர்கள் பட்டதாரிகள் பேராசிரியர்கள்... என ஒரு பிரிவினர். இவர்கள் எல்லா மதத்திலும் சாதி இருக்கிறது என்பார்கள். இவர்களோடு தர்க்க ரீதியில் வாதிட முடியாது. இரண்டாவது பிரிவினர் ஆய்வுக்கு உட்படுத்துபவர்கள். மனித வரலாறு, பிரிவினைகள் என்பன பற்றிய ஆய்வுகளை தர்க்கபூர்வமாகப் பார்க்கிறார்கள். இது செயற்கையானது, இதை மாற்றலாம் என்கிறார்கள். இவர்கள் பார்ப்பனியம் இந்துத்துவம் பற்றியெல்லாம் நன்கு புரிந்து வைத்தே பார்க்கிறார்கள். ஆனால் இதை இரண்டாம் பட்சமாகவே பார்க்கிறார்கள். மூன்றாவது பிரிவினர் இந்துத்துவம்தான் இந்த சாதியத்தின் அடிப்படை வேர். இது இயற்கையானது. செயற்கையானது அல்ல என்கிறார்கள்... என்றவாறு அவர் தொடக்கிய இந்தப் பிரிப்பு என்னளவில் முறையாக அணிவகுத்த நிற்பதில் மாறிமாறி இடம் பிடித்ததுபோல் இருந்தது. சாதிகள் தோன்றிய இடம் இந்திய துணைக் கண்டம்தான் என்று அவர் சாதியின் வேர்களை அந்த வேர்களிற்கு முற்பட்ட நிலையிலிருந்தே தொடங்கியது அவரது ஆய்வுத் தன்மையின் கடின உழைப்பை நிரூபித்தது.
பண்பாடு ஒழுக்கம் எல்லாம் இந்துமதப் பண்பாடுதான் என்பதை நாம் காணலாம். ஒரு நாடு வளர்ச்சி பெற்றது என்றால் என்ன? பொருளாதாரம் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் மட்டும் வளர்ச்சியடைந்தால் அது வளர்ச்சி பெற்ற நாடா? கமூகவளர்ச்சி அடையாதவரை அதை வளர்ச்சிபெற்ற நாடாக நாம் கொள்ள முடியாது. பல இன மக்கள் வாழும் நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. ஆனாலும் சமூக மாற்றம் நிகழ்வதற்கான வழிவகைகள் அங்கு பேணப்படுகின்றன. இலங்கை இந்தியாவில் அது இல்லை. சாதியமைப்பு முறையை தொடர்ச்சியாக 3000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கின்ற சமூகம் ஒரு மனநோய் பிடித்த சமூகம்.
சமூகம் சார்ந்த விடங்களை விமர்சிப்பவர்கள் முதலில் அதே சமூகத்தால்தான் நிராகரிக்கப்படுகிறார்கள். சாதியம் பற்றிய ஆய்வுகள் எம் மத்தியில் ஒரு திறனாய்வுடன் இல்லை. வரலாற்றின் நம்பகத் தன்மை என்ன? புதைபொருள் ஆராய்ச்சியாளர் மொழியியலாளர்கள் ஆகியோரின் ஆதாரங்கள்தான் அதிகபட்ச நம்பிக்கை கொள்ளக்கூடியது என்பார்கள். சிந்துவெளி நாகரிக ஆய்வுகள் அகழ்வாராய்ச்சியினூடாக வெளியாகியது. அந்த மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் முயற்சியை மொழியியல் ஆய்வால்தான் சாத்தியமாக்க முடியும். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் பிற நாட்டவரின் வருகை அந்தச் சமவெளியினூடு நடைபெறுகிறது. அவர்களின் பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு. சிந்துவெளி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இவர்கள் நாடோடிகளாகவே இருந்தார்கள். பிறதேசத்தவர்கள் ஆரியர்கள் பார்ப்பனியர்கள். அப்போதும் சாதியம் இல்லை.
சிந்துவெளி நாகரிகம் மறைந்து 1500 வருடங்களின் பின் இலக்கியங்கள் தோன்றிற்று. நான்கு வேதங்களும் தோன்றிற்று. இயற்கைதான் பிரதான தெய்வங்கள். பிரதானமான இனக்குழுத் தலைவன் இந்திரன் கடவுளாக வருகிறான். இலக்கியம் படைத்தவர்கள் சமூகத்தில் முதன்மை இடம் பெறுகிறார்கள். இவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள். வசிட்டர், விசுவாமித்திரர்... போன்றோரைக் குறிப்பிடலாம். யுத்தத்துக்கான இனம் வியாபாரத்துக்கான இனம்... என இனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. யுத்தம் செய்பவர்களுக்கும் சமூகத்தின் ஆதிக்கசக்திகளுக்கும் இடையில் யுத்தங்கள் நடைபெற்றன. கிறிஸ்துவுக்குமுன் 1000 ஆண்டுகளிற்கு முன்தான் சாதியத்திற்கான அடித்தளம் இடப்படுகிறது. வருணாச்சிரம தர்மங்கள் தோன்றுகின்றன. இருக்குவேதத்தில் முதன்முதல் சாதியத்துக்கான அடித்தளம் இடப்படுகிறது... என்று சாதியத்திற்கு முற்பட்ட பிற்பட்ட காலங்களின் எல்லையில் எம்மை கொணர்ந்து நிறுத்தினார்.
சாதியம் என்பது இடையில் வந்தது. அது இயற்கையானதல்ல. செயற்கையானது. எனவே அது மாற்றப்படலாம் என்ற புரிதலைக் கொடுப்பதற்கும் தலித்துகளின் மீது சாதியம் இயல்பானதென கூறும் இந்துமதக் கோட்பாடுகளை, அதன் தத்துவாசிரியர்கள் புத்திஜீவிகள் தடவிவைத்திருக்கும் வஞ்சகத்தனம் மிக்க கருத்தியலை தலித்துகள் முதலில் புரிந்துகொள்வதற்கும் இவ்வாறான ஆய்வுகள் அவசியமானது. அதாவது தலித் இந்த அறியாமையிலிருந்து விடுபட வேண்டியது முக்கியமானது. இந்தவகை முயற்சிகளை கறுப்பின நீக்ரோ இனப் போராட்டங்களின்போது கறுப்பின புத்திஜீவிகள் மேற்கொண்டனர். இந்தவகையில் அசுராவின் பேச்சு முக்கியத்துவம் உடையது.
அடுத்த நிகழ்ச்சியாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம் என்ற தலைப்பு. இத் தலைப்பை ஏற்றுக்கொண்டிருந்த புதுமைலோலன் தான் வரமுடியாததை கடைசி நேரத்தில் அறிவித்திருந்ததால் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் இதை தற்காலிகமாகச் செய்ய ஏற்பாடாகியது. அதனால் அவரிடம் போதிய தயாரிப்புகள் இருக்கவில்லை. இலங்கை இந்தியா புகலிட நாடுகள் என சுழன்று திரியும் அவர் இலக்கியத் துறையில் இருந்த பரிச்சயத்தில் தனது ஞாபத்துள் இருந்தவற்றைத் தொகுத்துத் தந்தார். இலங்கையில் டானியல், டொமினிக் ஜீவா, செ.யோகநாதன், நீர்வை பொன்னையன், செ.கணேசலிங்கள்... போன்றோரின் கதைகள் எல்லாம் 60 களிலேயே இலங்கையில் பேசப்பட்ட கதைகள். சுபத்திரனின் கவிதைகளும் அப்போது அவ்வாறான பாதிப்புகளைச் செலுத்தியவை என்றார்.
இத் தலைப்புக்குள் பின்னர் தேவாவும் தனது கருத்துக்களை முன்வைத்தார். தலித்திலக்கியம் ஒரு கலகக் குரலாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பனியச் சிந்தனையை மறுதலித்து எழுந்தவை அவை. டானியலின் எழுத்துக்கள் இந்தியாவில்; தலித்திலக்கியம் வர முன்னரே வந்தவை. குஜராத், மகாராஷ்ரம் போன்ற இடங்களிலேயே 10 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தலித்திலக்கியம் உருவாகியது. இந்த இலக்கியங்கள் அடக்கியொடுக்கலுக்கு இழிவுபடுத்தலுக்கு கொடுமைப்படுத்தலுக்கு எதிரான கோபங்களாகவும் அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதாகவும்கூட இருக்கின்றன. ஊரும் சேரியும், கவர்மென்ட் பிராமணன்... போன்ற இலக்கிய நூல்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் பாமாவின் கருக்கு, சங்கதி, வன்மம்... சிவகாமியின் குறுக்குவெட்டு, பழையன கழிதலும் ... மற்றும் ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், ரவிக்கமாரின் எழுத்துக்கள்... பாப்லோ அறிவுக்குயிலின் கவிதைகள்... என்பவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார் தேவா. பறை போன்ற இசைக் கருவிகளை வைத்து குணசேகரன் நடத்தும் கலைவடிவங்கள் பற்றியும் குறிப்பிட்டார். மற்றும் தலித் முரசு, புதிய கோடங்கி... போன்ற தலித் இதழ்கள், மராத்தியில் வெளிவந்த அந்நியன், தந்தையற்றவன், குலாத்தி, பழிக்கப்பட்டவன்... போன்ற நூல்களையும் அவை தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது பற்றியும் ஒரு பட்டியலை அடுக்கிக் கொண்டே போனார் தேவா.
தலித் இலக்கியத்தில் தலித்தியம் என்ற தலைப்புக்குள் பரிமாறப்பட்ட தகவல்களாகவே இருவரினது பேச்சும் இருந்தது. முதல்நாளின் கடைசி நிகழ்ச்சியாக இது இருந்ததால் ஏற்பட்ட நேரநெருக்குவாரம் காரணமோ தெரியாது. இத் தகவல்களோடு தலித் இலக்கியத்தின் போக்கு அதன் தனித்தன்மைகள் என்றவாறான ஒரு ஆய்வுப் போக்கு -ஓரளவுக்கு பொதுமைப்படுத்தலாக சொல்லப்பட்டதே தவிர- ஆழ்ந்து நோக்கப்படவில்லை அல்லது முன்வைக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
பிரான்சில் போக்குவரத்து வேலைநிறுத்தம் நகரத்தை தேக்கநிலையில் வைத்திருந்தது. அபூர்வமாகக் கிடைக்கும் பஸ் ரயில் வசதிகள் அசையமுடியாமல் தவித்த கார் நெரிசல்கள் என்பவற்றினூடு இந்த மாநாட்டுக்கு சுமார் 100 பேர்வரை வந்திருந்தது திருப்திதந்தது. ஐரோப்பிய நாடுகள், இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளிலிருந்தும் வந்து இதில் பங்குகொண்டார்கள். இதை ஒழுங்குசெய்வதில் கடுமையான உழைப்பு செலுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சுவர்களில் சாதியக் கறையின் குறும்கதைகள் போஸ்ரர் வடிவில் ஒட்டப்பட்டிருந்தன. புத்தகங்களை வாசிக்கப் பொறுமையற்றோரை இதையாவது... என்றபடி அந்த பத்திகள் அழைத்துக்கொண்டிருந்தன.
முதல்நாள் கலைகிறது.
இரண்டாம் நாள் முற்பகல் நிகழ்ச்சியாக கலந்துரையாடல் நிகழ்ச்சி. சில மணி நேரங்களை மெற்றோ நிலையத்தில் வைத்து வேலைநிறுத்தம் எம்மையும் இழுத்துப்பிடித்ததால் நாம் மூவர் தாமதமாக மண்டபத்தை வந்தடைந்தோம். எல்லோர் கருத்துக்கும் சந்தர்ப்பம் அளிக்கவும் அதை ஒழுங்கபடுத்தவும் எக்சில் விஜியிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.
மாநாட்டில் எனது கருத்தாகச் சொல்லியவை இவை... 1960 கள் உலகெங்கும் தேசிய விடுதலைப் போராட்டம், ஆக்கிரமிப்புக்கெதிரான போராட்டம், நிறவெறிக்கு எதிரான போராட்டம், சாதியப் போராட்டம்... என்பவை நடந்த முக்கியமான காலகட்டம். இதிலிருந்து பல படிப்பினைகள் கிடைத்தன. நிறவெறிக்கெதிரான போராட்டமும் சாதியத்துக்கு எதிரான போராட்டமும் பல புள்ளிகளில் பொருந்திப் போகின்றன. நிறவெறி சமன் சாதியம் என்று கொள்வதல்ல இது. நீக்ரோ, தலித் என்ற சொற்கள் உருவாக்கம், இருவருமே தீண்டத்தகாதவர்களாக அணுகப்பட்டமை, ஆதிக்கசக்திகளின் கருத்தியலை உளவியல் அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருந்தமை போன்றவற்றைக் குறிப்பிட்டேன். கறுப்பின மக்கள் இன்று வந்தடைந்துள்ள நிலை அவர்கள் மிகக் கடுமையாகப் போராடிப் பெற்றவை. இளவயதிலேயே கொலைசெய்யப்படுமளவுக்கு மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்கள் உக்கிரமாப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். இந்த நிலை சாதிப் போராட்டத்தில் எட்டப்படவில்லை.
அடுத்து சாதி மறுப்புத் திருமணம் சாதியை ஒழிப்பதற்கான தீர்வல்ல, ஆனால் சாதியத்தை சிதைக்கும் நடவடிக்கைதான் அது. அதனால் அதை வரவேற்க வேண்டும். தலித்துகளுக்குள்ளும் சாதிப் படிநிலை காணப்படுவதால் பல தலித்திய அமைப்புகளின் உருவாக்கத்திற்கான தேவையும் இருக்கும். இதை யாரும் ஒரே அமைப்பாக குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் மனோநிலை இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டு, இறுதியாக ஒரு கேள்வியை முன்வைத்தேன். தலித்துகளை உள்ளடக்காத முஸ்லிம்களை உள்ளடக்காத குறைபாடுகளுடன் கூடிய (நிலவிய, நிலவும்) தேசியத்தை தலித்தியம் நிராகரிக்கிறதா அல்லது தேசியத்தையே நிராகரிக்கிறதா என்ற கேள்வியே அது.
ரயாகரன்: புலிகள் வைப்பதுதான் தேசியம் என்று எதிர்பார்க்க முடியாது. சகல சமூக விடுதலையையும் உள்ளடக்கிய விடுதலைதான் தேசியம். சாதிப்பிரச்சினை, பெண்விடுதலை எல்லாவற்றையும் வேலைத்திட்டமாக வைத்துத்தான் இயக்கங்கள் அமைப்புக் கட்டியது. இடதுசாரிக் கருத்துகளை அழித்ததன் விளைவுதான் இன்றைய நிலை. ஜனநாயகத்தைக் கோரியவர்கள் அதை கோட்பாட்டு ரீதியாக ஏற்று இயங்காததன் விளைவுதான் இந்த தலித்திய அமைப்பின் தேவை உருவாகக் காரணம். சாதிப்பிரச்சினை, பெண்விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை விரும்பியவர்கள்தான் இயக்கங்களுக்குள்; முதலில் கொல்லப்பட்டார்கள் -புலிகளால் அல்ல. சமூகவிடுதலைக்கான விடுதலையாக நாம் கோரினோம். அந்த மரபை நாம் மறுத்திருக்கிறோம். அதை நினைவுபடுத்தாமல் இந்தப் போராட்டத்தை நடத்தமுடியாது.
பாலகிருஷ்ணன்: சாதியம் இந்துமதத்தோடு பின்னிப் பிணைந்தது. எந்தச் சூத்திரத்தில் இது ஆயிரக்கணக்கான வருடங்கள் நீடிக்கிறது. மதம் மாறினாலும் அந்தந்த மதங்களுக்குள் இது நீடிக்கிறது. இதனை சுலபமாக நீக்கமுடியாது. ஒவ்வொரு தலித்தும் தன்னை தலித் என்று அறிவிக்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
சோமசுந்தரம்: தலித் என்றால் டிசழமநn pநசளழn. தலித் மனதில் உள்ள வருத்தம். அதற்கு சிகிச்சை கொடுத்தே ஆகவேண்டும்.
அசோக்: கிழக்கு மாகாணத்திலும் சாதி உள்ளது. நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்கள் இருக்கும் இடங்களில் சாதியம் இருக்கிறது. நிலப்பிரபுத்துவம் வடபகுதியில் இறுக்கமாகக் காணப்பட்டதால் அங்கு சாதியமும் இறுக்கமாகக் காணப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு கிழக்கின் சாதியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
களுதாவளை என்ற கிராமத்தில் யாழ்ப்பாணத்தைவிட மோசமான சாதியொடுக்குமுறை உள்ளது. களுதாவளையில் 1983 வரை தனிப் பாடசாலை அமைக்கப்பட்டிருந்தது. தொழில்வாய்ப்பு இல்லை. எங்கள் கிராமத்தில் சைக்கிள் ஓடமுடியாது. கோவிலுக்குப் போகமுடியாது. சாதியத்துக்கு எதிராகப் போராடிய அமைப்புகள் எல்லாம் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. அதிகாரத்தோடு சமரசம் பேசும் சக்திகளாக சிலர் செயற்பட்டதால் இவை தோல்வியில் முடிந்தன.
முக்குவரின் ஆதிக்கம் மட்டக்களப்பில் செயற்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் கிழக்கில் முக்குவரே ஆதிக்கசக்திகளாகச் செயற்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் புலிகளாலும் மட்டக்களப்பில் கருணாவினாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்திலிருந்து முக்குவர்களே போராட்டத்தைவிட்டு வெளியில் வந்தவர்கள். அங்கும் போராளிகளாக ஒடுக்கப்பட்ட மக்கள்தான் எஞ்சியிருக்கிறார்கள் என்று கிழக்கில் நிலவும் சாதியமைப்புமுறை பற்றிய தனது கருத்தைச் சொன்ன அசோக், நாம் மிக நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக, அனைத்து அடக்கமுறைகளுக்கும் எதிரானவர்களாக இருக்கவேண்டும். கருணாவைத் தூக்கிப் பிடிக்கிற சக்தியாக இருந்துகொண்டு ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாது. ஆகவே புலி கருணாவுக்கு எதிரான கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும். அத்தோடு தமிழச்சி மீதான நடவடிக்கைக்கும் இந்த முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
தலித்தியத்தின் எல்லைக்குள் கிழக்கின் சாதியம் பற்றி புதிய தகவல்களைத் தந்த அவரது பேச்சு திசைமாறி சம்பந்தா சம்பந்தமில்லாமல் முடிந்தது. தமிழச்சி தொலைபேசியில் மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு தலித் முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார். பலர் முழித்தனர். இதை அவர் சாதிக்க அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற முடிச்சைப் பாவித்தார் என்றே கொள்ள முடிகிறது.
பொருத்தம் கருதி இங்கு ஒரு சம்பவத்தைச் சொல்லவேண்டியிருக்கிறது. உயிர்நிழல் ஆசிரியர் வீட்டில் ஆவணங்கள் களவாடப்பட்டு -ஒரு வாரமாக வெளியில் வராமல் வைத்திருந்ததே ஒருவகையில் ஜனநாயக மறுப்புப் போராட்டத்தினை பலவீனப்படுத்தவல்லது என்ற விடயம் ஒருபுறம் இருக்க- களவுபோனது இலக்கியச் சந்திப்பின் ஆவணங்கள் என்று அறிவிக்கப்பட்டபோதும் இதுபற்றி இலக்கியச் சந்திப்பு மௌனமாக இருந்தது. அதன்பிறகும் கூடிக்கலைந்தாயிற்று. ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் பிரான்ஸ் நண்பர்கள் வட்டம் மௌனமாக இருந்தது. ஆனால் பெண்கள்சந்திப்பு நோட்டீஸ்விட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலைதான் தலித் முன்னணியிடமும் தமிழச்சியின் விவகாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருவகைப் பயன்படுத்தல் எனபதற்கு அப்பால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
வெளியே போவதும் வருவதுமாக இருந்த அருந்ததிகூட திடீரென உடனடியாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்துள் நுழைந்தபோதும் பலர் முழித்து நின்றனர். தமிழச்சியும் தொலைபேசி மிரட்டல் விவகாரத்தைச் சொல்லி விடுதலைப் புலிகளுக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் என்று தடாலடியாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் எழுதிய 'தைரியமும் அதைரியமும்' என்ற நூல் விற்பனைக்காக அடுக்கப்பட்டிருந்தது - ''இப் புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கும் லாபங்கள் அனைத்தும் பிரான்ஸ் தமிழ்ச்சோலை அமைப்பில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக செலவிடப்படும்'' என்ற பின்அட்டை எழுத்துக்களுடன்!
கீரன்: சிங்கம் வந்து தனது வரலாற்றைச் சொல்லாதவரை வேடனின் வரலாறுதான் வரலாறாக இருக்கும். 2000 ஆண்டுகால வரலாற்றைப் பேசாத நாங்கள் 20 வருட வராற்றைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். கன்பொல்லையில் சாதியப்போராட்டத்தின்போது குண்டுவைத்த போராளியின் சிலை அன்று உடைக்கப்பட்டது. மாவீரன் எனச் சொல்லும் நாம் என்ன செய்தோம்? மற்றது இந்த 'தான்' என்ற சொல் இருக்கே... அதுதான் பிரச்சினை. தலித் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசினால் 'பிழைதான்' என்பார்கள். இந்தத் 'தான்'...அது என்ன 'தான்'...! கக்கூஸ் இல்லாத இனம் எப்பிடி கலாச்சாரமுள்ள இனமாக இருக்க முடியும்? என்று சிரிப்பொலிகளின் நடுவே சிந்திக்கச் செய்தார் கீரன்.
சிவகுருநாதன்: சாதி ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள்தான். பேராசிரியர்கள் எவரும் சமூகத்தோடு சேர்ந்து போராட்டங்களில் பங்குபற்றியது கிடையாது . அந்த அடிப்படையில் அமைந்தது அசுரா, ராகவன் அகியோரின் பேச்சு. கற்பனையில் எழுதி பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேசியப் பிரச்சினையில் தமிழீழத்துக்காகப் போராடியவர்கள் இராசலிங்கத்துக்கு வீடுவீடாகச் சென்று சாதிக்கெதிராகப் பேசி செயற்பட்டார்கள். அந்த முற்போக்குச் சக்திகள் பின்தள்ளப்பட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி, இனம் என்ற இரு அடிப்படையிலும் ஒடுக்கப்பட்டார்கள். முற்போக்கு எண்ணங் கொண்டவர்களோடு அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது பங்குபோடுவது அவசியம். தரப்படுத்தலால் யாழ்ப்பாணத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டார்கள். சிறீமா பண்டாரநாயக்காவின் திட்டத்திலல்ல, என்.எம்.பெரேராவின் திட்டத்தினால்தான் பொருளாதாரம் உயர்ந்தது. அதனால்தான் முற்போக்குச் சக்திகளோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறேன்.
லக்சுமி: இந்த தலித் மாநாடு தேவையா என்று கேட்பதே நாம் அதற்குள் இல்லை என்ற மனோபாவத்தில்தான். இங்குள்ள இளம் சந்ததியினரிடம் சாதி அழிந்துபோகும் என்று சொல்வது சம்பந்தமாக ஒன்றைச் சொல்கிறேன். நாம் சாதி பற்றிய அறிதலை பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும். இதன் அநீதியை அவர்கள் கண்டுபிடித்து அதிலிருந்து வெளியே வருவார்கள். மற்றது புஸ்பராசா ஒரு தலித் என்பதற்காக அவரது நூல் ஒதுக்கப்படவில்லை. சாதி ஒடுக்குமுறையை இதற்கெல்லாம் ஒரு ~கவர்| ஆகப் பயன்படுத்த முடியாது என்று -ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்து ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாகக்- கூறினார்.
சேனன்: தலித் அமைப்பு ஒரு சமூக நடவடிக்கைதான். ஒருசிலர் மட்டும் கதைச்சுச் செய்வதல்ல. சாதியம் வௌ;வேறு தளங்களில் செயற்படுகிறது... நிறவெறி இன்னும் தீர்ந்துவிடவில்லை. அது வௌ;வேறு வடிவில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது... இடதுசாரிகள் தலித் ஒடுக்குமுறைக்காகப் போராடிய வரலாறு பற்றிச் சொல்கிறோம். இடதுசாரிகள் வரட்டுத்தனமான மார்க்சியம் பேசியதால் இதைச் சரியாக எடுத்துச் செல்லவில்லை. மக்கள் போராட்டத்தில்தான் இருந்தார்கள். வடக்கில் இடதுசாரிகள் அதை சரியாக முன்னெடுத்துச் செல்வில்லை. இதை வர்க்க வேறுபாடு என்று கதைத்துக் கொண்டு இருந்தார்கள். இடதுசாரியம் சார்ந்ததாக தலித்தியம் இருக்கிறது. இதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதுதான் முக்கியமான விடயம்.
புதியமாதவி: அரசியல் பொருளாதார விடுதலை சமூகவிடுதலையைக் கொண்டுவர முடியாது. சமூகவிடுதலைதான் அரசியல் பொருளாதார விடுதலையைக் கொண்டுவரும். முஸ்லிம்களிடம் சாதி இல்லை என்று சொல்லமுடியாது. இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விகளை எவரும் தவிர்த்துவிட முடியாது. முஸ்லிம்களுக்குள் சாதி பற்றிய ஆய்வின் மீதான எதிரொலிப்பின்போது, இன்குலாப் சொன்னார் ~~இவனின் தலையை எடுத்துவிடலாம். இவன் எழுப்பியுள்ள கேள்வியை என்ன செய்யப்போகிறீர்கள்|| என்று..! சாதிவெறி நிறவெறிக்கு உட்பட்டதுதான் என்று ஐக்கியநாடுகள் சபையின்முன் வைக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம்களிடை சாதி பற்றிய தனது கருத்தைச் சொல்லும்போது பசீர் முஸ்லிம்களிடம் சாதி இல்லை, சீதனம் போன்ற சமூக ஒடுக்குமுறையாகத்தான் இதைப் பார்க்க முடியும் என்று குறிப்பிட்டார். அவர் அந்த வேறுபாடுகளை சாதியென எடுத்துக்கொள்ள முடியாது என்றார். முஸ்லிம் மக்களுக்குள் சாதி பற்றிய ஆய்வை அவர் படித்திருந்ததாகக் குறிப்பிட்டு அதற்குள் போய்வரவில்லை. அப்படியிருக்க அதை மறுதலிக்கும் நிலையை அவர் எடுத்தது ஒரு நியாயப்படுத்தலாகவே இருந்தது. இந்துமதம் போன்று முஸ்லிம் மதம் சாதியத்தை ஏற்றுக்கொண்ட மதமல்ல. ஆனால் சமூகம் மத அடிப்படையில் மட்டும் இயங்கும் ஒன்றல்ல. இந்திய இந்து சமூகத்தில் நிலவும் அதன் தாக்கம் முஸ்லிம்களுக்குள்ளும் புகுத்தப்பட்டிருக்கலாம் என்ற சமூகப் புரிதலாவது அவரின் நியாயப்படுத்தலைத் தடுத்திருக்க வேண்டும். அத்தோடு இன்குலாப் புலிகளை ஆதரிப்பவர். அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லையே என்று ஒரு பொதுப்புத்தி தர்க்கத்தை வைத்தது மலினமான விவாதமாக இருந்தது.
இதன்போது ரயாகரன் குறுக்கிட்டு -முஸ்லிம்களிடை சாதியில்லை என்ற- பசீரின் கருத்தை மறுத்தார். இதுபற்றிய ஆய்வுகளை தன்னால் முன்வைக்க முடியும், அதற்கான தயாரிப்போடு தான் வரவில்லை என்று கூறி, முஸ்லிம் அடிப்படைவாதியாக நீங்கள் பேசுகிறீர்கள் என்ற தனது கருத்தை முன்வைத்தார்.
சோபாசக்தி: யாழில் 109 கோவில்கள் தலித்துகளுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை என்று தொடங்கி இன்னும் சில புள்ளிவிபரங்களைத் தந்தார். கம்ய+னிஸ்ட் கட்சி சிறுபான்மைத் தமிழர் மகாசபை ஆகியவற்றின் சாதியப் போராட்டங்களை நினைவுபடுத்திப் பேசிய சோபாசக்தி பெரியார் கூறிய ~எமது இனம் சாதி காப்பாற்றும் இனம், எமது மொழி சாதி காப்பாற்றும் மொழி| என்ற மேற்கோளை சொல்ல மறக்கவில்லை.
இந்த சாதியக் கலாச்சாரம் ஒழியும்வரை தமிழருக்கு எந்த விடுதலையும் கிடைக்காது. தலித்துகளின் பிரச்சினையை தலித் அல்லாதவர்கள் புரிந்து கொள்வது மிகக் கடினமானது. கடுமையாக உழைக்க வேண்டும். எங்களால் மட்டுப்படுத்தப்பட்ட வேலைகளையே செய்யக்கூடியதாக இருக்கும். கருத்தினை உருவாக்கும் பணியில்தான் இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் சந்திப்பு தனியாகக் கூடுகிறது. அவர்கள் கூட்டத்துக்கு ஆண்களை அனுமதிப்பதில்லை. அது மிகச் சரியானது. அதேபோல் தலித்துகள் மட்டும் கூடும் கூட்டம் பிறிதாக நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விட்டுச் சென்றார் சோபாசக்தி.
இக் கலந்துரையாடலின் தொகுப்பாக தேவதாஸ் சில விடயங்களைச் சொன்னார். தலித் மாநாடு நடத்தவேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு இவ் உரையாடல் தெளிவாக விடையளித்துவிட்டது. தலித்துகள் மட்டும் பிறிதாகக் கூடவேண்டும் என்ற சோபாசக்தியின் கருத்துக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாது. மற்றவர்கள் விட்ட தவறுதான் இங்கு கூடவேண்டியதற்கான காரணம் என்று -ரயாகரனின் கூற்றை- சொன்னார் தேவதாஸ். ஒரு போராட்டத்துக்கு அரசியல் அவசியம். அதை நாம் ஆரம்பித்து வைக்கிறோம். அவ்வளவுதான் என்றார்.
தலித் மக்களுக்காக எடுக்கப்பட்ட போராட்டங்களில் வெற்றிகளும் கிட்டியிருக்கின்றன என்று கூறிய தேவதாஸ் தமிழ்த் தேசியம் எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்பியது இந்தப் புள்ளியில் தெளிவற்ற நிலையை தொடர்ந்து பேணியது.
கலாச்சார ரீதியான போராட்டங்களை எந்த இயக்கமும் முன்னெடுக்கவில்லை. அவர்கள் இதை இரண்டாம் பட்சமாகத்தான் பார்த்தார்கள் என்றார். தலித்துகள் சமூகவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தகுதி அல்லது வலிமை உடையவர்களாக இருப்பார்கள்... இந்த சாதியமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் விரும்பினால் நிச்சயம் இதை அவர்கள் ஆதரிப்பார்கள். கிழக்கில் சாதிப் பிரச்சினை இல்லை என்று நான் சொல்லவில்லை. தலித்துகள் இன்னும் முஸ்லிமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்றார். வன்முறையாளர்களுக்கு உதவியாக நாம் ஒருபோதும் இருக்க மாட்டோம் என அசோக்கின் கேள்விக்குப் பதிலளித்தார் தேவதாஸ்.
எனது கேள்விக்கு நேரடியான பதிலை பரா அவர்கள் தவிர யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. அவர் தலித்துகளை உள்ளடக்காத குறைபாடுகளுடன் கூடிய தேசியத்தைத்தான் தான் நிராகரிப்பதாக தனது கருத்தைச் சொல்லியிருந்தார். புதியமாதவி தான் இந்தக் கேள்வியோடு இந்தியா திரும்புகிறேன்... என்று சொல்லிய பின்னரும்கூட இதற்கான பதில் தலித் மேம்பாட்டு முன்னணி சார்பில் வரவேயில்லை.
விவாதங்கள் பல கருத்துகளை கொணர்ந்தது உண்மை. கீறல்விழுந்த றெக்கோர்ட் போல் தேசிய இனப் பிரச்சினைகளில் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் ஒரே ரெக்ஸ்ற் உடன் கேட்டுப் புளித்த விவாதங்கள் போலன்றி புதிய கருத்துக்களாக அவை வெளிவந்ததை அதன் சிறப்பாகச் சொல்ல முடியும். அதை அவ்வாறு அமைத்துக் கொள்வதில் மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் கரிசனையை அவ்வப்போது வெளிப்படுத்தியதையும் நாம் பார்த்தோம். டக்ளஸ் தேவானந்தா பணம் கொடுத்து மாநாடு நடத்துகிறார்கள் என்ற திண்ணைச் சாத்திரிகள் சிலரின் சுண்ணாம்பு தடவலில்கூட சாதியத்தின் வீணிதான் தெரிந்தது. தேவதாஸ் தனது ஆரம்ப தலைமை உரையில் இதை மறுத்ததோடு எந்த இயக்கத்துக்கு சார்பாகவோ எதிராகவோ நாம் இங்கு கூடவில்லை என்றார். தலித்தியத்துக்கு குறுக்காக எந்த சக்திகளாவது வரும்போது அதை எதிர்ப்பது என்பதும், சில சக்திகளை எதிர்ப்பதற்காக தலித்தியத்தைக் கையிலெடுப்பது என்பதும் ஒன்றாகாது. இந்த அடிப்படையில் எளிமையாக கொடுக்கப்பட்ட அவரின் விளக்கத்தை அருந்ததியும் அசுராவும் தத்தமது உரையின்போது மறுத்தவிதம் ஒன்றும் புதிய புரிதலைத் தந்துவிடவில்லை. சாதியத்தைக் கட்டிக்காத்த கட்சிப் பாரம்பரியத்திலிருந்து வந்த ஆனந்தசங்கரியும்கூட ரிபிசி வானொலியினூடு இந்த மாநாட்டுக்கு வாழ்த்துத் தெரிவித்ததில் சந்தேகம்கொள்ளாது வேறு எதைக் கொள்வது? புலியெதிர்ப்பில் இணைந்துகொண்ட சக்திகள் சாதியெதிர்ப்புப் புள்ளியில் பிரிந்துகொள்வது ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவர்களின் குரல்களை சந்தேகம் கொள்ள வைத்துத்தான் தீரும்.
அடுத்து தலித்துகளின் பொருளாதார மேம்பாடு என்ற தலைப்பில் பகத்சிங், பேசினார். தொழில் ரீதியில் சாதிப்பிரிவுகளை உருவாக்கியது தமிழர் தமக்குச் செய்த மிகப்பெரிய துரோகம் என்றார். சாதியை தமிழின எல்லைக்குள் வைத்துப் புரிந்துகொள்கிறாரா என்ற சந்தேகத்தை இது எழுப்பியது. எமது மக்கட் பிரிவினரிலே ஒரு பிரிவினரை சாதிரீதியில் ஒடுக்கிக்கொண்டு எமது நிலம் பறிபோகிறது என்று போராட்டத்தை எடுத்தது தவறெனக் கருதுகிறேன். மொழி அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுப்பது தவறானதெனக் கருதுகிறேன். தமிழர் தமிழரையே தாக்கிக் கொண்டு எவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கலாம்... போன்ற தர்க்கங்களை அவர் முன்வைத்தார். பொதுப்புத்தியின் எல்லைக்குள்தான் அவரின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். அரசியல் ரீதியில் இதை நியாயப்படுத்தவேயில்லை அவரின் பேச்சு. (அது அவரின் தலைப்புக்கு வெளியே செல்வதும்தான்) தமிழ் என்ற அடிப்படையில் போராட்டத்தை எடுத்தது பிழை என்று சொல்லிவிட்டு தமிழர் தமிழரையே தாக்கினால் எவ்வாறு விடுதலையடையலாம் எனும்போது முதலில் அடையாளத்தை மறுப்பதும் பின்னர் அடையாளத்தை முன்வைப்பதுமாக முரண்நிலையில் அமைந்தது அவரது பேச்சு.
தொழில் ரீதியில் சாதியை வகுத்துவிட்டு இங்கு (புகலிடத்தில்) நாம் அதே தொழிலை செய்ய பின்நிற்பதில்லை. இலங்கைத் தமிழருக்கு பணம் முக்கியம். பொருளாதாரம் முக்கியம். எனவே பொருளாதார ரீதியில் தலித்துகள் மேம்பாடடைய வேண்டும் என்றார்.
அடுத்து சோமசுந்தரம் அவர்கள் இதே தலைப்புக்குள் பேசினார். திரும்பத் திரும்ப ஒரு பகுதியினரை (யாழ்ப்பாணத்தை) மட்டும் சிந்தித்துக் கதைப்பது தவறானது. ஒதுக்கப்பட்ட இத் தொழில்களுக்குக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். அதிக கூலி கொடுக்கப்பட வேண்டும் என்றார். மிகச் சுருக்கமாக அமைந்த அவரது பேச்சு தான் சொல்ல மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருப்பது என்றில்லாமல் இதை கேள்வி பதில் முறையில் எடுத்துச் செல்லலாம் என்ற தனது அபிப்பிராயத்துடன் சுருங்கிப்போய்விட்டது. இந்த முறை செயற்படாமல் போயிற்று.
இவர்கள் இருவரினதும் பேச்சு இத் தலைப்புக்கு போதிய பலம் சேர்க்கவில்லை என்று சொல்லலாம். முக்கியமாக பகத்சிங்கின் பேச்சு தலைப்புக்கு வெளியே போயிருந்தாகச் சொல்லமுடியும். தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டை எவ்வாறு செய்யலாம் அதற்கு குறைந்தபட்சமாக இந்த இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி எந்தெந்த வேலைமுறைகளை முயற்சிக்கலாம் என்ற விடயங்களை அவர்கள் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமளித்தது.
தலைமை வகித்த தேவதாஸ் இத் தொழிலை பல்கலைக்கழக மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கு மௌனகுரு போன்றோர் முயன்று வருவதை இங்கு குறிப்பிட்டார். அத்தோடு எதிர்மறுப்புக் குரலாக தலித்துகள் பறையடிக்கக் கூடாது, பனையேறக்கூடாது என்று முன்வைத்த அவர் இத் தொழில்களை அழிக்க வேண்டும் என்றார். யாழ்ப்பாணத்தில் 10,000 பனையை நடச்சொல்கிறார்கள். யார் இந்த மரங்களில் ஏறுவது என்று கேள்வியெழுப்பினார்.
அடுத்து இலங்கைத் தீர்வுத் திட்டமும் தலித்துகளும் என்ற தலைப்புக்குக் கீழ் ஸ்ராலின் பேசவந்தார். நன்கு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது போன்று அமைந்தது அவரது பேச்சு. தமிழ்த் தேசியத்தின் இனரீதியிலான அணிதிரட்டல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை மழுங்கடித்துவிட்டது. இது டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்தது. செல்லன் கந்தையாவை நூல்நிலையத்தைத் திறக்கவிடாமல் தடுத்தது. இந்த நிலையில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுத் திட்டங்கள் தலித்துகளையும் உள்ளடக்குமா தலித்துகளைச் சென்றடையுமா? கடந்தகால வரலாறே தலித்துகளை தனித்துப் போராட வைக்கிறது. தமிழ்மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படும் சமூக அதிகாரம் குறிப்பிட்ட சக்திகளிடமே போய்ச் சேரும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு தமிழர் என்று சொல்வது கேலிக்கூத்தானது. யாழ்மையவாத அரசியல் கடந்த காலங்களில் ஏற்படுத்திய பாதகமான அம்சங்கள் (நிலச்சீர்திருத்தம் வாக்குரிமை... போன்றன) பற்றியும் உயர்கல்வியை மறுத்தது என்பதற்காகப் போராடப் புறப்பட்டவர்கள் தமது சமூகத்துள் ஒரு பிரிவினருக்கு ஆரம்பக் கல்வியையே மறுத்தனர் என்ற விடயத்தையும் ஸ்ராலின் கூறிச்சென்றார்.
சில ஆலோசனைகளை அவர் முன்வைத்தார். கடந்தகாலத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அரச உத்தியோகம், பதவி உயர்வு என்பவற்றில் சிறப்பு ஒதுக்கீடுகள், சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல்,தொழில்சார்ந்த இழிவுபடுத்தலை அல்லது சாதிய மனோபாவத்தை வளர்ப்பதற்கு எதிரான நடைமுறைகள் சட்டங்கள், கல்விசார் துறைகளில் இத் தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்தல், இத் தொழில்களை பல்கலைக் கழக மட்டம்வரை தொழிற்கல்வியாக கொண்டுசெல்லல், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பறை உடுக்கு போன்ற கருவிகளை பல்கலைக் கழக மட்டம்வரை கொண்டுசெல்லல்... போன்ற ஆலோசனைகளை முன்வைத்தார். அத்தோடு சட்டவாக்க நிதி நிர்வாகத் துறைகளில் இடமளிக்கப்பட வேண்டும். தலித்துகளுக்கான தனிப்பிரதிநிதித்துவம், தேர்தல் தொகுதி மீளுருவாக்கம், தலித்துகள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் தலித்துகள் மட்டுமே போட்டியிட அனுமதித்தல்... போன்ற ஆலோசனைகளையும் முன்வைத்தார் ஸ்ராலின்.
அடுத்து சிவகுருநாதன் அவர்கள் பேசினார். இவர் கனடாவில் வாழும் சட்டத்தரணி என்பதால் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்குள் போய்வரக்கூடியவராகவும் அதேபோல் கனடா அரசியலமைப்புச் சட்டத்துக்குள் போய்வரக்கூடியவராகவும் இருந்தார். உள்ளுராட்சி பாராளுமன்றம் அரசாங்கம் பொலிஸ் இராணுவம் நீதிமன்றம் போன்ற நிர்வாக அலகுகளுக்குள் தலித்துகளுக்கான இடம் பற்றிய அவரது ஆலோசனைகளை முன்வைத்தார். சாதிப்பெயர்களைச் சொல்பவர்களுக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் சட்டங்களை -கனடாவில் உள்ள நிறவெறிக்கெதிரான சட்டங்களை உதாரணம் காட்டி- அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அதேபோல் ஏற்கனவே இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் இதுசம்பந்தமாக உள்ள சரத்துகளையும் சுட்டிக்காட்டிய அவர் அவையின் செயற்பாடின்மையையும் குறிப்பிட்டார்.
இங்கு குறுக்கிட்ட புதியமாதவி இங்தியாவில் இதுபோன்ற ஏராளமான சரத்துகள் அரசியலைம்புச் சட்டத்தில் இருக்கின்றன ஆனால் அவை தொழிற்படுவதில்லை என்றார்.
தனது உரையின் ஆரம்பத்தில் சிவகுருநாதன் வடக்கு கிழக்கில் பேசப்படும் தமிழ் சேரத் தமிழ் என்றும் உலகில் மற்றைய எல்லா இடமும் பேசப்படும் தமிழ் இந்தியத் தமிழ்தான் என்றும் சொன்னார். யாழ்ப்பாணப் பொருளாதாரம் மணியோடர் பொருளாதாரம் என்று எற்கனவே சொல்லப்பட்ட கருத்தை அவர் மறுத்தார். தலித்துகளும் தலித் அல்லாதவர்களுமாக கட்டியெழுப்பப்பட்ட சுயபொருளாதாரமே யாழ்ப்பாணப் பொருளாதாரம் என்றும் சொன்னார்.
- தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எட்டப்படுமானால் மாநில மாகாண அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் என்பது எல்லா சமூகப் பெறுமானங்களையும் கொண்டு செயற்படுத்துதல் முக்கியமானது.
- சகல பொதுவழங்கல்களையும் அனுபவிக்கும் உரிமை எல்லா மக்களுக்கும் இருக்க வேண்டும்.
- அரசாங்க நிர்வாகத் துறைகளில் நியாயமான வேலைவாய்ப்பு பதவியுயர்வு என்பன வழங்கப்பட வேண்டும்.
- நீதி நிர்வாகத் துறைகளில் மூன்றிலொரு பங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- உள்ளுராட்சி பாராளுமன்றங்களில் விகிதாசார அடிப்படை வேண்டும்
- அவமானப்படுத்திப் பேசுவது ஒதுக்கிவைப்பது என்பன சட்டவிரோதமாக்கப்பட வேண்டும். இதற்கான தண்டனைகள் வரைவுசெய்யப்பட வேண்டும். இச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான கண்காணிப்பு அலகுகள் உருவாக்கப்பட வேண்டும்.
- பாடசாலைகளில் சாதிப்பாகுபாட்டை அகற்றும் விதத்திலான பாடத்திட்டங்கள் நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
- அரசியல் சட்டம் பகுதி 2 இல் உரிமைகளும் சுதங்திரங்களும் சேர்க்கப்பட வேண்டும். இதை இந்தியாவில் அம்பேத்கார் நிறைவேற்றினார். தவறு நேர்ந்தது நிர்வாகத்துறையில்தான். இச் சட்டங்களை மேற்பார்வை செய்ய, மீறுபவர்களைத் தண்டிக்க சட்டங்கள் இடப்படவில்லை என்றார் சிவகுருநாதன்.
இவைகள் எல்லாம் சரிவரும்வரை காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியுடன் உடனடியாகச் செய்யப்படக்கூடியவற்றைச் செய்யவும் வேண்டும் என்றார். கனடாவில் இனவெறிக்கு எதிரான சட்டங்களை தமிழர்களும் அனுபவிக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர் பாடசாலையில் சாதிப்பிரச்சினை பற்றி கதைப்பதினை பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளாத மனநிலை வரும்போது அவர்கள் வெளியிலும் இதை மறுதலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.
அடுத்து சட்டத்தரணியான பசீர் இத் தலைப்புக்குள் உரையாற்றினார். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் இனம் மொழி சமய சாதி பால் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என இருக்கிறது. எந்த நபருக்கும் கேளிக்கை இடங்கள், பிரார்த்தனை இடங்கள் பொதுவானவை என்றும், அரசியல் அபிப்பிராயங்கள்கூட மதிக்கப்பட வேண்டும் என்றும் இருக்கிறது என சுட்டிக் காட்டினார். இலங்கையில் சமூகங்கள் முழுவதும் வரையறுக்கப்பட வேண்டும். உதாரணமாக வேடர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலே வேட்டையாடல் என்றிருக்கும்போது அவர்களின் ஆயுதங்களைத் தடைசெய்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றார். 'ஜீவனோபாயத்துக்காகத் தொழில் செய்பவர்கள்' என்ற மறைமுகச் சொல்லால் வரைவுசெய்யக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படக்கூடிய விடயங்கள் பற்றிய அவரின் குறிப்புகள் கவனிக்கற்பாலனவாக இருந்தது. முஸ்லிம்களுக்குள் சாதி அமைப்புமுறை இருக்கிறது என்ற புதியமாதவியின் கருத்தை மீண்டும்; மறுத்து தனது உரையை முடித்தார்.
மதமாற்றம் பற்றி ஒன்றை வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது. இந்து சமயத்தின் சாதியத்துக்கெராக (இஸ்லாம், புத்த சமயத்துக்கு) மதம் மாறுவது என்பது ஒரு எதிர்மறுப்பு நடவடிக்கை. இந்த மதமாற்றம் அவர்களுக்கு உளவியல் ரீதியிலும் பயனளிக்கத்தான் செய்கிறது. அதனால் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். ஆனாலும் இது தலித்துகளின் ஒடுக்குமுறைக்கு கிடைக்கும் தீர்வல்ல. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் (நீக்ரோக்களின்) எழுச்சியின்போது கணிசமானளவு கறுப்பினத்தவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள். சகோதரத்துவத்தைக் கோரும்; இஸ்லாம் மதம் அவர்களை தூக்கி நிறுத்தியது என்பது உண்மைதான். ஆனாலும் இந்த நிறவெறி ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு அரசியல் தீர்வை அவர்கள் எட்டுவதற்கு மல்கம் எக்ஸ் போன்றோர் (முஸ்லிம்) மதத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டியிருந்தபோது முஸ்லிம் மதவாதிகளே அவருக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டது. அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோதுகூட ''அவருடைய முட்டாள்தனமான போதனையே அவருக்கு மரணத்தைக் கொண்டுவந்தது. எனக்கும் உங்களுக்கும் அல்லா அனுப்பிவைத்த நல்ல விசயங்களை பைத்தியக்காரர்கள் நாசம் செய்வதை நான் அனுமதிக்கப் போவதில்லை.'' என்று எலிஜா முகமது சொல்லுளவுக்கு இருந்தது. இன்றுவரை இனவாதக் கருத்தியல் அங்கு தொடரத்தான் செய்கிறது என்பதனை அண்மையில் நடந்த ஜேனா-6 விவகாரம் நிரூபித்திருக்கிறது.
எதிர்பார்த்ததைவிடவும் இத் தலித் மாநாடு ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். கருத்தினை உருவாக்கும் பணியில் இது ஒரு நல்ல அறிகுறி என்று துணிந்து சொல்லமுடியும்.
குறிப்பு : இயன்றவரை எழுத்துரீதியாக எடுத்துக்கொண்ட குறிப்பின் அடிப்படையில் இத் தொகுப்பு எழுதப்படுகிறது. இங்கு எல்லோருடைய கருத்துகளையும் தொகுக்கமுடியவில்லை என்பதால் அந்தக் கருத்துக்கள் வலுவற்றவை என்று அர்த்தமாகிவிடவில்லை. எவருடைய கருத்துகளாவது திரிபடைந்திருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள். - ரவி
29 octobre 2007
20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற்ற
தலித் மாநாடு பற்ற்றிய குறிப்பு
இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்... கறுப்புப்
பின்னணியில் அதன் எழுத்திருப்பு... அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம்,எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்... முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள் நாற்திசையும்வரைந்த கோடுகளில் ஆர்வலர்கள் புள்ளிகளானார்கள். வழமையாகவே நேரத்தைக் கடைப்பிடிப்பதில் பேர்போன எமது பாரம்பரியத்திற்கு பிரான்ஸ் போக்குவரத்தின் வேலைநிறுத்தம் வேறு. நேரத்துக்கு வரத்துடித்தோரையும் அங்கங்கு ரயில் நிலையங்களிலும், வாகனநெரிசலிடை துண்டுகளாய்த் தெரிந்தவீதிகளிலும் காக்கவைத்து அரிப்புக்கொடுத்துக் கொண்டிருந்தது வேலைநிறுத்தம்.
நேரம் 11.50. தேவதாஸ் தலைமைதாங்குகிறார். இலங்கையின் சாதிய ஒடுக்குமுறைத் தடங்கள்...
அதற்கெதிரான போராட்டம்... ஏன் இந்த மாநாடு? இந்தக் குரல்களின் கூடுகைக்குள் நுழைய முன்னர்
சாதியப் போராட்டங்களில் மரணித்துப்போனவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது. சாதிய
ஒடுக்குமுறையின் 700, 1000 ஆயிரம் வருட வரலாறு, அதன் தொடர்வு, அதற்கெதிரான சிறுபான்மைத்தமிழர் மகாசபையின், இடதுசாரிகளின் போராட்டங்கள்... பற்றிய அறிமுக உரையுடன் 70 களுக்குள்புகுந்தார் தேவதாஸ். தேசியவிடுதலைப் போராட்டத்தின் முன்னெடுப்புகள் சாதியப் போராட்டங்களைபின்னுக்குத் தள்ளின. பின் கண்டுகொள்ளாமல் விட்டன. இயக்கங்கள் தோன்றின. தேசியக்காயால் சாதியக்கறையை உரைஞ்சி அழித்துவிடலாம் என்ற மாயைப் பொழிந்தன. சாதியப் போராட்டங்கள்ஓய்ந்தன.யுத்தசூழல் வேளாளத் தேசியத்தின் கேடுகளுக்குக் கிடைத்த ஆடை. இது அவிழ்ந்து அம்மணமாகும்போது அல்லது அமைதியான சூழலில் சாதிப்பாகுபாடு தன் கதவுகளைத் திறந்துவெளியே வரும், அதன் கருத்தியல் அப்படியே பேணப்பட்டு வருவதால். இதுபற்றிய அச்சம்தான் இப்போதிலிருந்தே இதுபற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தோற்றத்துக்கு இதுவே காரணம். வடு சஞ்சிகையின் தேவையும் இவ்வழியிலேயே உணரப்பட்டது. இதை இயக்க எதிர்ப்புக்காக என்று வியாக்கியானப்படுத்துவதும் அதற்கேற்ப பிரச்சாரத் தகவல்களை அவிழ்த்துவிடுவதற்கும் மறுப்புத் தெரிவித்துத் தொலைக்கவேண்டிய நிலை இந்த தலித் முன்னணிக்கு வருவது ஒன்றும் விசேசமானதல்ல. அப்பிடியொரு ஆய்வுத்தன்மையும் தேடல் உழைப்பும் பன்முகத்தன்மையும் கொண்ட ஒரு சமூகத்தவனா நீங்கள்?. அப்படியானால் கவலைப்பட்டுக் கொள்ளுங்கள்.கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நசுகல் கோட்பாடுகள் இப்போ குடியில்லாத ஊரிலும் கோயில் இருக்கவேண்டும் என்று வர்ணம் பூசப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு மட்டும் -விமானயாத்திரை செய்து- கோயிலைத் தூசுதட்டி பக்திச் சான்றிதழோடு திரும்பும் புகலிடத்தமிழர்களையும் ஞாபகப்படுத்தியது தேவதாஸின் உரை.
இதையடுத்து தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும் என்ற தலைப்பில் பரா
அவர்களும் யோகரட்ணம் அவர்களும் உரையாற்றினர்.
''யாழ்மேட்டுக்குடியினர் எனக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்ததில் எனக்கு வியப்பில்லை. ஆனாலும் இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ள அழைத்ததை கௌரவமாகக் கருதுகிறேன்'' என ஒருமுறை இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ள இங்கு வந்த டொமினிக் ஜீவா அவர்கள் கூறியகூற்றோடு தனது உரையைத் தொடங்கினார் பரா.
சாதியத்தின் தோற்றத்தை இவர் 2500 ஆண்டுகளுக்குப்பின்னோக்கி இழுத்துச்சென்று தொடங்கினார். புத்தர் இதை ஒழிக்கப் பாடுபட்டார் என்ற தகவல்களிலிருந்து இதை ஊகிக்கலாம். ஆரியர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இந்த சாதியமைப்பு முறையை உருவாக்கியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையைக் கட்டிக்காக்கவும் இந்தச் சாதியமைப்புமுறை தேவைப்பட்டது. அடிமைகளை வைத்து வேலைவாங்கவும் இது பயன்பட்டது.ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கு சமயம், கலாச்சாரம் என்பவற்றைப் பாவிக்கிறது.சாதியமைப்புமுறையும் இதே வகைப்பட்டதே. எமது யாழ்மையவாதத்துக்கு அடிப்படையாக இருப்பதே சாதியமைப்புமுறைதான். யாழ்மையவாத அரசியல்தான் இலங்கை முழுவதும் வியாபித்து இருக்கிறதுஎன்று சொன்னதன்மூலம் யாழ்மையவாதத்தை ஒரு இலங்கைச் சுனாமியாகக் காட்டினார் பரா அவர்கள்.தலையைப் பிய்த்துக்கொண்டது அது. 19ம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர் மீளக் கட்டியமைத்த
இந்த யாழ்மையவாத சிந்தனை முறை ஆதிக்க சிந்தனைமுறையாக இருந்தது. ஐரோப்பியர்கள்
எங்கள் நாட்டுக்குள் வரும்போது ஆட்சிசெய்வதற்கு இந்த ஆதிக்க சிந்தனை முறை பயன்பட்டது
என்றும் சொன்னார். நல்ல பதவிகளை வேளாளர் பெற்றுக்கொண்டனர். இதற்கு அடிப்படையாக
அமைந்தது கல்விதான். இதனால் கல்விவாய்ப்பு மற்றைய சமூகங்களுக்குப் போகக்கூடாது என்பதில்
மேட்டுக்குடியினர் கவனமாக இருந்தனர் என்றார். ஆறுமுக நாவலரின் சைவமறுமலர்ச்சியின் சூழ்ச்சியைச்சாடிய பரா அவரின் பைபிள் தமிழ்மொழிபெயர்ப்புக்கான நோக்கத்திலும் அதைக் கண்டார். இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இலங்கையில் வாலிபர் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. இதன் உந்துசக்தி யோவே போல் அவர்கள் இருந்தார். இவர்தான் ஆரம்பப் போராட்டங்களைத் தொடங்கினார். இதற்கு மேட்டுக்குடியினரின் எதிர்ப்பு வந்தது. முக்கியமாக சேர்.பொன்.இராமநாதன் இதைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். யாழ்ப்பாணத்துக்கு முதன்முதல் புகையிரதம் விடப்பட்டபோது தலித்துகளுக்கு தனியான பெட்டிகள் போடப்படவேண்டும் என வெள்ளாளர்கள் சொன்னார்கள். டொனமூர்கமிசனின் அரசியல் சீர்திருத்தத்துக்கு அபிப்பிராயம்கேட்கப்பட்டபோது, இந்த மக்களுக்கு வாக்குரிமைஅளிக்கக்கூடாது என சொன்னவரும் அவர்தான். யோவே போல் இந்த மக்களின் வாக்குரிமைக்காகக்
குரல்கொடுத்தார். மிசனரிகளில் சமஆசனம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சைவப் பள்ளிகளில் இந்த சமஆசனம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இன்னமும் மோசமாக தரையில்
உட்காரவைக்கும் நிலையும்கூட இருந்தது. இதனால் சில பெற்றோர்கள் இருக்கைகள் (வாங்குகள்)
செய்துகொடுத்தார்கள். அவைகளும் பின்னுக்குக் கொண்டுபோய்ப் போடப்பட்டு
உட்காரவைக்கப்பட்டார்கள். வேளாளர்கள் சலுகைகளுக்காக கிறிஸ்தவத்தக்கு மாறி அதற்குள்ளும்
சாதிமுறைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். தலித்துகளுக்கான தனிப்
பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. அங்கு ஆசிரியர்கள் நீட்டிநிமிர்ந்து படுத்திருக்க மாணவர்கள்
கால் அமுக்கிக்கொண்டு இருக்கும் நிலைதான் தொடர்ந்தன. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும்
தலித்துகள் சேர்க்கப்படவேண்டும் என்று யோவே போல் கோரி வந்தார். 1930 இல் இக் கோரிக்கையைஅரசு ஏற்றது. இப்படியே நன்கு தயாரிக்கப்பட்ட அவரது உரை பல தகவல்களையும் தந்தது. நாவலர் ஆகமக் கோவில்களை உருவாக்கி உள்வீதி வெளிவீதி பிரிப்புமுறையை உருவாக்கி தீண்டாமைக்கு சேவகம் செய்ததையும், முற்போக்கு எண்ணங்கொண்டவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட வாலிபர் காங்கிரஸ் பற்றியும், தீண்டாமை ஒழிப்பினை 60 களில் இடதுசாரிகள் முன்னெடுத்தமை பற்றியும் தொட்டுச் சென்ற பரா அவர்கள் யாழ் முஸ்லிம்களை விரட்டியடித்தது தலித்துகள்தான் என்ற மெகா புனைகதைவரை சாதியத்தின் வேர்களை சுட்டிக்காட்டி தனது உரையை முடித்துக் கொண்டார்.
அடுத்து சிறுவயதிலிருந்தே இந்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடுவதில் தன்னை
ஈடுபடுத்தியிருந்த யோகரட்ணம் அவர்கள் பேசினார்.
அறியாப் பருவத்தில் சாதியத்தின் முதல்பொறி தன்னைத் தாக்கியதிலிருந்து தனது அனுபவங்களைச்
சொன்னார். அவரது சொல் ஆளுமையும் தொடர்ந்தேச்சியான கோர்வைப்படுத்தலும் ஒரு நாவலை
ஓசிப்பதுபோல் இருந்தது. 50 களுக்கு முற்பட்ட காலங்களையும் 50க்கும் 70 க்கும் இடைப்பட்ட
காலங்களையும் 70க்குப் பின்னரான காலப் பகுதிகளையும் வகைப்படுத்தி இந்த உரையை
தகவல்களோடு எடுத்துச்சென்றார். 1926 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஒறேற்றர், யோவே போல் ஆகியோர் இலங்கையில்சுதந்திரத்திற்கும் தீண்டாமை ஒழிப்பிற்கும் போராடினார்கள். காந்தி இலங்கைக்கு வந்தபோது அவர்குதிரை வண்டியை மறுத்து கிராமம் கிராமமாக நடந்து சென்றார். தலித்துகளைச் சந்தித்து உரையாடினார். தெல்லிப்பளையில் வாலிபர் காங்கிரசால் காந்திக்குக் கொடுக்கப்பட இருந்த வரவேற்புஏற்பாடுகளெல்லாம் வேளாளர்களால் பிய்த்து எறியப்பட்டன. இருந்தும் அந்த இழிபாடுகளுக்குள்
நின்று காந்தி பேசினார். எம்சி, ஜேக்கப் போன்றோர் காந்தியின்பால் ஈர்க்கப்பட்டனர். ஜேக்கப் பின்னர்
ஜேக்கப் காந்தி என அழைக்கப்பட்டார். ஜேக்கப் இன் ஆங்கிலப் புலமை அபாராமானது. வில்லூன்றி
மயானத்தில் முதலி சின்னத்தம்பியைச் சுட்டுக்கொன்றபோது ஜேக்கப் அவர்கள் மகாராணிக்கு
தந்தி கொடுத்தார். விளைவு அவரைநோக்கி வந்தது. பொலிசாரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் அவரது நியாயப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு பாராட்டவும்பட்டார்.
பண்டாரநாயக்காவின் ஆட்சியின்போது தலித்துகளுக்கு கல்வி தேவை, நிலம் தேவை என்பதை
ஏற்றுக்கொண்டார். 19 பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் தலித்துகள் சேர வாய்ப்புக் கிடைத்தது. போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்டது. பாடசாலை தேசியமயமாக்கப்பட்டது. கட்டணமின்றி பாடசாலையில் கற்கலாம் என்ற நிலை வரும்போது அது வறுமைக்கோட்டில் இருந்தவர்களுக்கு வரப்பிரசாதமானது. தலித்துகளுக்கும் சாதகமானது. கல்வியில் மட்டுமல்ல வாகனங்களில் வக்குகளில் இருந்து மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையும் மாறியது. அத்தோடு திருத்துனர், சாரதி என வேலைகளும் படிப்படியாக தலித்துகளையும் வந்தடைந்தன. லங்கா சமசமாஜக் கட்சி தலித்துகளுக்கான போராட்டத்தை எடுத்தது. தர்மகுலசிங்கம் (ஜெயம்) இதை முன்னெடுத்தார். இவர்தான் வில்லூன்றி மயானத்தில் கொல்லப்பட்ட முதலி சின்னத்தம்பியின் வழக்கில் ஆஜராகியவர். அதற்காகவே இவர் வேளாளர்களால் உணவில் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டவர். 1945 இல் கார்த்திகேசன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி முளைவிடுகிறது. அவர் மலேசியாவிலிருந்து வந்திருந்தார். அவர் ஒரு மார்க்சியவாதி. எம்.சி, நடேசையர், டானியல், ஜீவா போன்றோரும் இணைகின்றனர். யாழ் மாநகர சபையின் முதல்வராக காதர் என்பவரை கார்த்திகேசன் நியமித்தார். சிறுபான்மைத் தழிழர் மகாசபை கம்ய+னிஸ்ட் கட்சியின் பின்னணியிலே தீண்டாமைக்கு எதிராகப்போராடியது. 1956 இல் சமபோசனப் போராட்டங்கள் பயனளிக்கத் தொடங்கின. 1960 காலப்பகுதியில் இந்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் பிளவு ஏற்படுகிறது. இதேநேரம் கம்யூனிஸ்ட் கட்சியிலும் கோட்பாட்டுப் பிளவு (சீனசார்பு, மொஸ்கோசார்பு) ஏற்படுகிறது. சீனசார்புக் கட்சியில் சண், செந்திவேல்,கே.ஏ.சுப்பிரமணியம், டானியல்... போன்றோர் இணைகின்றனர்.
1961 ஒக்ரோபர் 21ம் நாள். தலித்துகளின் வாழ்வில் மறக்கமுடியாத நாள். ''சாதியமைப்புத் தகரட்டும்
சமத்துவம் ஓங்கட்டும்'' என்ற கோசத்தோடு 2000 போராளிகள் சங்கானையில் ஒன்றுகூடினார்கள்.
பொலிசாரின் அனுமதி மறுப்பையும் மீறி ஊர்வலம் தொடங்கியது. உரிமை கேட்பதற்கு உங்களுக்கு
உரிமையில்லை என்ற ஆதிக்கசக்திகளின் கோலுடன் பொலிசார் அடிதடிகளை நடத்தினர். இரத்தம்
தோய்ந்த நிலையிலும் அந்த ஊர்வலம் திட்டமிட்டபடி யாழ் முற்றவெளியை வந்தடைந்தது. டானியல்போன்றொர் உரைநிகழ்த்தினர். இதுதான் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் விழுந்த முதல் பொலிஸடி.பின்னர் 1966 இல் தேநீர்க்கடைப் பிரவேசம், ஆலயப் பிரவேசம் என்பவற்றுக்கான போராட்டங்கள்நடந்தன. சின்னக் கார்த்திகேசு என்பவர் தேநீர்க்கடைப் பிரவேசத்தின்போது முதன்முதலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இப் போராட்டங்களின் போது செல்லக்கிளி என்ற பெண் குண்டுவீசிய துணிச்சலான பெண்ணாவாள். அதேபோல் பொலிசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியபோது பொலிஸ் ஒருவனை சுடவிடாதபடி கட்டிப்பிடித்து மல்லுக்கட்டிய மகேஸ்வரியை மறக்கமுடியுமா. கிராமம் கிராமமாகப் போராட்டங்கள் தொடர்ந்தபோது பல ஆலயங்கள் விடாப்பிடியான போராட்டத்தினூடு திறக்கப்பட்டன. சில அதிhச்சியில் திறந்துகொண்டன.
பின்னர் பாராளுமன்றத்தில் இது சம்பந்தமான விவாதங்கள் நடந்தபோது தமிழ்ப் பாராளுமன்ற
உறுப்பினர்கள் குரல்கொடுக்காது வேளாளித்து நின்றனர். சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள்
பிக்குகள் சம்பவ இடத்துக்கு வந்து இந்த மக்களுடன் உரையாடினர். நூறு வாலிபர்கள் பௌத்தர்களாக மாறினார்கள். 5 பௌத்த பாடசாலைகள் உருவாகின. இங்கு சிங்களமும் தமிழும் கற்பிக்கப்பட்டன.தலித்துகள் ஆசிரியர்களானார்கள். செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோர் சங்கானையை எட்டிப் பார்க்கவேயில்லை. அது ஒரு சின்ன வியட்நாம் யுத்தம் என்றும், சங்கானை ஷங்காயாக மாறியது என்றெல்லாம் கிண்டலடித்தனர். செல்வா அந்த மக்களைப் போய்ப் பார்க்காததற்கு தான் ஒரு கிறிஸ்தவன் என்று குழந்தைச் சாட்டுச்சொன்னார். தமிழ் மிதவாத சக்திகள் சுதந்திரக் கட்சியை நிராகரித்து ஐக்கிய தேசியக் கட்சியோடு உறவாடினார்கள்.
70 களிலே ஒரு புதிய புரட்சி ஏற்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. விவசாயிகள் சீவல் தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம்
வாழ்நிலை மேம்படுகிறது என்று விளக்கிய யோகரட்னத்தின் பேச்சு இந்த இடத்தில் ஒரு
ஆய்வுத்தன்மையை எடுத்தது. வெளிநாட்டுப் பொருட்களை நிறுத்தியதால் விவசாயிகள் உற்பத்தியில் ஊக்கம் செலுத்தினர். மதிக்கப்படாமலிருந்த இத் தொழில் மதிக்கப்படும் நிலைக்கு வந்தது. படித்தவர்களும் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். கொண்டுவரப்பட்ட தவறணை முறையால் சீவல் தொழிலாளர்களுக்கு விவசாயம் செய்ய நேரம் கிடைத்தது. காலை 6இலிருந்து 9 மணிக்குள்ளும் மாலை 5இலிருந்து 6 மணிக்குள்ளும் தமது கள்ளை தவறணையில் சேர்ப்பித்துவிட்டு மிகுதி நேரங்களில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டார்கள். இது அவர்களின் வாழ்நிலையை உயர்த்த சாதகமாக இருந்தது. அதேபோல் சீவல்தொழிலாளிகளின் வீடுகளுக்கு கள்குடிக்கச் செல்லும் வேளாளர்களின் அட்டகாசங்கள் அல்லது தொல்லைகளிலிருந்து அவர்கள் ஓரளவு விடுபடக் கூடியதாகவும் இருந்தது என்றவாறெல்லாம் யோகரட்ணத்தின் பேச்சு கதைகளாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பிணைந்து நின்றது. ஆதிக்கசாதிகளில் இருந்த பல நல்லெண்ணம் கொண்டவர்களின் தீண்டாமைக்கு எதிரானஆதரவுகளையும் நினைவுகூர்ந்த அவர் இன்று யாழ் மாநகர சபையின் முதல்வராக செல்லன்கந்தையா அவர்கள் வருவதை தடுத்து நிறுத்திய சாதிய மனோபாவத்தினை அதன் வாழும்கருத்தியலினை சாதியப் போராட்டத்தின் தேவைக்குள் நிறுத்திக் காட்டி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
வெள்ளையர்களின் செல்லப்பிள்ளையாக தமிழர்கள் கையாளப்பட்டதும் அதன்மூலம் வளர்ந்த சிங்கள தமிழ் இன வெறுப்புகளும் பெற்றெடுத்த குழந்தையான தனிச் சிங்களச் சட்டம் தேசிய இனஒடுக்குமுறையின் வடிவம்தான். பின்னர் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையானது பிரதேசவாரியாக நடைமுறைப் படுத்தப்பட்டதால் யாழ் மாவட்டத்துள் இருந்த தலித்துகளும்தான் பாதிக்கப்பட்டார்கள். கல்விகற்பதில் அவர்கள் சாதியத் தடைகளைத் தாண்டிக் கொண்டிருந்த காலம் அது என்பதுதான் முக்கியம். இதை வேளாளர்களோடு புள்ளிவிபர அடிப்படையில் ஒப்பிடுவது சமூக ஆய்வாக இருக்க முடியாது. ஒருபுறம் அன்றைய அரசு தலித்துகளுக்கு பள்ளிக்கூடம் கட்டினார்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இடம்தந்தார்கள் என்பதெல்லாம் தலித்துகளின் கல்வி மேம்பாட்டுத் திட்டமாக அவர்களிடம் இருந்திருந்தால் இந்தத் தரப்படுத்தலில் -கல்விவசதி மறுக்கப்பட்ட- தலித்துகள் ஏன் கண்டுகொள்ளப்படாமல் விட்டார்கள் என்ற கேள்வி முக்கியமானது. அதனால்தான் தலித்தியப் பார்வையில் தரப்படுத்தலை ஒரு இட ஒதுக்கீடு போன்று எடுத்துக்கொள்ள முடியாது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கு தரப்படுத்தலை ஆயுதமாக்கியது வேறு கதை. அதற்கு தமிழ்த்தேசியவாதிகள் இங்கு நியாயம் தேட முடியாது. தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டே தனக்குள் இந்த சாதிய சமூக அமைப்புமுறையை பேணி கல்விரீதியிலும்கூட ஒடுக்கினார்கள் என்ற வகையில் தரப்படுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுக்க எந்தத் தார்மீக நியாயமும் அவர்களுக்குக் கிடையாது. இந்த விடயங்கள் யோகரட்ணத்தின் பார்வைக்குள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தலித்துகளை உள்ளடக்கியிருக்காத தமிழ்த் தேசியத்தின்மீது தலித்தியம் வெறுப்புக் கொள்வது புரிந்துகொள்ளப்பட வேண்டியதுதான். இந்த விருப்புவெறுப்புகள் ஒரு முழுமையான அரசியல் பார்வையை நிராகரித்துவிடக்கூடாது என்பதுதான் முக்கியம்.
தமிழ்த் தேசியமும் தலித்தியமும் என்ற தலைப்புக்குள் விடப்பட்டிருந்த அருந்ததி 'தமிழனென்று
சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று சொல்ல வெட்கப்படுகிறேன் என்ற உரைமுகப்புடன்
தொடங்கிளார். தமிழ்த் தேசியத்தின் மிகப்பெரிய பொய் என்னவென்றால் சாதி ஒழிந்துவிட்டது
என்பதுதான். உலகவரலாறு சமூக கலாச்சார ரீதியல் பாய்ச்சல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழினம் அதே சாதியமைப்பு முறையையும் பெண்ணடிமைத்தனத்தையும் தொடர்ந்து பேணுகிற
இனமாக இருக்கிறது. அணுகுமுறையில்தான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சாதியம்
வேறுபடுகிறதேயொழிய மற்றபடி ஒரேமாதிரியானதுதான். புகலிடத்தில் சாதி பிள்ளைகள் வளர்ந்து
திருமண வயதை அடையும்போது மேல்வருகிறது. தலித் என்ற சொற் பாவனை பற்றிய விவாதம் பழசாகிப் போய்விட்டது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதுபோல் தலித் என்ற சொல்லும் அடையாளச் சொல்லாக பொதுச்சொல்லாக இருக்கிறது. பாசிசத்தின் கூறுகளைக்கொண்ட தேசியவிடுதலைப் போராட்டத்தை நடத்துபவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்தான். யாழ் மத்தியகல்லூரி அதிபரை தமது பிள்ளைகள் சேர் என்று சொல்வதுதான் பிரச்சினை. கோரமுகம் கொண்ட தமிழ்த் தேசியம் முஸ்லிம்களை வெளியேற்றியது. தலித்துகள்சுடப்பட்டார்கள். ஒரே நேரத்தில் 15 தலித் இளைஞர்கள் எனது ஊரில் கூட்டாக சுடப்பட்டார்கள்.யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னார் ~புத்தூரில் ஒரு பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவரின்
புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான் என்றார் என்ற கூற்றை ஒப்புவித்தார் அருந்ததி.
இது ஒரு எதிர்மறுப்பு மட்டுமே. ஒரு ஆதிக்க சக்தி ஒடுக்கப்படும் சக்திகளின் கலாச்சார அடையாளங்களை கீழ்நிலைப் படுத்துகிறது அல்லது அந்தக் கலாச்சார அடையாளம் மேல்நிலைக்கு வர உந்துசக்தியாக இருந்துவிடும் என்று கண்டறிந்தால் அந்த அடையாளங்களை அழிக்க முற்படுகிறது. ஒவ்வொரு யுத்தங்களின்போதும்கூட இவ்வாறான கலாச்சார அடையாள அழிப்பு முதன்மை பெற்றே இருக்கிறது. டானியலின் கூற்று இந்த மனோபாவம் இரண்டு சம்பவத்துக்கும் ஒன்றேதான் என்பதை உணர்த்துகிறது. இந்த நூல்நிலையமும் எல்லா சமூகத்தவருக்குமான பொதுப்பயன்பாடு பொதுக்கலாச்சார அடையாளமாக மாற்றப்பட வேண்டும் என்பதே போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது என்பதை செல்லன் கந்தையாவின் நூலகத் திறப்பிற்கான மறுப்பு காட்டிநிற்கிறது. மற்றபடி நூலகத்தின் அழிவைக் கோருவதல்ல இது. அதனால்தான் ஒரு தலித் இந்த நூலகத்தைத் திறக்க மறுத்ததை நாம் வரலாற்றுக் கறையாகப் பதிகிறோம். அதற்காகப் போராட வேண்டியவர்களாகிறோம்... என்ற விடயங்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான் என்ற எதிர்மறுப்பின் பின்னால் அருந்ததியால் பின்னுக்குத்தள்ளப்பட்டன. இங்கும் தலித்துகளை உள்வாங்காத குறைபாடுடைய தமிழ்த் தேசியத்தின் மீதானவெறுப்பு தமிழ்த்தேசியத்தின் மீதான வெறுப்பாகப் போய்விடுவதோடு மட்டுமல்லாமல் பெருந்தேசிய இனத்தின் இனஅழிப்புக்கொள்கையை பார்க்கவும் மறுக்கிறது.
தொடர்ந்து அருந்ததி கூறும்போது தலித் மக்கள் கொல்லப்படுவதும் முஸ்லிம் மக்கள்
வெளியேற்றப்பட்டதும் நீங்காத கறைகள். இதைத் தவிர்ப்பதற்கு தலித் எழுச்சி முஸ்லிம் எழுச்சி
தவிர்க்கப்பட முடியாது என்றார்.
தமிழ்ப் பேரினவாதம் யாழ் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றளவில் அதன் மனோபாவம் தலித்துகளையும் முஸ்லிம்களையும் வெறுத்தொதுக்கும் கருத்தியலினூடாகச் செயற்படுகிறது. இந்தப் புள்ளியில் ஒடுக்கப்படும் சக்தி என்ற வகையில்தலித்துகளும் முஸ்லிம்களும் இணைகிறார்கள். இந்த இரு சமூகங்களுக்கும் மேல் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளால் யாழ் லோதிக்க மனோபாவம் செயற்படுகிறது.தமிழ்க் கலாச்சாரம் என்றால் இந்துக் கலாச்சாரமா?
புகலிடத்தில் கோவில் கட்டுதல் பரதநாட்டியம் என்பவையே தமிழ்க் கலாச்சாரமாக வெளிப்படுகிறது என்று சொன்ன அருந்ததி கோவில் கட்டிதெருத்தெருவாக இழுத்துவந்துகொண்டு சாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். கூத்து நாடகம்எல்லாம் அழிக்கப்பட்டு யார்யாரோ எல்லாம் தேசியக் கலைஞர்களாக சிறப்பிக்கப்படுகிறார்கள்.உண்மையில் எமது தேசியக் கலைஞன் வி.வி.வைரமுத்துத்தான் என்று கூறி முடித்தார் அருந்ததி.
தமிழ்த் தேசியமும் தலித்தியமும் என்ற தலைப்புக்குள் பேச்சுக்கள் போய் வந்தாலும்கூட சமகாலநடைமுறைகள் உதாரணங்கள் அதன் அணுகுமுறைகள் என்பவற்றினூடு போய்வர முடியாதஆய்வுத்தன்மை காணப்பட்டது. அதேபோல் புலிகளின் அழித்தொழிப்பு அரசியலை தலித்அடையாளத்துடன் மட்டும் வைத்துப் புரிந்துகொள்வதும் ஒரு முழுமையான அரசியல் ஆய்வாகஇருக்க முடியாது. செல்லன் கந்தையாவின் நூலகத் திறப்பு விழா விவகாரத்தில் ஆனந்தசங்கரியின்சாதிய அணுகுமுறை அவர் புலியெதிர்ப்பாளன் என்ற வகையில் அந்த மனோபாவத்தில் மறக்கப்பட்டதுஅல்லது தவிர்க்கப்பட்டது. அவருடன் கூடிக்குலவியோர் பின் தலித்தியப் புள்ளியில் வைத்து அடையாளம்கண்டோர் எல்லாம் இதுபற்றி பேசமறந்தனர்.
அடுத்து பல்வேறு சாதிப் பிரிவுகளைக் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என அழைக்கத்
தகுதியற்றவர்கள் என்ற அம்பேத்காரின் கூற்றுடன் ராகவன் தனது உரையைத் தொடர்ந்தார்.
இது எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டதால் அது எனது குறிப்புள் அடங்கவில்லை. இதை தூ,சத்தியக்கடதாசி இணையத்தளங்களுக்குள் பார்க்கலாம். இந்தவித தேடலும் உழைப்புமுறையும்தயாரித்து சமர்ப்பிக்கும் முறையும் அவசியமான ஒன்று. சொல்விரயங்களைத் தவிர்த்தல், விடயங்கள் விடுபடாதிருத்தல், பதிவாக இருத்தல் என்ற அம்சங்கள் இந்த முறையில் கிடைத்துவிடுகிறது.மேடைப்பேச்சுப் போன்ற வடிவங்கள் அல்லது தயாரிப்பில்லாமலே அங்கு குந்தியிருந்து அறிந்ததையெல்லாம் தலைப்பை மறந்து போய்வந்து தொல்லைப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம்.கூட்டத்துக்கு வருபவர்களின் நேரங்களையும் பணங்களையும் சிரமங்களையும் மதித்ததாகவும்கூட அது இருக்கும்.உழைப்பைச் செலுத்தி நன்கு தயாரிக்கப்பட்ட அவரது உரையிலும் நான் மேற்சொன்ன குறைபாடுகள் இருந்ததோடு அவர் தனது ஆய்வு முடிவுகளுக்கேற்ப தகவல்களை மின்கம்பத்திலிருந்து பரவும் வெளிச்ச எல்லைக்குள் மட்டும் கண்டுகொண்டாரா என எண்ணத் தோன்றிற்று. தான் அறிய ஆரம்பகாலங்களில் இயக்கங்களுக்குள் தலித் போராளிகள் முக்கிய இடங்களில் இருந்ததில்லை என்ற சொல்லவரும்போது பாரிசில் வசித்து அண்மையில் மரணித்துப்போன புஸ்பராசாவைக்கூட நினைவுக்குக் கொண்டுவர முடியாதவராகினார். இதை மறுதலித்து மேலும் சில உதாரணங்களை கோவை நந்தன் போன்றோர் எடுத்துக்காட்டினார். புஸ்பராசாவின் 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலைஅவர்கள்தான் பொய்ச் சாட்சியம் என அலட்சியப்படுத்துகிறார்களே என்ற அவரது பதில் இந்த மறுப்புக்கு சரியான பதிலல்ல என்பதை ராகவன் உணராதிருந்தார். மாறாக ராகவனின் இந்த தகவல் பற்றாக்குறை அல்லது தவிர்ப்பு பொய்ச்சாட்சியம் என எழுதியோருக்கு துணைபோகக்கூடியது என்றும்கூடச் சொல்லலாம். மற்றபடி அவரது உரை முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
இன்று எந்த ஊடகங்களைப் பார்த்தாலும் தமது முடிவுகளுக்கேற்ப தகவல்களைத் திரட்டுவதிலும்அதை ஒப்புவிப்பதிலும் பலரின் ஆய்வுமுறை முடங்கிக் கிடக்கிறதேயொழிய முழுத் தகவல்களைத் திரட்டி அதிலிருந்து முடிவுகளுக்கு வரமுடியாதவர்களாக அவதிப்படுவதை நாம் கேட்கிறோம் காண்கிறோம்.
அடுத்து சர்வதேசப் பார்வையில் சாதியம் என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து வந்திருந்த புதியமாதவி பேசினார். நம்முடைய சரித்திரங்கள் என்றோ யாராலோ மாற்றப்பட்டிருக்கின்றன. அந்த வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊடகங்கள் தருகின்ற தகவல் இலங்கையில் சாதி ஒழிந்துவிட்டது என்பதுதான். ஆனால் உண்மைச் செய்தி வேறாக இருக்கிறதை இங்கு நாம் பார்க்கிறோம். தலித்முரசில் ஜெயசங்கர் அவர்களின் செவ்வியை நான் பார்த்தேன். ''ஈழத்தில் சாதி ஒழியவில்லை.அது ஒளிந்துகொண்டிருக்கிறது. அகதிகளாக ஓடிஒளியும் இடம் கோவில்களாக இருக்கும்போது வேளாளர் கர்ப்பக்கிரகத்துள்ளும் அடுத்த ஆதிக்கசாதியினர் கோவிலுக்குள்ளும் இருக்க தலித்துகள் கொட்டடியில்தான் இருப்பார்கள்'' என்று சொன்னார்.
1907 இல் பகவத்சிங் பிறந்தார். 2007 இல் அவரது நூற்றாண்டுவிழா. இதுபற்றிய 3 படங்கள்
வெளிவந்தன. அவர் கடைசியில் தூக்குக் கயிற்றின்முன் நின்று சொன்ன கடைசி ஆசையை
எந்தத் திரைப்படமும் சொல்லவில்லை. கொண்டாடியவர்களும் சொல்லவில்லை. பத்திரிகைகளும்
சொல்லவில்லை. ''நான் மேரியின் கையால் உணவருந்த விரும்புகிறேன்''. என்கிறார். மேரி மறுக்கிறாள்.''மலம் அள்ளியள்ளி சீழ்படிந்த எனது கைகளால் நான் உணவூட்ட மாட்வடேன்'' என்கிறாள். ''உன்போன்றவர்கள் சமூகவிடுதலை அடைய வேண்டும்'' என்று சொன்ன அவரது கடைசி வார்த்தைகள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. வாஞ்சிநாதன் வெள்ளைக்காரத் துரையைச் சுட்டுக்கொன்றான் என்று சொல்கிறார்கள். ஜாதி இந்துக்களின் வீதியால் ஒரு தலித் கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்துக்காக அழைத்துச்செல்ல அனுமதி கொடுத்ததால்தான் துரை சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி மறைக்கப்படுகிறது. இப்படியே வரலாற்றை நாம் புரட்டிக்கொண்டே போகலாம். இந்துமதம் சாதியைக் காப்பாற்றும் மதம் என்பதைக் குறிப்பிட்ட அவர் மற்றைய மதத்தைச் சேர்ந்த மக்களுக்குள் நிலவும் சாதியமைப்புப் பற்றியும் குறிப்பிட்டார். சீக்கிய மத்தில் சாதி இல்லை என்கிறார்கள். அங்கும் இருக்கிறது. அங்கு எல்லாப் பிரிவினருக்கும் மதத்தலைவர் பதவி கொடுக்கப்படுவதில்லை. புத்தமதத்தில் சாதி இருக்கிறது. முஸ்லிம் மதத்தில் சாதி இருக்கிறது. கிறிஸ்தவ மதத்திலும் சாதி இருக்கிறது. மதம்மாறி கல்யாணம் செய்தாலும் செய்வார்களேயோழிய சாதி மாறி கல்யாணம்செய்யும் நிலை அங்கும் இல்லை. முஸ்லிம் மக்களுக்குள் சாதி அமைப்புமுறை பற்றி வெளிவந்துள்ளஆய்வொன்றை உதாரணம் காட்டிப் பேசினார் புதியமாதவி. சாதியம் ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகம்வரை எப்படி செயற்படுகிறது என்பதற்கான சில உதாரணங்களையும் அவர் காட்டினார்.
சுவாரசியமான அவரின் பேச்சு எல்லோரையும் இழுத்துவைத்திருந்தது. தலித்துகளுக்குள்ளும்
சாதிப்பிரிவுகள் இருக்கும்வரை தலித் விடுதலை முழுமையாகச் சாத்தியப்படாது என்ற புதியமாதவியின் கருத்துக்குள் தலித் மாநாட்டின் இருநாள் நகர்வுகளும் உட்புகவேயில்லை என்றே நினைக்கிறேன்.
அடுத்து அசுரா இதே தலைப்புக்குள் அழைக்கப்பட்டார். அவரது கடினமான மொழியாளுகை பற்றிய
தலைவரின் அறிமுகத்துடன் உட்புகுந்த அசுரா அதை மெய்ப்பித்துக்கொண்டிருந்தார்.
சிந்தனை முறையிலேயே மாற்றத்தைக் கோரி நின்றது அவரது பேச்சு. மக்கட்பிரிவை 3 பிரிவுகளாக
அவர் வகுத்தார். முதலாவது வெகுஜன மக்கள். படித்தவர்கள் பாமரர்கள் பட்டதாரிகள் பேராசிரியர்கள்...என ஒரு பிரிவினர். இவர்கள் எல்லா மதத்திலும் சாதி இருக்கிறது என்பார்கள். இவர்களோடு தர்க்க ரீதியில் வாதிட முடியாது. இரண்டாவது பிரிவினர் ஆய்வுக்கு உட்படுத்துபவர்கள். மனித வரலாறு,பிரிவினைகள் என்பன பற்றிய ஆய்வுகளை தர்க்கபூர்வமாகப் பார்க்கிறார்கள். இது செயற்கையானது,இதை மாற்றலாம் என்கிறார்கள். இவர்கள் பார்ப்பனியம் இந்துத்துவம் பற்றியெல்லாம் நன்கு புரிந்துவைத்தே பார்க்கிறார்கள். ஆனால் இதை இரண்டாம் பட்சமாகவே பார்க்கிறார்கள். மூன்றாவது பிரிவினர் இந்துத்துவம்தான் இந்த சாதியத்தின் அடிப்படை வேர். இது இயற்கையானது. செயற்கையானது அல்ல என்கிறார்கள்... என்றவாறு அவர் தொடக்கிய இந்தப் பிரிப்பு என்னளவில் முறையாக அணிவகுத்த நிற்பதில் மாறிமாறி இடம் பிடித்ததுபோல் இருந்தது. சாதிகள் தோன்றிய இடம் இந்திய துணைக் கண்டம்தான் என்று அவர் சாதியின் வேர்களை அந்த வேர்களிற்கு முற்பட்ட நிலையிலிருந்தே தொடங்கியது அவரது ஆய்வுத் தன்மையின் கடின உழைப்பை நிரூபித்தது. பண்பாடு ஒழுக்கம் எல்லாம் இந்துமதப் பண்பாடுதான் என்பதை நாம் காணலாம். ஒரு நாடு வளர்ச்சி பெற்றது என்றால் என்ன? பொருளாதாரம் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் மட்டும் வளர்ச்சியடைந்தால் அது வளர்ச்சி பெற்ற நாடா? கமூகவளர்ச்சி அடையாதவரை அதை வளர்ச்சிபெற்ற நாடாக நாம் கொள்ள முடியாது. பல இன மக்கள் வாழும் நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. ஆனாலும் சமூக மாற்றம் நிகழ்வதற்கான வழிவகைகள் அங்கு பேணப்படுகின்றன. இலங்கை இந்தியாவில் அது இல்லை. சாதியமைப்பு முறையை தொடர்ச்சியாக 3000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாகக்
கடைப்பிடிக்கின்ற சமூகம் ஒரு மனநோய் பிடித்த சமூகம். சமூகம் சார்ந்த விடங்களை விமர்சிப்பவர்கள் முதலில் அதே சமூகத்தால்தான் நிராகரிக்கப்படுகிறார்கள். சாதியம் பற்றிய ஆய்வுகள் எம் மத்தியில் ஒரு திறனாய்வுடன் இல்லை. வரலாற்றின் நம்பகத்தன்மை என்ன? புதைபொருள் ஆராய்ச்சியாளர் மொழியியலாளர்கள் ஆகியோரின் ஆதாரங்கள்தான் அதிகபட்ச நம்பிக்கை கொள்ளக்கூடியது என்பார்கள். சிந்துவெளி நாகரிக ஆய்வுகள் அகழ்வாராய்ச்சியினூடாக வெளியாகியது. அந்த மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் முயற்சியை மொழியியல் ஆய்வால்தான் சாத்தியமாக்க முடியும்.
சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் பிற நாட்டவரின்வருகை அந்தச் சமவெளியினூடு நடைபெறுகிறது. அவர்களின் பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு. சிந்துவெளி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இவர்கள் நாடோடிகளாகவே இருந்தார்கள். பிறதேசத்தவர்கள் ஆரியர்கள் பார்ப்பனியர்கள். அப்போதும் சாதியம் இல்லை. சிந்துவெளி நாகரிகம் மறைந்து 1500 வருடங்களின் பின் இலக்கியங்கள் தோன்றிற்று. நான்கு வேதங்களும் தோன்றிற்று. இயற்கைதான் பிரதான தெய்வங்கள். பிரதானமான இனக்குழுத் தலைவன் இந்திரன் கடவுளாக வருகிறான். இலக்கியம் படைத்தவர்கள் சமூகத்தில் முதன்மை இடம் பெறுகிறார்கள். இவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள். வசிட்டர், விசுவாமித்திரர்... போன்றோரைக் குறிப்பிடலாம்.யுத்தத்துக்கான இனம் வியாபாரத்துக்கான இனம்... என இனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. யுத்தம் செய்பவர்களுக்கும் சமூகத்தின் ஆதிக்கசக்திகளுக்கும் இடையில் யுத்தங்கள் நடைபெற்றன.கிறிஸ்துவுக்குமுன் 1000 ஆண்டுகளிற்கு முன்தான் சாதியத்திற்கான அடித்தளம் இடப்படுகிறது. வருணாச்சிரம தர்மங்கள் தோன்றுகின்றன. இருக்குவேதத்தில் முதன்முதல் சாதியத்துக்கான அடித்தளம் இடப்படுகிறது... என்று சாதியத்திற்கு முற்பட்ட பிற்பட்ட காலங்களின் எல்லையில் எம்மை கொணர்ந்து நிறுத்தினார்.
சாதியம் என்பது இடையில் வந்தது. அது இயற்கையானதல்ல. செயற்கையானது. எனவே அதுமாற்றப்படலாம் என்ற புரிதலைக் கொடுப்பதற்கும் தலித்துகளின் மீது சாதியம் இயல்பானதெனகூறும் இந்துமதக் கோட்பாடுகளை, அதன் தத்துவாசிரியர்கள் புத்திஜீவிகள் தடவிவைத்திருக்கும்வஞ்சகத்தனம் மிக்க கருத்தியலை தலித்துகள் முதலில் புரிந்துகொள்வதற்கும் இவ்வாறான ஆய்வுகள்அவசியமானது. அதாவது தலித் இந்த அறியாமையிலிருந்து விடுபட வேண்டியது முக்கியமானது. இந்தவகை முயற்சிகளை கறுப்பின நீக்ரோ இனப் போராட்டங்களின்போது கறுப்பின புத்திஜீவிகள்மேற்கொண்டனர். இந்தவகையில் அசுராவின் பேச்சு முக்கியத்துவம் உடையது.
அடுத்த நிகழ்ச்சியாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம் என்ற தலைப்பு. இத் தலைப்பை
ஏற்றுக்கொண்டிருந்த புதுமைலோலன் தான் வரமுடியாததை கடைசி நேரத்தில் அறிவித்திருந்ததால்
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் இதை தற்காலிகமாகச் செய்ய ஏற்பாடாகியது. அதனால்
அவரிடம் போதிய தயாரிப்புகள் இருக்கவில்லை. இலங்கை இந்தியா புகலிட நாடுகள் என சுழன்று
திரியும் அவர் இலக்கியத் துறையில் இருந்த பரிச்சயத்தில் தனது ஞாபத்துள் இருந்தவற்றைத்
தொகுத்துத் தந்தார். இலங்கையில் டானியல், டொமினிக் ஜீவா, செ.யோகநாதன், நீர்வை பொன்னையன்,செ.கணேசலிங்கள்... போன்றோரின் கதைகள் எல்லாம் 60 களிலேயே இலங்கையில் பேசப்பட்டகதைகள். சுபத்திரனின் கவிதைகளும் அப்போது அவ்வாறான பாதிப்புகளைச் செலுத்தியவை என்றார்.
இத் தலைப்புக்குள் பின்னர் தேவாவும் தனது கருத்துக்களை முன்வைத்தார். தலித்திலக்கியம் ஒருகலகக் குரலாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பனியச் சிந்தனையை மறுதலித்து எழுந்தவை அவை. டானியலின் எழுத்துக்கள் இந்தியாவில் தலித்திலக்கியம் வர முன்னரே வந்தவை. குஜராத்,மகாராஷ்ரம் போன்ற இடங்களிலேயே 10 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தலித்திலக்கியம் உருவாகியது. இந்த இலக்கியங்கள் அடக்கியொடுக்கலுக்கு இழிவுபடுத்தலுக்கு கொடுமைப்படுத்தலுக்கு எதிரான கோபங்களாகவும் அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதாகவும்கூட இருக்கின்றன. ஊரும் சேரியும்,கவர்மென்ட் பிராமணன்... போன்ற இலக்கிய நூல்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் பாமாவின் கருக்கு,சங்கதி, வன்மம்... சிவகாமியின் குறுக்குவெட்டு, பழையன கழிதலும் ... மற்றும் ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம், ரவிக்கமாரின் எழுத்துக்கள்... பாப்லோ அறிவுக்குயிலின் கவிதைகள்...என்பவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார் தேவா. பறை போன்ற இசைக் கருவிகளை வைத்து குணசேகரன்நடத்தும் கலைவடிவங்கள் பற்றியும் குறிப்பிட்டார். மற்றும் தலித் முரசு, புதிய கோடங்கி... போன்றதலித் இதழ்கள், மராத்தியில் வெளிவந்த அந்நியன், தந்தையற்றவன், குலாத்தி, பழிக்கப்பட்டவன்...போன்ற நூல்களையும் அவை தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது பற்றியும் ஒரு பட்டியலை அடுக்கிக் கொண்டே போனார் தேவா.
தலித் இலக்கியத்தில் தலித்தியம் என்ற தலைப்புக்குள் பரிமாறப்பட்ட தகவல்களாகவே இருவரினதுபேச்சும் இருந்தது. முதல்நாளின் கடைசி நிகழ்ச்சியாக இது இருந்ததால் ஏற்பட்ட நேரநெருக்குவாரம்காரணமோ தெரியாது. இத் தகவல்களோடு தலித் இலக்கியத்தின் போக்கு அதன் தனித்தன்மைகள்என்றவாறான ஒரு ஆய்வுப் போக்கு -ஓரளவுக்கு பொதுமைப்படுத்தலாக சொல்லப்பட்டதே தவிர-ஆழ்ந்து நோக்கப்படவில்லை அல்லது முன்வைக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.பிரான்சில் போக்குவரத்து வேலைநிறுத்தம் நகரத்தை தேக்கநிலையில் வைத்திருந்தது. அபூர்வமாகக் கிடைக்கும் பஸ் ரயில் வசதிகள் அசையமுடியாமல் தவித்த கார் நெரிசல்கள் என்பவற்றினூடு இந்தமாநாட்டுக்கு சுமார் 100 பேர்வரை வந்திருந்தது திருப்திதந்தது. ஐரோப்பிய நாடுகள், இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளிலிருந்தும் வந்து இதில் பங்குகொண்டார்கள். இதை ஒழுங்குசெய்வதில்கடுமையான உழைப்பு செலுத்தப்பட்டிருந்தது தெரிந்தது.
சுவர்களில் சாதியக் கறையின் குறும்கதைகள்போஸ்ரர் வடிவில் ஒட்டப்பட்டிருந்தன. புத்தகங்களை வாசிக்கப் பொறுமையற்றோரை இதையாவது...என்றபடி அந்த பத்திகள் அழைத்துக்கொண்டிருந்தன.
முதல்நாள் கலைகிறது.
இரண்டாம் நாள் முற்பகல் நிகழ்ச்சியாக கலந்துரையாடல் நிகழ்ச்சி. சில மணி நேரங்களை
மெற்றோ நிலையத்தில் வைத்து வேலைநிறுத்தம் எம்மையும் இழுத்துப்பிடித்ததால் நாம் மூவர்
தாமதமாக மண்டபத்தை வந்தடைந்தோம். எல்லோர் கருத்துக்கும் சந்தர்ப்பம் அளிக்கவும் அதை
ஒழுங்கபடுத்தவும் எக்சில் விஜியிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.
மாநாட்டில் எனது கருத்தாகச் சொல்லியவை இவை... 1960 கள் உலகெங்கும் தேசிய விடுதலைப்போராட்டம், ஆக்கிரமிப்புக்கெதிரான போராட்டம், நிறவெறிக்கு எதிரான போராட்டம், சாதியப் போராட்டம்...என்பவை நடந்த முக்கியமான காலகட்டம். இதிலிருந்து பல படிப்பினைகள் கிடைத்தன.நிறவெறிக்கெதிரான போராட்டமும் சாதியத்துக்கு எதிரான போராட்டமும் பல புள்ளிகளில் பொருந்திப் போகின்றன. நிறவெறி சமன் சாதியம் என்று கொள்வதல்ல இது. நீக்ரோ, தலித் என்ற சொற்கள்உருவாக்கம், இருவருமே தீண்டத்தகாதவர்களாக அணுகப்பட்டமை, ஆதிக்கசக்திகளின் கருத்தியலைஉளவியல் அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருந்தமை போன்றவற்றைக் குறிப்பிட்டேன். கறுப்பின மக்கள் இன்று வந்தடைந்துள்ள நிலை அவர்கள் மிகக் கடுமையாகப் போராடிப் பெற்றவை. இளவயதிலேயே கொலைசெய்யப்படுமளவுக்கு மல்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்கள் உக்கிரமாப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். இந்த நிலை சாதிப் போராட்டத்தில் எட்டப்படவில்லை. அடுத்து சாதி மறுப்புத் திருமணம் சாதியை ஒழிப்பதற்கான தீர்வல்ல, ஆனால் சாதியத்தை சிதைக்கும் நடவடிக்கைதான் அது. அதனால் அதை வரவேற்க வேண்டும். தலித்துகளுக்குள்ளும் சாதிப் படிநிலைகாணப்படுவதால் பல தலித்திய அமைப்புகளின் உருவாக்கத்திற்கான தேவையும் இருக்கும். இதை யாரும் ஒரே அமைப்பாக குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் மனோநிலை இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டு, இறுதியாக ஒரு கேள்வியை முன்வைத்தேன். தலித்துகளை உள்ளடக்காத முஸ்லிம்களை உள்ளடக்காத குறைபாடுகளுடன் கூடிய (நிலவிய, நிலவும்) தேசியத்தை தலித்தியம் நிராகரிக்கிறதா அல்லது தேசியத்தையே நிராகரிக்கிறதா என்ற கேள்வியே அது.
ரயாகரன்: புலிகள் வைப்பதுதான் தேசியம் என்று எதிர்பார்க்க முடியாது. சகல சமூக விடுதலையையும்உள்ளடக்கிய விடுதலைதான் தேசியம். சாதிப்பிரச்சினை, பெண்விடுதலை எல்லாவற்றையும்வேலைத்திட்டமாக வைத்துத்தான் இயக்கங்கள் அமைப்புக் கட்டியது. இடதுசாரிக் கருத்துகளைஅழித்ததன் விளைவுதான் இன்றைய நிலை. ஜனநாயகத்தைக் கோரியவர்கள் அதை கோட்பாட்டுரீதியாக ஏற்று இயங்காததன் விளைவுதான் இந்த தலித்திய அமைப்பின் தேவை உருவாகக் காரணம். சாதிப்பிரச்சினை, பெண்விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை விரும்பியவர்கள்தான் இயக்கங்களுக்குள் முதலில் கொல்லப்பட்டார்கள் -புலிகளால் அல்ல. சமூகவிடுதலைக்கான விடுதலையாக நாம் கோரினோம். அந்த மரபை நாம் மறுத்திருக்கிறோம். அதை நினைவுபடுத்தாமல் இந்தப் போராட்டத்தை நடத்தமுடியாது.
பாலகிருஷ்ணன்: சாதியம் இந்துமதத்தோடு பின்னிப் பிணைந்தது. எந்தச் சூத்திரத்தில் இது
ஆயிரக்கணக்கான வருடங்கள் நீடிக்கிறது. மதம் மாறினாலும் அந்தந்த மதங்களுக்குள் இது நீடிக்கிறது.இதனை சுலபமாக நீக்கமுடியாது. ஒவ்வொரு தலித்தும் தன்னை தலித் என்று அறிவிக்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
சோமசுந்தரம்: தலித் என்றால் broken person. தலித் மனதில் உள்ள வருத்தம். அதற்கு சிகிச்சை கொடுத்தே ஆகவேண்டும்.
அசோக்: கிழக்கு மாகாணத்திலும் சாதி உள்ளது. நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்கள் இருக்கும்
இடங்களில் சாதியம் இருக்கிறது. நிலப்பிரபுத்துவம் வடபகுதியில் இறுக்கமாகக் காணப்பட்டதால்
அங்கு சாதியமும் இறுக்கமாகக் காணப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு கிழக்கின் சாதியத்தைக்
குறைத்து மதிப்பிட முடியாது. களுதாவளை என்ற கிராமத்தில் யாழ்ப்பாணத்தைவிட மோசமான சாதியொடுக்குமுறை உள்ளது. களுதாவளையில் 1983 வரை தனிப் பாடசாலை அமைக்கப்பட்டிருந்தது. தொழில்வாய்ப்பு இல்லை. எங்கள் கிராமத்தில் சைக்கிள் ஓடமுடியாது. கோவிலுக்குப் போகமுடியாது. சாதியத்துக்கு எதிராகப் போராடிய அமைப்புகள் எல்லாம் தோல்வியையே சந்தித்திருக்கின்றன. அதிகாரத்தோடு சமரசம்பேசும் சக்திகளாக சிலர் செயற்பட்டதால் இவை தோல்வியில் முடிந்தன.முக்குவரின் ஆதிக்கம் மட்டக்களப்பில் செயற்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் கிழக்கில் முக்குவரேஆதிக்கசக்திகளாகச் செயற்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் புலிகளாலும் மட்டக்களப்பில் கருணாவினாலும்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்திலிருந்து முக்குவர்களே போராட்டத்தைவிட்டு வெளியில்வந்தவர்கள். அங்கும் போராளிகளாக ஒடுக்கப்பட்ட மக்கள்தான் எஞ்சியிருக்கிறார்கள் என்று கிழக்கில் நிலவும் சாதியமைப்புமுறை பற்றிய தனது கருத்தைச் சொன்ன அசோக், ~நாம் மிக நேர்மையானவர்களாக,உண்மையானவர்களாக, அனைத்து அடக்கமுறைகளுக்கும் எதிரானவர்களாக இருக்கவேண்டும்.கருணாவைத் தூக்கிப் பிடிக்கிற சக்தியாக இருந்துகொண்டு ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராகக்குரல் கொடுக்க முடியாது. ஆகவே புலி கருணாவுக்கு எதிரான கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும். அத்தோடு தமிழச்சி மீதான நடவடிக்கைக்கும் இந்த முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
தலித்தியத்தின் எல்லைக்குள் கிழக்கின் சாதியம் பற்றி புதிய தகவல்களைத் தந்த அவரது பேச்சுதிசைமாறி சம்பந்தா சம்பந்தமில்லாமல் முடிந்தது. தமிழச்சி தொலைபேசியில் மிரட்டப்பட்ட சம்பவத்துக்குதலித் முன்னணி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார். பலர் முழித்தனர். இதை அவர் சாதிக்கஅனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற முடிச்சைப்பாவித்தார் என்றே கொள்ள முடிகிறது.
பொருத்தம் கருதி இங்கு ஒரு சம்பவத்தைச் சொல்லவேண்டியிருக்கிறது. உயிர்நிழல் ஆசிரியர்வீட்டில் ஆவணங்கள் களவாடப்பட்டு -ஒரு வாரமாக வெளியில் வராமல் வைத்திருந்ததே ஒருவகையில்ஜனநாயக மறுப்புப் போராட்டத்தினை பலவீனப்படுத்தவல்லது என்ற விடயம் ஒருபுறம் இருக்ககளவுபோனது இலக்கியச் சந்திப்பின் ஆவணங்கள் என்று அறிவிக்கப்பட்டபோதும் இதுபற்றி இலக்கியச் சந்திப்பு மௌனமாக இருந்தது. அதன்பிறகும் கூடிக்கலைந்தாயிற்று. ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் பிரான்ஸ் நண்பர்கள் வட்டம் மௌனமாக இருந்தது. ஆனால் பெண்கள்சந்திப்பு நோட்டீஸ்விட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலைதான் தலித் முன்னணியிடமும் தமிழச்சியின் விவகாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருவகைப் பயன்படுத்தல் எனபதற்கு அப்பால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. வெளியே போவதும் வருவதுமாக இருந்த அருந்ததிகூட திடீரென உடனடியாக கண்டனத் தீர்மானம்
நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்துள் நுழைந்தபோதும் பலர் முழித்து நின்றனர். தமிழச்சியும்தொலைபேசி மிரட்டல் விவகாரத்தைச் சொல்லி விடுதலைப் புலிகளுக்கு எதிராக என்ன செய்யப்போகிறோம் என்று தடாலடியாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் எழுதிய ~தைரியமும் அதைரியமும்|என்ற நூல் விற்பனைக்காக அடுக்கப்பட்டிருந்தது'இப் புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கும் லாபங்கள் அனைத்தும் பிரான்ஸ் தமிழ்ச்சோலை அமைப்பில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக செலவிடப்படும்' என்ற பின்அட்டை எழுத்துக்களுடன்!
கீரன்: சிங்கம் வந்து தனது வரலாற்றைச் சொல்லாதவரை வேடனின் வரலாறுதான் வரலாறாக
இருக்கும். 2000 ஆண்டுகால வரலாற்றைப் பேசாத நாங்கள் 20 வருட வராற்றைப் பற்றித்தான்
பேசிக்கொண்டிருக்கிறோம். கன்பொல்லையில் சாதியப்போராட்டத்தின்போது குண்டுவைத்த போராளியின் சிலை அன்று உடைக்கப்பட்டது. மாவீரன் எனச் சொல்லும் நாம் என்ன செய்தோம்? மற்றது இந்த 'தான்' என்ற சொல் இருக்கே... அதுதான் பிரச்சினை. தலித் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசினால் ' பிழைதான் ' என்பார்கள். இந்தத் 'தான்'...அது என்ன 'தான்'...! கக்கூஸ் இல்லாத இனம் எப்பிடி கலாச்சாரமுள்ள இனமாக இருக்க முடியும்? என்று சிரிப்பொலிகளின் நடுவே சிந்திக்கச் செய்தார் கீரன்.
சிவகுருநாதன்: சாதி ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள்தான். பேராசிரியர்கள் எவரும்
சமூகத்தோடு சேர்ந்து போராட்டங்களில் பங்குபற்றியது கிடையாது . அந்த அடிப்படையில் அமைந்தது அசுரா, ராகவன் அகியோரின் பேச்சு. கற்பனையில் எழுதி பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேசியப்பிரச்சினையில் தமிழீழத்துக்காகப் போராடியவர்கள் இராசலிங்கத்துக்கு வீடுவீடாகச் சென்று
சாதிக்கெதிராகப் பேசி செயற்பட்டார்கள். அந்த முற்போக்குச் சக்திகள் பின்தள்ளப்பட்டார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி, இனம் என்ற இரு அடிப்படையிலும் ஒடுக்கப்பட்டார்கள். முற்போக்கு
எண்ணங் கொண்டவர்களோடு அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது பங்குபோடுவது அவசியம்.
தரப்படுத்தலால் யாழ்ப்பாணத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டார்கள். சிறீமா
பண்டாரநாயக்காவின் திட்டத்திலல்ல, என்.எம்.பெரேராவின் திட்டத்தினால்தான் பொருளாதாரம் உயர்ந்தது.அதனால்தான் முற்போக்குச் சக்திகளோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறேன்.
லக்சுமி: இந்த தலித் மாநாடு தேவையா என்று கேட்பதே நாம் அதற்குள் இல்லை என்ற
மனோபாவத்தில்தான். இங்குள்ள இளம் சந்ததியினரிடம் சாதி அழிந்துபோகும் என்று சொல்வது
சம்பந்தமாக ஒன்றைச் சொல்கிறேன். நாம் சாதி பற்றிய அறிதலை பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும்.இதன் அநீதியை அவர்கள் கண்டுபிடித்து அதிலிருந்து வெளியே வருவார்கள். மற்றது புஸ்பராசாஒரு தலித் என்பதற்காக அவரது நூல் ஒதுக்குப்படவில்லை. சாதி ஒடுக்குமுறையை இதற்கெல்லாம்ஒரு 'கவர்' ஆகப் பயன்படுத்த முடியாது என்று -ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்து ஒன்றுக்குப்பதிலளிக்கும் விதமாகக்- கூறினார்.
சேனன்: தலித் அமைப்பு ஒரு சமூக நடவடிக்கைதான். ஒருசிலர் மட்டும் கதைச்சுச் செய்வதல்ல.
சாதியம் வௌ;வேறு தளங்களில் செயற்படுகிறது... நிறவெறி இன்னும் தீர்ந்துவிடவில்லை. அது
வௌ;வேறு வடிவில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது... இடதுசாரிகள் தலித் ஒடுக்குமுறைக்காகப்
போராடிய வரலாறு பற்றிச் சொல்கிறோம். இடதுசாரிகள் வரட்டுத்தனமான மார்க்சியம் பேசியதால்
இதைச் சரியாக எடுத்துச் செல்லவில்லை. மக்கள் போராட்டத்தில்தான் இருந்தார்கள். வடக்கில்
இடதுசாரிகள் அதை சரியாக முன்னெடுத்துச் செல்வில்லை. இதை வர்க்க வேறுபாடு என்று கதைத்துக்கொண்டு இருந்தார்கள். இடதுசாரியம் சார்ந்ததாக தலித்தியம் இருக்கிறது. இதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதுதான் முக்கியமான விடயம்.
புதியமாதவி: அரசியல் பொருளாதார விடுதலை சமூகவிடுதலையைக் கொண்டுவர முடியாது.
சமூகவிடுதலைதான் அரசியல் பொருளாதார விடுதலையைக் கொண்டுவரும். முஸ்லிம்களிடம் சாதி
இல்லை என்று சொல்லமுடியாது. இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விகளை எவரும் தவிர்த்துவிட முடியாது.முஸ்லிம்களுக்குள் சாதி பற்றிய ஆய்வின் மீதான எதிரொலிப்பின்போது, இன்குலாப் சொன்னார்''இவனின் தலையை எடுத்துவிடலாம். இவன் எழுப்பியுள்ள கேள்வியை என்ன செய்யப்போகிறீர்கள்''என்று..! சாதிவெறி நிறவெறிக்கு உட்பட்டதுதான் என்று ஐக்கியநாடுகள் சபையின்முன் வைக்கப்பட்டகருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.முஸ்லிம்களிடை சாதி பற்றிய தனது கருத்தைச் சொல்லும்போது பசீர் முஸ்லிம்களிடம் சாதி இல்லை, சீதனம் போன்ற சமூக ஒடுக்குமுறையாகத்தான் இதைப் பார்க்க முடியும் என்று குறிப்பிட்டார்.அவர் அந்த வேறுபாடுகளை சாதியென எடுத்துக்கொள்ள முடியாது என்றார். முஸ்லிம் மக்களுக்குள்சாதி பற்றிய ஆய்வை அவர் படித்திருந்ததாகக் குறிப்பிட்டு அதற்குள் போய்வரவில்லை. அப்படியிருக்கஅதை மறுதலிக்கும் நிலையை அவர் எடுத்தது ஒரு நியாயப்படுத்தலாகவே இருந்தது. இந்துமதம் போன்று முஸ்லிம் மதம் சாதியத்தை ஏற்றுக்கொண்ட மதமல்ல. ஆனால் சமூகம் மத அடிப்படையில் மட்டும் இயங்கும் ஒன்றல்ல. இந்திய இந்து சமூகத்தில் நிலவும் அதன் தாக்கம் முஸ்லிம்களுக்குள்ளும் புகுத்தப்பட்டிருக்கலாம் என்ற சமூகப் புரிதலாவது அவரின் நியாயப்படுத்தலைத் தடுத்திருக்க வேண்டும்.அத்தோடு இன்குலாப் புலிகளை ஆதரிப்பவர். அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லையே என்று ஒரு பொதுப்புத்தி தர்க்கத்தை வைத்தது மலினமான விவாதமாக இருந்தது. இதன்போது ரயாகரன் குறுக்கிட்டு -முஸ்லிம்களிடை சாதியில்லை என்ற- பசீரின் கருத்தை மறுத்தார். இதுபற்றிய ஆய்வுகளை தன்னால் முன்வைக்க முடியும், அதற்கான தயாரிப்போடு தான் வரவில்லைஎன்று கூறி, முஸ்லிம் அடிப்படைவாதியாக நீங்கள் பேசுகிறீர்கள் என்ற தனது கருத்தை முன்வைத்தார்.
சோபாசக்தி: யாழில் 109 கோவில்கள் தலித்துகளுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை என்று
தொடங்கி இன்னும் சில புள்ளிவிபரங்களைத் தந்தார். கம்ய+னிஸ்ட் கட்சி சிறுபான்மைத் தமிழர்
மகாசபை ஆகியவற்றின் சாதியப் போராட்டங்களை நினைவுபடுத்திப் பேசிய சோபாசக்தி பெரியார்
கூறிய ~எமது இனம் சாதி காப்பாற்றும் இனம், எமது மொழி சாதி காப்பாற்றும் மொழி| என்ற
மேற்கோளை சொல்ல மறக்கவில்லை.இந்த சாதியக் கலாச்சாரம் ஒழியும்வரை தமிழருக்கு எந்த விடுதலையும் கிடைக்காது. தலித்துகளின்பிரச்சினையை தலித் அல்லாதவர்கள் புரிந்து கொள்வது மிகக் கடினமானது. கடுமையாக உழைக்க வேண்டும். எங்களால் மட்டுப்படுத்தப்பட்ட வேலைகளையே செய்யக்கூடியதாக இருக்கும். கருத்தினைஉருவாக்கும் பணியில்தான் இந்த மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. பெண்கள் சந்திப்பு தனியாகக் கூடுகிறது. அவர்கள் கூட்டத்துக்கு ஆண்களை அனுமதிப்பதில்லை. அது மிகச் சரியானது. அதேபோல் தலித்துகள் மட்டும் கூடும் கூட்டம் பிறிதாக நடத்தப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விட்டுச் சென்றார் சோபாசக்தி.
இக் கலந்துரையாடலின் தொகுப்பாக தேவதாஸ் சில விடயங்களைச் சொன்னார். தலித் மாநாடு
நடத்தவேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு இவ் உரையாடல் தெளிவாக விடையளித்துவிட்டது.தலித்துகள் மட்டும் பிறிதாகக் கூடவேண்டும் என்ற சோபாசக்தியின் கருத்துக்கு உடனடியாகப் பதில்சொல்ல முடியாது. மற்றவர்கள் விட்ட தவறுதான் இங்கு கூடவேண்டியதற்கான காரணம் என்று - ரயாகரனின் கூற்றை- சொன்னார் தேவதாஸ். ஒரு போராட்டத்துக்கு அரசியல் அவசியம். அதை நாம்ஆரம்பித்து வைக்கிறோம். அவ்வளவுதான் என்றார். தலித் மக்களுக்காக எடுக்கப்பட்ட போராட்டங்களில் வெற்றிகளும் கிட்டியிருக்கின்றன என்று கூறிய தேவதாஸ் தமிழ்த் தேசியம் எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்பியது இந்தப் புள்ளியில் தெளிவற்ற நிலையை தொடர்ந்து பேணியது.கலாச்சார ரீதியான போராட்டங்களை எந்த இயக்கமும் முன்னெடுக்கவில்லை. அவர்கள் இதை இரண்டாம் பட்சமாகத்தான் பார்த்தார்கள் என்றார். தலித்துகள் சமூகவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தகுதி அல்லது வலிமை உடையவர்களாக இருப்பார்கள்... இந்த சாதியமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் விரும்பினால் நிச்சயம் இதை அவர்கள் ஆதரிப்பார்கள். கிழக்கில் சாதிப் பிரச்சினை இல்லை என்று நான் சொல்லவில்லை. தலித்துகள் இன்னும் முஸ்லிமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்றார். வன்முறையாளர்களுக்கு உதவியாக நாம் ஒருபோதும் இருக்க
மாட்டோம் என அசோக்கின் கேள்விக்குப் பதிலளித்தார் தேவதாஸ்.
எனது கேள்விக்கு நேரடியான பதிலை பரா அவர்கள் தவிர யாரும் முன்வைத்ததாகத் தெரியவில்லை.அவர் தலித்துகளை உள்ளடக்காத குறைபாடுகளுடன் கூடிய தேசியத்தைத்தான் தான் நிராகரிப்பதாகதனது கருத்தைச் சொல்லியிருந்தார்.
புதியமாதவி தான் இந்தக் கேள்வியோடு இந்தியா திரும்புகிறேன்...என்று சொல்லிய பின்னரும்கூட இதற்கான பதில் தலித் மேம்பாட்டு முன்னணி சார்பில் வரவேயில்லை.
விவாதங்கள் பல கருத்துகளை கொணர்ந்தது உண்மை. கீறல்விழுந்த றெக்கோர்ட் போல் தேசியஇனப் பிரச்சினைகளில் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் ஒரே ரெக்ஸ்ற் உடன் கேட்டுப் புளித்தவிவாதங்கள் போலன்றி புதிய கருத்துக்களாக அவை வெளிவந்ததை அதன் சிறப்பாகச் சொல்லமுடியும். அதை அவ்வாறு அமைத்துக் கொள்வதில் மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் கரிசனையைஅவ்வப்போது வெளிப்படுத்தியதையும் நாம் பார்த்தோம். டக்ளஸ் தேவானந்தா பணம் கொடுத்துமாநாடு நடத்துகிறார்கள் என்ற திண்ணைச் சாத்திரிகள் சிலரின் சுண்ணாம்பு தடவலில்கூட சாதியத்தின்வீணிதான் தெரிந்தது. தேவதாஸ் தனது ஆரம்ப தலைமை உரையில் இதை மறுத்ததோடு எந்தஇயக்கத்துக்கு சார்பாகவோ எதிராகவோ நாம் இங்கு கூடவில்லை என்றார். தலித்தியத்துக்கு குறுக்காகஎந்த சக்திகளாவது வரும்போது அதை எதிர்ப்பது என்பதும், சில சக்திகளை எதிர்ப்பதற்காக தலித்தியத்தைக் கையிலெடுப்பது என்பதும் ஒன்றாகாது. இந்த அடிப்படையில் எளிமையாக கொடுக்கப்பட்ட அவரின் விளக்கத்தை அருந்ததியும் அசுராவும் தத்தமது உரையின்போது மறுத்தவிதம் ஒன்றும் புதிய புரிதலைத் தந்துவிடவில்லை. சாதியத்தைக் கட்டிக்காத்த கட்சிப் பாரம்பரியத்திலிருந்து வந்த ஆனந்தசங்கரியும்கூட ரிபிசி வானொலியினூடு இந்த மாநாட்டுக்கு வாழ்த்துத் தெரிவித்ததில் சந்தேகம்கொள்ளாது வேறு எதைக் கொள்வது? புலியெதிர்ப்பில் இணைந்துகொண்ட சக்திகள்சாதியெதிர்ப்புப் புள்ளியில் பிரிந்துகொள்வது ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவர்களின் குரல்களை சந்தேகம் கொள்ள வைத்துத்தான் தீரும்.
அடுத்து தலித்துகளின் பொருளாதார மேம்பாடு என்ற தலைப்பில் பகத்சிங், பேசினார். தொழில்
ரீதியில் சாதிப்பிரிவுகளை உருவாக்கியது தமிழர் தமக்குச் செய்த மிகப்பெரிய துரோகம் என்றார்.
சாதியை தமிழின எல்லைக்குள் வைத்துப் புரிந்துகொள்கிறாரா என்ற சந்தேகத்தை இது எழுப்பியது.
எமது மக்கட் பிரிவினரிலே ஒரு பிரிவினரை சாதிரீதியில் ஒடுக்கிக்கொண்டு எமது நிலம் பறிபோகிறதுஎன்று போராட்டத்தை எடுத்தது தவறெனக் கருதுகிறேன். மொழி அடிப்படையில் போராட்டத்தைமுன்னெடுப்பது தவறானதெனக் கருதுகிறேன். தமிழர் தமிழரையே தாக்கிக் கொண்டு எவ்வாறுபோராட்டத்தை முன்னெடுக்கலாம்... போன்ற தர்க்கங்களை அவர் முன்வைத்தார். பொதுப்புத்தியின் எல்லைக்குள்தான் அவரின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். அரசியல் ரீதியில் இதை நியாயப்படுத்தவேயில்லை அவரின் பேச்சு. (அது அவரின் தலைப்புக்கு வெளியே செல்வதும்தான்)தமிழ் என்ற அடிப்படையில் போராட்டத்தை எடுத்தது பிழை என்று சொல்லிவிட்டு தமிழர் தமிழரையேதாக்கினால் எவ்வாறு விடுதலையடையலாம் எனும்போது முதலில் அடையாளத்தை மறுப்பதும்பின்னர் அடையாளத்தை முன்வைப்பதுமாக முரண்நிலையில் அமைந்தது அவரது பேச்சு.தொழில் ரீதியில் சாதியை வகுத்துவிட்டு இங்கு (புகலிடத்தில்) நாம் அதே தொழிலை செய்யபின்நிற்பதில்லை. இலங்கைத் தமிழருக்கு பணம் முக்கியம். பொருளாதாரம் முக்கியம். எனவேபொருளாதார ரீதியில் தலித்துகள் மேம்பாடடைய வேண்டும் என்றார்.
அடுத்து சோமசுந்தரம் அவர்கள் இதே தலைப்புக்குள் பேசினார். திரும்பத் திரும்ப ஒரு பகுதியினரை
(யாழ்ப்பாணத்தை) மட்டும் சிந்தித்துக் கதைப்பது தவறானது. ஒதுக்கப்பட்ட இத் தொழில்களுக்குக்கு
அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். அதிக கூலி கொடுக்கப்பட வேண்டும் என்றார். மிகச் சுருக்கமாகஅமைந்த அவரது பேச்சு தான் சொல்ல மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருப்பது என்றில்லாமல் இதைகேள்வி பதில் முறையில் எடுத்துச் செல்லலாம் என்ற தனது அபிப்பிராயத்துடன் சுருங்கிப்போய்விட்டது.இந்த முறை செயற்படாமல் போயிற்று.இவர்கள் இருவரினதும் பேச்சு இத் தலைப்புக்கு போதிய பலம் சேர்க்கவில்லை என்று சொல்லலாம்.முக்கியமாக பகத்சிங்கின் பேச்சு தலைப்புக்கு வெளியே போயிருந்தாகச் சொல்லமுடியும். தலித்துகளின் பொருளாதார மேம்பாட்டை எவ்வாறு செய்யலாம் அதற்கு குறைந்தபட்சமாக இந்த இலங்கை தலித்மேம்பாட்டு முன்னணி எந்தெந்த வேலைமுறைகளை முயற்சிக்கலாம் என்ற விடயங்களை அவர்கள்
முன்வைப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமளித்தது.
தலைமை வகித்த தேவதாஸ் இத் தொழிலை பல்கலைக்கழக மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கு
மௌனகுரு போன்றோர் முயன்று வருவதை இங்கு குறிப்பிட்டார். அத்தோடு எதிர்மறுப்புக் குரலாக
தலித்துகள் பறையடிக்கக் கூடாது, பனையேறக்கூடாது என்று முன்வைத்த அவர் இத் தொழில்களை
அழிக்க வேண்டும் என்றார். யாழ்ப்பாணத்தில் 10,000 பனையை நடச்சொல்கிறார்கள். யார் இந்த
மரங்களில் ஏறுவது என்று கேள்வியெழுப்பினார்.
அடுத்து இலங்கைத் தீர்வுத் திட்டமும் தலித்துகளும் என்ற தலைப்புக்குக் கீழ் ஸ்ராலின் பேசவந்தார்.
நன்கு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது போன்று அமைந்தது அவரது பேச்சு. தமிழ்த் தேசியத்தின்
இனரீதியிலான அணிதிரட்டல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை மழுங்கடித்துவிட்டது. இது
டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்தது. செல்லன் கந்தையாவை நூல்நிலையத்தைத்
திறக்கவிடாமல் தடுத்தது. இந்த நிலையில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுத் திட்டங்கள்
தலித்துகளையும் உள்ளடக்குமா தலித்துகளைச் சென்றடையுமா? கடந்தகால வரலாறே தலித்துகளை
தனித்துப் போராட வைக்கிறது. தமிழ்மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படும் சமூக அதிகாரம் குறிப்பிட்ட
சக்திகளிடமே போய்ச் சேரும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு தமிழர் என்று சொல்வது கேலிக்கூத்தானது.
யாழ்மையவாத அரசியல் கடந்த காலங்களில் ஏற்படுத்திய பாதகமான அம்சங்கள் (நிலச்சீர்திருத்தம்
வாக்குரிமை... போன்றன) பற்றியும் உயர்கல்வியை மறுத்தது என்பதற்காகப் போராடப் புறப்பட்டவர்கள்
தமது சமூகத்துள் ஒரு பிரிவினருக்கு ஆரம்பக் கல்வியையே மறுத்தனர் என்ற விடயத்தையும்
ஸ்ராலின் கூறிச்சென்றார்.
சில ஆலோசனைகளை அவர் முன்வைத்தார். கடந்தகாலத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுக்கு
சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அரச உத்தியோகம், பதவி உயர்வு என்பவற்றில் சிறப்பு
ஒதுக்கீடுகள், சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல்,தொழில்சார்ந்த இழிவுபடுத்தலை அல்லது
சாதிய மனோபாவத்தை வளர்ப்பதற்கு எதிரான நடைமுறைகள் சட்டங்கள், கல்விசார் துறைகளில்
இத் தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்தல், இத் தொழில்களை பல்கலைக் கழக மட்டம்வரை
தொழிற்கல்வியாக கொண்டுசெல்லல், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பறை உடுக்கு போன்ற கருவிகளை
பல்கலைக் கழக மட்டம்வரை கொண்டுசெல்லல்... போன்ற ஆலோசனைகளை முன்வைத்தார். அத்தோடு
சட்டவாக்க நிதி நிர்வாகத் துறைகளில் இடமளிக்கப்பட வேண்டும். தலித்துகளுக்கான
தனிப்பிரதிநிதித்துவம், தேர்தல் தொகுதி மீளுருவாக்கம், தலித்துகள் பெரும்பான்மையாக உள்ள
தொகுதிகளில் தலித்துகள் மட்டுமே போட்டியிட அனுமதித்தல்... போன்ற ஆலோசனைகளையும்
முன்வைத்தார் ஸ்ராலின்.
அடுத்து சிவகுருநாதன் அவர்கள் பேசினார். இவர் கனடாவில் வாழும் சட்டத்தரணி என்பதால்
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்குள் போய்வரக்கூடியவராகவும் அதேபோல் கனடா அரசியலமைப்புச்
சட்டத்துக்குள் போய்வரக்கூடியவராகவும் இருந்தார். உள்ளுராட்சி பாராளுமன்றம் அரசாங்கம் பொலிஸ்
இராணுவம் நீதிமன்றம் போன்ற நிர்வாக அலகுகளுக்குள் தலித்துகளுக்கான இடம் பற்றிய அவரது
ஆலோசனைகளை முன்வைத்தார். சாதிப்பெயர்களைச் சொல்பவர்களுக்கு தண்டனை அல்லது அபராதம்
விதிக்கும் சட்டங்களை -கனடாவில் உள்ள நிறவெறிக்கெதிரான சட்டங்களை உதாரணம் காட்டிஅரசு
நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அதேபோல் ஏற்கனவே இலங்கை அரசியலமைப்புச்
சட்டத்தில் இதுசம்பந்தமாக உள்ள சரத்துகளையும் சுட்டிக்காட்டிய அவர் அவையின்
செயற்பாடின்மையையும் குறிப்பிட்டார்.
இங்கு குறுக்கிட்ட புதியமாதவி இங்தியாவில் இதுபோன்ற ஏராளமான சரத்துகள் அரசியலைம்புச்
சட்டத்தில் இருக்கின்றன ஆனால் அவை தொழிற்படுவதில்லை என்றார்.
தனது உரையின் ஆரம்பத்தில் சிவகுருநாதன் வடக்கு கிழக்கில் பேசப்படும் தமிழ் சேரத் தமிழ்
என்றும் உலகில் மற்றைய எல்லா இடமும் பேசப்படும் தமிழ் இந்தியத் தமிழ்தான் என்றும் சொன்னார்.
யாழ்ப்பாணப் பொருளாதாரம் மணியோடர் பொருளாதாரம் என்று எற்கனவே சொல்லப்பட்ட கருத்தை
அவர் மறுத்தார். தலித்துகளும் தலித் அல்லாதவர்களுமாக கட்டியெழுப்பப்பட்ட சுயபொருளாதாரமே
யாழ்ப்பாணப் பொருளாதாரம் என்றும் சொன்னார்.
- தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எட்டப்படுமானால் மாநில மாகாண அதிகாரங்களைப்
பகிர்ந்தளித்தல் என்பது எல்லா சமூகப் பெறுமானங்களையும் கொண்டு செயற்படுத்துதல் முக்கியமானது.- சகல பொதுவழங்கல்களையும் அனுபவிக்கும் உரிமை எல்லா மக்களுக்கும் இருக்க வேண்டும்.அரசாங்க நிர்வாகத் துறைகளில் நியாயமான வேலைவாய்ப்பு பதவியுயர்வு என்பன வழங்கப்பட
வேண்டும்.
- நீதி நிர்வாகத் துறைகளில் மூன்றிலொரு பங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- உள்ளுராட்சி பாராளுமன்றங்களில் விகிதாசார அடிப்படை வேண்டும்
- அவமானப்படுத்திப் பேசுவது ஒதுக்கிவைப்பது என்பன சட்டவிரோதமாக்கப்பட வேண்டும். இதற்கான
தண்டனைகள் வரைவுசெய்யப்பட வேண்டும். இச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான
கண்காணிப்பு அலகுகள் உருவாக்கப்பட வேண்டும்.
- பாடசாலைகளில் சாதிப்பாகுபாட்டை அகற்றும் விதத்திலான பாடத்திட்டங்கள் நடைமுறைகள்
உருவாக்கப்பட வேண்டும்.
- அரசியல் சட்டம் பகுதி 2 இல் உரிமைகளும் சுதங்திரங்களும் சேர்க்கப்பட வேண்டும். இதை
இந்தியாவில் அம்பேத்கார் நிறைவேற்றினார். தவறு நேர்ந்தது நிர்வாகத்துறையில்தான். இச் சட்டங்களை
மேற்பார்வை செய்ய, மீறுபவர்களைத் தண்டிக்க சட்டங்கள் இடப்படவில்லை என்றார் சிவகுருநாதன்.
இவைகள் எல்லாம் சரிவரும்வரை காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியுடன் உடனடியாகச்
செய்யப்படக்கூடியவற்றைச் செய்யவும் வேண்டும் என்றார். கனடாவில் இனவெறிக்கு எதிரான சட்டங்களை
தமிழர்களும் அனுபவிக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர் பாடசாலையில் சாதிப்பிரச்சினை பற்றி
கதைப்பதினை பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளாத மனநிலை வரும்போது அவர்கள் வெளியிலும் இதை
மறுதலிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.
அடுத்து சட்டத்தரணியான பசீர் இத் தலைப்புக்குள் உரையாற்றினார். இலங்கை அரசியலமைப்புச்
சட்டத்தில் இனம் மொழி சமய சாதி பால் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என இருக்கிறது.
எந்த நபருக்கும் கேளிக்கை இடங்கள், பிரார்த்தனை இடங்கள் பொதுவானவை என்றும், அரசியல்
அபிப்பிராயங்கள்கூட மதிக்கப்பட வேண்டும் என்றும் இருக்கிறது என சுட்டிக் காட்டினார். இலங்கையில்சமூகங்கள் முழுவதும் வரையறுக்கப்பட வேண்டும். உதாரணமாக வேடர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதுஅனுமதிக்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலே வேட்டையாடல் என்றிருக்கும்போது அவர்களின்ஆயுதங்களைத் தடைசெய்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றார். ~ஜீவனோபாயத்துக்காகத்
தொழில் செய்பவர்கள்| என்ற மறைமுகச் சொல்லால் வரைவுசெய்யக் கூடாது என்ற கருத்தை
முன்வைத்தார். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படக்கூடிய விடயங்கள் பற்றிய
அவரின் குறிப்புகள் கவனிக்கற்பாலனவாக இருந்தது. முஸ்லிம்களுக்குள் சாதி அமைப்புமுறை
இருக்கிறது என்ற புதியமாதவியின் கருத்தை மீண்டும் மறுத்து தனது உரையை முடித்தார்.
மதமாற்றம் பற்றி ஒன்றை வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது. இந்து சமயத்தின் சாதியத்துக்கெராக
(இஸ்லாம், புத்த சமயத்துக்கு) மதம் மாறுவது என்பது ஒரு எதிர்மறுப்பு நடவடிக்கைதான். இந்த
மதமாற்றம் அவர்களுக்கு உளவியல் ரீதியிலும் பயனளிக்கத்தான் செய்கிறது. அதனால் அதை நாம்
வரவேற்கத்தான் வேண்டும். ஆனாலும் இது தலித்துகளின் ஒடுக்குமுறைக்கு கிடைக்கும் தீர்வல்ல.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் (நீக்ரோக்களின்) எழுச்சியின்போது கணிசமானளவு கறுப்பினத்தவர்இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள். சகோதரத்துவத்தைக் கோரும் இஸ்லாம் மதம் அவர்களைதூக்கி நிறுத்தியது என்பது உண்மைதான். ஆனாலும் இந்த நிறவெறி ஒடுக்குமுறைக்கு எதிரானஒரு அரசியல் தீர்வை அவர்கள் எட்டுவதற்கு மல்கம் எக்ஸ் போன்றோர் (முஸ்லிம்) மதத்தையும்தாண்டி சிந்திக்க வேண்டியிருந்தபோது முஸ்லிம் மதவாதிகளே அவருக்கு எதிராகத் திரும்பும் நிலைஏற்பட்டது. அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோதுகூட ~~அவருடைய முட்டாள்தனமான போதனையே அவருக்குமரணத்தைக் கொண்டுவந்தது. எனக்கும் உங்களுக்கும் அல்லா அனுப்பிவைத்த நல்ல விசயங்களைபைத்தியக்காரர்கள் நாசம் செய்வதை நான் அனுமதிக்கப் போவதில்லை.|| என்று எலிஜா முகமதுசொல்லுளவுக்கு இருந்தது. இன்றுவரை இனவாதக் கருத்தியல் அங்கு தொடரத்தான் செய்கிறதுஎன்பதனை அண்மையில் நடந்த ஜேனா-6 விவகாரம் நிரூபித்திருக்கிறது.எதிர்பார்த்ததைவிடவும் இத் தலித் மாநாடு ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது என்பதை சொல்லித்தான்ஆகவேண்டும். கருத்தினை உருவாக்கும் பணியில் இது ஒரு நல்ல அறிகுறி என்று துணிந்துசொல்லமுடியும்.
குறிப்பு : இயன்றவரை எழுத்துரீதியாக எடுத்துக்கொண்ட குறிப்பின் அடிப்படையில் இத் தொகுப்பு
எழுதப்படுகிறது. இங்கு எல்லோருடைய கருத்துகளையும் தொகுக்கமுடியவில்லை என்பதால் அந்தக்
கருத்துக்கள் வலுவற்றவை என்று அர்த்தமாகிவிடவில்லை. எவருடைய கருத்துகளாவது
திரிபடைந்திருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள். - ரவி
26 octobre 2007
தமிழ்த் தேசியமும் தலித்தியமும்
- ராகவன் (லண்டன்)
(இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் இரு நாட்கள் ( 20 – 21ஃ10ஃ2007) பிரான்ஸ் - பாரிசில் நடத்தப்பட்ட முதலாவது தலித் மாநாட்டில் முதல் நாள் அமர்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)
“நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாத வரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப் போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்” - அம்பேத்கர்
இந்தக் கட்டுரையின் நோக்கம் இன்று இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இன – தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்.
தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் யாழ்ப்பாணத்திலேயே அரும்பி வேர்விட்டு விருட்சமாகியதால் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையையும் ஒடுக்கும் சாதியினரின் ஆதிக்கத்தையும் அதன் அரசியல் அதிகார வேட்கையையும் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
தமிழத் தேசியவாதம் குறுகிய நோக்கம் கொண்டது. அது தமிழர் என்று தான் வரையறுக்கும் மனிதர் அல்லது மனித குழுவினர் அல்லாதவரை அந்நியராக, விரோதியாகக் கருதுகின்றது. தேசியவாதத்திற்கு உலகளாவிய பார்வை கிடையாது. அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது.
தமிழ்த் தேசியவாதம் சாதிய அடிப்படையிலான சமூக - கலாச்சாரக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனெனில் அதன் அடிப்படை பிறப்பு, இரத்த உறவு, பாரம்பரிய நிலம் போன்ற சாதியக் கருத்து நிலைகளே. பிறப்பு உனது முற்பிறப்பில் செய்த நன்மை தீமைகளால் நிச்சயிக்கப்படுகிறது என்ற சனாதன சைவக் கோட்பாட்டால் நியாயமாக்கப்படுகிறது. இதுவே சாதியின் அடிப்படை என வேதம் சொல்கிறது. இரத்தம் தூய்மையானது, அது மற்ற சாதிகளுடன் கலந்தால் அழுக்காக போய்விடும் - இங்கு இரத்தம் என்பது விந்தும் சேர்ந்தது - என்கிறது. சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழத் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும்.
‘தலித்’ என்ற பதத்திற்கு நசுக்கப்பட்ட மக்கள் அல்லது நொருக்கப்பட்ட மக்கள் என்பது பொருளாகும். மக்களைப் பிறப்பின் அடிப்படையில் சாதிகளாக அடையாளப்படுத்தும் ஆதிக்கசாதிச் சனாதனிகளால் தங்கள்மீது திணிக்கப்பட்ட பஞ்சமர், அவர்ணர், இழிசனர், தீண்டத்தகாதோர், அரிசனர் போன்ற சொல்லாடல்களைத் தலித்தியம் உறுதியாக நிராகரிக்கிறது. இந்தச் சாதியச் சொல்லாடல்கள் தங்களை இழிவுசெய்ய ஆதிக்கசாதியினரால் உருவாக்கப்பட்டவையெனத் தலித்தியம் கருதுகிறது.
1972ம் வருட தலித் பாந்தர்களின் (Dalit Panthers) அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
“தாழ்த்தப்பட்டவன், நவீன புத்த மதத்தவன், தொழிலாளி, கூலி விவசாயி, பெண், அரசியலிலும் பொருளாதாரத்திலும் சுரண்டப்பட்டவர்கள் போன்றவர்கள் தலித்கள். தலித்கள் கடவுளை நம்புவதில்லை. மறுபிறவியையும் நம்புவதில்லை. ஏற்றத் தாழ்வுகளைக் போதிக்கும் புனித நூல்ளைத் தலித்கள் நிராகரிக்கிறார்கள். அவர்கள் விதியை நம்புவதில்லை. ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் தான் அவர்களை அடிமையாக்கின.”
தலித்தியம் தமிழத் தேசியத்தின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குள்ளாக்குகிறது. ‘சாதி அடிப்படை பிறப்பாலானது’ என்ற சனாதன சைவ வேளாள ஆதிக்கசாதிக் கருத்தியலை மறுதலிப்பதன் மூலம் அது பிறப்பால் தமிழன் என்ற தேசிய அடித்தளத்தையே தகர்க்கிறது. தமிழ்மொழி சாதியக் கூறுகளை கொண்டிருப்பதை அம்பலப்படுத்தித் தமிழ் பேசுபவன், தமிழன் என்ற தேசிய அடையாளத்தையே நிர்மூலமாக்குகிறது. நிலம் மறுக்கபட்ட மனிதனின் பாரம்பரியப் பிரதேசம் எங்கே இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பித் தாய் நிலக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத மக்களை, அடிமையிலும் இழிவாக நடத்தப்படும் மக்களைத் தமிழ் கலாச்சார ஒற்றை அடையாளத்திற்குள் திணிக்கப்பதைத் தலித்தியம் எதிர்க்கின்றது. மாறாக தலித்தியம் தன்னை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அரசியல் - பொருளாதாரச் சுரண்டல்களிற்க்கு ஆட்பட்டவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துகிறது. எனவே அதற்குகொரு உலகளாவிய தத்துவப் பார்வை இருக்கிறது.
அடையாளம் என்பது நித்தியமானது என்பதைத் தலித்தியம் மறுதலிக்கிறது. நிலப்பிரபுத்துவத்தின் அழிவோடு சாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் என்ற படிமுறை வளர்ச்சி அடிப்படையிலான மரபு மார்க்ஸியவாதத்தையும் தலித்தியம் நிராகரிக்கின்றது.
தமிழத் தேசியவாதம் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட வரலாறுகளை இருட்டடிப்பு செய்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாறே இலங்கையின் வடக்குக் கிழக்கு வரலாறு எனத் திரிக்கிறது. ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்’ போன்றவை இயங்கியதையும் தலித்கள் தமிழீழப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆலயப் பிரவேசப் போராட்டம், உணவகங்களில் சமவுரிமைப் போராட்டம், பாடசாலைகளில் அனுமதிக்கான போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் அவர்கள் யாழ்ப்பாண ஆதிக்கசாதி வெறியர்களின் வன்முறைகளிற்கும் கொலைகளிற்கும் ஆளானார்கள் என்பதையும் தமிழத் தேசியம் மறைக்கின்றது.
1958 - 1977- 1983 இன வன்முறைகளைத் தனது ஒடுக்கப்பட்ட வரலாற்றின் அத்தியாயங்களாகக் காட்டும் தமிழ் தேசியவாதம் 1944ல் ஒரு தலித் மூதாட்டியின் உடலை வில்லூன்றிச் சுடலையில் தகனம் செய்ய முயன்ற முதலி சின்னத்தம்பி என்ற ஒரு தலித்தை வெள்ளாளர்கள் சுட்டுக் கொன்றதையும் சங்கானைப் போராட்டத்தில் சின்னர் காத்திகேசுவைக் கொன்றதையும் இன்னும் பலபத்துச் சாதியப் படுகொலைகளையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேல் நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் குறித்துக் கள்ள மௌனம் சாதிக்கிறன்றது. 1960களில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் நிகழ்ந்தப்பட்ட சாதிவெறி வன்முறைகள் பற்றியும் அது வாய் திறக்க மறுக்கிறது.
சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழத் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம். தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதிய கூறுகளிலேயே கட்டப்பட்டிருக்கிறது. சாதியத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அதன் தேசிய இருப்புக்கு ஆபத்தாக வந்துவிடும் என்பதில் தமிழ்த் தேசியவாதம் கவனமாகவே இருக்கின்றது என்பதை அதன் நடவடிக்கைகளும் சாதியக் குணாம்சமும் நமக்குக் காட்டுகின்றன.
சாதி சமயமற்ற ‘சோசலிசத் தமிழீழம்’ வெறும் காகித்ததில்தான். தாயகத்தை மீட்ட பின்பு ஈழத்தில் சாதியற்ற சமத்துவம் நிலவும் என்பதைத் தலித்தியம் அப்பட்டமான ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றது.தமிழ்த் தேசியவாதம் இன அடிப்படையிலானது. அது மொழி, கலாச்சாரம் என்ற இரு முதன்மைக் கருதுகோள்களிற்குள் தன்னை வரையறுக்குகிறது. தமிழ் தேசியவாத கருத்தியல் தமிழினம் தனக்கென்று தனித்த இயல்புகளை கொண்டிருப்பதாலும் அவர்கள் மொழி, கலாச்சாரத்தால் ஒன்றுபட்டிருப்பதாலும் தமிழினம் என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து மாறாமல் நிரந்தரமாக இருக்கிறதென்றும் இந்த மாறாத இயல்பே அவர்களை அய்க்கியப்படுத்தி அவர்களுக்கான ஒரு கூட்டான உள்ளுணர்வை கொடுப்பதாகவும் தங்களை ஒருங்கிணைக்கும் உள்ளுணர்வே தங்களது இருப்பைத் தேசமாக உணர வைக்கிறது என்கிறது தமிழ் தேசியம். இந்தக் கருத்தியலை நிலை நாட்டுவதற்கு கதைகள், புராணங்கள் இலக்கியங்களைத் தமிழ் தேசியவாதம் ஆதாரமாக காட்டுகிறது. தமிழரின் அரசுகள் முன்னர் தனியாக இருந்ததாகவும் அபகரிக்கப்பட்ட தேசத்தின் இறைமையை மீளவும் நிலை நாட்டுவதே தமிழரின் கடமை என்று அது முழங்குகிறது.
“மாறாத் துயிலில் ஆழ்ந்த அழகியின் (Sleeping beauty) இளமையின் மாறாத்தன்மை போன்று உருவகிக்கப்படும் நித்தியமான கலாச்சாரம் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் போது அடிபட்டுப் போகின்றது” என்பார் ஸ்டுவட் கால் (Stuard Hall) .
தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் இந்த அடிப்படையிலேயே தன்னை உருவகம் செய்கின்றது. தமிழின் இளமை, தொன்மை, தமிழ் கலாச்சாரத்தின் நித்தியம் ஆகிய சாராம்சவாதங்களையே தமிழ்த் தேசியவாதம் முன் வைக்கிறது. ஆனால் தேசியக் கருத்தியலானது நவீனகால உருவாக்கமென்பதையே ஆய்வுகள் நமக்குக் கூறுகின்றன. தேசியவாதக் கருத்தியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், வர்க்கத்தின் அபிலாசைகளை அடைவதற்கான அரசியல் வடிவமே. இந்த அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான கருத்தியல் பரிமாணத்தைத் தமிழ் தேசியவாதம் மொழி, கலாச்சாரம் ஆகிய கருத்துருக்கள் மூலமாக வடிவமைக்கிறது. “சமுக ஏற்றத் தாழ்வுகளையும் சுரண்டலையும் மறைத்து அனைவரும் ஒன்று என்ற மாயையைத் தேசம் கொடுப்பதால் தேசியம் ஒரு கற்பிதம்” என்பார் அண்டர்சன்.
பண்டைய தமிழ் இலக்கியங்களிலோ புராணங்களிலோ ‘தமிழன்’ என்ற சொல்லாடல் இருப்பதை யாராவது கண்டு பிடித்தால் தமிழ்த் தேசியம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தது என்பதை நாம் ஒத்து கொள்ளத்தான் வேண்டும். ‘தமிழன்’, ‘தமிழச்சி’ அல்லது ‘தமிழர்’ என்ற சொல்லாடலகள் சங்க இலக்கியங்களிலோ பக்தி இலக்கியங்களிலோ தேவார திருவாசகங்களிலோ கிடையவே கிடையாது. ‘தமிழ்’ என்ற சொல்லாடல் மொழியைக் குறிக்கச் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ‘தமிழர் ‘என்ற இன அடையாளப்படுத்தல் சங்க இலக்கியங்களிலோ காலனித்துவத்துக்கு முன்வந்த பனுவல்களிலோ இல்லை. ஆனால் சாதி பற்றி பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. புறனானூறில் அந்தணர், குறவர், வேந்தர், குடிகள் போண்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இது மேலதிக ஆய்வுக்கு எடுக்கப்பட வேண்டியது.
‘தமிழர்’ என்ற அடையாளப்படுத்தல் நவீனகால உருவாக்கம் என்பதே தெளிவு. தமிழ் இன அடையாளப்படுத்தலுக்கு முன் சாதியரீதியான அடையாளப்படுத்தல் இருந்தது என்பதும் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழ்த் தேசியவாத கருத்தியலின் தொன்மைவாதம் ஆய்வுக்குள்ளாக்கப்படும் போது ஆட்டம் காண்கிறது.
வெள்ளையர்களின் காலனியாதிக்கக் காலத்திற்கு முன்னரே சாதி அமைப்பு இருந்தது என்பதற்கு ஆதாரங்களைத் திரட்டத் தேவையில்லை. எனவே இந்த கட்டுரையானது தமிழத் தேசியம் குறித்துப் பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களைப் பரிசீலிக்கின்றது.
(1) காலனிய காலகட்டத்தில் ஆதிக்க சாதியினர் -குறிப்பாக வேளாளர்கள்- எவ்வாறு தமது அரசியல் - சமூக- பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்தினார்கள்?
(2) சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து 1983 வரையான தமிழத் தலைமைகளின் கோரிக்கைகளும் அவற்றின் சாதிய பரிமாணமும்.
(3) 1983ற்குப் பின்னான ஆயுத அமைப்புகளின் தோற்றமும் சாதிய பரிமாணமும்
(4) 1986ற்குப் பின்னான விடுதலைப் புலிகளின் சர்வாதிகார அரசியலும் சாதியமும்.
காலனித்துவ காலகட்டம்:
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், காலகட்டத்தில் வரி விதிப்பதற்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்கனவேயிருந்த சாதியடிப்படையில் சனத்தொகையைப் பகுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகள் என்று டச்சுகாரர்கள் வகுத்தனர். இக்காலகட்டத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். ஆதிக்க சாதியினரின் அதிகாரம் மேலும் வலுவாக்கப்பட்டது.
காலனித்துவ காலத்திலும் அதன் பின்னும் யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் ‘உயர்’ சாதி அடிப்படையிலேயே தனது ஆதிக்கத்தை தக்கவைத்து கொண்டது. காலனித்துவத்திற்குப் பின்னான அரசியல் அதிகாரப் பகிர்வு போட்டியில் ஏற்கனவே தான் காலனித்துவ காலத்தில் அனுபவித்து வந்த சலுகைகளும் அதிகாரமும் பறிபோய்விடுமென்ற பயமே தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் அடிப்படை.
“காலனித்துவ காலகட்டத்தில் புதிய சமூக அமைப்புக்கான கருத்தியல் தளமான கல்விமுறை அதன் ஆரம்பத்திலேயே ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த சமுகக் குழுக்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது… இந்தச் சக்திகளுக்குத் தாங்கள் பரம்பரையாக ஆதிக்கத்திலிருக்கிறோம் என்ற பார்வையை மாற்ற வேண்டிய எவ்வித தேவையும் இருக்கவில்லை” என்கிறார் அம்பேத்கர். காலங் காலமாக ஆதிக்கத்திலிருந்த யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினர் ஆங்கிலக் கல்வியைப் பெற்றுத் தமது ஆதிக்கத்தைச் சமூக, பொருளாதார ரீதியில் மேலும் வலுவாக்கிக் கொண்டனர்.
ஏற்கனவே உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஜீவாதார உரிமைகள் காலனித்துவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் மேலும் நசுக்கப்பட்டன. பிரித்தானிய காலனித்துவம் ஆதிக்க சாதியினருடன் சமரசம் செய்துகொண்டு அவர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கியது பிரித்தானிய காலனித்துவம் மையப்படுத்தப்பட்ட நிர்வாக வசதிக்காக அரசியல் அமைப்பு முறையை அமுல்படுத்தியதும் இந்த நிர்வாக அலகுகளை இயக்குவதற்காக ‘கிளாக்கர்களை’ உள்ளுரிலிருந்து தேர்ந்தெடுத்ததும் வரலாறு. இன்று தேசியவாதத்தின் பீஷ்மரான கா.சிவத்தம்பி தனது முன்னைய ஆய்வொன்றில் “காலனித்துவம் ஏற்கனவே சாதியால் வரையறுக்கப்பட்டிருந்த சமுக ஒழுங்கைக் குலைக்க முயலவில்லை. மாறாக ஆதிக்க சாதியினரை முதன்மைப்படுத்துவதன் மூலம் தனது இருப்பை தக்கவைத்து கொண்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாயிருந்த வெள்ளாளரை ஆங்கிலக் கல்வி கற்க வைத்துத் தனது கிளாக்கர் படையை நிறுவியது…யாழ்ப்பாணத்தில் கல்விக்கூடங்களின் தொகையும் அதனால் உருவாக்கப்பட்ட அரச அலுவலர்களது தொகையும் அதன் சனத்தொகை வீதாசாரத்துடன் ஒப்பிடும்போது அதீதமானது” என்கிறார்.
காலனித்துவப் பொருளாதார அமைப்பானது உற்பத்தியை மையமாகக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் ‘உயர்’ சாதியினர் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்பட்டுப் பெருவாரியாக அரச அலுவலகப் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். காலனிய அரசு நிறவாத அரசாக இருந்ததால் சாதிரீதியான பிரிவினைகளை மாற்றக்கூடிய அரசியல் தார்மீகப் பலம் அதற்கு இருக்கவில்லை. கிறிஸ்தவ மதம் யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரிவினைகளை உள்வாங்கி கொண்டது இதற்கு நல்ல உதாரணம். ஒருசில பாதிரிமாரும் நிறுவனங்களும் கல்விக் கூடங்களைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களிற்குத் திறந்து விட்ட போதும் சாதிய முரண்பாடுகளில் ஆதிக்க சாதியினரின் விருப்புகளிற்கு காலனித்துவ அரசு விட்டுக்கொடுத்தே வந்தது. சமுக மாற்றத்தைக் காலனிய அரசு விரும்பவில்லை. அது தனது இருப்புக்கு ஆபத்தாகலாம் எனக் காலனித்துவ அரசு கருதியிருக்க இடமுண்டு.
யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினரின் இருப்பிற்கு சைவ சித்தாந்தக் கருத்தியல் நியாயம் கற்பித்தது. வர்ணாசிரம தர்மத்தின்படி சூத்திரர்களாக வரையறுக்கப்படும் சாதி வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்து சமூக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தியதோடு அதற்கான சித்தாந்தத்தையும் வகுத்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் திரளை குடிமை, அடிமை, சிறைக்குட்டிகள் என்ற வகைகளிற்குள் அடக்கினர். நிலங்கள், கோயில்கள் அனைத்தும் பெருமளவில் வெள்ளாளர்களின் சொத்தாகவே இருந்தன. புறநடையாகக் கரையார்கள் மட்டும் வெள்ளாளருக்குப் போட்டி சாதியாக இருந்து வந்தனர். இது பற்றிய ஆய்வு தனியாக மேற்கொள்ளப்பட வேண்டியது.
சாதிய இறுக்கம் காலனித்துவ காலத்தில் நெகிழ்ந்து வருவதையும் கிறிஸ்தவ மதமாற்றங்கள் சாதிய கட்டுமானத்தைச் சற்றுச் சலனப்படுத்துவதையும் கண்ட வெள்ளாளச் சமூகம் தனது சாதிய நலனை ஆறுமுக நாவலரிடம் அடையாளம் கண்டது. ஆறுமுக நாவலரின சைவ சித்தாந்தம் சாதிய வேறுபாட்டை நியாயப்படுத்தியது. இந்தியாவில் இந்து சமயத்திற்குள் சீர்சிருத்தம் செய்யப் புறப்பட்டுச் சாதியை ஒழிக்க முயன்ற வள்ளலார் போன்ற ஆன்மீகவாதிகளை நாவலர் எதிர்த்து வள்ளலாரின் பாட்டு ‘மருட் பா’ என வாதிட்டார். சாதியத்தை இறுக்கமாக பேணுவதற்கான வழிமுறைகளை நாவலர் சைவசித்தாந்தத்தின் மூலம் வழி மொழிந்தார். சைவ சித்தாந்தம் கூறுகிறது:
“எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?
தாழ்ந்த சாதியர் இடத்திலும் கள்ளுக் குடிப்பவர் இடத்திலும் மாமிசம் புசிப்பவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.”
நாவலர் கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்தது அந்த மதம் சம்பந்தமான வெறுப்பாலல்ல. அது சாதியக் கட்டுமானத்தைக் குலைத்துவிடும் என்ற பயத்தால்தான். தனது பாடசாலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுத்த நாவலர் ஏதாவது ஒரு பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவன் அனுமதிக்கபட்டால் அதற்கு எதிராகவும் கொக்கரித்தார். “பறை பஞ்சமர், பெண்கள் அடிப்பதற்காகவே பிறந்தார்கள்” என்றார் நாவலர். இந்த சைவ சித்தாந்தக் கருத்தியலின் அடிப்படைதான் இன்றைய தமிழத் தேசியவாதததின் தோற்றமும் வளர்ச்சியும்.
சாதி அமைப்புமுறை ஆதிக்க சாதிகளால் தொடர்ந்தும் இறுக்கமாகப் பேணப்பட்டு வரும் அதேவேளையில் தங்களது நலன்களைத் தொடர்ந்து பேணிக்காக்கவே யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம் தேசியவாதத்தை அரசியல் கருத்தியலாக விதைத்தது.
காலனித்துவ அரசுகள் படிப்படியாக சரிந்து வரும் காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசு காலனித்துவத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நிகழ்த்தாமலே சுதந்திரம் பெற்ற இலங்கையை ஒரு ‘மாதிரி’ நாடாக, ஒரு ‘சக்சஸ் ஸ்டோரி’யாகப் பார்த்தது. தாங்கள் வெளியேறுவதற்கு முன்பாகச் சில திட்டங்களையும் பரிந்துரைத்து சுதேசிகளுக்கு ஆட்சிக் ‘கலை’யைக் கற்றுக்கொடுத்தது.
இந்தக் காலகட்டம் காலனித்துவ அரசு பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த காலம். டொனமூர் கொமிஷன் சுதேசிகளின் அதிகாரத்தைப் பற்றிப் பேசிய காலம். ‘தமிழர்’ தமக்குப் போதிய அதிகாரம் வேண்டுமென்ற காலம். தமிழத் தேசியவாதிகளின் கருத்தின்படி தமிழர் தம்மை ஒரு தனித்துவமான இனமென்று கூறி அதிகாரப் பகிர்வு கேட்ட காலம். ஆனால் காலனித்துவத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அடக்கப்பட்டு வந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பற்றித் தமிழ்த் தலைமை மூச்சும் காட்டவில்லை.
1944ல் “நூற்றாண்டு காலமாக யாழ்ப்பாணச் சமூகம் மிசனரிகளாலும் அரச நடவடிக்கைகளாலும் பயன்பெற்றுக் கல்வியில் முதன்மையாக நிற்கின்றது’ என்று அறிக்கையிட்டது சோல்பரிக் கொமிஷன். ஆனால் அந்தக் கல்வியை பெறத் தடுக்கப்பட்டவர்களாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தார்கள். சோல்பரிக் கொமிஷனிடம் ‘இருக்கும் கல்விக் கூடங்கள் போதாது இன்னும் கல்விக்கூடங்கள் வேண்டும்’ என்று கேட்ட யாழ்ப்பாணத் தலைமை மறுபுறத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்விகற்ற படித்த பாடசாலைகளை எரித்துச் சாம்பராக்கியது.
இந்த காலத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள்மீது சுமத்தப்பட்ட தமிழ்த் தேசியப் பெருங்கதையாடலை நிராகரித்தனர். ‘ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கமம்’ 1927ல் உருவாக்கப்பட்டது. சங்கம் தாழ்த்தப்பட்ட மாணவர்களிற்கு பாடசாலை அனுமதியும் சமபந்தியும் கோரிப் போராட்டங்களை நிகழ்தியது. 1931 இல் சர்வசன வாக்குரிமைக்கு டொனமூர் கொமிசன் சிபார்சு செய்தபோது பொன். இராமநாதன் நடேசன் போன்ற தமிழ்த் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசியல் உரிமையொன்று கிடைப்பதைப் பொறுக்க முடியாமல் சர்வசன வாக்குரிமையை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பு அவர்களின் ஆதிக்கசாதி நலனிலிருந்தே முகிழ்த்தது. ஆனால் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளோ ‘பெரும்பான்மைச் சிங்களவரகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற தூரப்பார்வை இத் தலைவர்களுக்கு இருந்ததனால் அவர்கள் அதனை எதிர்த்தார்கள்’ என வியாக்கியானம் கொடுக்கிறார்கள்.
நிலப்பிரபுகளுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கவேண்டும், கல்வியற்றவர்களுக்கும் பெண்களுக்கும் அந்த உரிமை இல்லை என்று வாதாடினார் இராமநாதன். ஆனால் சிங்கள நிலப்பிரபுக்கள் எண்ணிக்கையில் தமிழ் நிலப்பிரபுக்களை விட அதிகம். எனவே சர்வசன வாக்குரிமை இல்லாவிடினும் சிங்களப் பெரும்பான்மையே அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும். தவிரவும் இராமநாதன் சிங்கள மேல்தட்டு வர்க்கத்துடன் சுமூகமான உறவை வைத்திருந்ததுதான் வரலாறு. எனவே இங்கே இராமநாதனின் ‘தூரப்பார்வை’ என்ற வாதமே அடிபட்டுப்போகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தமிழ்த் தேசிய இனமாக அடையாளம் காண மறுத்தனர். யாழ்ப்பாணத்து ‘உயர்’சாதிக்காரரின் அரசியல் அதிகாரப் போட்டிகளின் விளைவே தமிழ் தேசியவாதக் கருத்தியலின் உள்ளுறை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தனர். அதிகாரப் பகிர்வு கேட்கும் அதே வர்க்கம் தாழ்த்தப்பட்டவர்களிற்கு அரசால் வழங்கப்பட்ட சிறிய சலுகைகளை கூட மூர்க்கமாக எதிர்த்து வந்ததைத் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்கறிவார்கள். தங்களுக்கு இவர்கள் கொடுத்த அடையாளம் சாதி அடையாளமே தவிர தமிழ் அடையாளமல்ல என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெரியும். 1943ல் வட இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை உருவாக்கப்பட்டதும் இதன் பின்னணியில்தான். அடுத்த வருடமே மகாசபை அகில இலங்கைச் சிறுபான்மை தமிழர் மகாசபையானது.
1944ல் சோல்பரி கொமிசனின் முன்னால் தனியான ஓர் அறிக்கையை மகாசபை சமர்ப்பித்தது. சிறுபான்மைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சனைகள் வேறானவை, அவர்கள் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடங்கமாட்டார்கள் என மகாசபை வலியுறுத்தியது. தங்களது உரிமைகளைச் சாசனரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் எனவும் மகாசபை வலியுறுத்தியது. அய்ம்பதிற்கு அய்ம்பது கேட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்திடம் “தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும், பாடசாலை அனுமதி தரப்படவேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழ்க் காங்கிரஸ் சமர்பிக்கும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டால் தனி அறிக்கையொன்றைத் தாங்கள் சோல்பரிக் கொமிஷனிடம் சமர்ப்பிக்கவிருப்பதைக் கைவிடுவதாக” மகாசபை தெரிவித்தது. ஆனால் ஆதிக்க சாதியினரின் பிரதிநிதியான பொன்னம்பலம் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்ததால் மகாசபை தனியாகவே கொமிஷனிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
தமிழ்த் தலைமையானது சாதி வெறியர்களுடன் கூட்டு சேர்ந்து மகாசபை அங்கத்தவர்களை மிரட்டியது. சோல்பரிக் கொமிஷன் அங்கத்தவர்களை இரகசியமாக தலித் மக்களின் குடியிருப்புகளிற்கு அழைத்துச் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு இழிவாக நடத்தப்படுகிறார்கள் என்று மகாசபை உறுப்பினர்கள் காண்பித்தார்கள். ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகளின் சாதி அரசியலால் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கற்களாயின.
சுதந்திரம் பெற்ற காலகட்டத்திலிருந்து 1983 வரையான தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளும் அவற்றின் சாதியப் பரிமாணமும்:
பொருள் உற்பத்திமுறைமை, அதற்கான அரசியல் சமூகக் கட்டுமானம், அதனை வழி நடத்துவதற்கான நிர்வாக இயந்திரம் என்ற அடிப்படையிலேயே இலங்கையில் காலனித்துவ அரசு தனது சுவடுகளை விட்டு சென்றது. காலனியாதிக்க காலத்திலேயே அரச நிர்வாக சேவைகளில் தமது கால்களை ஆழ ஊன்றியிருந்த யாழ் மத்தியதர ஆதிக்கசாதி வர்க்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே இச்சூழலில் இருந்தன. தொழில் வளர்ச்சியற்ற இச்சூழலில் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளுக்கான போட்டி இனரீதியான சிந்தனைக்குத் தீனி போட்டது.
கல்வி மறுக்கப்பட்டு அரசு நிர்வாகப் பதவிகள் மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த போட்டியின் பங்குதாரரில்லையென்பதுதான் உள்ளங்கை நெல்லிகனி உண்மை. தனிச் சிங்கள மொழிச் சட்டம் 1956ல் நிறைவேற்றப்பட முன்பு ஆங்கிலக் கல்வியே சமூகப்படிகளில் ஏறுவதற்கான கருவியாக இருந்தது. ‘ஆங்கிலக் கல்வி வேண்டாம், தாய்மொழிக் கல்வி வேண்டும்’ என யாழ்ப்பாண அரசியல் தலைமை அதுவரையும் போராடவில்லை. தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்து பின்னர் தமிழ் வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்படும் என மாற்றம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தாய்மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட மக்களிற்கான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வந்தன. அவர்களுக்கு மேற்படிப்பு என்பதும் பல்கலைக்கழகம் செல்வதென்பதும் கனவாகவேயிருந்தன. ஆசிரியர்களிலிருந்து அதிகாரிகள் வரை திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்கத் தடையாக இருந்தனர்.
தமிழர் தமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்ததற்கான அடிப்படை காரணம் 1970களில் தரப்படுத்தலை அரசு நடைமுறைப்படுத்தியதே எனத் தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் முன்வைக்கிறது. கல்வியில் சிறந்த அறிவார்ந்த தமது இனம் தரப்படுத்தலை கண்டு சினந்து போராட்டத்தில் குதித்தது, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இதுவெனத் தமிழ்த் தேசியவாதிகள் இன்றும் கூறுகிறார்கள். ஆனாலும் காலங்காலமாக ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களும் வரலாறுகளும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. இலவசக்கல்வி முறை இலங்கையில் இருந்தபோதும் 0.01 வீத சனத்தொகையே மேற்படிப்புக்கு செல்லக்கூடியதாக இருந்தது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்கலைகழகம் செல்லும் போட்டியிலும் அரச அதிகாரிகளாகும் போட்டியிலும் யாழ்ப்பாண மத்தியதரவர்க்கம் முக்கியமான பாத்திரத்தை வகுத்தது. ‘கோழி மேய்த்தாலும் கோர்ணமெந்தில் மேய்க்கவேண்டும்’ என்ற தேவவாக்கு யாழ்ப்பாண ஆதிக்கசாதி அமைப்பின் தாரக மந்திரமாயிருந்தது. தனது பங்குகள் குறைந்து போக அது ஆத்திரம் அடைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவொரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. இதனை ஆதிக்க சாதியினரின் பிரச்சனையாகவே அவர்கள் பார்த்தார்கள். ஏனெனில் இதே சமகாலத்தில்தான் அவர்கள் கோவில் பிரவேசம், தேனீர்கடை பிரவேசம் போன்ற பல்வேறு சமூக விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு ஆதிக்க சாதியினரால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.
அப்போதைய இலங்கை அரசு இந்தப் பிணக்கை ஓரளவு தீர்க்க முன்வந்தபோது தமிழப் பழமைவாதத் தலைமை எரிச்சலடைந்தது. சாதி முறைமைகள், கோவில் பிரவேசம் ஆகிய உள்வீட்டு பிரச்சனையில் அரசு தலையிட வேண்டிய அவசியமில்லையென அது வாதித்தது.
சாதியப் பிரச்சினையை எதிர்கொள்ளத் தமிழத் தலைமைகள் பயந்ததன் அடிப்படைக் காரணம் அவர்களது ஆதரவுத்தளம் மத்தியதர வர்க்கச் சாதிமான்களில் தங்கியிருந்ததாலேயேயாகும்.
சாதி எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழ்த் தேசியத் தலைமை கொச்சைப்படுத்தியது அல்லது அது உள்வீட்டு பிரச்சனை என்றது. சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சாதிக்கெதிரான போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை இணைத்து போராடியபோது தமிழத் தலைமை ‘சங்கானை ஷங்காயாக மாறுகிற’தென்று இனவாத அரசென்று தங்களால் சொல்லப்பட்ட இலங்கை அரசுக்கு முறையிட்டது.இதே காலகட்டத்தில்தான் தமிழ்த் தேசியவாதிகளின் பத்திரிகையான ‘சுதந்திரன்’ கோவில் பிரவேசம் பற்றிப் பேசக் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தகுதி இருக்கிறது, ஏனெனில் அவர்கள் நாத்திகர்கள் எனப் பக்கம் பக்கமாக எழுதியது.
தமிழரசுக் கட்சி சமபந்தி போசனம் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி சமரசப் போக்கை கொண்டுவர முயன்றபோதும் தாழ்த்தப்பட்ட மக்கள் இதனை வெறும் நாடகமாகவே கருதினார்கள். தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று என தென்னிலங்கை அரசுக்கு காட்டி தங்களது இனவாத அரசியலை நடத்துவதற்கான தந்திரோபாயத்தில் தாங்கள் பங்குதாரர் இல்லை என தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து கூறினார்கள். ‘சமபந்தி போசனம் செய்ய வருபவர்களே சம்பந்தம் பண்ணச் சம்மதமா’ என குரலெழுப்பிச் சாதிய தேசியவாதத்தை அம்மணமாக்கினார்கள
தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள் ஆதிக்கசாதி யினரின் பிரச்சனைகளாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களது பிரச்சனை ஆதிக்கக்கசாதியினரின் நேரடி ஒடுக்குமுறைக்கெதிரான தொடர்ந்த போராட்டமாகவே இருந்தது. ‘புத்த மதம் ஆதிக்க மதம்’ என்றது ஆதிக்கசாதி. தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த சமயத்திற்கு மாறுவது தமது சமூக விடுதலைக்கான ஒரு படிக்கல் என்றே கருதினார்கள்.
1970களில் தமிழத் தேசியச் சக்திகள் ஆயுத வன்முறையை ஆரம்பித்தபோதும் 1983வரை அது யாழ்ப்பாணத்துளளேயே முடங்கிப் போயிருந்தது. சிறு குழுக்கள் திடீரென்று ஒரு பொலிஸ்காரனையோ துரோகியென்று முத்திரை குத்தப்பட்டவரையோ கொல்வது அல்லது ஒரு வங்கியை கொள்ளையடிப்பது என்ற மட்டிலேயே அவர்களது நடவடிக்கைகள் 1983 வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அலைக்குள் அகப்படவில்லை. ஏனெனில் தமக்கு கல்வியை மறுக்கும் அதே ஆதிக்கசாதியினர்தான் உயர்கல்வி கற்க ‘தரப்படுத்தல்’ தடையாக இருக்கின்றதென்று கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தது தலித்களிற்கு வேடிக்கையாக இருந்தது. 1971ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் 1972ல் மாவட்டரீதியான கோட்டாவாக மாற்றப்பட்டுப் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு, மன்னார், மலையகம், வன்னி போன்ற தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து முதன்முறையாக மாணவர்களிற்குப் பல்கலைகழகம் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த விடயத்தை யாழ் மையவாதத் தமிழ்த் தேசியவாதிகள் முற்றாக மறைத்துவிடுகிறார்கள். தமிழ்த் தேசியவாதத்தின் உருவாக்கமே யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதியினரின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாக இருந்தது.
1976ல் வட்டுகோட்டைத் தீர்ர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றிய போது தமிழீழம் சாதி சமயமற்ற சமதர்ம குடியரசென்றும் தமிழீழத்தில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்படும் என்றும் கூறியது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் அடிப்படை உரிமைகள் சட்டரீதியாகக் காகிதங்களில் ஓரளவிற்கு உத்தரவாதப்படுத்தினாலும் கூட அந்தக் குறைந்த பட்ச உரிமைகளைக் கூட நடைமுறைப்படுத்த அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கக் கூட்டணி குறிப்பிடத் தகுந்த எந்தப் பங்களிப்பையும் இன்றுவரை கொடுத்ததில்லை. அரசியல் சாசனத்தில் தலித்களிற்குச் சில உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தும் அதனை நடைமுறைப்படுத்த யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் பெரும் தடையாயிருந்தனர். தேசியவாதத் தலைமை இந்தச் சாதிய மேலாதிக்கதால் கட்டப்பட்டதால் நிலவிவரும் சாதிய அமைப்புமுறையை எதிர்ப்பதற்கான வீரியம் அதனிடமிருக்கவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தேசியவாதத்திற்குள் உள்வாங்குவதற்கு அது முயற்சித்தது.
1981ம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் பொலிஸாரால் தீக்கிரையாக்கப்பட்ட போது கிளர்ந்தெழுந்த யாழ்ப்பாண ‘உயர் ‘சாதிச் சமூகம் அதேகாலகட்டத்தில் எழுதுமட்டுவாளில் சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட சிறார்களைத் தாக்கி அவர்களது புத்தகங்களைப் பறித்து தீக்கிரையாக்கும் போது ஏன் பார்த்துக்கொண்டிருந்தது? எனக் கேள்வியெழுப்பினார் கே.டானியல்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு படிப்பு எதற்கு அது எங்களது ஏகபோகம் என்ற ஆதிக்கசாதிச் சிந்தனை முறையே இதற்குக் காரணம். இந்த ஆதிக்கசாதிச் சிந்தனை முறையை அரசியல், சமூக தளமாகக் கொண்ட தேசியவாதக் கருத்தியல் தாழ்த்தப்பட்ட மக்களின் அபிலாசைக்கு முரணாகவே அப்போதும் இப்போதும் செயல்படுகிறது
1960களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆய்வு செய்து “மாவிட்டபுரக் கோவில் பிரவேசப் போராட்டமானது வெள்ளாள ஆதிக்கத்தை வைதீகத் ( சுவைரயட) தளத்தில் எதிர்கொண்டது. இந்தப் போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கபட்டன. சாதி எதிர்ப்புப் போராட்டங்களைத் தணிப்பதற்காகத் தமிழ்த் தலைமை ஒரு ‘தற்காப்புத் தேசிய வாதமாக’ ( னுநகநளெiஎந யேவழையெடளைஅ) தமிழ்த் தேசியவாதத்தை முன்வைத்தது. இந்த உத்தியின் மூலம் இன உணர்வுகளிற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளீர்க்க தமிழ்த் தலைமை முயன்றது” என்கிறார் பாகன்பேகர் (1990).
சாதிய ஒடுக்குமுறைகளை ‘ஒற்றுமை’யின் பேரால் தமிழத் தேசியவாதம் மறைக்க பார்க்கிறது. தனது பல்லைக் குத்தி மாற்றானுக்கு மணக்கவிடக்கூடாது என்று வியாக்கியானம் வேறு.
1983ல் தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஆயுதம் தூக்கும் வரையில் தாழ்த்தப்பட்ட மக்களிற்குச் சாதிய விடுதலைப் போராட்டத்தை நடத்தக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட சனநாயகச் சூழலிருந்தது. ஆயுத வன்முறை தமிழ்த் தேசியத்தின் வடிவமாக்கப்பட்ட பின்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட்டங்களை நடத்துவதற்காக மட்டுப்படுத்தப்பட்டிருந்த சனநாயகமும் தமிழ்த் தேசியவாதத்தால் முற்றாகவே துடைத்தெறிப்பட்டது என்பதுதான் வரலாறும் நிதர்சனமும்.
1983க்குப் பின்பு ஆயுத அமைப்புகளின் தோற்றமும் சாதியப் பரிமாணமும்:
1983 யூலை வன்முறைகள் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. ஆயுதப் போராட்த்திற்கான அடித்தளம் வலுவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள், ரெலோ, புளொட் ஆகிய அமைப்புகள் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் தொடர்ச்சியாகவேயிருந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான எவ்விதச் சிந்தனைப் போக்கையும் இவை கொண்டிருக்கவில்லை. மாறாகச் சாதியச் சிந்தனைகளின் அடிப்படையிலேயே இவர்களது தமிழ்த் தேசியம் கட்டப்பட்டது. 1984ல் புத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கொழுத்தப்பட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கபட்டபோது இந்த ஆயுதத் தலைமைகள் இந்த நேரத்தில் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாதெனச் சாட்டுச்சொல்லி இப்பிரச்சனையைக் கையாள தயங்கினர். ‘உயர்’சாதியை பகைத்தால் ஒற்றுமை குலைந்துவிடும் என்பது அவர்களது வாதம். இதே போல் கல்லுவத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தை ரெலோ வன்முறை கொண்டு அடக்கியது. EPRLE, NLFT போன்ற அமைப்புகள் தேசியவாதக் கருத்தியலைக் கொண்டிருப்பினும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகச் சமகாலத்திலேயே போராட்டம் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது முக்கிமானதுதான். ஆனாலும் இராமநாதன் பொன்னம்பலம் காலத்திலிருந்து வந்த தமிழர் ‘ஒற்றுமை’ குலைந்துவிடக்கூடாது என்ற ஆதிக்கசாதிச் சிந்தனை முறைமை தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களிடமும் நீடித்தது, நீடிக்கின்றது.
EPRLF தாழ்த்தப்பட்ட மக்களைப் பெருமளவில் தன்னுடன் இணைத்து கொண்டது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் ஆதிக்கம் செலுத்திய சூழலில் தங்களின் அடிப்படை உரிமைகளை இவ்வியக்கங்கள் மூலம் வென்றெடுக்கலாம் எனக் கருதித் தாழ்த்தப்பட்ட மக்கள் இயங்கங்களில் இணைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது மட்டுமல்லாமல் தமக்குக் காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவும் தாழ்த்தப்பட்டவர்கள் அமைப்புகளில் இணைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. தமது சாதிய மேலாதிக்கத்திற்கு இது ஆபத்து என கருதிய யாழ்ப்பாண உயர்சாதி வர்க்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்புகளில் சேருவதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் எதிர்த்தார்கள். ‘முந்தி இயக்கம் நல்லாயிருந்தது. இப்போது கண்டதுகளும் சேர்ந்து அதை பழுதாக்கியெல்லோ போட்டுதுகள்’ எனப் புறணி பேசினர். ஈ பி ஆர் எல் எப் அமைப்பை ஈழத்துப் பள்ளர் என அடைமொழியிட்டு அழைத்தனர். சாதிய அமைப்பு முறைக்கு எதிரான போராட்டம் தேசியவாதக் கருத்தியலுடன் பொருந்தாது என்பதற்கு ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோல்வி சரியான உதாரணம்.
சாதிய எதிர்ப்பானது சமூக ஏற்றத் தாழ்வுக்கெதிரான போராட்டம். அது சைவ சித்தாந்தக் கருத்தியலை நிராகரிக்கிறது. தமிழ்த் தேசியவாதம் யாழ்ப்பாண சாதிய மேலாதிக்கத்தை பேணிக்காப்பதற்கான போராட்டம். எனவே ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தோல்விக்கான ஒரு முக்கிய காரணம் தேசியவாதத்திற்கும் தலித்தியத்திற்கான அடிப்படையான தீர்க்கப்படாத முரண்பாடுகளை அடையாளம் கண்டுகொள்ள அது தவறியதேயாகும். தமிழ்த் தேசியம் சாதிய அடிப்படையிலான கருத்தியலென்பதால் அது சாதியத்திற்கெதிரான கருத்துக்களை முன்வைப்பது அதன் அரசியல் இருப்புக்கு ஆப்பு வைக்கும் வேலையே.
ஆயுத அமைப்புகள் தலையெடுத்த பின்பு தாழ்த்தப்பட்ட மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்த தாழ்த்தப்பட்ட மக்களிற்கு சாதிய விடுதலைக்கான அமைப்புகளை நடத்தும் உரிமைகள் மறுக்கப்பட்டன. தமிழத் தேசியத்தின் பேரால் தமிழர் ஒற்றுமையின் பேரால் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சனநாயக உரிமைகளும் பறிக்க பட்டன. தலித்தியத்தை பேசுபவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர். 1986ல் விடுதலை புலிகள் மற்றைய அமைப்புகளை அழித்துத் தமது தனி ஆதிக்கத்தை கொண்டுவந்த பின்பு ஒரு தலித் இயக்கத்திற்கான அனைத்து கதவுகளும் பலாத்காரமாக வடக்கில் மூடப்பட்டன.
1986ற்குப் பின்பு விடுதலைப் புலிகளின் சர்வாதிகார அரசியலும் சாதியமும்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மிகவும் பிற்போக்கானதும் பழமை வாதமானதும் மாற்று அரசியல் அமைப்புக்களை கருத்துக்களை சகிக்க முடியாததுமாகவே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. விடுதலை புலிகளின் தோற்றமும் அரசியல் பரிமாணமும் அதன் அமைப்பு முறையும் யாழ்ப்பாண ஆதிக்கசாதிக் கருத்தியலினதும் அதன் சர்வாதிகாரச் சாதி கட்டமைப்பினதும் வெளிப்பாடே.
ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் பெரும்பாலும் யாழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவேயிருந்தனர். தமது கல்வியில் அல்லது தமது சமூகத்தின் ( இங்கு நான் சமூகமெனக் குறிப்பிடுவது ஆதிக்க சாதியினரை) கல்வியில் இலங்கை அரசு பாரபட்சம் காட்டியது என்பதே அவர்களது அடிப்படையான பிரச்சனையாக இருந்தது. இராசராச சோழனின் ஆட்சியைக் கனவு கண்டது, சோழரின் இலச்சினையைத் தனது சின்னமாக்கித் தமிழீழத் தேசத்திற்கான கற்பிதத்தை உருவாக்கியது, சைவநெறிப் புனிதங்களையும் ஒழுக்கங்களையும் பேணிப் பாதுகாத்தது, காதல் - பாலுறவு போன்ற விசயங்களில் பச்சைப் பழமைவாதம் போன்ற பல்வேறு பிற்போக்குவாதக் கூறுகளால்தான் அந்த இயக்கம் கட்டியெழுப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் வெள்ளாளர், கரையார் ஆகிய இரு சாதிப்பிரிவினரே ஆதிக்கம் செலுத்தினர். சாதிய படிக்கட்டுமானத்தில் கரையார் வெள்ளாளருக்கு அடுத்தபடியாகக் கீழேயிருந்தபோதும் அவர்கள் வெள்ளாளரின் ‘குடிமை’களாக இருக்கவில்லை. அதனை விட முக்கியமானது சமயக் கருத்தியல் தளத்தில் ( Ideological base of saiva religious ritual )அவர்கள் தீண்டதகாதவர்களாக வகுக்கப்படவில்லை. வெள்ளாளர் போன்று கரையாரும் கோவில்களுக்கு சொந்தகாரராக இருந்தனர். சன்னதி போன்ற கோவில்களில் தலித்களின் ஆலய பிரவேசத்தை தீவிரமாக எதிர்த்து நின்றவர்கள் கரையார்கள். மாவிட்டபுரம் கோயில் பிரவேச போராட்டத்தில் வெள்ளாளருடன் கூட்டு சேர்ந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான வன்முறையில் கரையார்களும் ஈடுபட்டார்கள். கரையாருக்கும் வெள்ளாளருக்குமிடையே ஆதிக்க போட்டி தொடர்ந்து இருந்து வந்தது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்முறையில் இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்தனர்.
சைவ ஆகம முறைப்படி கரையார் தீட்டுபட்டவர்களாக கருதப்படவில்லை என்றேன். இதன் அடிப்படையே இவர்களின் தமிழத் தேசியவாதக் கூட்டு. ‘வல்வெட்டித்துறை’ ஞானமூர்த்தி என்பவர் தமிழ்க் கொங்கிரஸ் - தமிழரசுக்கட்சி இணைப்புக்கு முன்னின்றவர் என்பதும் வல்வெட்டித்துறைப் பிரதேசம் கரையார் சமூகத்தின் முக்கிய தளம் என்பதும் அது தமிழத் தேசியவாதத்தின் ஒரு முக்கியமான பிறப்பிடம் என்பதும் அறியப்பட்ட உண்மைகள்.
புலிகள் தமது அமைப்பில் ‘ஒழுக்கமானவர்களை’ சேர்ப்பதில் ஆர்வம் காட்டினர். 1983ற்குப் பின்னர் ஈ பி ஆர் எல் எப் போன்ற அமைப்புகளில் பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் இணையும்போது விடுதலைப்புலிகளோ தங்கள் தெரிவுகளை மிகவும் கவனமாகவே செய்தனர். ‘கண்டவர்களையும்’ இயக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் விளைவு உயர் சாதிகளைச் சேர்ந்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் புலிகள் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தினர்.
கரையார சமூகத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணம் முடித்ததானது முக்கியமான குறியீடாக ( Symbolic significance) அமைந்தது. தலித் பெண்ணொருவரைப் பிரபாகரன் மணந்திருந்தால் வெள்ளாளரோ கரையாரோ தமது அரசியல் ஆதரவைப் புலிகளுக்கு கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. மன்னர்கள் முன்னைய காலத்தில் மற்றைய மன்னர்களின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக அம்மன்னர்களின் குமாரிகளை திருமணம் செய்வது ஒரு தந்திரோபாயமாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இதனை திட்டமிட்டுச் செய்யாவிடினும் இந் நடவடிக்கை இரு சாதிகளுக்கிடையே ஒரு குறைந்தபட்ச இணக்கப்பாட்டைக் கொண்டுவந்தது எனலாம்.
விடுதலை புலிகள் தாங்கள் சாதியத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டி கொண்டாலும் அவர்களது அமைப்பு முறையும் அரசியல் புலமும் நடைமுறையும் சாதியத்தின் தூண்களால் கட்டப்பட்டதென்றே கூறலாம். சாதியம் எவ்வாறு தன்னை ஒரு கூம்பு வடிவாக உருவமைத்திருக்கிறதோ அதேபோல் தான் விடுதலை புலிகளின் அமைப்பு முறையும் கட்டப்பட்டிருக்கிறது. சமூக நடைமுறையில் சாதியக் கருத்தாக்கம் எவ்வாறு தனது கருத்துருக்களை மனிதரிடம் பதிக்கிறது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம். யாழ்ப்பாணா சாதிய அபைப்பை ஒரு கூம்பு வடிவமான அதிகார கட்டமைப்பாக பார்க்கலாம். வெள்ளாள சமூகம் கூம்பின் உச்சியில் இருந்து கொண்டு அடியிலுள்ள சாதிகளை அடிமை குடிமைகளாக பிரித்துத் தனக்கு சேவகம் செய்யும் சாதிகளாக வைத்திருக்கிறது. இந்த அமைப்பு முறை ஜனநாயகம் அற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகள் கேட்டு போராடும் போது அடக்குமுறையை ஏவி விடுகிறது. இது வெறும் அமைப்புமுறை மட்டுமல்ல இதற்குப் பின்னல் உள்ள கருத்தியலும் அது ஆதிக்க சமூகத்தினதும் அடக்கப்பட்ட சமூகத்தினதும் சிந்தனை முறையில் பாதிப்பு செலுத்துகின்றதென்பதும் கவனிக்கபட வேண்டிய விடயங்கள். சொல்வதை செய்ய வேண்டும், மாற்று கருத்து இருக்க கூடாது, அதிகாரத்திற்குக் கட்டுபட வேண்டும் போன்ற பல்வேறு கருத்துருக்கள் இந்த சிந்தனை முறைக்குள் ஒளிந்திருக்கின்றன. இந்த அமைப்பு முறையைப் புலிகளின் அமைப்பு முறையுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசங்களைக் கண்டுபிடித்தல் அரிது.
விடுதலை புலிகளின் அரசியற் பலமானது யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் கையிலேயே இருக்கிறது. 1983ற்குப் பின்னர் ஏராளமான யாழ்ப்பாணத் தமிழர்கள் குறிப்பாக ‘உயர்’ சாதித் தமிழரகள் ஐரோப்பாவிற்கும் கனடாவிற்கும் குடிபெயர்ந்து தம்மை நிலை நிறுத்திக்கொண்டனர். தாழ்த்தப்பட்ட மக்களும் வறியவர்களும் அநேகமாக நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்களாகவோ இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து துன்பம் அனுபவிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களது சிறார்கள் வறுமை காரணமாக ஒரு புறமும் வலுக்கட்டாயமாக மறுபுறம் புலிகளின் இராணுவத்தில் இணைக்கப்படுகிறார்கள். இந்த வெளிநாட்டு ‘உயர்’சாதிச் சமூகமே புலிகளின் அரசியல், பொருளாதார அடித்தளமாகச் செயற்படுகிறது. வெளிநாட்டு தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பார்வையும் விடுதலை புலிகளின் அரசியல் பார்வையும் ஒன்றுக்கொன்று முண்டு கொடுப்பதாகவும் இணைந்து செயல்படுவதாகவும் இருக்கின்றன
வெளி நாட்டில் வாழும் இந்த ஆதிக்கசாதித் தமிழரகள்; ஊர் சங்கங்கள், கோவில்கள், சடங்குகள், தமிழ் பாடசாலைகள் மூலமாகத் தமது சாதி அமைப்பையும் சைவ சித்தாந்த கருத்தியலையும் பேணிக் காப்பற்றி வருகிறார்கள். சாதிச் சங்கங்களை மறைமுகமாக ஊர் சங்கங்கள் என்ற பேரில் அமைப்பதும் ஆதிக்க சாதியினரின் கடவுளரை வைத்து வெளி நாடுகளில் கோவில் கட்டி இலங்கையில் கூட இல்லாத புதிய ஆகம விதிகளும் அனுட்டானமும் கடைப்பிடிப்பதும் தங்கள் குழந்தைகளுக்கு சாதிய, சமயக் கலாச்சாரங்களைத் தமிழ் என்ற பெயரில் ஓதுவதும் தொடர்கிறது. ஊர் அடையாளமென்பது சாதிய அடையாளத்தின் வெளிப்பாடே. ஊர் பெருமை என்பது சாதிய பெருமையின் வெளிப்பாடே. இந்த ஊர் சங்கங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்க படுவதுமில்லை. அவர்கள் சேருவதுமில்லை.
இந்த சங்கங்களையும் கோவில்களையும் தமிழ் பள்ளிக்கூடங்களையும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் பினாமிகளுமே பெருமளவு கட்டுப்படுத்துகிறார்கள். நல்லூர் கந்தனுக்கு, காயத்திரிக்கு, பிள்ளையாருக்கு கோவில் கட்டும் இவர்கள் வைரவருக்கு, அய்யனாருக்கு, முனிக்கு ஏன் கோவில் கட்டவில்லை என்பதைச் சொல்லி தெரிய த் தேவையில்லை.
ஒரு புறம் இறுக்கமான சாதி அனுட்டானங்களை மேற்கொள்ளும் இவர்கள் தங்களை சாதியடிப்படையில் இறுக்கமாக அடையாளப்படுத்தி வருபவர்கள். மறுபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்கள். இது ஒன்றும் முரண்பாடல்ல. இவர்களது தேசியவாதம் சாதிய அடிப்படையில் அமைந்ததென்றே இது அச்சொட்டாக நிறுவுகின்றது.
மறுபுறம் சாதிய கட்டுமானத்தின் அரசியல் வெளிப்பாடாக வந்த தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதி இருப்பது போலி என மறுக்கிறது. சாதிய அமைப்பு முறைமையை அழித்தொழிப்பதற்கான தலித்திய சிந்தனை முறைமையையும் போராட்டத்தையும் தமிழ்த் தேசியவாதம் எவ்வாறு கொச்சைபடுத்தி முற்றாக மறைக்கப் பார்க்கிறது என்பதற்கு விடுதலைப்புலிகளின் ஆசியுடன் அதன் அதிகாரபூர்வ வெளியீடாக வந்த அடேல் பாலசிங்கத்தின் ‘சுதந்திர வேட்கை’ எனும் புத்தகம் வசமான உதாரணம். சாதிய பிரச்சனைகளைப் பற்றி மேலோட்டமாக இரண்டு பக்கங்களில் அதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
அடேல் சொல்கிறார்:
“குறித்த இந்த சமுக மக்கள் யாழ்ப்பாண சமூக அமைப்பில் கள்ளிறக்கும் சாதி. பரிதாபம் என்னவென்றால் ஆற்றலும் கடின உழைப்பும் தற்பெருமையும் கொண்ட இந்த மக்கள் யாழ்ப்பாண சமுக கட்டமைப்பில் அடிமட்டத்தில் நிறுத்தப்பட்டருந்தனர். பிறப்பினால் ஒரு மனிதனை ஒரு சாதிக்குள் தள்ளி விடும் சமுக அமைப்பு காட்டு மிராண்டிதனமானது. … யாழ்ப்பாணத்து சமுக அமைப்பை நான் கணிப்பிட்ட அளவில் அங்கு உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என வகுத்திருப்பது ஒரு போலியான அடிப்படையிலேயெ என்பேன்…. தம்மை உயர் சாதி என அழைத்துக்கொள்ளும் வெள்ளாள ஆண்கள் தம் அருகிலுள்ள கள்ளிறக்கும் வீடுகளுக்கு மறைவாக செல்வதை நான் கண்டுபிடித்த போது அது வேடிக்கையாகவே இருந்தது . நான் எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன். பிளாவில் கள் அருந்தியபடியே தாழ்த்தப்பட்ட பெண்களின் கரங்களால் மீன் பொரியலையும் இறால் பொரியலையும் சுவைத்து மகிழ்வதில் பல மணி நேரம் செலவிடுகிறார்கள். நல்ல தண்ணி போட்டதும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சமுகப் படி முறை காணாமல் போகிறது என்பதை அறிந்த போது அது மனதுக்கு ஆறுதலாக இருந்தது”.
பழங்குடி மக்களை நிறவாத அடிப்படையில் அழித்து தமது ஆதிக்கத்தை உருவாக்கிய அவுஸ்திரேலிய மண்ணில் இருந்து வந்த அவருக்கு கொஞ்சமாவது சமுகப் பிரக்ஞை இருந்திருந்தால் நூற்றாண்டுகளாக நிலவி வரும் சாதி அமைப்பு முறை போலியானதென்றும் கள்ளுக்கொட்டிலில் காணாமல் போகிறதென்றும் அடேல் கதையாடியிருக்க மாட்டார். வெள்ளையர்களும் கருப்பர்களும் மதுச்சாலையில் ஒன்றாகக் குடித்தால் நிறவாதம் போலியானதாக போய்விடும் என்று கூட நாளை இந்த அம்மையார் எழுதக்கூடும். இவர் ஈழத்தில் இருந்த தசாப்தங்களில் தான் அண்ணாசாமி என்ற தலித் ஈவினையில் கண்டதுண்டமாக வெட்டப்பட்டார். அண்ணாசாமியுடன் ஒன்றாக குடித்த ‘உயர்’சாதி நபர்கள் இக்கொலையில் சம்பந்தம் என்பதும் உண்மை.
மறு புறம் தமிழ்த் தேசியவாதிகளின் தலித்தியம் குறித்த Official position இதுதான் என்பதும் தெளிவு.
தொகுப்பாக:
மேற்குறிக்கப்பட்ட தரவுகளின்படி தமிழ்த் தேசியவாதம் ஆதிக்க சாதிகளின் அரசியல் கருத்தியலின் வெளிப்பாடு. அது சாதிய சிந்தனை முறையில் ஊறிப்போய்க் கிடக்கிறது.
அகிம்சை போராட்டத்திலிருந்து ஆயுதப்போராட்டம் வரை சாதிய கூறுகளின் அடித்தளத்திலேயே தமிழ்த் தேசியவாதம் கட்டப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்காவரை சாதியமைப்பின் கரங்கள் நீண்டுகொண்டே போகின்றன. வெளிநாடுகளிலும் தனது சாதிய இருப்பை யாழ்ப்பாணத்து ஆதிக்கசாதி சமய - கலாச்சார - கல்வி அமைப்புகளை நிறுவித் தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறது. அதுவே தமிழ்த் தேசியவாதத்தின் கருத்தியல் வெளிப்பாடாக அலையாய்ப் பரவுகிறது.
தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் தலித்தியக் கருத்தியலுடன் அடிப்படியில் முரண்படுகிறது. தமிழ்த் தேசியவாதக் கருத்தியல் சாதியத்தை தனது கருத்தியல் அமைப்பியல் பரிமாணங்களாகக் கொண்டிருக்கிறது. தலித்தியம் சாதிய கட்டுமானத்தையும் அதன் கருத்தியல் தளத்தையும் அம்பலப்படுத்தும் போது தேசியவாதம் ஈடாடிப்போகிறது. சாதி இல்லை என்று மறுக்கிறது.
இதன் பின்னணியில் பல்வேறு வரலாறுகள் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கபடுகின்றன. தலித்திய சிந்தனை, அதன் வரலாறு, போராட்டங்கள் அனைத்தும் ஒற்றை பரிமாண வரலாற்றியலால் மறைக்கப்படுகின்றது.
தலித்தியம் ஒருபுறம் தேசியவாதக் கருத்தியலுக்கெதிராகப் போராட வேண்டியிருக்கிறது. மறு புறம் ‘உயர்’ சாதி ஆதிக்கத்திற்கும் சைவசித்தாந்த கருத்தியலுக்கும் எதிராகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழத் தேசியவாதம், ‘உயர்’ சாதி ஆதிக்கம், சைவ சித்தந்தம் அனைத்தும் பின்னி பிணைந்திருப்பினும் இவற்றை வௌ;வேறு தளங்களில் தலித்தியம் சந்திக்க வேண்டியிருப்பதே கள யதார்த்தம்.
தமிழ்த் தேசியவாதக் கருத்தியலின் வீச்சு இன்று தலித் இருப்புக்கான அற்ப சொற்ப சனநாயகத்தையும் மறுத்துத் தலித்திய போராட்டங்களை வடக்கில் அடக்கி ஒடுக்கி முடிவுக்கு கொண்டு வந்த இச்சூழலில் புலம் பெயர்ந்த நாடுகளில் தலித்தியம் தனது தடத்தைப் பதித்திருக்கிறது. தலித்தியமானது தன்னை ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கம், பால்நிலை ஆகியவற்றுடன் அடையாளம் காண்பதால் குறுந் தமிழ்த் தேசியப் பார்வையை நிராகரிக்கிறது. தலித்தியத்திற்கு ஒரு விசாலமான பார்வை இருக்கிறது. னுயடவை pயவொநசள அமெரிக்காவில் கருப்பின மக்களின் சமூக விடுதலைப் போராட்டத்துடன் தங்களை அடையாளப்படுத்திய பாரம்பரியத்தை கொண்டவர்கள். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் சாதியால் நிறத்தால் பால்நிலையால் அரசியல் பொருளாதார அமைப்பால் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மாந்தர்களை ஒன்றிணைக்கும் விடியலிற்கான விடுதலைக் கோட்பாடு தலித்தியம்.
பயன்பெறு பிரதிகள்:
1Caste of the Tiger /Ravikumar/ http://www.himalmag.com/
2. Anderson / Immagined Communities
3. E Leach /Aspects of Caste / 1960
4. Gail Omvolt/ Dalit Vision
5. Murugkar /Dalit Panther Movement in Maharashtra/ 1990
6. அடேல் பாலசிங்கம்/ சுதந்திர வேட்கை/ Fir Max
7. S L Sharma et al / nation and national identity in South Aisa
'வடு'
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளியிடப்பட்டு வரும் 'வடு' சஞ்சிகை நான்கு இதழ்களைக் கடந்து விட்டது. பிரான்சில் நடைபெற்ற தலித் மாநாடும் அதற்குக் கிடைத்த சர்வதேசரீதியான வரவேற்புகளும், பாராட்டுக்களும் தலித் மக்களின் சமூக விடுதலைக்கான முயற்சிகளுக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தலித் மக்களின் நியாயபூர்வமான கேள்விகள் மிக அதிகமாகவே தேங்கிப்போன நிலையில். அக்கேள்விகளை முன்வைப்பதற்கான தளமாகவே தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினர் 'வடு' எனும் சஞ்சிகையை வெளிக் கொண்டுவந்துள்ளனர். அந்தவகையில் தலித் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரும் 'வடு' சஞ்சிகை தொடர்ந்து வருவதற்கான தார்மீக ஆதரவுகளையும், 'வடு' சஞ்சிகையைத் தொடர்ந்து பெறுவதற்கான சந்தா முறையைப் பேணுமாறும் கேட்டுக்கோள்கின்றோம்.
தொடர்புகளுக்கு 'தூ' இணையத்தூடாகவும், வடு சஞ்சிகையின் மின் அஞ்சலூடாகவும் தொடர்பு கொள்ளவும். vadu.world@hotmail.fr
23 octobre 2007
பிரான்சில் நடைபெற்ற தலித் மாநாட்டின் நிகழ்வையொட்டி லண்டனிலிருந்து வெளிவரும் சஞ்சிகையான 'தேசம் சஞ்சிகை' 'தேசம் தலித் சிறப்பிதழ்' எனும் தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இதில் சேனன் அவர்களின் கட்டுரையானது லண்டனில் தற்போதும் இலங்கைத் தமிழ் சமூகத்துக்கிடையே நிலவும் சாதியக் கொடுமைகளை அம்பலப்படுத்தும் வகையிலான கட்டுரையை வெளியிட்டதோடு தொடர்ந்தும் சாதியக் கொடுமைகள் பற்றிய கட்டுரைகள் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'தேசம் தலித் சிறப்பிதழில்' எம். திருநாவுக்கரசு என் சன்முகதாசன்.எஸ். பாலச்சந்திரன். ரட்ண ஜீவன்கூல் போன்றோரின் சாதியத்திற்கு எதிரான கட்டுரைகளும் வெளிவந்துள்ளது.
http://thesamnet.net/?p=39#comments
கடந்த காலங்களில் இலங்கைத் தலித் சமூகங்களுக்கு சாதிய மேலாதிக்க வன்முறைக் கொடுமைகளும், அவர்கள்மேல் நிகழ்த்தப்பட்ட கொலைகளும் வரலாற்றில் மறைந்து போகாத வடுக்களாகும். அச்செய்திகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் தலித் மாநாட்டு மண்டபச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தது. அப்பிரசுரங்களைக் கீழே காணலாம்.
22 octobre 2007
நடைபெற்ற தலித் மாநாட்டு விபரம்
20-10-2007 இல் பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாடு மிக நல்ல முறையில், பல்வேறுபட்ட கருத்தியல்களையும் உள்வாங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. பிரான்சில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் கடுமையான வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத்து வசதிகள் அனைத்துமே மிகச் சிரமத்திற்குள்ளான நாட்களில்தான் தலித் மாநாட்டு நாட்களும் அதற்குள் சிக்கிக் கொண்டது. 100 க்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என நம்பிக்கை கொண்டிருந்தபோதும். மேற்படி பிரான்சின் கடும் வேலை நிறுத்தச் சூழலையும் பொருட்படுத்தாது, மிகச் சிரமப்பட்டு 78 பேர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததானது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரின் பணிகளின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களுக்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரின் இம்முயற்சிக்கு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், கொலை வன்முறை போன்ற கலாச்சாரங்களை அகற்றுவதற்குமான முயற்சியில் ’தமிழ்த் தேசிய விடுதலை’ எனும் கருத்தியலில் செயல்படும் தமிழ்க் கட்சிகளும் பத்திரிகை ஊடகங்களும், இணையங்களும், ரி.பி.சி வானொலி, உட்பட அனைவருமே தலித் மாநாட்டுக்கான அறிவிப்புக்களையும் அதுபற்றிய விவாதங்களையும் மேற்கொண்டதற்காக இ.த.ச.மே. முன்னணி தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
மாநாட்டில் கலந்து கொண்ட பி.பிசி வானொலி நிருபர்களும் மாநாட்டு நிகழ்ச்சியையும் மாநாட்டுச் செயல்பாட்டாளர்களையும்; பேட்டி கண்டு தமது ஊடகங்களில் வெளிவருவதற்காக மேற்கொண்ட முயற்சிக்காக பி.பி.சி ஊடக நிறுவனத்திற்கும் இ.த.ச.மே. முன்னணியினர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் (ப.நா) கட்சியினர் மாநாட்டுக்கான தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் கூறும் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் மாநாட்டு மண்டபத்தில் விநியோகித்தனர்.
மேற்படி ஜனநாயக முற்போக்கு வேலைத்திட்டத்தில் அக்கறை கொண்டு செயல்படும் நண்பர்கள் சிலர் என்னிடம் ஓர் கேள்வியை முன்வைத்தார்கள். ‘ கொலை வன்முறைக் கலாச்சாரத்தைக் கண்டிக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகள், தலித் மக்கள் நலன்களுக்காகவும், இந்த மாநாட்டுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தும் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றும், எந்தவகையில் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் எனவும் கேட்கப்பட்டது.’ வரலாற்று ரீதியாக நிகழ்த்தப்பட்ட சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறையில் இன்னும்தான் பெரிதாக ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. இந்தவகையில் தலித்துக்கள் பேசப்படும் எதிலும் நம்பிக்கையற்றவர்களாயுள்ளனர். ஜனநாயகம் பற்றியும் வன்முறைக்கெதிராகவும் குரல்கொடுப்பவர்கள் அனைவரும் தலித்மக்களுக்கான பிரச்சனை மீது அக்கறை கொள்ளும் ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியருப்பதாகவும் கருதலாம். காரணம் வன்முறையின் பிறப்பாகத்தானே சாதியம் தோன்றியது. எனும் போது ஜனநாயகம் பற்றியும் முற்போக்கு பற்றியும் கதைப்பதென்றால் சாதியம்பற்றிப் பேசும்போதும் அதன் வன்முறைகள் பற்றியும் அவர்கள் பேசித்தானே ஆகவேண்டும். இது அவர்களுக்கு ஏற்பட்ட நிர்பந்தமாகவும் கருத வாய்ப்புண்டல்லவா? இதை நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. சூழல் அவ்வாறுதானே தர்கரீதியான சமன்பாடாக உள்ளது. இருப்பினும் எந்தவிதமான அரசியல் உபாயமுமின்றி அக்கறை கொள்பவர்களும் இருப்பார்களென்பது உண்மையே. அதை நாம் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது. காலமும், அவ்வாறான அக்கறை கொண்டவர்களின் செயல்பாடுகளும் எதிர்காலத்தில் தலித்துக்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கையைக் கொடுக்கலாம்.’ என்பதாக கூறினேன்.
மாநாட்டுக்காக ஜேர்மன், கனடா, சுவிஸ், லண்டன், இந்தியா, போன்ற நாடுகளிலிருந்தும் பலர் வந்து கலந்து கொண்டனர். திட்டமிட்டபடி மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதும் அந்நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதற்காக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் சிலரின் பங்களிப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்குள்ள சிரமங்களையும் நாம் புரிந்து கொண்டோம். அதனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளவர்களின் பெயர்கள் சில மாற்றம் பெற்றது. மாநாட்டுக்கு நிகழ்ந்த ‘சிரமம்’ இதுவாகத்தான் இருந்தது.
முதல் நாளின் முதல் நிகழ்வாக தலித் போராட்ட காலங்களின் கொல்லப்பட்ட தலித் போராளிகளுக்கான அஞ்சலியுடன், தேவதாசன் அவர்கள் வரவேற்புரையையும், இப்படி ஒரு தலித் மாநாட்டின் அவசியம் ஏன் தோன்றியது. அதற்கான காரணமென்ன என்பதையும் விளக்கிக் கூறி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
இரண்
டாவதாக தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும் எனும் தலைப்பில் தோழர் யோகரட்ணமும், தோழர்.பரராஜசிங்கமும் வரலாற்று ரீதியாக நிகழ்ந்த தலித் ஒடுக்குமுறை பற்றியெல்லாம் விளக்கினார்கள்.
அடுத்ததாக தமிழ்த்தேசியமும் தலித்தியமும் எனும் தலைப்பில் அருந்ததியும், ராகவனும் பேசினார்கள் இதில் ராகவன் தனது உரையை ஒரு நீண்ட கட்டுரையாகத் தயார் செய்து கொண்டு வந்து அனைவருக்கும் விநியோகித்தார். கட்டுரை மிக நீண்டதாக இருந்தமையால். கட்டுரையின் சாராம்சத்தை தனது உரையில் குறிப்பிட்டார். அவரது கட்டுரை விரைவில் ‘தூ’ வில் பிரசுரமாகும்.
அடுத்ததாக சர்வதேசப் பார்வையில் சாதியம் எனும் தலைப்பில் புதியமாதவியும், அசுராவும் உரை
நிகழ்த்தினார்கள். புதியமாதவி அவர்கள் இந்தியாவிலிருந்து கடந்த வாராம் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பிற்காக வருகைதந்ததோடு தலித் மாநாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் பேசுகின்றபோது. இலங்கையில் நடைபெறும் ‘தேசிய விடுதலை யுத்தத்தின்’ செய்திகள் மட்டுமே தமக்கு பெரிதாக கூறப்படுகிறதென்றும் சாதிக் கொடுமைகள் இவ்வளவு கொடூரமாக இலங்கையில் நடைபெறுவது தமக்கு மறைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அடுத்ததாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தலித்தியம். எனும் தலைப்பில் தேவாவும், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
21-10-2007 இன் இரண்டாம் நாள் நிகழ்வின் முதலாவது நிகழ்வாக, முதல் நாள் அமர்வுகள் பற்றிய விமர்சனமும், தலித் அரசியலின் எதிர்காலம் பற்றிய விமர்சனக் கலந்துரையாடல்களும் நடைபெற்றது. இந்நிகழ்வை விஜி அவர்கள் நெறிப்படுத்தினார் ஒரு விரிவான கலந்துரையாடலுக்கான நேரங்கள் அமையாது போனாலும் கலந்து கொண்டவர்களின் விமர்சனங்கள் பல்வேறுவகையான புரிதல்களில் பேசப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்வுரையாடல்களில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு…
பாலா (லண்டன்)
பி.சீவகன் (பி.பி.பி லண்டன்)
ராம்ராஜ் (லண்டன்)
அலெக்ஸ் (ஜேர்மனி)
ஜெகநாதன் (ஜேர்மனி)
தம்பித்துரை (ஜேர்மனி)
ஜெயா பத்மநாதன் (பிரான்ஸ்) விமர்சன உரையாடல்களில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தலித்துக்ளுடைய பிரச்சனை என்பது இருப்பதென்பதை அடிப்படையாக ஏற்றுக்கொண்டே தமது விமர்சனங்களை முன்வைத்தபோதும் ஜெயா பத்மநாதன் அவர்கள் இவ்வாறான மாநாடே அவசியமற்ற ஒன்றாகவும். நீங்கள் பேசுகின்ற தலித் பிரச்சனை என்று ஒன்றில்லை எனத்தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுப்பேசினார்.
திருமதி லோகநாதன் (ஜேர்மனி)
ஜென்னி (பிரான்ஸ்)
ராகவன் (லண்டன்)
லோகநாதன் (ஜேர்மனி)
ரகு (கனடா)
பசீர் (லண்டன்)
நந்தன் (பிரான்ஸ்)
புஸ்பராணி (பிரான்ஸ்
பகவத் சிங் (ஜேர்மனி)
பீற்றர்குலம் (ஜேர்மனி) இவர் ஓர் கவிதையூடாக தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
வரதன் (பிரான்ஸ்
தேவா (ஜேர்மனி)
தமிழச்சி (பிரான்ஸ்)
மனோ (பிரான்ஸ்)
ரவி (சுவிஸ்)
றயாகரன் (பிரான்ஸ்)
பெர்னான்டோ (பிரான்ஸ்)
பாலகிருஸ்ணன் (பிரான்ஸ்)
ஜெயபாலன் (லண்டன்)
சிவகுமார்
சோமசுந்தரம் (ஜேர்மனி)
அசோக் (பிரான்ஸ்)
கீரன் (லண்டன்)
சிவகுருநாதன் (கனடா)
லக்சுமி (பிரான்ஸ்)
ஜெயந்தி (பிரான்ஸ்)
சேனன் (லண்டன்)
சோபாசக்தி (பிரான்ஸ்)
போன்றோர் தமது கருத்துரைகளை வளங்கினர்.








































