நடைபெற்ற தலித் மாநாட்டு விபரம்
20-10-2007 இல் பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாடு மிக நல்ல முறையில், பல்வேறுபட்ட கருத்தியல்களையும் உள்வாங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. பிரான்சில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் கடுமையான வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத்து வசதிகள் அனைத்துமே மிகச் சிரமத்திற்குள்ளான நாட்களில்தான் தலித் மாநாட்டு நாட்களும் அதற்குள் சிக்கிக் கொண்டது. 100 க்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என நம்பிக்கை கொண்டிருந்தபோதும். மேற்படி பிரான்சின் கடும் வேலை நிறுத்தச் சூழலையும் பொருட்படுத்தாது, மிகச் சிரமப்பட்டு 78 பேர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததானது இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரின் பணிகளின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களுக்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரின் இம்முயற்சிக்கு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், கொலை வன்முறை போன்ற கலாச்சாரங்களை அகற்றுவதற்குமான முயற்சியில் ’தமிழ்த் தேசிய விடுதலை’ எனும் கருத்தியலில் செயல்படும் தமிழ்க் கட்சிகளும் பத்திரிகை ஊடகங்களும், இணையங்களும், ரி.பி.சி வானொலி, உட்பட அனைவருமே தலித் மாநாட்டுக்கான அறிவிப்புக்களையும் அதுபற்றிய விவாதங்களையும் மேற்கொண்டதற்காக இ.த.ச.மே. முன்னணி தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
மாநாட்டில் கலந்து கொண்ட பி.பிசி வானொலி நிருபர்களும் மாநாட்டு நிகழ்ச்சியையும் மாநாட்டுச் செயல்பாட்டாளர்களையும்; பேட்டி கண்டு தமது ஊடகங்களில் வெளிவருவதற்காக மேற்கொண்ட முயற்சிக்காக பி.பி.சி ஊடக நிறுவனத்திற்கும் இ.த.ச.மே. முன்னணியினர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் (ப.நா) கட்சியினர் மாநாட்டுக்கான தமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் கூறும் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் மாநாட்டு மண்டபத்தில் விநியோகித்தனர்.
மேற்படி ஜனநாயக முற்போக்கு வேலைத்திட்டத்தில் அக்கறை கொண்டு செயல்படும் நண்பர்கள் சிலர் என்னிடம் ஓர் கேள்வியை முன்வைத்தார்கள். ‘ கொலை வன்முறைக் கலாச்சாரத்தைக் கண்டிக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகள், தலித் மக்கள் நலன்களுக்காகவும், இந்த மாநாட்டுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தும் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்றும், எந்தவகையில் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் எனவும் கேட்கப்பட்டது.’ வரலாற்று ரீதியாக நிகழ்த்தப்பட்ட சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறையில் இன்னும்தான் பெரிதாக ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. இந்தவகையில் தலித்துக்கள் பேசப்படும் எதிலும் நம்பிக்கையற்றவர்களாயுள்ளனர். ஜனநாயகம் பற்றியும் வன்முறைக்கெதிராகவும் குரல்கொடுப்பவர்கள் அனைவரும் தலித்மக்களுக்கான பிரச்சனை மீது அக்கறை கொள்ளும் ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியருப்பதாகவும் கருதலாம். காரணம் வன்முறையின் பிறப்பாகத்தானே சாதியம் தோன்றியது. எனும் போது ஜனநாயகம் பற்றியும் முற்போக்கு பற்றியும் கதைப்பதென்றால் சாதியம்பற்றிப் பேசும்போதும் அதன் வன்முறைகள் பற்றியும் அவர்கள் பேசித்தானே ஆகவேண்டும். இது அவர்களுக்கு ஏற்பட்ட நிர்பந்தமாகவும் கருத வாய்ப்புண்டல்லவா? இதை நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. சூழல் அவ்வாறுதானே தர்கரீதியான சமன்பாடாக உள்ளது. இருப்பினும் எந்தவிதமான அரசியல் உபாயமுமின்றி அக்கறை கொள்பவர்களும் இருப்பார்களென்பது உண்மையே. அதை நாம் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது. காலமும், அவ்வாறான அக்கறை கொண்டவர்களின் செயல்பாடுகளும் எதிர்காலத்தில் தலித்துக்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கையைக் கொடுக்கலாம்.’ என்பதாக கூறினேன்.
மாநாட்டுக்காக ஜேர்மன், கனடா, சுவிஸ், லண்டன், இந்தியா, போன்ற நாடுகளிலிருந்தும் பலர் வந்து கலந்து கொண்டனர். திட்டமிட்டபடி மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதும் அந்நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதற்காக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் சிலரின் பங்களிப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்குள்ள சிரமங்களையும் நாம் புரிந்து கொண்டோம். அதனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளவர்களின் பெயர்கள் சில மாற்றம் பெற்றது. மாநாட்டுக்கு நிகழ்ந்த ‘சிரமம்’ இதுவாகத்தான் இருந்தது.
முதல் நாளின் முதல் நிகழ்வாக தலித் போராட்ட காலங்களின் கொல்லப்பட்ட தலித் போராளிகளுக்கான அஞ்சலியுடன், தேவதாசன் அவர்கள் வரவேற்புரையையும், இப்படி ஒரு தலித் மாநாட்டின் அவசியம் ஏன் தோன்றியது. அதற்கான காரணமென்ன என்பதையும் விளக்கிக் கூறி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
இரண்டாவதாக தீண்டாமை ஒடுக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டங்களும் எனும் தலைப்பில் தோழர் யோகரட்ணமும், தோழர்.பரராஜசிங்கமும் வரலாற்று ரீதியாக நிகழ்ந்த தலித் ஒடுக்குமுறை பற்றியெல்லாம் விளக்கினார்கள்.
அடுத்ததாக தமிழ்த்தேசியமும் தலித்தியமும் எனும் தலைப்பில் அருந்ததியும், ராகவனும் பேசினார்கள் இதில் ராகவன் தனது உரையை ஒரு நீண்ட கட்டுரையாகத் தயார் செய்து கொண்டு வந்து அனைவருக்கும் விநியோகித்தார். கட்டுரை மிக நீண்டதாக இருந்தமையால். கட்டுரையின் சாராம்சத்தை தனது உரையில் குறிப்பிட்டார். அவரது கட்டுரை விரைவில் ‘தூ’ வில் பிரசுரமாகும்.
அடுத்ததாக சர்வதேசப் பார்வையில் சாதியம் எனும் தலைப்பில் புதியமாதவியும், அசுராவும் உரை
நிகழ்த்தினார்கள். புதியமாதவி அவர்கள் இந்தியாவிலிருந்து கடந்த வாராம் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பிற்காக வருகைதந்ததோடு தலித் மாநாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் பேசுகின்றபோது. இலங்கையில் நடைபெறும் ‘தேசிய விடுதலை யுத்தத்தின்’ செய்திகள் மட்டுமே தமக்கு பெரிதாக கூறப்படுகிறதென்றும் சாதிக் கொடுமைகள் இவ்வளவு கொடூரமாக இலங்கையில் நடைபெறுவது தமக்கு மறைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அடுத்ததாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தலித்தியம். எனும் தலைப்பில் தேவாவும், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
21-10-2007 இன் இரண்டாம் நாள் நிகழ்வின் முதலாவது நிகழ்வாக, முதல் நாள் அமர்வுகள் பற்றிய விமர்சனமும், தலித் அரசியலின் எதிர்காலம் பற்றிய விமர்சனக் கலந்துரையாடல்களும் நடைபெற்றது. இந்நிகழ்வை விஜி அவர்கள் நெறிப்படுத்தினார் ஒரு விரிவான கலந்துரையாடலுக்கான நேரங்கள் அமையாது போனாலும் கலந்து கொண்டவர்களின் விமர்சனங்கள் பல்வேறுவகையான புரிதல்களில் பேசப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்வுரையாடல்களில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு…
பாலா (லண்டன்)
பி.சீவகன் (பி.பி.பி லண்டன்)
ராம்ராஜ் (லண்டன்)
அலெக்ஸ் (ஜேர்மனி)
ஜெகநாதன் (ஜேர்மனி)
தம்பித்துரை (ஜேர்மனி)
ஜெயா பத்மநாதன் (பிரான்ஸ்) விமர்சன உரையாடல்களில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தலித்துக்ளுடைய பிரச்சனை என்பது இருப்பதென்பதை அடிப்படையாக ஏற்றுக்கொண்டே தமது விமர்சனங்களை முன்வைத்தபோதும் ஜெயா பத்மநாதன் அவர்கள் இவ்வாறான மாநாடே அவசியமற்ற ஒன்றாகவும். நீங்கள் பேசுகின்ற தலித் பிரச்சனை என்று ஒன்றில்லை எனத்தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுப்பேசினார்.
திருமதி லோகநாதன் (ஜேர்மனி)
ஜென்னி (பிரான்ஸ்)
ராகவன் (லண்டன்)
லோகநாதன் (ஜேர்மனி)
ரகு (கனடா)
பசீர் (லண்டன்)
நந்தன் (பிரான்ஸ்)
புஸ்பராணி (பிரான்ஸ்
பகவத் சிங் (ஜேர்மனி)
பீற்றர்குலம் (ஜேர்மனி) இவர் ஓர் கவிதையூடாக தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
வரதன் (பிரான்ஸ்
தேவா (ஜேர்மனி)
தமிழச்சி (பிரான்ஸ்)
மனோ (பிரான்ஸ்)
ரவி (சுவிஸ்)
றயாகரன் (பிரான்ஸ்)
பெர்னான்டோ (பிரான்ஸ்)
பாலகிருஸ்ணன் (பிரான்ஸ்)
ஜெயபாலன் (லண்டன்)
சிவகுமார்
சோமசுந்தரம் (ஜேர்மனி)
அசோக் (பிரான்ஸ்)
கீரன் (லண்டன்)
சிவகுருநாதன் (கனடா)
லக்சுமி (பிரான்ஸ்)
ஜெயந்தி (பிரான்ஸ்)
சேனன் (லண்டன்)
சோபாசக்தி (பிரான்ஸ்)
போன்றோர் தமது கருத்துரைகளை வளங்கினர்.
அடுத்த நிகழ்ச்சியாக தலித்துக்களின் பொருளாதார மேம்பாடு எனும் தலைப்பில் பகவத்சிங் அவர்களும் சோமசுந்தரம் அவர்களும் உரையாற்றினார்கள்.
இறுதி நிகழ்ச்சியாக இலங்கை அரசியல் தீர்வுத்திட்டமும் தலித்துக்களும் எனும் தலைப்பில் எம்.ஆர்.ஸ்டாலின் ,சிவகுருநாதன், பசீர் அவர்களும் இணைந்து உரை நிகழ்த்தினார்கள்.
மாநாட்டை நிறைவு செய்வதற்க முன்பாக இலங்கையிலிருந்து வருகின்ற பத்திரிகைகளில் சாதிய
அடையாளத்துடன் கோரும் திருமண விளம்பரங்களை தடுப்பதற்காக, அப்பத்திரிகைகளுக்கெதிராக கண்டனத் தீhமானம் ஒன்றை இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் ஒப்புதல்களுடன் நிறைவேற்றி சம்மந்தபட்ட பத்திரிகைகளுக்கும் இலங்கை அரசிற்கும் அறிவிக்கும் நோக்கம் பற்றி கருத்தறியப்பட்டது.
அவை நல்ல முயற்சி என அனைவரும் ஏற்றுக்கொண்டதோடு, தலித் சிறுவர்களின் கல்விகளுக்கான உதவிகள் வழங்குவது பற்றிய தீர்மானம் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டுமெனவும் அசோக் அவர்கள் தனது அபிப்பிராயத்தைக் கூறினார். அவ்வாறே மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநாடு நிறைவு பெற்றது.
மாநாட்டில் உரையாற்றியவர்களின் பேச்சுக்கள் கட்டுரை வடிவில் பெறப்பட்டு பின்பு வெளியிடப்படும்.